Friday, August 8, 2008

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்தின் ஆபாச எதிர்ப்பு வாரம்

'அருந்தமிழ்நாட்டில் ஆபாசங்கள் எதற்கு?'

http://www.tamilanexpress.com/politics/politics5.asp

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர், கடந்த ஜூலை 25 முதல்-ஆகஸ்ட் 3 வரையிலான நாட்களை ஆபாச எதிர்ப்பு வாரமாகக் கடைப்பிடித்தனர். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆபாசத்திற்கு எதிராக கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம், பேரணி என நடத்தினர்.

நாம் கடந்த வியாழனன்று சென்னையில் நடந்த பேரணியை விஸிட் செய்தோம்.

மதியம் 2 மணிக்கு பேரணி துவங்குவதாக அறிவிக்கப்பட்ட தீவுத்திடல் அருகிலுள்ள மன்றோ சிலை அருகே 20 பேர் மட்டுமே கூடி இருந்தனர். நேரம் செல்லச் செல்ல, குழு குழுவாக அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரத் துவங்கினர். 3 மணிக்கு பேரணியைத் துவங்க போலீஸôர் அனுமதி வழங்கியதால், சரியாக 2.50 மணிக்கு எல்லோரும் பேரணிக்குத் தயாரானார்கள்.

பேரணியைத் துவக்கி வைக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தலைவர் கோ.க. மணி, மன்றோ சிலையருகே 2.55 மணிக்கு காரில் வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து சரியாக 3 மணிக்கு பேரணிக்குத் தலைமை வகித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழகத் தலைவர் ஏ.ஷபீர் அஹமத் பேசத் துவங்கினார்.
அவர், ""தமிழ்நாட்டில் எங்கும் ஆபாசம் நிரம்பியுள்ளது.

திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எதிரொலிக்கின்றன. அரை குறை ஆடைகளுடனான நிகழ்ச்சிகள் சின்னத்திரையை ஆக்கிரமித்துள்ளன. பத்திரிகைகளும் ஆபாசத்திற்கு இடமளிக்கும் விதமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. சின்னத்திரையில் வரும் காட்சிகள் இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் என எல்லாத் தரப்பினரையும் ஆபாசத்தை நோக்கித் தள்ளிவிடுகின்றன.

மாதா, பிதா, தெய்வம் என்ற வரிசையில் உள்ள ஆசிரியர்கள்கூட மாணவிகளிடம் தவறாக நடப்பதை இன்று பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது'' என்று வேதனைப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பேரணியைத் துவக்கி வைத்துப் பேசிய கோ.க.மணி, ""எங்கப் பார்த்தாலும் ஆபாசம் அதிகரித்து, அருவருப்பு மேலோங்கி வருவதைப் பார்க்க முடிகிறது. அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டக்கூடியதாக இந்தப் பேரணி அமைந்துள்ளது.

தொலைக்காட்சியைப் பார்த்து பிஞ்சு உள்ளங்கள், ஆபாச வக்கிரப் புத்திக்குத் தூண்டப்படுகிறார்கள். நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வக் கருத்துக்களை கடந்த கால திரைப்படங்கள் சொல்லின. இப்போது அப்படியல்ல கதை, பாடல், உடை நாகரீகம் என எல்லாவற்றிலும் ஆபாசம். சமூகப் பார்வையோடு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பதை திரைப்படத்துறையினர் உணர வேண்டும். ஆபாசத்தை ஒழிப்பதில் மிகுந்த அக்கறை அரசுக்கு உள்ளதால், அரசு இந்த ஆபாசத்தை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார்.

இதன் பிறகு மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நிறைவடைந்தது. அங்கு ஆபாசத்தை ஒழிக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆபாசத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, ""தணிக்கை செய்! தணிக்கை செய்! சின்னத்திரையை தணிக்கை செய்!'' ""ஆன்மீகம் தழைக்கும் அருந்தமிழ்நாட்டில் ஆபாசம் எதற்கு ரோட்டில், வீட்டில்...?''

""தடை செய்! தடை செய்! ஆபாசப் படங்களை தடை செய்!'' ""எரிதழல் ஒன்றை எடுத்து வா தோழா! அரிக்கும் ஆபாசம் தடுக்கவா தோழா!'' ""இருளில் தொலையுது இந்திய இளமை! கருகி அழியுது கன்னியர் பெண்மை'' என்று பல்வேறு உணர்ச்சிபூர்வமான கோஷங்களை ஆண்களும், பெண்களும் எழுப்பிச் சென்றனர்.

நாம் பேரணியில் பங்கேற்ற ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் என்.ஜான் முஹம்மதிடம் பேசினோம். அவர், ""ஆபாசம் எங்கும் தலைவிரித்தாடுகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரை, இணையத் தளம் என்று எங்கும் ஆபாசம்.

இது கலாசாரத்தைச் சீரழிக்கிறது. ஆணுறை விளம்பரங்கள் மோசமாக உள்ளன. விளம்பரங்களில், குறிப்பாக சுகாதாரப் பொருட்கள் பற்றிய விளம்பரங்களிலும் மோசமான ஆபாசங்கள் இடம்பெறுகின்றன. எய்ட்ûஸ கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சியை வரவேற்கிறோம். அதற்காக ஆணுறை வழங்கும் இயந்திரங்களை வைப்பதை எதிர்க்கிறோம்.'' என்று ஆவேசப்பட்டார்.

""ஒளிவு மறைவாக இருந்த ஆபாச மற்றும் மானக்கேடு செயல்கள், இன்று திறந்த வெளியில் நடக்கின்றன. ஃபேஷன் என்ற பெயரில் அரைகுறை ஆடை உடுத்தும் கலாசாரம் இன்று எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது'' என்று கொதித்த ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிரணி மாநில துணை அமைப்பாளர் கதீஜா மற்றும் தௌலத் நிஷா ஆகியோர், ""பெண்கள் தாய்மைக்கு முன்னுதாரணம்.

ஆனால் அத்தகைய பெண்களை தரக்குறைவாக தொலைக்காட்சி, திரைப்படங்களில் காட்டுகிறார்கள். வீட்டில் குடும்பத்தோர் தொலைக்காட்சியைப் பார்க்க முடிவதில்லை. அந்த அளவிற்கு ஆபாசம் அத்துமீறி உள்ளது. விளம்பரம் என்ற பெயரில் குழந்தைகள் மனதில் விஷ விதையைத் தூவிவிடுகின்றனர்'' என்று ஆவேசமானார்கள்.

""பழைய திரைப்படங்களில் செய்தி இருந்தது. இன்று ஆபாசம் மட்டும்தான் இருக்கிறது. காசு பார்ப்பதில்தான் குறியாக உள்ளனர் திரைப்பட தயாரிப்பாளர்கள். இது பற்றிக் கேட்டால், "மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். நோயாளிக்கு அவர்கள் விரும்புகிறார்கள் என்று விஷத்தன்மையுள்ள மருந்துகளை ஒரு டாக்டர் கொடுப்பாரா?'' என்று கேள்வி எழுப்பினார் பேரணியில் கலந்துகொண்ட இன்னொரு பெண் ஷீரிமா.

நல்ல சங்கை ஊதியுள்ளனர். சம்பந்தப்பட்டோர்களின் காதுகளில் விழுந்தால் சரி!

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

06.08.2008 புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மௌலவி குதுப்புத்தீன் ஆலிம் அவர்கள் 'நபிகள் நாயகம் ( ஸல்)' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் தமிழகப் பெருமக்கள் பலர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கென தனியிட வசதியும் செய்யப்பட்டிருந்தது.

கோட்டைப் பள்ளி

இதே போல் ஒவ்வொரு வாரமும் தேரா கோட்டைப் பள்ளியில் தமிழ் சொற்பொழிவு மற்றும் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரபி மொழியினை படிக்காதவர்கள் கூட திருக்குர்ஆனை சிறப்பான முறையில் ஓதுவதற்குப் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் தமிழ் மொழியில் சொற்பொழிவும், மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இதனை ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனி ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.