Saturday, August 22, 2009

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)


http://www.mudukulathur.com/religiondetails.asp?id=147

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0822-the-holy-call-from-minaret.html

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!

என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.

இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.

சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.

இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.

எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.

ஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.

எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.

ஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.

நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.

ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.

உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.

ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.

ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!

கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?

ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.

கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.

( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)