Showing posts with label ஜூன். Show all posts
Showing posts with label ஜூன். Show all posts

Saturday, May 24, 2008

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.
அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.