Saturday, October 2, 2010

பாப்ரி மஸ்ஜித்: அல்லாஹ்வின் தீர்ப்பு என்ன ?

பாப்ரி மஸ்ஜித்: அல்லாஹ்வின் தீர்ப்பு என்ன ?

இறைவனின் மாபெரும் கிருபையினால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக துபை கோட்டைப் பள்ளியில் மெளலான இஸ்மாயில் ஹஸரத் அவர்களின் திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெற்று வருகிறது. சூரா அல்பகராவின் விளக்கவுரை தொடராக நடைபெற்று வருகிறது, அல்லாஹ்வின் அற்புதம், பாப்ரி மஸ்ஜித்தின் தீர்ப்பு நாளையொட்டி அமைந்த ஆயத் “அல்லாஹ்வின் இல்லங்களில் அவனது பெயர் துதிப்பதை தடுப்பவன் மற்றும் அவனது இல்லங்களை பாழாக்குபவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் என வினவுகிறது. (2:114)

His speech has been updated in http://www.TamilIslamicMedia.com for this speech or follow the link below.

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (24-Sep-2010) :( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#3 )

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (01-Oct-2010): ( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#2 )


பாப்ரி மஸ்ஜித்தை முன்னின்று இடித்த இரண்டு வாலிபர்களின் நிலை என்ன ஆனது என்ற உண்மைச் சம்பவம். அல்லாஹ்வின் கருணையினால் அவர்கள் இன்று முஸ்லீம்களாக, தங்களது பாவத்திற்கு பரிகாரமாக வருடம் ஒரு பள்ளியினைக் கட்டிக் கொண்டிருக்கும் அற்புதம்.

இடித்தவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி அவனிடமே மீண்டுவிடுவதுதான். இல்லையெனில் அவர்கள் இம்மையில் கேவலத்தையும் மறுமையில் கடுமையான தண்டனையையும் அடைவது உறுதி. அது விதிக்கப்பட்ட ஒன்று.


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (2:114)


His speech has been updated in http://www.TamilIslamicMedia.com f or this speech or follow the link below.

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (24-Sep-2010) :( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#3 )

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (01-Oct-2010): ( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#2 )

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.

அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.
இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.
அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.
ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.
இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசியல்தனமான தீர்ப்பு!

தலையங்கம்: அரசியல்தனமான தீர்ப்பு!

First Published : 01 Oct 2010 03:12:45 AM IST

Last Updated : 01 Oct 2010 03:15:36 AM IST

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.
நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.

மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...

அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்! ------------------ பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்!
------------------ பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

பாபர் மசூதி இடப் பிரச்சனை குறித்து அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னெள கிளை
30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பு பல்வேறு கருத்துகளை உருவாக்கியிருக்கிறது.நீதிபதிகள்
சிபகதுல்லாஹ் கான், சுதிர் குமார் அகர்வால், தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்
அளித்துள்ள தீர்ப்பு இந்து மகா சபை, நிர்மோஹி அகாரா மற்றும் முஸ்லிம்களுக்கும்
ஆக மூன்று கூறுகளாக நிலத்தைப் பங்கு போட்டிருக்கிறது.
நீதிமன்றம் என்பது ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள், நிரூபிக்கப் பெற்ற
நடப்புகள் இவற்றைக் கொண்டு தெள்ளத் தெளிவான தீர்ப்பினை அளிக்கவேண்டுமென்பதே
நடைமுறைச் செயல்பாடாகும்.உதாரணமாக ஒரு குழந்தைக்கு உரிமையும் சொந்தமும்
கொண்டாடித் தான்தான் தாய் என இருவர் நீதிமன்றத்தை அணுகுவார்களேயானால்
உரிய வகையில் விசாரித்துப் பெற்றது, வளர்த்தது, பேணிப்பாதுகாப்பது, போஷிப்பது,
இருப்பது எனப் பல்வேறு கூறுகளைத் தகுந்த ஆவணம், சாட்சியம், பரிசோதனை
முதலிய தன்மைகளைக் கொண்டு ஆய்ந்து இன்னாருக்குரியது இக் குழந்தை என
நீதிமன்றம் தீர்ப்பளிப்பதே முறைமையுடையதாகக் கருதப்படக்கூடும். அதை விடுத்து
இருவருக்குமே இக் குழந்தை உரியதெனத் தீர்ப்பு அமைந்தால் குழப்பமே மிஞ்சும்.
அதேபோன்று ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் எனஇருவருக்கிடையே வழக்கு வரும்போது தீர விசாரித்து
இன்னாருக்குத்தான் இது உரியது எனத் தீர்ப்பளிப்பதே நீதிமன்றச் செயல்பாடாகக்
கருதப்படுகிறது. அவ்வாறின்றி இருவருக்கும் பங்கு போட்டுத் தருவது எங்களுக்குப் பங்கு
போட்டுத் தாருங்களெனெ வாதியும் பிரதிவாதியும் கேட்டுக் கொள்ளாத நிலையில் நீதி
மன்ற நடவடிக்கையாக அமையவியலாதெனச் சட்டவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
பிரச்சனைக்குரிய மொத்த வளாகமும் யாருக்குரியதென்பதே வழக்கின் அடிப்படையான
அம்சமாகும்.மூன்று தரப்பினர் தங்களுக்கே முழுமையாகச் சொந்தமென வழக்கு தொடுத்தனர்.
இன்று நேற்றல்ல 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கு இது. மேலும் இது
சம்பந்தமாக ஒரு வழக்கல்ல இரு வழக்கல்ல ஏறக்குறைய 88 வழக்குகள் போடப்பட்டன.
இது உணர்வுப்பூர்வமானதும் மத சம்பந்தப்பட்டதுமானதெனக் கூறித் தங்கள் அரசியல்
வாழ்வுக்கும் மேன்மைக்கும் உரிய தீனியாக அரசியல்வாதிகள் இப் பிரச்சனையை உலகளவில்
பெரிதுபடுத்தி இந்திய அளவில் ஒன்றுபட்டிருந்த மக்கள் மனதில் விஷத்தை விதைத்தார்கள். பிரச்சனைக்குரிய
இடத்தில்கூட ஒருவருக்கொருவர் நேசத்துடனும் பாசத்துடனும் அதுவரை வாழ்ந்துவந்த இரு
சமுதாயத்தினரின் நிலையை மோசப்படுத்தினார்கள். இந்தியத் திருநாட்டில் கோலோச்சி இருந்த
சகோதரத்துவத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேதம் விளையச் செய்தார்கள்.
பிற நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவத் தேவாலயங்கள் சில இப்போது
பள்ளிவாசல்களாக மாறியுள்ளன. உதாரணமாக, இலண்டனின் புறப்பகுதியில் க்ரே ஃபோர்ட் எனும் இடத்தில்
இப்போது பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டடம் கிறிஸ்தவ சர்ச் ஆக இருந்த இடமாகும். இந்த இடத்தைக்
கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்பட முடியாமல் போய்விட்டது. அவ்ர்களால் அந்த ஆலயத்தைத் தொடர்ந்து
நடத்தமுடியவில்லை. அந்த கட்டடத்தை முஸ்லிம்கள் வாங்கிப் பள்ளிவாசலாக்கியுள்ளனர். ஈத் பெருநாள்,
ஜூம் ஆ தொழுகைகள் உள்பட அனைத்துத் தொழுகைகளும், மாலை மதரஸாவும் நடைபெற்று வருகின்றன.
இதைப் போல பக்கிங் ஹாம் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும் சர்ச் இருந்த இடங்களில்
பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இதனால் அங்கு எந்தவொரு பிரச்சனையும்
எழவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகள் இதுவிஷயத்தில் தலையிடுவதுமில்லை. அதனால் அமைதி
குறைவதுமில்லை.
தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கூற்றுப்படி- அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி-
பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக்கிடந்த இடிந்துபோன கட்டடம் சிதைந்திருந்த இடத்தில் பாபரி மசூதி
கட்டப்பட்டதெனத் தெளிவாகிறது.கோயில் ஒன்று இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்படவில்லை, மாறாக
இடிபாடுகளாகக் கிடந்த ஓரிடத்தின்மீதுதான் மசூதி கட்டப்பட்டதென்பதை நீதிபதி சிபகதுல்லாஹ் கான்
தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதியாக விளங்கிய இடத்தில் 23-12-1949 அன்று வலுக்கட்டாயமாகச்
சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டுப் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன. பி.ஜே.பி. தனது அரசியல் இலாப
நோக்கில் இப் பிரச்சனையைக் கையில் எடுத்து அதன் விளைவாக 1992 டிசம்பர் 6 ல் மசூதி சூறையாடப்பட்டுத்
தரைமட்டமாக்கப்பட்டது.இது வரலாற்றுப்பூர்வமான ஆதாரமாகும்.இதனை அலகாபாத் உயர்நீதிமன்றத்
தீர்ப்பு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதி இருந்துவந்ததும் பல நூறாண்டுகள் தொழுகை நடந்து
வந்ததுமான வரலாற்றுப்பூர்வமான வலுமிக்க ஆதாரத்தைப் புறந்தள்ளிவிட்டுப் புராண நாயகரான
இராமர் அங்குதான் பிறந்தாரென்ற வரலாற்றுப்பூர்வமில்லாத ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் ஏற்று
வலுக்கட்டாயமாகச் சிலை வைக்கப்பட்ட இடத்தை இந்துத்துவ வாதிகளுக்கு ஒதுக்கியிருப்பது ஒரு நீதி
மன்றத்தின் தீர்ப்பாக இருக்கலாகுமோ எனச் சட்டவியல் அறிஞர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகின்றனர்.
கிராமங்களில் உள்ளூர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துச் சபை வைத்திருப்பார்கள்.
இருவருக்கிடையே பிரச்சனை என்றால் இருவருக்குமிடையே மத்தியஸ்தம் பேசி சமரசம் செய்வார்கள்.
நகர்ப் புறங்களில் கட்டைப் பஞ்சாயத்து செய்வதுமுண்டு.நிலப்பிரச்சனையில் ஆளுக்குக் கொஞ்சம் என்று
பங்கு போட்டுத் தருவது பஞ்சாயத்து வேலையே தவிர நீதி மன்றப் பணியாகாது. எனவேதான் ராஜீவ் தவான்,
பி.பி.ராவ் போன்ற சட்ட வல்லுநர்கள் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பினை “ஒரு கட்டைப் பஞ்சாயத்தின்
தீர்ப்பு இது” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தினமணி நாளிதழும் இதுபோன்றே தலையங்கம் தீட்டியுள்ளது.
இது போன்ற பஞ்சாயத்திற்காக முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகவில்லை.
வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுக்காக்கப்படவேண்டிய, தங்களுக்கு மட்டுமே உரித்தான இடம் பிறரால்
பறிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டமைக்கு நீதி கேட்டும் மீண்டும் அந்த இடத்தை மீட்டுக் கேட்டும்தான்
முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். உச்சநீதிமன்றத்தை அணுகும் பணிகளைத்
தொடங்க அவர்கள் ஆயத்தம் செய்துவருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 143(2) பிரிவின்படி
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படவேண்டும். உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்றை
சாலையோரத்தில் முடிவெடுக்க எவரும் முயலுதல் ஆகாது. அரசியல்வாதிகளால் முடியுமென்றால் இப் பிரச்சனை
எப்போதோ முடிந்து போயிருக்கும்.நிச்சயமாக அவர்களால் முடியாது; முடிக்கவும் விரும்பமாட்டார்கள்.
இந்தியத் திருநாட்டின் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பது ஒன்றே இப்போது செய்யப்படவேண்டியதாகும்.
ஆனால் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டிவருமோ, அந்தத் தீர்ப்பும் எப்படி அமையுமோ
என்பதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்தவிஷயமாகும்.
ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது- இந்தியத் திருநாட்டில் இதுவரை நிகழ்ந்துவந்துள்ள மதக் கலவரங்களுக்கும்-
பல குண்டு வெடிப்புகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் எந்தவோர் அடிப்படை சம்பந்தமுமில்லை; அவர்கள்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட
அல்லது திணிக்கப்பட்ட பழிச் செயல்கள் அவை என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வளவு பாதகமான தீர்ப்பிற்குப் பிறகும்
முஸ்லிம்கள் பேணிவரும் பென்னம்பெரிய அமைதியும் பொறுமையுமே அதற்கு மிகப் பெரிய சான்றுகளாகும்.
“மேலும் எத்தனையோ நபிமார்கள்- அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர்.
எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) திற்காக அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை;
பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை;அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே
நேசிக்கிறான்” (இறைமறை- 3:146) என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை உடையவர்கள்
அல்லவா நாம்!


From: cityads [mailto:cityadschennai@gmail.com]
Sent: Saturday, October 02, 2010 8:37 PM
Subject: RE: பேராசிரியர் சேமுமு அறிக்கை

பேராசிரியர் சே.மு.மு. அறிக்கையை வாசித்தோம்...
இன்றைய இந்தியா... அல்ல இனிவரும் நாட்களில் எல்லாம் இப்படிப்பட்ட தீர்ப்புகள் தான் இனி கிடைக்கும்..

2.5 ஏக்கர் நிலத்துக்காக (நமது உரிமையை விட்டுத்தரக்கூடாது என நினைத்தவர்களுக்கு) சுமார் 60 ஆண்டுகளாக போராடி கடைசியில் கிடைத்த்து
(கிடைக்க போவது) .75 ஏக்கர் இடம் தான். ஆனால் நாம் இத்தனை ஆண்டுகாலம் இழந்த்து எத்தனை உயிர்கள், எவ்வளவு உடமைகள்...
கணக்கிலடங்கா..

கிடைத்த்தை கொண்டு நிறைவு அடைவதே சிறப்பு... இல்லையென்றால் நமது இழப்புகள் தொடரும்..

இறைனிடம் பிரார்த்திப்போம்....

பழையது பேசி பேசி...நமது எதிர்காலத்தை இருட்டாக்க வேண்டாம்.


வலங்கைமான் நஸீர்