Thursday, March 5, 2009

ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்

மதுரை,மார்ச்.6

இந்தியாவின் தொழில் நிறுவமான ஸ்ரீ ராம் குழுமத்தின் அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், திருக்குறளில் கூறப்பெறும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மானுட சமுதாயத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் வாழ்ந்து வருவோரில் ஒருவரைத் தெரிவித்து அவருக்கு `அறம்' விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளைத் தொடர்ந்து ஆறாம் முறையாக இந்த ஆண்டும் வழங்கவுள்ளது. தகுதியுடையவரை ஆர்வலர்கள் பரிந்துரைக்கலாம்.


`அறம்' விருதுக்குரிவரைத் தேர்வு செய்ய முன்னாள் துணைவேந்தர் முனைவர், ஒளவை நடராசன் தலைவராகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜி.ரங்காராவ், ஏ.எம். சுவாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதிற்குரியவரைத் தேர்ந்தெடுக்கக் குறைந்த நிலைத் தகுதிகள் வருமாறு; பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் அவர் சமூக மேம்பாட்டிற்கு பெரிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும். தமிழராகவோ (அ) தமிழ்நாட்டில் வசிப்பவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்தியராக, இந்தியாவில் வசிப்பவராக இருந்தல் அவசியம். வயது வரம்பு எதுவுமில்லை. ஆனால் தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவர் தனி மனிதராகவோ அல்லது ஒரு அமைப்பின் நிறுவனராகவோ இருக்கலாம். விருதிற்குரியவராகப் பரிந்துரை செய்யப்படுபவர் தாமாக விண்ணப்பிக்க முடியாது. அவரை நன்கு தெரிந்த ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்.

விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தொகையும் `அறம்' விருதும் மகத்தானதொரு விழாவில் சிறப்பு விருந்தினர் ஒருவர் மூலம் வழங்கப்படும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் இவ்விருதிற்குத் தகுதியானவராக இருப்பதாகக் கருதினால் அவவைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும், அவர் ஆற்றிய கடமைகள், தொண்டுகள் முதலியவற்றைப் பற்றியும் வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ஐந்தாவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை _ 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 31,2009 ஆகும்.

No comments: