Monday, February 23, 2009

சென்னை – ஜும் ஆ உரைகள்

சென்னை – ஜும் ஆ உரைகள்

அடையார் எல்.பி.ரோடு பள்ளிவாசலில் மெளலவி சதீதுதீன் பாகவி அவர்கள் 21.11.08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !

இஸ்லாம் என்பதற்கு வழிபடுதல் கட்டுப்படுதல் என்பது பொருளாகும். கொள்கை அறிமுகத்தை இஸ்லாம் நூஹு காலத்தில் ஏற்படுத்தியது உலகம் முடியும் வரை இஸ்லாம் தனது கொள்கையை அறிமுகம் செய்து கொண்டேயிருக்கும் அல்லாஹ் சொல்கிறான் மார்க்கத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் என்று

நீங்கள் முஸ்லிமாக இருந்தால் முழுமையாக மார்க்கத்துக்குள் வந்து விடுங்கள் இல்லாவிட்டால் ஷைத்தான் உங்களைத் தடுப்பான் ஈமான் கொண்டவர்களே நீங்கள் ஈமான் கொள்ளுங்கள் என்பதன் பொருளென்ன ? வாசற்படியிலேயே நிற்கிறீர்கள் உள்ளே நுழையுங்கள் முழுமையாக மார்க்கத்துக்குத் தோதாக மாறிக் கொள்ளுங்கள் என்பது தான் .

எல்லா மதங்களும் தோற்றுப் போகிற மார்க்கம் இஸ்லாம் எல்லாவற்றுக்கும் எல்லா நேரத்துக்கும் தீர்வை வைத்திருக்கிறது இஸ்லாம். 360 சிலைகளை வைத்திருந்தார்கள் ஒவ்வொருவரும் கக்கத்தில் மூன்று கல்லை வைத்துக் கொண்டிருந்தார்கள் 2 கல் அடுப்பெரிக்க ஒரு கல் வணங்க

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை இஸ்லாத்தில் பூரண முஸ்லிமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் ஏதோ இருந்துட்டு போவுது எனக்கூறுபவன் முஸ்லிம் இல்லை. குலப்பெருமை குடும்பப் பெருமைகளை தூக்கி வீசியது இஸ்லாம் இந்த மாற்றத்தை கொண்டு வராது பெயர் வைத்திருப்பவர்கள் முஸ்லிம் அல்ல பாதி இப்படியும் பாதி அப்படியுமாக சமீப காலங்களில் தான் தெரிகிறது நபி (ஸல்) காலத்தில் இப்படி இல்லை நாம் ஏற்றுக் கொண்ட ஈமான் சொல்லளவில் உள்ளது செயலளவில் இல்லை.

ஓர் ஒட்டகம் அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்ததற்காக நூறு வருஷம் போர் நடைபெற்றது அந்த மண்ணில் கூட இஸ்லாம் சாத்தியப்பட்டது அடுத்தவர் பசியோடு இருப்பார் என்பதற்காக ஒரு ஆட்டுத்தலை அடுத்தடுத்த வீடுகளுக்கு கைமாறி கொடுத்தவர் வீட்டுக்கே திரும்ப வருகிறது. அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்ற கட்டளையை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. போரில் எல்லாரும் இறந்தாலும் நபி (ஸல்) மட்டும் உயிரோடு இருந்தால் போதும் என ”துஆ”ச் செய்யப்பட்டது.மலை மாறியது என்றால் நம்பலாம் மனிதன் மாறினான் என்றால் நம்ப இயலாது ஆனால் இதனைச் சாத்தியப்படுத்தியது இஸ்லாம்.

ஒவ்வொருவரும் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் நாம் ஒரு சதவிகிதம் தான் தேறுவோம் ஸஹாபாக்கள் நூறு சதவிகிதம் தேறுவார்கள் நம்மைப் பார்த்து இஸ்லாத்தை மற்றவர்கள் படிக்க வேண்டும் அப்படி நம்மை அமைத்துக் கொள்வது அவசியம்.

பூமிக்காக இருவர் சண்டையிட்டுக் கொண்டு நபிகளாரிடம் வருகிறார்கள் இது சம்பந்தமான ‘வஹி’ (இறை ஆணை) எதுவும் இறங்கவில்லை நபி ஒரு மனிதராக இருந்து தீர்ப்பளித்தார்கள் இருவருக்கும் இடத்தை பிரித்துக் கொடுக்கிறேன் அதில் ஒரு துண்டு கூடுதலாக இருந்தால் அத்துண்டு நரகத்தின் ஒரு பகுதி என நபிகள் மறுமையை முன்னிறுத்தி கூறியவுடன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து எனது இடத்தை அவருக்கே கொடுத்து விடுகிறேன் என பூமிக்காகச் சண்டையிட்டவர்கள் ஒருவர் மற்றவர் இடத்தை விட்டுக் கொடுக்க முன் வருகின்றனர்.

ஹிஜ்ரி 8 இல் மக்கா வெற்றி 11 கோத்திரங்களைக் கொண்ட 50 குடும்பங்கள் இஸ்லாத்திற்கு வந்தன இஸ்லாத்திற்குள் வந்த பிறகு அவர்களுக்குள் இருந்த கொடுக்கல் வாங்கலில் ஒருவருக்கொருவர் வட்டி, அசலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது தான் வட்டியைப் பற்றிய ஆயத்து இறங்கியது நபி (ஸல்) அக்குடும்பங்களை அழைத்து கேட்டார்கள் வட்டியை முழுமையாக விட்டு விடுங்கள் அசலை மட்டும் கொடுங்கள் எனக்கூற அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் நாம் பட்டியலிட்டுப் பார்த்தால் நிறைய முஸ்லிம்களிடம் பாவங்கள் மிச்சமிருக்கின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் முஸ்லிமாக மாறியவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்கிறார் முழுமையான மார்க்கத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம். அவரிடம் ஒரு முஸ்லிம் இவ்வளவு அதிகப்படியான முஸ்லிம் தோற்றம் தேவைதானா என வினவ அவர் உங்களுக்கு தாய் தந்தை வழியாக இஸ்லாம் வந்துள்ளது நாங்களோ தேடி எடுத்துக் கொண்டது இஸ்லாத்தில் எங்களுக்கு ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது எனப் பதிலளித்துள்ளார்.

இறைவனது வாக்குறுதி முழுமையாக இஸ்லாத்திற்கு மாறவில்லையெனில் வேறு வகையில் மாற்றிவிடுவேன் எந்த சமூகமும் அதுவாக மாறவேண்டும் நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம் எத்தகைய தியாகத்தை முஸ்லிம் என்பதற்காக விட்டு வந்திருக்கிறோம்.

(12.50 க்கு துவங்கிய ஜும் ஆ உரை ½ மணிநேரம் நடைபெற்றது ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் தொழுகையில் கலந்து கொண்டனர் )



மந்தைவெளி ஈத்கா பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் மன்பயீ அவர்கள் 28-11-08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !

துல்ஹஜ் மாதத்தின் பிறை 10 வரை அமல்கள் ( நற்செயல்கள் ) செய்வது மற்ற நாட்களை விட அல்லாஹ்வுக்கு விருப்பமானது ஸஹாபாக்கள் கேட்டார்கள் அறப்போர் செய்வதை விட இந்த நாட்கள் பொருத்தமா? எனக் கேட்கப்பட அல்லாஹ்வுக்கு பொருத்தமானது என நபி (ஸல்) பதிலளித்தார்கள் ‘பத்ரு’ போர் இல்லையென்றால் நாமெல்லாம் முஸ்லிமாக இருந்திருக்க முடியாது ரமலானுக்குப் பின்பாக மொத்த நாட்களைக் கூறி அமல்களைச் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியிருப்பது இந்த துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள்தான்.

ஹஜ் செல்லாதவர்கள் வீட்டிலிருந்தபடியே 10 நாட்கள் அமல்கள் செய்யலாம் வசதி படைத்தவர்களுக்கு குர்பானி வாஜிபு (கடமை) என இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியிருக்கிறார்கள் நிய்யத் வைத்தவர்கள் முடி,நகம் 10 நாட்களுக்குக் களையக்கூடாது.

மற்றவர்கள் பலியிடுவதற்கும் நமக்கும் வித்தியாசமுள்ளது அங்கு கொடுக்கப்படுவது சித்தாந்தத்தின் அடிப்படையில் நாம் கொடுப்பது தியாகத்தின் அடிப்படையில். தியாகத்தின் அடிப்படையில் மகனுக்குப் பகரமாக குர்பானீயை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அல்லாது இருந்திருந்தால் நாம் ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளைப் பலியிட வேண்டியிருந்திருக்கும் குர்பானியின் இரத்தம்,மாமிசம் இறைவனை அடைவதில்லை ஈமான் இறையச்சம் மட்டுமே இறைவனைச் சென்றடைகிறது தியாகம் முதல் நோக்கம் ஏழைகளுக்கு வழங்குவது இரண்டாவது நோக்கம் ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சியை கொடுக்கவேண்டும் என்பதற்காக அல்லாஹ் ஆடு,மாடு,ஒட்டகத்தை குர்பானீ கொடுக்கக் கூறியுள்ளான் பெருமைக்காக கொடுக்கக்கூடாது குர்பானீ

( இப்பள்ளியில் சுமார் 500 பேர் தொழுதனர் 25 நிமிடங்கள் ஜும் ஆ உரை நடைபெற்றது )


சென்னை கடற்கரை சாலையில் எழிலகத்தை ஒட்டி அமைந்துள்ள அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குப் பின்புறமாக அரசுப் பணியிலுள்ள முஸ்லிம்கள் அமைத்துள்ள பள்ளி மசூதியே ஏ அக்ஸா இப்பள்ளியில் அப்துல் வஹாப் பயாஜி அவர்கள் ஆற்றிய 05-12-08 ஜும் ஆ உரை!

அல்லாஹ் எதைப் பிரியப் படுகின்றானோ அது தான் தக்வா நீங்கள் தொழுத தொழுகை உங்கள் முகத்தில் தூக்கி அடிக்கப்படுவதாக ஹதீஸ் உள்ளது

கலிஃபா உமர் (ரலி) தனது மனைவிக்கு தேவையானதை அளந்து கொடுத்தார்கள் அதே சமயம் அனாதை ஏழை விதவை ஊனமுற்றோர் வந்தால் பணியாளர்களை அழைத்து கூட்டிட்டுப் போய் பைத்துல்மாலிலிருந்து தேவையானதை எடுத்துக் கொடுங்கள் எனக் கூறினார்கள் உமர்(ரலி) மனைவி கேட்டார்கள் எனக்கு மட்டும் அளந்து தருகிறீர்கள் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று. ஏழைகளுக்கு தர்மம் செய்வதை அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான் என்று பதிலளித்தார்கள் .

இன்றைய நாள் துல்ஹஜ் மாதத்தின் நாள் இந்த நாளை நினைவுறுத்தும் நபி இபுராகிம் அவர்களுக்கு வயது 120 ஆகவும் ஹாஜரா அன்னைக்கு வயது 80 ஆகவும் இருக்கும் போது நபி இஸ்மாயில் பிறந்தார் நபி இபுராகிமுக்குப் பிறந்த நபி இஸ்ஹாக்கின் வாரிசுகளாக வரிசையாக நபிகள் வந்துள்ளனர். நபி இஸ்மாயில் அவர்களின் வரிசையில் வந்த ஒரே நபி ரசூலுல்லாஹ் மட்டுமே!

மகன் இஸ்மாயிலை நபி இபுராகிம் அல்லாஹ்வுக்கு பலியிடுவதற்காக அழைத்துச் செல்லும் போது ஷைத்தான் வந்து ஹாஜரா அன்னையாரிடம் கூறுகிறான் உங்களுக்கோ வயது 80 இடங்கள் கணவருக்கோ வயது 120 இனி இது போல் மகன் பிறக்க வாய்ப்பில்லை அல்லாஹ்வுக்கும் பலி தேவையில்லை எனக் கனைக்கிறான் ஆயினும் அன்னை ஹாஜரா அவர்கள் குறுக்கே வந்து கணவரைத் தடுக்கவில்லை இதே போன்று இஸ்லாத்திற்கு கணவர் நன்மை செய்ய முனையும்போது மனைவி குறுக்கே வந்து தடுக்கக்கூடாது உங்கள் தியாகத்திற்கு விலை இல்லை.

ஆட்டுக்கறி திண்ணாதவர்கள் மாட்டுக்கறியைத் திரும்பியே பார்க்காதவர்கள் நம்மிடையே உண்டு அதற்காகக் குர்பானீ கொடுக்காமல் இருக்கக்கூடாது ஆடு அல்லாஹ் அக்பர் என்ற ஒற்றை வார்த்தையில் உயிரைக் கொடுக்கிறது அது அல்லாஹ்விடம் செவிமடுக்கப்படுகிறது நாம் தொழுகையில் எத்தனை அல்லாஹ் அக்பர் சொன்னாலும் உள்ளச்சம் இல்லாதவரை அல்லாஹ் செவி மடுப்பதில்லை.

(20 நிமிடங்கள் ‘ஜும் ஆ’ உரை நிகழ்த்தப்பட்டது 125 ஆண்கள் சில பெண்கள் தொழுகையில் கலந்து கொண்டனர் ஆண்கள் தொழும் இடத்தில் மூன்றில் ஒரு பகுதியை பிரித்து திரையைத் தொங்கவிட்டிருந்தனர் அரசுப் பணியிலுள்ள முஸ்லிம் பெண்கள் இமாமைப் பின் தொடர்ந்து அங்கு தொழுதனர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு ஊழியர்களது பொருளாதார நிலையை தம் பாட்டு ஒன்றில் ஒன்னுலயிருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் 20 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் எனப் பாடியிருந்தது இத்தனைவருடங்கள் கடந்தும் பொருந்தும் விதமாக பள்ளிவாசல் கரும் பலகையில் எழுதப்பட்டிருந்த ஜும் ஆ வசூல் காட்சியளித்தது 14ந் தேதி 850/- 21ந்தேதி510/- 28ந்தேதி 275/- என்று எழுதப்பட்டிருந்தது அரசு ஊழியர்களான முஸ்லிம்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது )

விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் அமைந்துள்ள சாதிக் பாட்சா நகரில் உள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளியில் சிங்கப்பூர் ஹஜ்ரத் என அழைக்கப்பெற்ற ஹனீப் மன்பயீ அவர்கள் 12.12.08ல் நிகழ்த்திய ஜும் ஆ உரையிலிருந்து …

வருங்கால வளத்துக்கு பொறுப்பேற்கக் கூடிய இளைஞர்களே ! ஆண்டுக்கு இருமுறை அல்லாஹ் நன்மைகளை நன்னாட்சிகளின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறான் அந்நாட்களுக்கான நன்மைகளை முடித்த வரையில் நிறைவு செய்திருக்கிறோம்

நாம் செய்யக்கூடிய தொழுகை, ஜகாத், ஹஜ், போன்றவற்றில் நன்மையும் மகிழ்ச்சி இருக்கிறது நாம் மகிழ்ச்சியோடு வாழ எவ்வளவு தான் பொருளீட்டி வாழ்ந்தாலும் அது அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சியைத் தராது நமது இபாதத்தில் தான் அல்லாஹ்வுக்கு மகிழ்ச்சியிருக்கிறது உயிர்வாழ உடல் தேவை. உடல் வாழ பொருள் தேவை. இந்த உடல் பொருள் இரண்டும் அல்லாஹ் கொடுத்தது.

நம் இஷ்டத்திற்கு உலகில் வாழ முடியாது அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்குத் தருகிறான் 80 வயதுடைய இபுராகீம் நபிக்கு இரண்டு மனைவிகளிருந்தும் குழந்தைகளில்லை யா அல்லாஹ் எனக்கு சாலிஹான குழந்தையைக் கொடு எனத் துஆக் கேட்டார்கள் ஆண் பெண் குழந்தையைக் கொடு எனக் கேட்கவில்லை நல்ல குழந்தையைக் கொடு என்று கேட்டார்கள் அல்லாஹ் இபுராகீம் நபிக்கு 90 வயதில் அன்னை ஹாஜரா மூலமாக நபி இஸ்மாயிலைக் கொடுத்தான்.

நாம் எதை எதிர்க்கிறோமோ அதில் நன்மை இருக்கும் எதைக் கேட்கிறீர்களோ அதில் தீமை இருக்கும் நபியிடம் அல்லாஹ்கூறுகிறான் நபியே! நீங்கள் இபுராகீம் வழியில் வந்தவர் என்று அன்று ஹாஜரா அன்னையார் ஸபா! மர்வா! மலைக்குன்றுகளுக் கிடையே ஓடி மகன் இஸ்மாயில் மூலம் அல்லாஹ்விடமிருந்து ஜம்-ஜம் நீரைப் பெற்றார்கள் அன்னை ஹாஜரா செய்த தியாகத்திற்கு அடையாளமாக இன்று ஸயீ தொங்கோட்டம் ஓடப்படுகிறது ஜம், ஜம் நீரை ஒரு நிமிடத்திற்கு லட்சக் கணக்கானோர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள் 5,000ம் வருடத்துக்கு முந்தைய தியாகம் இன்றைக்கும் நினைவு படுத்தப்படுகிறது.

ஜகாத் ஹஜ் பொருள் சம்பந்தமானது தொழுகை உடல் சம்பந்தமானது. உடலைக் காப்பாற்றுவதற்கு பர்ளு அவசியம் உனக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதிலிருந்து ஜகாத்தொடு உலகில் எதுவும் உனக்குச் சொந்தமல்ல ஒரு விருந்தின் போது இபுராகீம் அவர்களிடம் உங்களுக்கென்ன ஏராளமான ஒட்டகங்களை வைத்திருக்கிறீர்கள் விருந்தளிக்கிறீர்கள் என்று ஒருவர் கூற உடனே நபி இபுராகீம் ஒட்டகம் என்ன என் பிள்ளையை அல்லாஹ் கேட்டால் அறுத்துப் பலியிடுவேன். எனக்கூறுவதைத் தான் அல்லாஹ் பிடித்துக்கொண்டு இபுராகீமே! எதைச் சொன்னாயோ அதைச் செய் எனக் கட்டளையிடுகிறான்.

மகனை பலி கொடுக்க தந்தை இபுராகீம் அழைத்துச் செல்லும் வேளையில் மூன்று இடங்களில் ஷைத்தான் இஸ்மாயில் நபி மனத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறான நபி இபுராகீம் மூன்று இடங்களிலும் ஷைத்தானை நோக்கிக் கல்லெறிகிறார். அது தான் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்மாயில் நபி தந்தையிடம் மூன்று விஷயங்களைக் கூறுகிறார் தந்தையே! எனது கை கால்களைக் கட்டி விடுங்கள் நீங்கள் அறுக்கும் போது திமிறாது இருப்பதற்காக. குப்புறப் போட்டு எனது கழுத்தை அறுங்கள் அப்போது தான் எனது முகத்தை நீங்கள் பார்த்து மனவேதனை அடைய மாட்டீர்கள் உங்களது கடமை தடுக்கப்படாது இரத்தம் படிந்த ஆடைகளை எனது அன்னையிடம் சேர்ப்பித்து விடுங்கள் அதை எனது நினைவாக என் அன்னை வைத்துக் கொள்வார். இது தான் இஸ்லாம் உணர்த்தும் தியாகம்.

( முஸ்லிம் முரசு ஜனவரி 2009 லிருந்து )

No comments: