Thursday, May 20, 2010

தீராத எங்கள் தாகம்...

தீராத எங்கள் தாகம்...

பசுத்தோல் போர்த்திய புலியாய்
அதற்கு நாங்களெல்லாம் பலியாய்!

வையகம் ஒங்கும் மார்க்கத்தின்
சொந்தக்காரர்கள் நாங்கள்;
திக்குத் தெரியாமல்
தட்டுத்தடுமாறும் தமிழர்கள்!

புலியென்று உனக்கு
பெயரிட்டவன் யாரடா – நான்
தொழும்போது என் முதுகில்
சுட்டவன் நீயடா!!

குழிப்பறித்த உனக்கு
குள்ளநரி என்பதே சரி - இனி
வரலாறு உரைக்கும் இந்த வரி!!

காலத்தால் மறைந்திருக்கும்
எங்கள் இரத்த வாடை;
மாறாமல் தோற்றமளிக்கும் உன்
தோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை!!

புலியும் சிங்கமும் உள்ள
வனத்திற்கு நடுவே எங்கள் இனம்;
குரல் கொடுக்க ஆளுண்டு
விரல் விட்டு எண்ணுமளவிற்கு!!

அரவணைக்க இடமுண்டு ஈழத்தமிழனுக்கு;
அகதிகளாவதற்குக் கூட
அருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு!

வெதும்பிய உள்ளத்துடன்
தழும்பிய விழிகளுடன்
விடுகதைக்கு விடைத்தேடி
வீதியில் நாங்கள்;


கலங்கிப் போய் நின்றாலும்
கைக் கொடுக்க எவருமில்லை;
விட்டில் பூச்சியாய்
விடுதலைக்காக ஏக்கத்திலே;
காலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே!!

இனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;
ஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்!!


-யாசர் அரஃபாத்
--