Sunday, May 18, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி !
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் நூல் வெளியீடு !!
அமீரக காயிதெ மில்லத் பேரவை சிறபான ஏற்பாடு !!!


அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை துபாய் தேரா சலாஹுத்தீன் சாலையில் அமையப்பெற்றுள்ள ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் அமையப்பெற்றுள்ள காயிதெமில்லத் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அப்துல் காதர் உமரி அவர்கள் இறைவசனங்களை ஓதினார். இயக்கப்பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் தனது கம்பீரக் குரலில் கணீரெனப் பாடினார். தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது மற்றும் ஈடிஏ அஸ்கான் எக்ஸியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை

தலைமை உரையாற்றிய அப்துல் ரஹ்மான் தனது உரையில் இச்சிறப்பு மிகு விழா சீருடன் நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய ஈடிஏ அஸ்கான் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரைப் பாராட்டினார். சமுதாய காரியம் சிறப்புற நடைபெற சிரமங்கள் பல இருந்தாலும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்திய இஸ்லாமிய சமூகத்தின் விடிவெள்ளியாக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அது தொடங்கப்பட்டது முதல் இன்றளவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாது, ஒழுக்க மேன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை பல இருப்பினும் தளராத மனதுடன் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களது தலைமையில் சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் ஆகியோர் காட்டித்தந்த வழியில் இப்பொழுது இயக்கப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அவர்களின் தலைமையை வலுப்படுத்தி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமுதாயத்தின சக்தியை உலகறியச் செய்வோம் என்றார்.


முஸ்லிம் லீக் கூட்டத்தில் முதல் முறையாக பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் முதல் முறையாக முஸ்லிம் லீக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பெருமையைப் பெருகிறார் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் உரிமைக்குரலாக முஸ்லிம் லீக் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். எளிமையின் நிழலாக விளங்கியவர் அவர். சாதாரண தொண்டராக வலம் வந்த தலைவர்.

கள்ளிக்கோட்டையில் ஒரு மாநாட்டிற்காக சென்றிருந்த காயிதெமில்லத் அவர்கள் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். தொண்டர் ஒருவர் தலைவர் அவர்கள் நன்றாக தூங்குகிறாரா என கவனிக்கச்சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இருபது கோடி இந்திய முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் ( ரஹ்) அவர்கள் தான் வைத்திருந்த ஒரே ஜெர்வானியை துவைத்துக் கொண்டிருந்தார். அப்படியொரு எளிமையைக் கொண்ட தலைவர்.

திருக்குர்ஆன் வழியில் வாழ்க்கையும், நமது கோட்பாட்டையும் அமைத்துக் கொண்டால் என்றும் தோல்வி காண முடியாது. சென்னை புதுக்கல்லூரியை கடந்து செல்லும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழக வணிகப் பிரமுகர்கள் தங்களது பங்களிப்பு இதற்கு உள்ளது என்பதை நினைவு கூறிடச் செய்யும் கல்வி நிறுவனம். இம்முயற்சியில் காயிதெ மில்லத் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

அறிவுக்கோட்டையாகத் திகழ்ந்து வரும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தொடக்க விழாவில் காயிதெமில்லத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பீடி சுற்றிய நமது சமுதாய இளம் பெண்கள் இன்று கணிப்பொறித்துறையில் சாதனை புரிந்து வருவது பெருமைக்குரியது. அறிவுத்துறையில் சாதனை படைத்து வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளர்ச்சியிலும் காயிதெமில்லத் அவர்களின் பங்குண்டு. பல்வேறு சிரமங்களுக்குகிடையே அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சமுதாயப் பெருமக்கள் தமிழகத்தில் சமுதாயக் கல்விப் பணிக்கு பெரும் பங்காற்றி வரும் செய்தி மகிழ்வையளிக்கிறது.

தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் கேஎம்கே அவர்கள் தனது தாருல் குர்ஆன் இதழில் தமிழகத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள தொடர்புகளை மிக அருமையான முறையில் தொகுத்தளித்து வந்தவர். பேராசிரியரின் அமீரக வருகை சமுதாய மக்கள் மத்தியில் பெரும் ஆர்வ அலைகளை ஏற்படுத்தியிருப்பது இங்கு கூடியிருக்கும் பெருமக்களே சாட்சியாக இருக்கின்றனர் என்றார்.


தளபதி உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ தனது வாழ்த்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமது ஷரீஅத்திற்கு எதிரான நிகழ்வுகள் நடைபெறும் போது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த பேரியக்கம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் அடக்கப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்பட வேண்டும் என படேல் சொன்னபோது அந்த இரும்பு மனிதரை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் காயிதெ மில்லத்.

ஷாபானு வழக்கு குறித்த விவாதம் வந்தபோதும் அது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தது முஸ்லிம் லீக்கின் பனாத்வாலா சாஹிப்.

பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சென்றபோது அங்கு இடிக்கப்பட்ட கோயில்கள் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டப்பட்டு அதவானிஜி அவர்களே திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நாடாளுமன்றத்தில் வைத்தவர் தற்போதைய தலைவர் பேராசிரியர்.

மதரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் பேசிய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் பேராசிரியர். மேலும் தான் மதரஸாவில் பயின்ற ஒருவர் என்றார்.

1968 ஆம் ஆண்டில் முதல் இறை இல்லமாம் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீ வைத்து சேதப்படுத்திய போது அதனை எதிர்த்து சிதம்பரத்தில் காயிதெ மில்லத் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஈமானுக்கு இஸ்லாத்துக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத், ஷம்சீரே மில்லத் வழியில் தற்போதைய முனீருல் மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்ட முஸ்லிம் லீக் குரல் கொடுத்து வருகிறது.

யாரையும் ஒழிக என்று சொல்லாதீர்கள். நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர் !! என முழங்குங்கள் என வழிகாட்டிய பெருமைக்குரிய தலைவர் காயிதெ மில்லத்.

சமீபத்தில் கலைவாணர் அரங்கில் பனாத்வாலா சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் லீக் 60 ஆண்டு விழா என தலைவர் கூறிய போது தைக்கா சுஐபு ஆலிம் சாஹிப் அவர்கள் 60 என சொல்லாதீர்கள் 1400 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய மிக்கது எனச் சொல்லுங்கள் எனக்கூறியதை நினைவு கூர்ந்தார்.

காயிதெ மில்லத் மன்ஜில் சமுதாயப் பணியில் ஒரு முக்கியப் பங்காற்றிவருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் லீக்கில் புதியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் சென்று வந்த வந்த முத்துப்பேட்டை, முதுகுளத்தூர், மயிலாடுதுறை, பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லீக்கின் நிர்வாகிகள் கூட்டம் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது.


நூல் வெளியீடு

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த 'கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தின் கருத்துரைகள்' - நாடாளுமன்ற - சட்டமன்ற - பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பு நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நாகூர் ஷேக் தாவுது அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சமுதாயப் பிரமுகர் முஹம்மது, ஈடிஏ அஸ்கான் மனித வள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், ஈமான் அமைப்பின் பொருளாளர் மீரான் முஹைதீன், அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், அபுதாபி அய்மான் சங்க நிர்வாகி அப்துல் மஜீது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

குவைத் கே.எஸ். அன்வர் பாட்சா

அமீரகத்தில் நடைபெறும் பேராசிரியர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வத்துடன் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் அவர்கள் வருகை புரிந்தார். அவர் தனது உரையில் பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் கராச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காயிதெ மில்லத் இந்தியா திரும்பியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை துவங்கினார்.

இது கண்டு அதிர்ச்சியுற்ற பட்டேல் இவ்வமைப்பை கலைத்து விட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பதவியளிப்பதாக பேரம் பேசியதும் அதனை மறுத்தார் காயிதெமில்லத். இன்றுள்ள சில அமைப்புகளுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தால் சமுதாயத்தை அடகு வைத்திருப்பர். கற்பனை செய்ய இயலவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அமானிதம் என்றார் காயிதெ மில்லத். சமீபகாலமாக தங்களது பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு நிதி என்று வளைகுடா நாடுகளில் பலர் வழங்கியுள்ளனர். ஆனால் அவையெல்லாம் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே.

பேராசிரியரை சிராஜுல் மில்லத் சூஃபி என அழைப்பார். சூஃபி என்றால் சாது போன்றவர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பர். இன்று இச்சாது மிரள ஆரம்பித்து விட்டது இனி அரசியல் அரங்கில் பெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பணியினைப் பார்த்து சிலர் லீக் தேய்ந்து விட்டது, ஓய்ந்து விட்டது என்றெல்லாம் கூறி வருகின்றனர். லீக் தேயவுமில்லை, ஓயவுமில்லை அது தனது பாதையில் நிதானத்துடன் அடியெடுத்து வைத்து வருகிறது என்றார்.

போன்னாடை மற்றும் நினைவுப் பரிசு

அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சார்பில் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பொன்னாடையினை எம். அக்பர் கான் போர்த்தினார்.

கீழக்கரை ஹமிதிய்யா மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினர், துபாய் அல் அமீன் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடையினை பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் மௌலவி அல்ஹாஜ் ஷபீகுர் ரஹ்மான் மன்பஇ ஆகியோருக்கு வழங்கினர்.


மீண்டும் இயக்கப் பாடல்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகம் மூட்டும் வகையில் தேரிழந்தூர் தாஜூத்தீன் இயக்கப்பாடல் ஒன்றை பாடினார்.

காயல் பிறைக்கொடியான் ஒலிநாடா

முஸ்லிம் லீக்கையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் என்ற காயல் பிறைக்கொடியான் அவர்களது பாடல் தொகுப்பு ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகளாக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. வெளியிட முதல் பிரதியினை அமீரக காயல் நலச்சங்க தலைவரும், ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆடிட்டர் ஜே.எஸ்.ஏ. புஹாரி பெற்றுக்கொண்டார்.


அன்வர் பாட்சாவுக்கு பொன்னாடை

அருமை மிகு நூலை தொகுத்த திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சாவுக்கு தலைவர் பேராசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.



பேராசிரியர் உரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் அவர்கள் தனது சிறப்புப் பேருரையில் அற்புதங்கள் பல புரிந்து வரும் அமீரக காயிதெ மில்லத் பேரவை இப்போதும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றது. ஆம் முஸ்லிம் லீக் கூட்டங்கள் பலவற்றிற்கு பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அழைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அமீரக காயிதெ மில்லத் பேராசிரியர் ஃபாரூக் அவர்களை அழைத்திருப்பதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமைதியாகப் பேசித்தான் பார்த்துள்ளேன். அமீரகம் வந்துள்ளதாலோ என்னவோ உற்சாகம் மற்றும் தெம்புடன் இடி, மின்னலாக ஒரு இனம் புரியாத ஈடுபாட்டுடன் பேசியுள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது தமிழகமே இங்கு திரண்டிருப்பது போன்ற பெருமை ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக நாடான இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நமது தனித்தன்மையினை நிலைநாட்ட அரசியல் அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலமே தீர்வு காண முடியும்,

பிரிக்கப்படாத தமிழகத்தில் 293 சட்டமன்ற உறுப்பினர்களில் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி முறை 1952 வரை இருந்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர் லீகர்கள். காயிதெ மில்லத் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இலக்கணமாக நடந்து கொண்டவர். இதனை தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

சிலர் பொதுவான இயக்கம் என்று கூறிக்கொண்டு மத அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்லாமியத்துவம் திணிக்க ஆரம்பிக்கபட்டதல்ல. சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இயக்கம்.

முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆண்டபோது சகோதர சமுதாயத்தினர் இஸ்லாத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் எத்தனையோ மீனாட்சிபுரங்கள் ஆமீனாட்சிபுரங்களாகி வருகின்றன.

தற்போது இ. அஹ்மது சாஹிப் மத்தியில் அமைச்சராக இருந்து வருகிறார். இறைவன் நாடினால் இன்னும் பல பொறுப்புகள் லீகர்களுக்கு கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள 12612 ஊராட்சித் தலைவர்களில் 482 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி அதிலும் குறிப்பாக மாநில கட்சி ஆதிக்கம் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையே தொடரும் வரும் தேர்தல்களிலும்.

முஸ்லிம் லீக் தீவிரவாத இயக்கமல்ல. இதவாத இயக்கம். வேகமாகப் பேசுவதால் சமுதாயத்திற்கு கிடைத்த பலனை சிறைச்சாலைகளில் வாடுவோர் சாட்சிகளாக இருந்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவையை சேர்ந்த சிறையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட காரணமாக இருந்து வந்துள்ளது. நாம் வாழும் இந்தியத் திருநாடு பல்வேறு சமூகம் வாழ்ந்து வரும் நாடு. நாம் ஒருவரையொருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது தனித்தன்மையினை பாதுகாப்பதில் குறிப்பாக இருத்தல் அவசியம்.

தண்ணீரை சூடாக்கினால் கொதிக்கும். மீண்டும் அது இருந்த நிலையிலேயே பார்க்கிறோம். எப்போது சூடாக இருப்பதினால் சமுதாயத்திற்குப் பலன் கிடையாது.

எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனுடைய தனி அடையாளத்துடன் போட்டியிட முயற்சி மெற்கொள்ளப்படும்.

எதிர்வரும் ஜும் மாதம் 14 ஆம் தேதி தீவுத்திடலில் முஸ்லிம் லீக் மணிவிழா பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மத்திய, மாநில சமுதாயப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதில் அமீரகப் பெருமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

முஸ்லிம் லீக் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. தற்பொழுது பெரும்பாலான ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் இயக்கப்பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் இளைஞர்களும் விதிவிலக்கல்ல.

இத்தகைய சமுதாயப் பேரியக்கத்துக்கு உங்களது ஆதவினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

பொருளாளர் கவிஞர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத், யஹ்யா முகைதின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் மௌலவி இஸ்மாயில் ஹஸனி, கீழக்கரை, காயல்பட்டணம், முதுகுளத்தூர், லெப்பைக்குடிகாடு, அருளாட்சி, கோட்டக்குப்பம், லால்பேட்டை, நாகூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்தார்கள், சமுதாயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமீரகத்தில் ஒரு அரசியல் மறுமலர்ச்சிக்கு இக்கூட்டம் பெரிதும் முக்கியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


www.quidemillathforumuae.blogspot.com

www.aimantimes.blogspot.com