Showing posts with label வெளிச்சம். Show all posts
Showing posts with label வெளிச்சம். Show all posts

Wednesday, August 6, 2008

வெளிச்சம் தோன்றும்

வெளிச்சம் தோன்றும்

கடந்து போன கசப்பான நாட்களை நினைத்து வருந்தாமல் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்து பயப்படாமல் இன்று செய்யும் காரியத்தில் முனைந்திருப்பவனே புத்திசாலி என்று ஓர் அறிஞர் சொல்கிறார்.

கடந்த காலம் என்பது கனவு போன்றது. அதை மறந்து விடவேண்டும். எதிர் காலம் என்பது நிச்சயமில்லாத ஒன்று. ஆனால் நிகழ் காலம் என்பது நிஜமானது. எனவே இதில் கவனம் செலுத்துபவனே புத்திசாலி என்பது அந்த அறிஞரின் கூற்று.

இன்று என்பது கையிலிருக்கும் ரொக்கம் மாதிரி. நாளை என்பது லாட்டரி சீட்டு மாதிரி. மூன்று காலங்களில் நிகழ் காலமே முக்கியம். அதற்கு கடந்த காலம் ஒரு பாடம். எதிர் காலம் ஒரு லட்சியம்.

இந்த நிகழ் கால வாழ்வின் திட்டம் எதுவாக இருக்க வேண்டும்?

சிக்கனம்தான் முதல் திட்டமாக இருக்க வேண்டும். அளவான செலவு. திட்மிட்ட செலவு. பிறகு அதில் கொஞ்சமாவது சேமிப்பு என்று திட்டத்தை வகுத்தால் வாழ்க்கை நலமாக இருக்கும். நாளை என்ற பயம் நீங்கும். சேமிப்பே நம்பிக்கையூட்டும்.

இதைத் தவிர நம்பிக்கையுள்ள திடமான மனம் அமைய என்ன வழி?

தினசரி கொஞ்சம் தியானம். காலை - மாலை ஐந்து நிமிடம் கூடப் போதும். மனதைப் பண்படுத்தி அதனைத் தறிகெட்டு ஓடவிடாது உங்கள் வசமாக்கிக் கொணடால் நீங்களே வெற்றி வீரர்.

இப்படிப் பல விதங்களில் நம்மை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதற்குத் திட்டமிட வேண்டும். அதற்கேற்றபடி செயல்பட வேண்டும். நேற்றைவிட இன்று உயர்ந்து பண்பட்டிருக்க வேண்டும். இன்றைவிட நாளை மேலும் உயர்நிலையில் இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களை விட நாம் நன்றாக வாழ்கிறோம். நாகரீகமாக வாழ்கிறோம்.அறிவியல் சாதனங்களை அனுபவிக்கிறோம். நம் சந்ததியினரை இதைவிட நன்றாக வாழ வைக்க வேண்டும் அல்லவா? அதற்கு நாம் திட்டமிட வேண்டும்.

ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!

விடி வெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகத்தான் இருக்கும்.

ஆனால் நிச்சயம் வெளிச்சம் தோன்றும்.


http://www.valoothoor.com/