Showing posts with label சேமுமு. Show all posts
Showing posts with label சேமுமு. Show all posts

Saturday, October 2, 2010

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்! ------------------ பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்!
------------------ பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

பாபர் மசூதி இடப் பிரச்சனை குறித்து அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னெள கிளை
30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பு பல்வேறு கருத்துகளை உருவாக்கியிருக்கிறது.நீதிபதிகள்
சிபகதுல்லாஹ் கான், சுதிர் குமார் அகர்வால், தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்
அளித்துள்ள தீர்ப்பு இந்து மகா சபை, நிர்மோஹி அகாரா மற்றும் முஸ்லிம்களுக்கும்
ஆக மூன்று கூறுகளாக நிலத்தைப் பங்கு போட்டிருக்கிறது.
நீதிமன்றம் என்பது ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள், நிரூபிக்கப் பெற்ற
நடப்புகள் இவற்றைக் கொண்டு தெள்ளத் தெளிவான தீர்ப்பினை அளிக்கவேண்டுமென்பதே
நடைமுறைச் செயல்பாடாகும்.உதாரணமாக ஒரு குழந்தைக்கு உரிமையும் சொந்தமும்
கொண்டாடித் தான்தான் தாய் என இருவர் நீதிமன்றத்தை அணுகுவார்களேயானால்
உரிய வகையில் விசாரித்துப் பெற்றது, வளர்த்தது, பேணிப்பாதுகாப்பது, போஷிப்பது,
இருப்பது எனப் பல்வேறு கூறுகளைத் தகுந்த ஆவணம், சாட்சியம், பரிசோதனை
முதலிய தன்மைகளைக் கொண்டு ஆய்ந்து இன்னாருக்குரியது இக் குழந்தை என
நீதிமன்றம் தீர்ப்பளிப்பதே முறைமையுடையதாகக் கருதப்படக்கூடும். அதை விடுத்து
இருவருக்குமே இக் குழந்தை உரியதெனத் தீர்ப்பு அமைந்தால் குழப்பமே மிஞ்சும்.
அதேபோன்று ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் எனஇருவருக்கிடையே வழக்கு வரும்போது தீர விசாரித்து
இன்னாருக்குத்தான் இது உரியது எனத் தீர்ப்பளிப்பதே நீதிமன்றச் செயல்பாடாகக்
கருதப்படுகிறது. அவ்வாறின்றி இருவருக்கும் பங்கு போட்டுத் தருவது எங்களுக்குப் பங்கு
போட்டுத் தாருங்களெனெ வாதியும் பிரதிவாதியும் கேட்டுக் கொள்ளாத நிலையில் நீதி
மன்ற நடவடிக்கையாக அமையவியலாதெனச் சட்டவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
பிரச்சனைக்குரிய மொத்த வளாகமும் யாருக்குரியதென்பதே வழக்கின் அடிப்படையான
அம்சமாகும்.மூன்று தரப்பினர் தங்களுக்கே முழுமையாகச் சொந்தமென வழக்கு தொடுத்தனர்.
இன்று நேற்றல்ல 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கு இது. மேலும் இது
சம்பந்தமாக ஒரு வழக்கல்ல இரு வழக்கல்ல ஏறக்குறைய 88 வழக்குகள் போடப்பட்டன.
இது உணர்வுப்பூர்வமானதும் மத சம்பந்தப்பட்டதுமானதெனக் கூறித் தங்கள் அரசியல்
வாழ்வுக்கும் மேன்மைக்கும் உரிய தீனியாக அரசியல்வாதிகள் இப் பிரச்சனையை உலகளவில்
பெரிதுபடுத்தி இந்திய அளவில் ஒன்றுபட்டிருந்த மக்கள் மனதில் விஷத்தை விதைத்தார்கள். பிரச்சனைக்குரிய
இடத்தில்கூட ஒருவருக்கொருவர் நேசத்துடனும் பாசத்துடனும் அதுவரை வாழ்ந்துவந்த இரு
சமுதாயத்தினரின் நிலையை மோசப்படுத்தினார்கள். இந்தியத் திருநாட்டில் கோலோச்சி இருந்த
சகோதரத்துவத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேதம் விளையச் செய்தார்கள்.
பிற நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவத் தேவாலயங்கள் சில இப்போது
பள்ளிவாசல்களாக மாறியுள்ளன. உதாரணமாக, இலண்டனின் புறப்பகுதியில் க்ரே ஃபோர்ட் எனும் இடத்தில்
இப்போது பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டடம் கிறிஸ்தவ சர்ச் ஆக இருந்த இடமாகும். இந்த இடத்தைக்
கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்பட முடியாமல் போய்விட்டது. அவ்ர்களால் அந்த ஆலயத்தைத் தொடர்ந்து
நடத்தமுடியவில்லை. அந்த கட்டடத்தை முஸ்லிம்கள் வாங்கிப் பள்ளிவாசலாக்கியுள்ளனர். ஈத் பெருநாள்,
ஜூம் ஆ தொழுகைகள் உள்பட அனைத்துத் தொழுகைகளும், மாலை மதரஸாவும் நடைபெற்று வருகின்றன.
இதைப் போல பக்கிங் ஹாம் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும் சர்ச் இருந்த இடங்களில்
பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இதனால் அங்கு எந்தவொரு பிரச்சனையும்
எழவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகள் இதுவிஷயத்தில் தலையிடுவதுமில்லை. அதனால் அமைதி
குறைவதுமில்லை.
தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கூற்றுப்படி- அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி-
பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக்கிடந்த இடிந்துபோன கட்டடம் சிதைந்திருந்த இடத்தில் பாபரி மசூதி
கட்டப்பட்டதெனத் தெளிவாகிறது.கோயில் ஒன்று இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்படவில்லை, மாறாக
இடிபாடுகளாகக் கிடந்த ஓரிடத்தின்மீதுதான் மசூதி கட்டப்பட்டதென்பதை நீதிபதி சிபகதுல்லாஹ் கான்
தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதியாக விளங்கிய இடத்தில் 23-12-1949 அன்று வலுக்கட்டாயமாகச்
சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டுப் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன. பி.ஜே.பி. தனது அரசியல் இலாப
நோக்கில் இப் பிரச்சனையைக் கையில் எடுத்து அதன் விளைவாக 1992 டிசம்பர் 6 ல் மசூதி சூறையாடப்பட்டுத்
தரைமட்டமாக்கப்பட்டது.இது வரலாற்றுப்பூர்வமான ஆதாரமாகும்.இதனை அலகாபாத் உயர்நீதிமன்றத்
தீர்ப்பு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதி இருந்துவந்ததும் பல நூறாண்டுகள் தொழுகை நடந்து
வந்ததுமான வரலாற்றுப்பூர்வமான வலுமிக்க ஆதாரத்தைப் புறந்தள்ளிவிட்டுப் புராண நாயகரான
இராமர் அங்குதான் பிறந்தாரென்ற வரலாற்றுப்பூர்வமில்லாத ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் ஏற்று
வலுக்கட்டாயமாகச் சிலை வைக்கப்பட்ட இடத்தை இந்துத்துவ வாதிகளுக்கு ஒதுக்கியிருப்பது ஒரு நீதி
மன்றத்தின் தீர்ப்பாக இருக்கலாகுமோ எனச் சட்டவியல் அறிஞர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகின்றனர்.
கிராமங்களில் உள்ளூர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துச் சபை வைத்திருப்பார்கள்.
இருவருக்கிடையே பிரச்சனை என்றால் இருவருக்குமிடையே மத்தியஸ்தம் பேசி சமரசம் செய்வார்கள்.
நகர்ப் புறங்களில் கட்டைப் பஞ்சாயத்து செய்வதுமுண்டு.நிலப்பிரச்சனையில் ஆளுக்குக் கொஞ்சம் என்று
பங்கு போட்டுத் தருவது பஞ்சாயத்து வேலையே தவிர நீதி மன்றப் பணியாகாது. எனவேதான் ராஜீவ் தவான்,
பி.பி.ராவ் போன்ற சட்ட வல்லுநர்கள் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பினை “ஒரு கட்டைப் பஞ்சாயத்தின்
தீர்ப்பு இது” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தினமணி நாளிதழும் இதுபோன்றே தலையங்கம் தீட்டியுள்ளது.
இது போன்ற பஞ்சாயத்திற்காக முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகவில்லை.
வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுக்காக்கப்படவேண்டிய, தங்களுக்கு மட்டுமே உரித்தான இடம் பிறரால்
பறிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டமைக்கு நீதி கேட்டும் மீண்டும் அந்த இடத்தை மீட்டுக் கேட்டும்தான்
முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். உச்சநீதிமன்றத்தை அணுகும் பணிகளைத்
தொடங்க அவர்கள் ஆயத்தம் செய்துவருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 143(2) பிரிவின்படி
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படவேண்டும். உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்றை
சாலையோரத்தில் முடிவெடுக்க எவரும் முயலுதல் ஆகாது. அரசியல்வாதிகளால் முடியுமென்றால் இப் பிரச்சனை
எப்போதோ முடிந்து போயிருக்கும்.நிச்சயமாக அவர்களால் முடியாது; முடிக்கவும் விரும்பமாட்டார்கள்.
இந்தியத் திருநாட்டின் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பது ஒன்றே இப்போது செய்யப்படவேண்டியதாகும்.
ஆனால் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டிவருமோ, அந்தத் தீர்ப்பும் எப்படி அமையுமோ
என்பதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்தவிஷயமாகும்.
ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது- இந்தியத் திருநாட்டில் இதுவரை நிகழ்ந்துவந்துள்ள மதக் கலவரங்களுக்கும்-
பல குண்டு வெடிப்புகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் எந்தவோர் அடிப்படை சம்பந்தமுமில்லை; அவர்கள்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட
அல்லது திணிக்கப்பட்ட பழிச் செயல்கள் அவை என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வளவு பாதகமான தீர்ப்பிற்குப் பிறகும்
முஸ்லிம்கள் பேணிவரும் பென்னம்பெரிய அமைதியும் பொறுமையுமே அதற்கு மிகப் பெரிய சான்றுகளாகும்.
“மேலும் எத்தனையோ நபிமார்கள்- அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர்.
எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) திற்காக அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை;
பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை;அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே
நேசிக்கிறான்” (இறைமறை- 3:146) என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை உடையவர்கள்
அல்லவா நாம்!


From: cityads [mailto:cityadschennai@gmail.com]
Sent: Saturday, October 02, 2010 8:37 PM
Subject: RE: பேராசிரியர் சேமுமு அறிக்கை

பேராசிரியர் சே.மு.மு. அறிக்கையை வாசித்தோம்...
இன்றைய இந்தியா... அல்ல இனிவரும் நாட்களில் எல்லாம் இப்படிப்பட்ட தீர்ப்புகள் தான் இனி கிடைக்கும்..

2.5 ஏக்கர் நிலத்துக்காக (நமது உரிமையை விட்டுத்தரக்கூடாது என நினைத்தவர்களுக்கு) சுமார் 60 ஆண்டுகளாக போராடி கடைசியில் கிடைத்த்து
(கிடைக்க போவது) .75 ஏக்கர் இடம் தான். ஆனால் நாம் இத்தனை ஆண்டுகாலம் இழந்த்து எத்தனை உயிர்கள், எவ்வளவு உடமைகள்...
கணக்கிலடங்கா..

கிடைத்த்தை கொண்டு நிறைவு அடைவதே சிறப்பு... இல்லையென்றால் நமது இழப்புகள் தொடரும்..

இறைனிடம் பிரார்த்திப்போம்....

பழையது பேசி பேசி...நமது எதிர்காலத்தை இருட்டாக்க வேண்டாம்.


வலங்கைமான் நஸீர்

Monday, February 16, 2009

அறிவுப் புரட்சி ஓங்குக !

அறிவுப் புரட்சி ஓங்குக !
பேராசிரியர் சே.மு.மு.முகமதலி
( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )


அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள் ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .

இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸ்லிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார் ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?

விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர் கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர் ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம் மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.


உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும் ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஒரு ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம் அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன பல்கலைக்கழகங்களில் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.


கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள் உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .

உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம் 10 சதவிகிதம் என கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !


நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள் தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள் ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் 2 முஸ்லிம் நீதிபதிகளே இருக்கிறார்கள் .

ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிக்கை ஆசிரியர் துணை ஆசிரியர் உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிக்கை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர் இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.


இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை வங்கிப் போன்ற துறைப் பணிகளிலே 2.2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர் அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களென சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர் 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.


கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர் பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும் கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டாமென அவர்களில் பலர் கூறுகின்றனர்.


தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறி களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும் வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.

அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.


மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம் அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.

ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர் மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர் பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும் அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .


உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும் இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும் அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .

ஓங்கட்டும் அறிவுப் புரட்சி .


ஒளிரட்டும் சமுதாயம்..

கூடட்டும் இறையருள்!

( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )

இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ( IMCT )
துபாய்

imct.vkr@gmail.com
www.imct.50g.com