Wednesday, May 5, 2010

எப்போது விடுமுறை?

எப்போது விடுமுறை?



ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!

தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!

நிழாலாய் உன்
நினைவுகள் - இங்கே
கனவுகளோடு
காலம் தள்ளும் உன்
கணவன்!

இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க ;
படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க
பதறிப் போனாய் நீ!

குடும்பத்தோடு இருந்தும்
தனிமையாய் நீ அங்கே;
குடும்பத்திற்காகவே தனிமையாய்
நான் இங்கே!!

அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!

வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு
கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு
பேசக் கூட நேரமில்லை என்று
வேலையில் நான்;
கண்ணீரோடு கனைத்துவிட்டு
மெதுவாய் நீ கேட்பாய்;
எப்போது விடுமுறை என்று!!


இப்படி
மலறும் நினைவுகளோடு
கதறும் உள்ளம்;
சுடும் கண்ணிரோ
என் தலையணையை நனைக்க
முடிவெடுத்துவிட்டேன் இனி
போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!



- யாசர் அரஃபாத்

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
-சு ராஷித் அலி (சு. ராஜேஸ்வரன் )

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன். திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார்.

‘’மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது.

மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்:

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள் ( ஏப்ரல் 2010 )