Tuesday, November 18, 2008

பாலையான வாழ்க்கை

பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்...

இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
"பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

"இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்
சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்
ஔவ்வையார் அன்றே......

மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே...
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே

-"kavianban"KALAM, Adirmapattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com