Thursday, February 19, 2009

கவனமாகயிரு

கவனமாகயிரு


கிளியனூர் இஸ்மத்

இளைஞனே…
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…

மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…
எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…

நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!

www.kiliyanur-ismath.blogspot.com

No comments: