துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை கல்வி விழிப்புணர்வு விழாவினை வெள்ளிக்கிழமை தேரா லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரெண்ட்டில் நடத்தியது.
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. பொறியாளர் எல். ஷேக் முஹம்மது தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஃப். சவுக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
என்ன ? எங்கே ? படிக்கலாம் என்ற உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதலை திருச்சி அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாபர் நடத்தினார். மடிக்கணினி உதவியுடன் கல்வி குறித்த தகவலை விவரித்தார்.
பெற்றொர்கள் அயல்நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் பிள்ளைகள் தாயகத்தில் இருக்கும் போது அவர்களை கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக எந்த வகையில் ஆலோசனை கூறுவது என்பன போன்ற மனநல ஆலோசனைகளை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா வழங்கினார். குறிப்பாக பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்யும் போது அவர்களை பாராட்டி உற்சாக மூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காயல்பட்டணம் மருத்துவர் பி.எம். செய்யது அஹ்மது அவர்கள் மருத்துவம் படித்த நிகழ்வுகளை விவரித்தார். மவ்லவி ஆவூர் இஸ்மாயில் ஹஸனி ஆலிம் பட்டம் பெற்ற தான் உயர்கல்வி கற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை விவரித்தார். தேரிழந்தூர் தாஜுத்தீன் கல்வி விழிப்புணர்வு பாடலை பாடினார். முதுவை ஹிதாயத் கல்வித் தகவல்களை வழங்கினார்.
இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு இதழை வாசகர் வட்ட பொறுப்பாளர் வி. களத்தூர் கமால் பாஷா வெளியிட இதழை மனநல மேம்பாட்டு ஆலோசகர் முஹைதீன் பாட்சா பெற்றுக்கொண்டார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அப்துல் காதர், நூர் முஹம்மது, சையது பாஷா, சபியுல்லா, முஹம்மது ராஷித், அப்துல் சலாம், அஹமது அலி, முஹம்மது அலி, சவுக்கத் அலி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
வி.களத்தூரைச் சேர்ந்த சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.