Sunday, February 15, 2009

வேலையை நேசி அது உன்னை நேசிக்கும் ! - எம்.ஜே. முஹம்மது இக்பால்



வேலையை நேசி அது உன்னை நேசிக்கும் !
எம்.ஜே. முஹம்மது இக்பால்


ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள ETA Melco Elevator Co. LLC நிறுவனத்தின் பொது மேலாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் அல்ஹாஜ் M J முஹம்மது இக்பால் B.E., M.B.A., தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.

தான் சார்ந்த பொறியியல் துறைப் பணியில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் பெயர் பெற்று விளங்கும் ஆன்மீகவாதியுமாவார். ‘தினத்தந்தி’, ‘தினமணி’ போன்ற இதழ்களில் வெளியாகியுள்ள இவரது அறிவியல் கட்டுரைகள், சுயமுன்னேற்றக் கட்டுரைகள் உலகெங்குமுள்ள தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. துபையிலிருந்து வெளிவரும் ‘The Gulf Today’ நாளிதழில் ஆண்டுதோறும் ரமளான் மாதம் 30 நாட்களிலும் வெளிவரும் இவரது ‘ரமளான் சிந்தனைகள்’ இவரது ஆன்மீகச் சிந்தனையை மட்டுமன்றி ஆங்கிலப் புலமையையும் உணர்த்தும்.

1986ல் Graduate Engineer ஆக இ.டி.ஏ. நிறுவனத்தில் நுழைந்து Field Engineer, Project Engineer, Department Manager, Sernior Manager, Asst. General Manager, General Manager எனப் படிப்படியாக வளர்ந்து உயர்ந்திருக்கும் எம்.ஜே. முஹம்மது இக்பால் தற்பொழுது தோஷிபா எலிவேட்டரில் உயர் பதவி வகித்து வருகிறார். அவர் அளித்த சிறப்புப் பேட்டி இதோ :

• இ.டி.ஏ. நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது பற்றி ?

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் பிறந்த நான் வழுத்தூரில் உள்ள செளக்கத்துல் இஸ்லாம் பள்ளியில் சிறப்புப் பெற்ற மாணவனாகவே திகழ்ந்து, பள்ளிப்படிப்பை முடித்தேன். அதன்பின் Coimbatore Institute of Technology-ல் B.E. படித்தேன். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் M.B.A. பயின்றேன்.

1986 ஜனவரி மாதம் இ.டி.ஏ. நிறுவனத்திற்காக Graduate Engineer Trainee பணிக்காக விண்ணப்பித்தேன். 200 பேர் கலந்து கொண்ட நேர்முகத்தேர்வில் நான் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தேர்வு செய்யப்பட்டேன். இன்று உலகப் புகழ்பெற்ற இ.டி.ஏ. நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இலங்கும் பாசத்திற்குரிய அருமைச் சகோதரர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் தாம் அன்றைக்கு என்னைத் தேர்வு செய்தார். அந்த நாளையும், அவரையும் எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாது. என்றும் எனது நன்றி அவருக்குரியது. ( முகத்தில் நன்றிப் புன்னகை மின்னலடிக்கிறது )

• Graduate Engineer ஆகச் சேர்ந்த நீங்கள் இன்று G.M. ஆக உயர்ந்துள்ளீர்கள். இந்த முன்னேற்றத்திற்கு யார், எவை காரணங்கள் ?

இந்த அளவுக்கு எனக்கு ஒரு முன்னேற்றம் கிடைத்திருக்கிறதென்றால் முதல் நன்றி படைத்தவனுக்கும், என்னைப் பூவுலகில் பெற்றவர்களூக்கும்தான் ! அடுத்து நான் நன்றி சொல்வது எங்கள் திறமையைக் கண்டுபிடித்து ஊக்கம் அளித்து உயர்வு பெற வழிவகுத்துத் தரும் எங்கள் M.D முஹம்மது ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கே ஆகும்.

என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய எனது ஞானகுரு ஜமாலியா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல் ஹாஷிமிய் அவர்களையும் நன்றிப்பெருக்கோடு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

வேலையை நேசி
அது உன்னை நேசிக்கும்

வேலையில் பூரணத்துவம் கண்டு
அர்ப்பணித்துக் கடமையாற்றுதலே சிறந்தது

வேலையை ஓர் இறைவணக்கமாக
எடுத்துச் செய்தல் வேண்டும்

என்பனவற்றையெல்லாம் மெளலானா அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

செய்யும் காரியத்தில் தீவிர பங்கு (Involvement ) அர்ப்பணிப்பு ( (Dedication ) கடின உழைப்பு ( ( Hard Work ) இவை மூன்றையும் மேலே சொன்னவற்றோடு இணைத்துப் பாருங்கள். இவையிருந்தால் யார்தான் முன்னேற முடியாது ?

( மனம் விட்டுச் சிரிக்கிறார். அவரது வெற்றியின் இரகசியம் புரிந்து நாமும் பெருமிதம் கொண்டு சிரித்தோம் )

• உங்கள் பணியில் சோதனைகள் வந்துள்ளனவா ? அவற்றை எப்படி வென்றீர்கள் ?

சோதனை இல்லாமல் வாழ்க்கை ஏது ? ( குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறார் ) செய்து வரும் பணிகளில் சோதனை வராமல் இருக்காது. நான் எடுத்துக்கொண்ட திட்டங்களை ( Projects ) நிறைவேற்றும்போது கடுமையான சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன்.

ஒருமுறை விமான நிலைய ஒப்பந்தம், ஏறக்குறைய நூறுகோடி ரூபாய் திட்டம், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தாக வேண்டும். தொழிற்சாலைத் தொந்தரவு ( Factory Trouble ) ஏற்பட்டதால் முடிக்க முடியாத சூழ்நிலை. ஐரோப்பியர்களுக்கு மத்தியில் நான் ஒரே ஓர் இந்தியனாகத் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய சமயம் அது. அந்தக் கடுமையான பிரச்சினையை மட்டுமல்ல, மற்ற பிரச்சினைகளைக்கூட இறையருளால் சமாளித்துவிட்டேன்.

முதலில் பிரச்சினை என்ன என்று எழுதிக்கொள்வேன். அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க என்னென்ன வழிகளையெல்லாம் கையாளலாம் என்பதையும் எழுதிக்கொள்வேன். ஒவ்வொரு வழியிலும் என்ன பயன் விளையக்கூடுமென்பதை உணருகிறபோது தெளிவான முடிவு தெரிந்துவிடும். அந்தத் தெளிவான முடிவைக் கையாளும்போது பிரச்சினை மிகச் சுலபமாகத் தீர்ந்துவிடும்.

அதுமட்டுமல்ல; சோதனைகளை Team Work மூலம் எளிதில் வெல்ல முடியும். உடன் பணியாற்றுபவர்களுடன் இன்முகம் காட்டி நட்பு மேலிடப் பழகுதல் வேண்டும்; நான் பெரிய பதவியில் இருப்பவன், சாதாரணமானவர்களிடம் பழகமாட்டேன்’ என்கிற வறட்டுக் கெளரவம் இல்லாமல் எல்லோரிடமும் மிகமிக நெருங்கிப்பழகவேண்டும். அவர்களுடைய குடும்ப விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களோடு தனிப்பட்ட தொடர்பும் ( Personal Touch ) வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அலுவலக வேலை மேம்படுகிறது. அந்த அளவுக்கு உடன் பணியாற்றுகிறவர்களோடு சுமூக உறவு நிலைகும் போது நிச்சயமாக Team Work மூலம் எத்தகைய சோதனைகளையும் நம்மால் வென்றெடுக்க முடியும்.

இன்றைக்கும் 30 பொறியாளர்கள் உள்பட 700 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தின் பொதுமேலாளராக இப்படித்தான் சோதனைகளை வென்று பணியாற்றி வருகிறேன்.

( எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக எப்படி இவரால் சொல்ல மட்டுமல்ல. செய்துகாட்டவும் முடிகிறது என்பதை எண்ணியபோது நமக்கு மலைப்பு ஏற்படவே செய்தது )

• சமுதாய சேவையில் ஆர்வம் வந்தது எப்படி ?

ஓர் முஸ்லிம் என்ற முறையில் யாருக்குமே இயல்பாகவே சமுதாய சேவையில் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.

இருந்தாலும் என் பெற்றோரை நினத்துப் பார்க்கிறேன். மலேசியாவில் அக்கெளண்டண்ட் ஆக இருந்தவர் எனது தந்தை ஜமால் முஹம்மது. எட்டாம் வகுப்பு முடியப் படித்தவர் எனது தாயார் தாவூது பேகம். ஓரளவு படித்த குடும்பம். எனது குழந்தைப் பருவத்தில் எனத் தந்தை என்னைக் காவிரிக் கரையில் நடைப்பயிற்சிக்காக ( walking ) அழைத்துச் செல்வார்.

நடந்துகொண்டே கல்வி, ஒழுக்கம், சமுதாய சேவை ஆற்றவேண்டியதன் அவசியம் முதலியவற்றையும் எடுத்துச்சொல்வார். ஆம், காவிரிக் கரைதனிலே நடைப்பயிற்சி மட்டுமல்ல வாழ்க்கை நடைப்பயிற்சியையும் சேர்த்தே என் தந்தை பயிற்றுவித்தார்.

மேலும் சிறிய வயதிலேயே எனது பெற்றோர் ஏழைப்பிள்ளைகளுக்குத் துணிமணி, புத்தகம் முதலியவற்றையெல்லாம் அன்பளிப்பாக வழங்குவதைப் பார்த்து நானும் பெரியவன் ஆனதும் இப்படிச் செய்யவேண்டுமென நினைத்துக் கொள்வேன். அதுமட்டுமல்ல சிறுவயதிலேயே என் பெற்றோர் இஸ்லாமிய வரலாற்றைச் சொல்லித்தந்ததோடு பிக்ஹ¤ கலைக் களஞ்சியத்தையும் என்னைப் படிக்க வைத்ததும் காரணமெனச் சொல்லலாம். கண்டிப்பாக நான் பெற்றோருக்கு இதற்காகவும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ( உணர்ச்சி வசப்படுகிறார் )

• இன்றைய இளைஞர்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன ?

வாய்ப்புகளைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை இன்றைய இளைஞர்களிடம் நிறைய இருக்கிறது. அதிலும் Grasping Opportunity in Computer World நிறையத் தென்படுகிறது. அதே நேரத்தில் Forgetting or Ignoring Traditional Core Values பாரம்பரிய விழுமங்களை அலட்சியம் செய்யும்போக்கு இருப்பதையும் பொதுவாகக் காணமுடிகிறது. புதியவற்றை ஏற்றுக்கொள்ளலாம். அதே சமயம் பழையவற்றை மறந்துவிடக்கூடாது.

இன்றைக்குப் பெருகி இருக்கும் I.Q. திறமையோடு நேரம்தவறாமை (Punctuality), ஒழுக்கம் ( Discipline ), தூய்மை ( Neatness ), உயர்பதவியிலிருப்பவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பணிதல் முதலிய பண்புகளையும் இணைத்துச் செயல்பட்டால் இளைஞர்களுடைய எதிர்காலம் நிச்சயமாக ஒளிவீசுவதாக அமையும்.

• தென்னகத்திலிருந்து வேலை வாய்ப்பு தேடி வருபவர்கள் எப்படி இருக்கிறார்கள் ?

நமது தமிழ்நாட்டின் தென்னகத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடிவரும் நம்முடைய மாணவர்களிடம் தகவல் தொடர்புத் திறமை ( communication skill ) மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு வரும் மாணவர்களிடமும் இதேநிலைதான் உள்ளது.

பொறியியல் கல்லூரிகளிலும், M.B.A., M.C.A., படிப்புள்ள கல்லூரிகளிலும் Personality Development, Communication Skill, Business Writing Skill முதலியவற்றுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியமாகும். இவற்றில் திறமை இருந்தால் சிறந்த பணிகளை எளிதாக நமது மாணவர்களால் பெறமுடியும்.

• தங்களுடைய பலம் எது ? பலவீனம் எது ?

( பலமாகச் சிரித்துக் கொண்டே கூறுகிறார்) எனது பலம் நேர்முக அணுகுமுறையில் கொண்டுள்ள நம்பிக்கை ( Confidence of Positive Approach )

எனது பலவீனம் மக்களை நம்புவது ( Belive People ) இது எனது பலமாகக்கூட இருக்கலாம்.

• ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்புகள் எப்படி ?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் ( Information Technology ) வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. வரும் பத்தாண்டுகளில் துபை இறையருளால் வெகுவேகமாக முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்கள் உள்ளன. விமான நிலைய விஸ்தரிப்பு, உலகிலேயே மிக உயர்ந்த கட்டடம் உருவாக்கல் முதலியன அத்திட்டங்களுள் உள்ளவைதாம்!

I.T. Computer படித்தவர்களைத் தவிர EEE, Mechanical, Civil படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

C.A. படித்தவர்களுக்கும் உடனடியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. S.S.L.C. படித்துவிட்டு I.T.I. முடித்தவர்களுக்குப் பணிகள் நிறைய உள்ளன. இவற்றையெல்லாம் நம் நாட்டவர்கள் நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

• ஏகத்துவ மெய்ஞான சபையின் துபைக் கிளைத் தலைவராகவும் தங்கள் பணி தொடர்கிறதே ?

நற்சிந்தனைகளும், நற்பண்புகளும் நிச்சயமாக ஒரு மனிதனை உயர்வடையச் செய்யும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை எனக்குண்டு. தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான் என்பது பெருமானார் ( ஸல் ) வாக்கு. மனிதனின் ஈருலக நல்வாழ்விற்கும், சீரிய இருப்பிற்கும் உரியனவற்றைக்கூறும் ஞான உண்மைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த ஆன்மீக ஒளியை அனைவரும் பெறும் வகையில் எனது ஆன்மீகப் பணி தொடர்கிறது. அதற்கான வழிமுறைகளை ஜமாலியா ஸ்ய்யித் கலீல் அவ்ன் மெளலானா எங்களுக்கு நிறையவே கற்றுத்தருகிறார்.

ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை இஸ்லாமியர்களுக்கு இல்லை. ( கண்களில் ஆன்மீகத் தேடல் ஒளிர்கிறது )

உயர்ந்த பொறியியல் வல்லுநராக, தெளிந்த ஆன்மீகவாதியாக, நல்ல குடும்பத் தலைவராக, சிறந்த நண்பராக, நாட்டு நலனில் ஆர்வம் கொண்டவராக, சமுதாயப் பற்று மேலோங்கியவராக, சமுதாயச் சேவைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக, மேற்கொள்ளும் எல்லாத் துறைகளிலும் தனிமுத்திரை பதிப்பவராக, சிறந்த எழுத்தாளராக, தேர்ந்த பேச்சாளராக, விடாமுயற்சியும் நேரிய திறமையும் கடுமையான உழைப்பும் சீரிய பண்புகளும் கொண்ட இன்முகப் பண்பாளராக இவை அனைத்தையும் ஒன்றாகக்கொண்டு எம்.ஜே. முஹம்மது இக்பால் விளங்குவதை வியப்போடு உணர்ந்து அவருக்காகத் துஆ செய்தவராக விடைபெற்றோம்.

சந்திப்பு : முஹம்மதலி

Islamic Fianancial

Visit the webpage for Islamic Fiancial Instructions


http://www.islamic-banking.com/ibanking/ifi_list.php

பழமொழியும் பின்னணியும் !

பழமொழியும் பின்னணியும் !

- பாத்திமுத்து சித்தீக்


சீனாவில் கி.பி 220க்கும் 280க்கும் இடைப்பட்ட காலத்தில் காவ் காவ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அவர் மிகவும் புத்திக்கூர்மையானவர். ஒரு சமயம் பெரும் படையொன்றுடன் சற்றுத் தொலைவில் உள்ள எதிரி நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றச் சென்று கொண்டிருந்தார். வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்ததால் நா உலர்ந்த படை வீரர்கள் தண்ணீர் ... தண்ணீர் என்று தவிக்க ஆரம்பித்தார்கள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மொட்டையான வெட்டவெளி .படைவீரர்கள் நடை தளர்ந்து உடல் சோர்ந்து போய்க் கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்த மன்னர், மிகப்பெரிய ப்ளம் மரத் தோப்புகள் சற்றுத் தொலைவில் உள்ளன.மரம் நிறைய பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லாமே புளிப்புப் பழங்கள். பரவாயில்லை. ஒன்றுமில்லாததற்கு அதையாவது தின்னலாம் என்றார்.
அரசரின் பேச்சில் ஆறுதலடைந்த படை வீரர்கள், தாங்கள் தின்னப்போகும் புளிப்புப் பழங்களைக் கற்பனை செய்தவாறு நடையை எட்டிப் போட்டார்கள். புளிப்புச் சுவையை கற்பனையில் சுவைக்கச் சுவைக்க அவர்கள் நாவில் எச்சில் ஊறியது. அதனால் நாவறட்சி நீங்கியது. ப்ளம் மரத் தோப்புகளை அடையும் முன்னரே அவர்கள் தண்ணீர் கிடைக்கும் இடத்தை அடைந்து விட்டார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பனையான ஒன்றால் தங்களைத் தாங்களே சாந்தப் படுத்திக் கொள்வது தான் விவேகம் என்னும் பொருள்பட "ப்ளம்மை நினைத்து தாகத்தை தணித்துக் கொண்டாற்போல" எனும் பழமொழி நடைமுறையில் சீனர் களிடம் வழங்க ஆரம்பித்தது.
இதே போன்று நூஹ் நபி (அலை) காலத்து வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு "தலைக்கு மேல் வெள்ளம் வந்தால் பெற்ற பிள்ளையும் காலுக்கு அடியில்" எனும் பழமொழி வழக்கில் உபயோகித்ததாக அரபியர்கள் கூறுகிறார்கள்.
அரபுலகில் பொதுவான பழமொழிகளைத் தவிர இஸ்லாமியக் கலாச்சாரங்களைப் பின்னணியாக வைத்தே பெரும்பாலானவை உருவாகின்றன. மாதிரிக்குச் சில:
*முதுகுக்குப் பின்னால் இடிபாடு ;முகம் மட்டும் கிப்லா. (தொழும் திசை)
*ஒரு மினாரா கட்ட பள்ளிவாசலை இடித்த மாதிரி
*ஆண்டு முழுவதும் நோன்பிருந்து விட்டு வெங்காயத்தில் நோன்பு திறந்தாற்போல.


( மறைச்சுடர் டிசம்பர் 2008 இதழிலிருந்து )

பாத்திமுத்து சித்தீக் இளையான்குடி பிரபல வேளாண் விஞ்ஞானி சித்தீக் அவர்களின் துணைவியாவார்.
தற்பொழுது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

மறைச்சுடர் மாத இதழ்

ஆசிரியர் : மவ்லவி எம். முஹம்மது காசிம் பாகவி
பொறுப்பாசிரியர் : முஸ்தஃபா காசிமி எம்.ஏ.
முகவரி :
4/115 சுதந்திர நகர் 3 வது தெரு
ஒய்.ஒத்தக்கடை
மதுரை 625 107
தொலைபேசி : 0452 - 646 1817
98421 22693

ஆண்டுச் சந்தா : ரூ. 120

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?

Posted: 29 Jul 2008 07:47 AM CDT
வெளிநாட்டு வாழ்க்கையால் பொருளாதாரம் பெருகுகிறது, வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத்தரம் உயருகிறது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்களைத் தம் தாய்நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய சிரமமும் பணச்செலவும் கணிசமாகக் குறைவதால் குறிப்பாக வளைகுடாவில் வேலை செய்பவர்கள் குறைந்த தூரமே பயணித்து அதிகம் பயனடைகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்களின் உறவினர்களில் பெரும்பாலோர் - குறிப்பாகப் பெற்றோர்கள், பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் மற்றும் இரத்த பந்தங்களில் அதிகமானவர்கள் மேற்சொன்ன வணக்கங்களுக்காக இங்குள்ளவர்களின் உதவியால் அழைத்து வரப்பட்டுப் பயனடைகின்றனர் என்பதும் மறுக்க முடியாது.

ஆனால் மேற்சொன்னவற்றில் பயன்கள் மற்றும் இலாபம் இருந்தாலும், அவற்றோடு நஷ்டமும் குறைபாடுகளும் அதிகமாக இருக்கின்றன என்பதும் உண்மையாகும். அவற்றை ஒருவரியில் கூறாமல் பட்டியலிட்டுக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

1. பெற்றோருக்கு செய்யும் கடமைகளில் குறைபாடு

பொதுவாக 20 வயதில் வெளிநாட்டு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கக்கூடிய ஒரு மனிதர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள், ஆகக் குறைந்த பட்சமாக ஒரு வருடமாவது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். இந்த ஒன்று / இரண்டு வருட வாழ்க்கையில் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் பெரும்பாலானவற்றைச் செய்ய தவறிவிடுகிறார். இந்தக் காலங்களில் எத்தனை தலைவலிகள், வயிற்றுவலிகள், இனிப்புநீர் அதிகரிப்பால் அல்லது குறைவால் அவதிப்படுதல், மாரடைப்பு, சமீப காலங்களில் ஆட்டிப் படைத்த சிக்கன்குனியா மற்றும் இவற்றில் குறிப்பிடாத இன்னபிற வியாதிகளால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகக்கூடிய நேரத்தில் தன் பெற்றோரை மருத்துவரிடம் கொண்டு செல்ல, பணிவிடை செய்ய என எத்தனை பேர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் எஞ்சுவது மிக மிகக் குறைவு.

இதைவிடப் பெற்றோரின் மரணத்தின்பொழுது, ஜனாஸாத் தொழுகை மற்றும் நல்லடக்கத்தின் பொழுது உடனிருந்தவர்கள் எத்தனை பேர்?. தனது தாயின், தந்தையின் கடைசி மூச்சினைக் காண கிடைக்கவில்லையே என எத்தனை உள்ளங்கள் ஏங்கி இருக்கும்?. அதேபோல் தனது கடைசி மூச்சு, தான் பெற்ற மக்களுக்கு மத்தியில் நிகழவேண்டும் என்று எத்தனை பெற்றோர்களின் உள்ளங்கள் நினைத்திருக்கும்? அதற்கெல்லாம் சாவு மணி அடிக்கிறது இந்த வெளிநாட்டு வாழ்க்கை.

பெற்றோருக்கு நன்றி செலுத்துவது, உபகாரம் புரிவது மற்றும் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல்கள் யாவை என்பது குறித்து அல்லாஹ்வின் வேதமும் நபிமொழியும் என்ன சொல்லுகின்றன என்பதைப் பார்ப்போம்:

"நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் (இருவருக்கும் நலன் நாடுவது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தல் இரண்டு வருடங்கள் ஆகும். ஆகவே, நீ எனக்கும், உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது" (அல்குர்ஆன் 31: 14).

அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் "செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது எது?" என்று கேட்டேன். அதற்கவர்கள், "தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்" என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்டேன். அதற்கு, "பெற்றோருக்கு நன்மை செய்வதாகும்" என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி) (புகாரி, முஸ்லிம்)

இப்படியாக பல்வேறு சிறப்புகளையும், மகத்துவத்தையும் பெற்றிருக்கக்கூடிய பெற்றோர்களில் ஒருவரான தாயின் சிறப்பை மேன்மைப்படுத்தி சிலாகித்துக் கூறக்கூடிய மேலும் சில நபிமொழிகளையும் காண்போம்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய தோழமைக்கு மனிதர்களில் அதிக உரிமை பெற்றவர் யார்?" என வினவினார். அதற்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள், "உம் தாய்" என்றார்கள். "பின்னர் யார்?" என அவர் வினவினார். அதற்கவர்கள், "உம் தாய்" என்றார்கள். "பின்னர் யார்?" என அவர் வினவினார். அப்பொழுதும் "உம் தாய்" என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பின்னர் யார்?" என்றார் அப்பொழுது, "உம் தந்தை" எனக் கூறினார்கள். (புகாரீ: 5514)

"வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் (அவர்களின் நலன் நாடாமல் புறக்கணித்து) சுவனம் செல்லாமல் போய்விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் மிக தெளிவாக விளக்குகின்ற செய்தி யாதெனில், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் நன்றியுடையவர்களாக இருப்பதுமாகும்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்யக்கூடிய விஷயத்திலாவது பெற்றோருக்கு ஒருவருக்கு மேற்பட்ட மக்கள் இருந்து அவர்களில் ஒருவரோ அல்லது அதிகமானோரோ பெற்றோருடன் இருந்து மற்றவர்கள் வளைகுடா வாழ்க்கையின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை அனுப்பிக் கொடுத்து ஊரில் இருக்கக்கூடிய மற்ற மக்கள் மூலம் கவனிக்கப்படுகிறார்கள் என்றால் ஓரவிற்கு ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் அடுத்து நாம் பார்க்க இருக்கின்ற பாதிப்புகள் குறித்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை.

2. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்

திருமணம் முடித்த எத்தனையோ வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் வயிற்றைக் கழுவ வெளிநாட்டிற்கு தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இல்லற வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்கள்? திருமணம் முடித்த ஒரேநாளில், ஒரேவாரத்தில், ஒரே மாதத்தில் என எத்தனை சகோதர-சகோதரிகள் திருமண பந்தத்திற்கு முன்னாலேயே வெளிநாட்டிற்கு வாழ்க்கைப் பட்டதால் பிரிய மனமில்லாமல் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து செல்கிறார்கள். கணவன், மனைவிக்கு மற்றும் மனைவி, கணவருக்கு செய்யவேண்டிய கடமைகளை முறையாக, முழுமையாக நிறைவேற்றுகின்றார்களா என்றால் அது மிக சொற்பமே.

குறிப்பாக, திருமணம் முடித்த நாளிலிருந்து 20 வருடகாலம் வெளிநாட்டில் வாழ்க்கைப் படகினை ஒருவர் ஓட்டியிருப்பாரேயானால் அவரது இல்லறவாழ்வின் காலம் எத்தனை எனச் சராசரியாகக் கணக்குப் பார்த்தால் அது குறைந்தபட்சம் 24 மாதமும் அதிகபட்சமாக 48 மாதமுமாகும். அதாவது 2 வருடம் முதல் 4 வருடம் மட்டுமே.

இளமையில் பெறவேண்டிய சுகத்தை அடையவிடாமல் பொருள் சுகம் தடுக்கிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தக் கதையாக, வருடத்தில் அல்லது இரண்டு வருடத்தில் ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை நாட்டிற்குச் சென்று மனைவியிடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபடக்கூடியவர்கள் வெளிநாட்டிற்கு திரும்ப வேண்டிய நாட்கள் நெருங்க நெருங்க இருவர் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஏக்கங்களை வார்த்தைகளால் கூற முடியாது. அதனை உணர்ந்தவர்கள் அனைவரும் அறிவர்.

அடுத்து வரக்கூடிய விடுமுறை வரைக்கும் இருவருக்கும் இல்லறமென்ற நல்லறம் கிடையாது. உள்ளத்தில் புரண்டெழும் ஏக்கங்களை எழுத்திலும் (கடிதத்திலும்), பேச்சிலும் (தொலைபேசியிலும்) பறிமாறிக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் இறையச்சத்தைப் பெற்றிருக்கின்ற நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளைத் தவிர மற்றவர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்நிய ஆடவர்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும் வெளிநாட்டில் இருக்கக்கூடிய ஆடவர்கள் அந்நியப் பெண்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக வழிதவற வாய்ப்புகள் உள்ளன என்பதையும் இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இதற்கெல்லாம் காரணம் வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படுத்திய பிரிவுதான். கணவன்-மனைவி மத்தியில் உரிமைகள் வழங்குதல் குறித்து நபி(ஸல்) அவர்களின் போதனையினை இரத்தினச் சுருக்கமாக ஒன்றைக் கூறினால் இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அபூ ஜுஹைபா வஹப் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள், ஸல்மான்(ரலி) அவர்களுக்கும் (அன்ஸாரியான)அபூதர்தா(ரலி) அவர்களுக்கும் மத்தியில் சகோதரத் தோழமையை ஏற்படுத்தினார்கள். ஸல்மான்(ரலி) அவர்கள் அபூதர்தா(ரலி)வைச் சந்தித்தார்கள். அப்பொழுது (அவர் மனைவி, உம்முதர்தா(ரலி) (சாதாரண)பழைய ஆடை அணிந்திருப்பதை ஸல்மான்(ரலி) அவர்கள் பார்த்தார்கள். "உங்களது விஷயம் என்ன?(ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள்?)" என அவரிடம் ஸல்மான்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "உம் சகோதரர் அபூதர்தா(ரலி)விற்கு உலக விஷயங்களின் பால் தேவையிருப்பதில்லை (அதனால் நான் என்னை அலங்கரித்துக் கொள்வதில்லை)" என்றார்கள்.

பின்னர் அபூதர்தா(ரலி) அவர்கள் வந்தார்கள். ஸல்மான்(ரலி)வுக்காக உணவு தயாரித்து அவரிடம் "நீங்கள் சாப்பிடுங்கள்! நான் நோன்பாளி" எனக் கூறினார்கள். உடனே ஸல்மான்(ரலி) அவர்கள், "நீங்கள் சாப்பிடாதவரை நான் சாப்பிடமாட்டேன்" எனக் கூறவே அவர் (தமது நஃபில் நோன்பை முறித்து) அவருடன் சாப்பிட்டார்கள். பின்னர் இரவானதும் அபூதர்தா(ரலி) அவர்கள் (நஃபில்) தொழுகைகளைத் தொழ எழுந்து நின்றார்கள். உடனே ஸல்மான்(ரலி) அவர்கள், அவரிடம் "உறங்குவீராக!" எனக் கூறினார்கள். (சிறிது) உறங்கினார். பின்னர் (எழுந்து நஃபில்) தொழ நின்றார்கள். அப்பொழுதும் ஸல்மான்(ரலி) அவர்கள் "உறங்குவீராக!" எனக் கூற அவர்கள் உறங்கிவிட்டார்கள்.

இரவின் கடைசிப் பகுதி ஆனதும் ஸல்மான்(ரலி) அவர்கள், அபூதர்தா(ரலி) அவர்களிடம் "இப்பொழுது எழுவீராக!" என்றார். பின்னர் இருவரும் (நஃபில்) தொழுதார்கள். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் ஸல்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "உம் இரட்சகனான அல்லாஹ்விற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. உமது ஆன்மாவிற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. உம் குடும்பத்தினருக்கும் உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு உரிமையை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது உரிமையை வழங்குவீராக!" அபுதர்தா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸல்மான்(ரலி) அவர்கள் கூறியதைக் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் "ஸல்மான்(ரலி) உண்மை கூறிவிட்டார்" எனக் கூறினார்கள். (புகாரி) மேற்கண்ட ஒரு நபிமொழி, மனைவிக்குக் கணவன் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்துத் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் திருமணம் கண் மற்றும் அபத்தை பாதுகாக்கின்றது (ஹதீஸ்). திருமணம் ஈமானின் பாதி (ஹதீஸ்).
போதுமான சக்தியிருக்குமேயானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது நோன்பிருந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ்). ஆக, திருமணமானது ஷைத்தான்களுடைய தீங்கிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் பொழுது கேடயத்தைப் பயன்படுத்தக்கூடிய மனிதனும் கேடயமும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் இரண்டிற்கும் பாதுகாப்பில்லை என்பது மட்டுமில்லாமல் இரண்டிற்கும் எந்த நேரத்திலும் இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள் வரலாம்.

3. குழந்தைகளுக்குச் செய்யும் பொறுப்புகளில் குறைபாடு:

குழந்தைப் பிறப்பின் காரணமாக அடையக்கூடிய தாயின் வேதனையை எத்தனை பேர்கள் கண்டிருக்கிறார்கள்?
குழந்தை பிறக்கின்றபோது தன்னுடன், தன்னுடைய கணவன் இல்லையே என்று எத்தனை மனைவியர் கண்ணீர் விட்டிருப்பர்?
தான் பெற்ற குழந்தையின் முகத்தை ஒருசில மணித்துளிகளில் எத்தனை தந்தை கண்டிருக்கிறார்?
தன்னுடைய குழந்தைகளின் அழகான சிரிப்பை, அழுகையை, செல்லமான கோபத்தை, உறங்கும் மற்றும் உண்ணும் பாணியினை, தத்தித் தவழ்ந்து நடக்க முயலும் பொழுது தவறிவிழும் கண்கொள்ளாக் காட்சியினை, மழலைப் பேச்சினை இன்னும் இதுபோன்ற சிறு சிறு இன்பங்களைக் கண்டுகளித்தவர்கள் எத்தனை பேர்?
பிறந்த குழந்தை(களு)க்குத் தாயானவள், தனக்குப் பிறகு அறிமுகம் செய்யக்கூடிய இரண்டாம் நபர் யாரெனில் குழந்தையின் தந்தை. ஆனால் தந்தை முகம் பார்க்கும் நிலையில் விட்டுவைக்கவில்லையே இந்த வெளிநாட்டு வாழ்க்கை?

குழந்தை(களு)க்கு இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலும் பயன்தரக்கூடிய கல்வியைக் கொடுக்கக்கூடிய விஷயத்திலும் தந்தையின் பங்கு மிக மிகக் குறைவுதான். குழந்தை(கள்) என்ன கற்றிருக்கிறார்கள்?
என்ன கற்கப் போகிறார்கள்? எப்படிக் கற்கிறார்கள்? கற்றுத் தரக்கூடிய ஆசிரியர்களின் நிலை என்ன? பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிலை என்ன? சகமாணவ மற்றும் மாணவிகளின் ஒழுக்கநிலை எவ்வாறு உள்ளது?
யார் யாரோடு பழகுகிறார்கள்? எந்த நல்ல விஷயங்களை வளர்த்துள்ளார்கள் அல்லது தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார்கள்? என்பன போன்றவற்றை அறிந்து வைத்துள்ள தந்தையர் எத்தனை பேர்?

கணவன் மனைவியாக வெளிநாட்டில் குடும்பம் நடத்தக்கூடியவர்களில் கணிசமானவர்கள் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு தான் மட்டுமே இங்கே வாழ்கிறார்கள். இதனால் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் வளர்ந்து நாளடைவில் பெற்றோரை மதிக்காத, எதிர்க்கக்கூடிய மக்களாய் மாறிவிடும் கொடுமையும் ஏற்படலாம்.

4. உறவினர்கள் மற்றும் சமுதாய மக்களுக்கு

தொடர்ச்சியாக நிகழக்கூடிய மரணம், பிறப்பு, சுன்னத்தான திருமணங்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய இரு பெருநாள் தினங்கள், விடுமுறை நாட்கள் இன்னபிற இனிய நாட்களை உறவினர்களோடும் சமுதாயத்தோடும் பகிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?
பெற்றோர்கள், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மற்றும் சமுதாய மக்கள் மரணித்தபோது மய்யித்துகளை நேரில் கண்டவர்கள், ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டவர்கள், அடக்கம் செய்யக்கூடிய நிகழ்வுகளில் உடன் நின்றவர்கள் நம்மில் எத்தனை பேர்?

5. வீண் விரயம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை

இயல்பாகிப்போன நடைமுறையைச் சொல்லப்போனால் நம் வீட்டுப் பெண்களும் சரி, நம்முடைய குழந்தைகளும் சரி கிடைக்கின்ற வருமானத்தைவிட அதிகமாகச் செலவுகள் செய்ய பழகியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கூறியதுபோன்று ஒரு குடும்பத்தின் முதலாவது நபர் வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னால் இருந்த வாழ்வாதாரச் செலவுகளையும் அதற்குப் பிறகுள்ள செலவுகளையும் ஒப்பு நோக்கிக் கணக்கிட்டால் மிகப் பெரிய வித்தியாசத்தைக் காண முடிகிறது.

சாதாரணமாக மாதந்தோறும் ரூபாய் 3000 மாத்திரமே தன்னுடைய மனைவி, மக்களுக்காக அனுப்பி கொடுத்தார் ஒரு சகோதரர். ஊரிலுள்ள அவருடைய மனைவியும் கணவரின் சூழ்நிலை அறிந்து அந்தப் பணத்தில் மாதாந்திர செலவுகள் போக ஏறக்குறைய ரூபாய் 1000 வரையில் சேமிக்கக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்.

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அக்கம்பக்கத்திலுள்ள வெளி நாடுகளில் பணிபுரிபவர்களின் பெற்றோர்களும் மனைவிகளும் வாழக்கூடிய ஆடம்பரமான, பெருமையான, பகட்டான மற்றும் வீணான செலவுகளைக் கண்ட பின்னர் 'தானும் ஏன் அதுபோன்று வாழக்கூடாது?' என்று அந்தப் பெண்ணை எண்ண வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வீணான மற்றும் அனாவசியமான பொருட்களுக்கு செலவு செய்ய வைத்துள்ளது இந்த வெளிநாட்டு வாழ்க்கை.

எப்படிபட்ட நிலையென்றால் ஆடம்பர மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதின் காரணத்தால் முதலில் டெலிவிஷன் பெட்டி வீட்டில் நுழைந்தது. பிறகு டெலிபோன், மொபைல், வீடியோ, வீசீடீ, டீவீடீ, ஆடியோ, வாசிங்மெசின், பிரிஜ், மெக்ரோ ஓவன், விதவிதமான சோபாக்கள், வாட்டர் கூலரில் தொடங்கி ஏர்கண்டிஷன் பெட்டி வரை. (இந்த பட்டியலில் குறிப்பிடாத பொருள்களும் அடங்கும்). இதுபோன்ற சாதனங்கள் தன் வீட்டில் இல்லையென்றால் தன்னை மற்றவர்கள் மதிப்பற்றவராகக் கருதுவார்கள் என்ற காரணம் இதற்கெல்லாம் கற்பிக்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஷிர்க் மற்றும் பித்அத்தான செயல்களை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களைக் காரணங்காட்டி வீணான விருந்து உபசரிப்புகள் எனச் செலவுகள் வளர்ந்துக் கொண்டே செல்கின்றன.

இதனால் வருமானம் போதாக்குறை ஏற்படுகிறது. தன்னிறைவு ஏற்படுவதற்குண்டாக சாத்தியகூறுகள் மிகக் குறைவாக உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு மீள முடியாத நிலையில், கம்பெனியாகப் பார்த்து, "உனக்கு வயதாகிவிட்டது. நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இனிமேல் உன்னால் உழைக்க முடியாது. இதற்கு மேல் நீ இருக்க வேண்டாம் உன்னுடைய நாட்டிற்குத் திரும்பி சென்று விடு" என்று அனுப்ப வேண்டும் அல்லது அல்லாஹ் காப்பாற்றட்டும் தீர்க்க முடியாத பெரும்வியாதிகள், நோய்கள் ஏற்பட்டு முடியாத நிலையில் நாட்டிற்கு திரும்பும் நாள்வரை வளைகுடா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.
வெளிநாட்டு வாழ்க்கை வாழக்கூடிய சகோதர-சகோதரிகளின் பெரும்பாலான வீடுகளிலுள்ள உறுப்பினர்கள் வீண் விரயமான மற்றும் ஆடம்பரமான செலவுகள் அதிகரிக்கக் காரணம் என்னவெனில், வளைகுடாவில் உழைக்கக்கூடிய தகப்பனோ, கணவனோ, சகோதரனோ என்ன வேலை செய்கிறார்கள்? என்ன கஷ்டப்படுகிறார்கள்? என்றறியாததால் தனக்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை முன்னூதாரணமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் குடும்பத்தாருடன் தாய்நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் மேற்சொன்ன இரத்த பந்தங்கள் உழைத்துவிட்டு வீடு திரும்பும்போதுள்ள களைப்பையும் அசதியையும் வியர்வையும் நேரில் காணும்போது உழைப்பின் பயனை அறிந்து வீணான மற்றும் ஆடம்பரமான செலவுகளைச் செய்ய தயங்குவார்கள் அல்லது செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை.

6. குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின்மை

எத்தனையோ சகோதரர்கள் கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் பலவாறு கடன்களைப் பெற்றும் வளைத்து வளைத்து வீட்டினைக் கட்டி விடுகிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் ஆண்கள் தன் நாட்டில் இல்லாத சூழ்நிலையால் தினசரி அச்சத்திற்கும், ஆதரவிற்கும் மத்தியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் நம் குடும்பப் பெண்கள் பொழுதைக் கழித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் இதுபோன்ற எண்ணற்ற பாதிப்புகள் மற்றும் குறைபாடுகள் வெளிநாட்டு வாழ்க்கையினால் இருந்தாலும் விரிவஞ்சி முடிவிற்கு செல்ல நினைக்கிறேன்.


வறுமையைப் போக்க வெளிநாட்டிற்க வந்த நம்மில் பலர், அல்ஹம்துலில்லாஹ்; வறுமை போய்விட்டது. ஆனால் வசதியான வாழ்க்கை நடைமுறையும் ஆடம்பரமும் அனாவசியமான செலவுகளும் நம்முள்ளும் நம் குடும்பத்தாருள்ளும் குடிபுகுந்துள்ள காரணத்தால் இதனைச் சரிகட்ட அல்லது திருப்திபடுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் வறுமை ஒழிந்தபிறகும் நம்மால் திரும்பி செல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றனர். அதாவது ஆற்றில் கம்பளி ஒன்று மிதந்து வந்ததைக் கண்ட நாம் அதனை எடுத்து பயனடையலாம் என்ற ஆவலில் ஆற்றில் குதித்துக் கம்பளியை பிடித்துவிட்ட பிறகுதான் தெரியவந்தது,

ஆகா! நாம் பிடித்தது கம்பளி அல்ல; மாறாகக் கரடி என்றும் அது நம்மைப் பிடித்துக் கொள்ள, அதிலிருந்து மீள முடியாத நிலையில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகி கரடியிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.

ஆக இறுதியாக, முடிவாக எந்தவொரு ஆண்மகன் தன் தாய், தந்தை, மனைவி, மக்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் இருந்து உழைத்து உண்ணுவார்களேயானால் அது, தான் பிறந்த தாய்நாடாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடாக இருந்தாலும் சரியே அதுதான் வரமாகுமே ஒழிய, தான் தனியாகவோ அல்லது தன்னோடு தன் மனைவி-மக்களுடன் மாத்திரம் பெற்றோர்கள் இல்லாமல் வெளிநாட்டு வாழ்க்கையை கழிப்பார்களேயானால் அது சாபமே சாபமே என்று கூறி என் கருத்துகளுக்கு முற்றுபுள்ளி இடுகிறேன்.
எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

தகவல் : சத்தியமார்க்கம்