Friday, July 31, 2009

மறுமை அச்சம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது - ஏ.ஆர். ரஹ்மான்

மறுமை அச்சம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது - ஏ.ஆர். ரஹ்மான்

திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி

இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.

1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.

அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.

முட்டுக்கட்டை

எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை போட்டார்கள்.

அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்க இலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.

அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்கு மாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.

அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.

சொன்னது பலித்தது

மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா கஸ்தூரி – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத நிலையில் ஒருநாள் கரீமுல்லாஹ் ஷா காதிரி என்ற ’சூபி’ பெரியவரை கஸ்தூரி குடும்பம் சந்திக்க நேர்ந்தது.

இன்னும் 10 ஆண்டுகளில் திலீப் என்னைத் தேடி வருவான் என்று அந்தப் பெரியவர் கூறிச் சென்றார். அவர் சொன்னது போல் நடந்தது.

ரகுமானுக்கு 21 வயதான போது 1987-ல் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் கிடைத்தன. இதற்கு அடிப்படை ‘சூபி’ பெரியவரின் அறிவுரை அதுவே ரகுமானை யும், அவரது தாயாரையும் இஸ்லாத்தை தழுவ வைத்தது. அவருடைய இளைய சகோதரிகளும் இஸ்லாத்தில் இணைந்தனர். மூத்த சகோதரி காஞ்சனா மட்டும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்தார்.

1989-ல் ‘சூபி’ கரீமுல்லாஹ் ஷா அடிக்கல் நாட்ட ரகுமானின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது.

இஸ்லாம் அனுபவம்

இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வைப் பற்றி ரகுமான் நினைவு கூர்கிறார்.

அது ஒரு கனவில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் அப்போது மலேசியாவில் இருந்தேன். ஒரு பெரியவர் என் கனவில் வந்து இஸ்லாத்தில் இணைந்து விடு என்று கட்டளை யிட்டார். இது பற்றி ஆரம்பத்தில் நான் பெரிதாக கவனம் கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி எனக்கு அந்த கனவு வந்தது.

ஒருநாள் என் அம்மாவிடம் இது பற்றிப் பேசினேன். இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள் என்று எனது தாயாரும் எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரே இரவில் நான் இஸ்லாத்தைத் தழுவவில்லை. ‘சூபி’ தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாத்தின் ஆணிவேர் வரை சென்றிருந்தேன். இதற்காக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் அரபி மொழி கற்றேன்.

1988-ல் என் சகோதரி ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது எத்தனையோ பெரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவர் குணமாக வில்லை. இறுதியில் ஒரு மார்க்கப் பெரியவரின் வழி காட்ட லால் நாங்கள் ’அல்லாஹ்’ விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் என் சகோதரி கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தார். இப்படித்தான் நான் திலீப்குமாரில் இருந்து ஏ.ஆர் ரகுமானாக பயணம் தொடங்கினேன் என்றார்.

ஹஜ் பயணம்

ஒவ்வொரு இஸ்லாமியரின் உன்னத கடமை ’ஹஜ் பயணம்’ ரகுமான் தனது முதல் ’ஹஜ் ஜை 2004-ல் நிறை வேற்றினார். அடுத்து 2006-ல் தாயாருடன் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்.

அது பற்றி ரகுமான் சொன்னது.

இந்த புனித யாத்திரை - வாழ்க்கையைப் பற்றிய எனது மதிப்பீடுகளையும், பார்வையையும் அடியோடு மாற்றி விட்டது.

அன்பு, சமாதானம், இணக்கமான சகவாழ்வு, சகிப்புத் தன்மை, நவீன காலத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவைகளைக் கொண்டதாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் சிலர் செய்யும் செயல்களால் இந்த மார்க்கம் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றிய அறியாமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் பெருமை

முஸ்லிம்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அண்டை வீட்டாருடன் நட்போடு பழகுவது, அவர்களை நேசிப்பது, மற்றவர்களைச் சந்திக்கும்போது புன்முறுவல் செய்வது, இறைவனை வணங்குவது, தர்மம் செய்வது ஆகியவைகளைப் பேணி வர வேண்டும். மனிதச் சமுதாயத்துக்கு முழுமையான முறையில் சேவை செய்ய வேண்டும்.

மாற்று சமய நண்பர்களை விரோதிகளாகப் பார்க்கக்கூடாது அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்க்கவோ, விமர் சிக்கவோ கூடாது. தங்கள் நடவடிக்கைகளால் உலகுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வாளை எடுக்கவில்லை. பதிலாக தனது முன் மாதிரியான வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவை மூலமே இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

பரிசு

2006 ஜனவரி 6-ம் நாள் என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பரிசை இறைவனால் வழங்கப் பெற்றேன். மதீனாவில் தொழுவதற்கு ‘அல்லாஹ்’ எனக்கு வாய்ப்பைத் தந்தான். நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்தேன். அந்த அனுபவத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. அது என் பிறந்த நாள் பரிசு.

நான் ஒரு கலைஞன். எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் தொழுகையை மட்டும் கைவிடுவதில்லை. தொழுகை எனது மன அழுத்தத்தை வெளியேற்றி வேலையில் முழு நம்பிக்கையையும், உறுதியையும், ஈடு பாட்டையும் தருகிறது. இறைவன் எப்போதும் எனது அருகிலேயே இருக்கிறான் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. மேலும் ‘மறுமையில் விசாரிக்கப்படுவேன்’ என்ற அச்சத்தை எனக்குள் கொண்டு வருகிறது. இந்த ஹஜ் பயணத்தின் மூலம் நான் எனது இறைவனால் சுத்தப்படுத்தப் படுகிறேன்’ என்கிறார் ரகுமான்.

நன்றி – ராணி வார இதழ்


நன்றி : மணிச்சுடர் நாளிதழ்
27/28 மே 2009

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விடயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி

இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்