Friday, April 3, 2009

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்
ஹெச்.ஜி.ரசூல்
mylanchirazool@yahoo.co.in

கவிஞர் சோதுகுடியானின் ஏழைமுஸ்லிம்கள் களப்பணி ஆய்வுத் தொகுப்பு குறுநூல் தமிழகத்து அடித்தள முஸ்லிம்கள் குறித்த தரவுகளின் முக்கியதொரு ஆவணமாக விளங்குகிறது.
நகர்புற சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றிய அறியப்படாத உலகம் வாசகனை அதிர்ச்சியடையச் செய்கிறது.
ஆய்வின் முன்குறிப்பில் கவிஞர் சோதுகுடியான் சேரிமுஸ்லிம்கள் என தலைப்பிடுவதாக இருந்தபோது சில இஸ்லாமிய அறிவுஜீவிகளின் எதிர்ப்பால் ஏழை முஸ்லிம்கள் என தலைபிட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.இது முஸ்லிம் அறிவுஜீவிகளின் போதாமையையும்,திறந்த உரையாடலுக்கான சாத்தியங்களை மறுப்பதாகவும் அமைந்துவிடுகிறது.
முஸ்லிம்களின் வலியும் துயரமும் மிகுந்த வாழ்க்கையை கண்டுணர்ந்து சொல்வதற்கும் முஸ்லிம்முரசு மாத இதழில் தொடராக எழுதவும் துணிந்த சோதுகுடியான் அத் தொடரை தற்போது தொடராமல்நிறுத்தியிருப்பதுவருத்தத்திற்குரிய ஒன்றாகும்.


இன வரைவியல் ஆய்வுக்கு குறிப்பிட்ட பிரதேச மக்களின் அன்றாட சமூக நடத்தைகள்,வாழ்க்கைவட்டச் சடங்குகள்,முழுமையாக பதிவு செய்யப்படவேண்டும். எனவே ஏழைமுஸ்லிம்கள் நூலை ஒரு முஸ்லிம் இனவரைவியல் தொகுப்பாக கருதுவதைவிட நகர்புற சேரி முஸ்லிம்களின் தொழில் மற்றும் சமூக, பொருளாதார ,கல்விநிலை குறித்த விவரங்களை ஆவணப்படுத்துகிற கள ஆய்வியல் தொகுப்பு என மதிப்பிடலாம்.



நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஒடுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு
ஆதாரமாக முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையையே மையப்படுத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மரைக்காயர்,ராவுத்தர்,லெப்பை ,ஒசாக்கள் என அறியப்பட்ட முஸ்லிம்கள் தவிர்த்த இன்னொரு பரிமாணத்தை கவிஞர் சோதுகுடியான் வெளிப்படுத்துகிறார். முஸ்லிம் சமூகத்தின் வர்க்க உள்முரண்களை பேசிவிட்டார் என்று கூட சில அறிவுஜீவிகள் விமர்சிக்ககூடும்.. இஸ்லாத்தின் சமத்துவ பொருளியல் கோட்பாடு குறித்த அக்கறை இருக்கின்ற காரணத்தாலும் அடித்தள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கும் ,ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக்குமான ஆர்வத்தின் வெளிப்பாடாகவுமே கவிஞர் சோதுகுடியானின் விளிம்புநிலை முஸ்லிம்கள் குறித்த இந்த ஆவணத்தை குறிப்பிட வேண்டும்.


முஸ்லிம் பண்பாட்டு இயக்கங்கள் விரலாட்டுவதில் தொடங்கி மீடியாக்களில் ஊடக யுத்தம் செய்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியமான சூழல் நம்முன் உள்ளது. முஸ்லிம் அரசியல் இயக்க்கங்கள் ஓட்டு அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதற்கு மட்டுமே அதிகபட்சம் முயல்கின்றன. இச் சூழலில் இந்த அதிகாரங்களும் வகாபிய மசாயில் ஆர்ப்பாட்டங்களும் முற்றிலும் விளிம்பு நிலை முஸ்லிம்களுக்கானதாக நிகழவே இல்லை என்பதை அப்பட்டமாக இத் தொகுப்பை வாசிப்பதின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது


தமிழக அறிவுஜீவிகள் சேரிமுஸ்லிம்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில் இந்திய நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்கள் நிலைகுறித்து ஆய்வு நிறுவனங்களோ,அல்லது தனிநபர் கல்விப் புலம்சார்ந்தோ சில கள ஆய்வியல் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எம்.எச்.லக்டவாலா அடித்தள முஸ்லிம்கள் கடன் பெறும் நிதி நிறுவனங்கள் குறித்த ஆய்வில் சேரிவாழ் முஸ்லிம்கள் குறித்துப் பேசுகிறார்.இந்தியாவில் நகர்புற சேரிகளில் குடியிருப்போரில் மில்லியன் கணக்கீட்டில் மிக அதிகமாக மும்பையில் 5.8,டெல்லியில் 1.82,கல்கத்தாவில் 1.49 ,சென்னையில் 1.08 மில்லியன் மக்கள் வசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.இதனையே அவர் மொத்த சேரி மக்கள் தொகையில் சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்களை சதவிகிதப்படி விளக்கும் போது மும்பையில் 28.5,டெல்லியில் 18.8
சென்னையில் 18.3,கல்கத்தாவில் 12.7 சதவிகிதமாக உள்ளனர் என தெரிவிக்கின்றனர்.(த மில்லி கெசட்,16 - 30 செப் 2004)



ரிஸ்வி சையது ஹைதர் அப்பாஸ் உத்தரபிரதேசம் லக்னோவில் முஸ்லிம்சேரிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலை குறித்த ஆய்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்ட 6734 நகர்புற சேரிகளில் வசிக்கிண்றனர்.இதில் லக்னோவில் மட்டும் 639 சேரிகள் உள்ளன. மொத்த சேரி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 27.6சதவிகிதத்தினர் இங்கு வசிக்கின்றனர்.சேரிமுஸ்லிம்களின் வாழ்நிலை மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெற்று வறுமை கோட்டுக்கு கீழுள்ள நிலையில் இருப்பதையும்,பாலின விகிதம் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருப்பதையும் இன்னும் பெண்சிசுமரணம்.ஆரம்பக் கல்விஉள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் அவற்றிற்கான மாற்று என இவ்வாய்வு முன்வைக்கப்படுகிறது.(த மில்லி கெசட் அக்டோபர் 2004)


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முஸ்லிம் சேரிவாழ் பெண்கள் குறித்து பி.வி.எல்.ரமணா கள ஆய்வொன்றை நிகழ்த்தி நூலாக வெளியிட்டுள்ளார்.சேரிகளில் உழைக்கும் முஸ்லிம் பெண்களின் கல்விநிலை,குழந்தைப் பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகள்,சேரியில் வளரும் பெண்களின் நிலைபாடு உள்ளிட்ட பகுதிகள் சார்ந்து இந்த ஆய்வு இயங்குகிறது.சேரி வாழ்வின் பொருளாதார நிலை, பெளதீக அடிப்படைவசதிகளின் கட்டுமானம் என்பதான எல்லைகளைத் தாண்டி சேரிப்பெண்களின்மீதான பாலின பாகுபாடும் ஒடுக்குமுறையும் சேரிப் பெண்களிடத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இந்த ஆய்வு கவனப்படுத்துவது குறிப்பிடத்தக்கது


கவிஞர் சோதுகுடியான் நகர்புற சேரி முஸ்லிம் கள ஆய்வுக்கு தேர்வு செய்த சென்னை பெருநகர் பகுதிக்குள் அமைந்த திருவல்லிக்கேணி நீலம்பாதுஷாதர்கா, சிட்டிசென்டர் எதிரில் அமைந்த இஸ்மாயில் கிரவுண்டு,மயிலாப்பூர் பாஷாதோட்டம். ஐஸ்ஹவுஸ் அத்திக்குண்டா,வண்ணாரப் பேட்டை லாலாகுண்டா,புரசைவாக்கம் புளியந்தோப்பு,அருகம்பாக்கம் ஆசாத்நகர்,கிருஷ்ணாம்பேட்டை குத்ரத் அலி மக்கான், வியாசர்பாடி பி.வி.காலனி, என ஒன்பது பகுதிகளாகும்.மேலும் சென்னை புறநகர் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை,பூந்தமல்லி பட்டூர்,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ராமராஜபுரம் பேரூராட்சி பகுதிகளுமாகும்


ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இச் சேரிகளில் வாழும் முஸ்லிம்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 48,000க்கும்மேல் உள்ளது. இரண்டாயிரமும் அதற்கு கீழிலான மக்கள்தொகையை நீலம்பாஷாதர்கா ,பாஷாதோட்டம், அத்திக்குண்டா ,கிருஷ்ணாம்பேட்டை,ராமராஜபுரம் பகுதிகளைக் கொண்டுள்ளன. அதிகபட்சமாக எட்டாயிரமும் அத்ற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளாக லாலாகுண்டா,புளியந்தொப்பு பகுதிகள் அமைந்துள்ளன.
.
பொதுவான இந்த சேரிகளின் அமைவிடம், முஸ்லிம்கள் உடல் அடக்கம் செய்வதற்கு பயன்பட்ட மையவாடிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக ஆற்காடு நவாபால் வழங்கப்பட்ட 44 கிரவுண்டு மனையில்தான் நீலம்பாதுஷா தர்கா சேரிப்பகுதி அமைந்துள்ளது.ஹாஜி இஸ்மாயில் வக்ப் செய்தது இஸ்மாயில் கிரவுண்டு பகுதி குடியிருப்பாகியுள்ளது.இவ்வாறு வக்ப் செய்யப்பட்ட நிலங்கள் அரசாலும் தனிநபர்களாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் இத்தோடு கவனிக்க வேண்டியுள்ளது.இஸ்மாயில் கிரவுண்ட்டில் ஐந்தேகால் கிரவுண்டு நிலம் வீட்டுவசதிவாரியத்தால் பறிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். ஒரு கிரவுண்டு நிலம் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டரை கோடிவரை மதிப்பீடு கொண்டுள்ளதையும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் 100 - 400 சதுர அடியில் சிறு கட்டிட அமைப்பைக் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு,தார்சீட்டு கவுத்திய வீடுகளாகவே பெருமளவில் உள்ளன. ஆய்வாளர் இவ் வீடுகளை ஓரிடத்தில் புறாகூண்டுகள் எனவும் மற்றொரு இடத்தில் எலிப்பொந்துகள் எனவும் குறிப்பிடும் போது அம்மக்களின் இருப்பிட நெருக்கடியை மிக எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது


கிருஷ்ணாம்பேட்டை குத்ரதலி மக்கான் முஸ்லிம் சேரியை சித்தரிக்கும்போது வேனிற்காலத்தில் ஆண்களும் பெண்களுமாக பக்கிர் எலப்பை பள்ளியின் முன்பாக வாசலில், பிளாட்பாரத்தில் படுக்கின்றனர் என்கிறார்.பிறிதொரு இடத்தில் ஒரு குறும் வீட்டிற்குள் படுக்கையறையும் சமையலறையும் எவ்வாறு மாறிமாறி அமைக்கப்படுகிறது என்பதை சமையலறை,இரவில் கட்டிலுக்கு அடியில் இருக்கும்,பகலில் கட்டில் மடித்து சுவற்றில் சாத்தப்பட்டிருக்கும் என அத்திகுண்டா பகுதி சேரிவீடுகளை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிடுகிறார்.


முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளம்தாண்டி மொழியடிப்படையில் உருதுமுஸ்லிம்,தமிழ்முஸ்லிம் என மாறுபட்ட அடையாளங்களைமுஸ்லிம்கள் கொண்டுள்ளனர்..நீலம்பாஷா தர்கா பகுதியில் எழுபத்தைந்து சதவிகிதம் உருது தக்னி முஸ்லிம்கள் சங்கராபுரத்திலும் இதுபோன்று உள்ளனர். அத்திகுண்டாபகுதியில் உருது,தமிழ் முஸ்லிம்கள் சரிசமமாகவும்,இதரபகுதிகளில் கலந்தும் வாழ்கின்றனர். பொருளாதார வாழ்நிலை,சமயநிலை ஏறத்தாழ சமமாக இருந்தபோதும் கூட உருதுகள் தமிழ்முஸ்லிம்களைப் பார்த்து லெப்பை என இளக்காரமாக சொல்வார்கள் என்ற வரிகளில் புதைந்து கிடக்கும் மேலாதிக்க மனோபாவத்தையும் ஆய்வாளர் கட்டுடைக்கத் தவறவில்லை.
நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 98 சதவிகித்த்தினர் அடித்தள தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர்


கேரள மலப்புறம் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம் ஆண்கள இங்குள்ள பிறமத பெண்களோடு குடித்தனம் நடத்திவிட்டு பிறகு ஓடிவிடுகின்றனர் அல்லது மரணத்தை எதிர் கொண்ட பிறகு இவ்வாறான குடும்பங்களின் வாரிசுகள் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன. சில குடும்பங்களின் வீடுகளில் மக்கா, மதிநா,நாகூர்பள்ளி,வேளாங்கண்ணி மாதா,இயேசு,பிள்ளையார்,சிவன் புகைப்படங்கள் இருப்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.இரு சமயங்களின் கலாச்சாரங்களிடையே அல்லல்பட்டு அடையாள நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்களாக இவை இருக்கின்றன.
தாடி, தொப்பி, ஜிப்பா என்பதான புற அடையாளங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் கட்டமைக்கப்படுவதின் விளைவாகவே சங்கராபுரத்தைச் சார்ந்த ஒரு முஸ்லிமின் கூற்றுஇவ்வாறு வெளிப்படுகிறது.


சங்கராபுரம்சுற்றியுள்ளபாவளம்,மல்லாபுரம்,ஆலத்தூர்,பாலப்பட்டு,லெக்கநாயக்கன்பட்டி,உள்ளிட்ட 60 கிராமங்களில் பெயரைக் கேட்டுத்தான் முஸ்லிம் என கூற முடியும்.பார்வையிலும்,கலாசாரத்திலும் முஸ்லிம் இந்துக்கள் ஒரே இனம் போல்தான் காட்சி அளிப்பார்கள். அவர்களைவிட நாங்கள் மேல் என்பதாக இருக்கிறது


பிற இன ஆண்களோடு திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்கள், கணவனால் மூன்று,நான்கு குழந்தைகளோடு கைவிடப்பட்ட பெண்கள் என்பதைத் தவிர முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் மற்றுமொரு பிரச்சினை தலாக். மணமகன் செல்போனில் மணமகளை பிடிக்கவில்லை என்ற ஒற்றை வரியோடு ,முத்தலாக் சொல்வதும், மணமான மூன்று நாளில் கூட இது நிகழ்வதும், கைக்குழந்தையோடு தலாக் சொல்வதும் சகஜமான சம்பவங்களாக இருப்பதை ஆய்வாளர் குறிப்பிட்டு, தலாக்கில் குரானிய முறை எதுவும் பின்பற்றப்படாமல் கட்ட பஞ்சாயத்து முறையாக இச் சம்பவங்கள் நடைபெறுவதை விமர்சனம் செய்கிறார்.இன்னொருநிலையில் பெண்சார்ந்து மணவிடுதலை பிரச்சினை எழும்போது தலாக் கொடுக்காது இழுத்தடிப்பதும் சிரமப்பட்டு நஷ்ட ஈடாக எந்தப் பண்மும் பெறாமல் வெறும் தலாக்கே போதும் என்ற நிலையில் பெண்கள் தள்ளப்படுவது நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகிறார்


கள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இப்பகுதிகளில் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பு பெரும்பாலும் ஆரம்பக் கல்வியோடு முடிந்து விடுகிறது. உயர்நிலை,மேல்நிலைப் படிப்பு மிக குறைந்த சதவிகிதமே காணப்படுகிறது. சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சிறிய அளவிலான பள்ளிவாசல்கள், தர்காக்கள் உள்ளன. சில பகுதிகளில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது வாக்குவங்கியின் சார்பு நிலை குறித்த தகவல்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் சங்கராபுரம் பகுதியை முன்வைத்து ஆய்வாளர் பேசும்போது,வகாபி அமைப்புகளின் தோற்றத்தால் நல்லிணக்கபாதிப்பு, அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான் என் அமைந்த இந்துக்கள், முஸ்லிம்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் பிற இனமக்களும் திரட்சியுற்று பேரூராட்சி தலைவர் பஷீர்பாய் தோற்கடிக்கப்பட்ட விவரத்தை ஆய்வாளர் பதிவு செய்கிறார்


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே பங்களாவீடுகளில் வசிப்பவர்கள்,எப்போதும் பிரியாணி இறைச்சி சாப்பிடுபவர்கள் ,அரபுநாட்டு செல்வத்தில் சென்ட் வாசனையோடு திளைப்பவர்கள் வசதியாக வாழ்பவர்கள, தொழில்முதலாளிகள், அரசுப்பணி ஆசிரியப்பணியில் இருப்பவர்கள் துருக்கித் தொப்பி அணிந்த அரசியல்வாதிகள் என்பதான புனைவுகளை மட்டுமே பலர் பரப்பிவருகின்றனர்,வெகுஜன மக்களின் ம்னோபாவங்களிலும் இதுவே நிலைபெற்றுள்ளது. இதனை கட்டுடைப்பு செய்து அடித்தள முஸ்லிம்களின் வேதனைக்குரிய வாழ்வை கவிஞர் சோதுகுடியானின் இந்த கள ஆய்வியல் தொகுப்பு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு வெளிப்படுத்துகிறது
.
முஸ்லிம்தனவந்தர்களிடம் கல்விச் செலவுக்கான பட்டியல் போட்டு ஏற்கச் சொல்வது, எழைமுஸ்லிம் பெண்களின் பிரச்சினை தீர பலதாரமணத்தை தீர்வாக வைப்பது உள்ளிட்ட சில் தீர்வுகளை நீக்கிவிட்டு அணுகிணால் அடித்தள் முஸ்லிம்களுக்கான கொள்கை உருவாக்கத்திற்கான ஒரு அடிப்படை ஆவணமாகக் கூட இதை கருதலாம்.


முஸ்லிம்களுக்கான கல்வி,வேலைவாய்ப்புபுக்கான இடஒதுக்கீட்டை நலிவடைந்த்த ஒடுக்கப்படுகிற அடித்தள முஸ்லிம்களின் சார்பாக திருப்புவதற்கு இந்த ஆவணத்தை ஒரு ஆயுதமாக நாம் பயன்படுத்தலாம்.

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு
















துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு 03.04.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் கிஸ‌ஸ் ப‌குதியில் உள்ள‌ ராய‌ல் பேல‌ஸ் ஹோட்ட‌ல் அபார்ட்மெண்டில் ந‌டைபெற்ற‌து.

புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வுக்கு இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச் ச‌ங்க‌ க‌ன்வீன‌ர் பிர‌வாஸி பார‌திய‌ ச‌ம்ம‌ன் விருது பெற்ற‌ கே. குமார் தேர்த‌ல் அதிகாரியாக‌ த‌லைமை வ‌கித்து தேர்த‌லை ந‌ட‌த்தினார்.

துவ‌க்க‌மாக‌ ச‌ந்திரா கிருஷ்ண‌ன் தேசிய‌ கீத‌ம் பாடினார். அத‌னைத் தொட‌ர்ந்து விழாக்குழு செய‌லாள‌ர் துபாய் த‌மிழ்ச் ச‌ங்கத்தின் ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார்.

அத‌னைத் தொட‌ர்ந்து புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு பெற்ற‌ன‌ர்.

த‌லைவ‌ராக‌ ஜெய‌ந்தி சுரேஷும், பொதுச்செய‌லாள‌ராக‌ ஜெக‌ந்நாத‌னும், பொருளாள‌ராக‌ கீதா கிருஷ்ண‌னும், விழாக்குழு செய‌லாளராக‌ ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவும், க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ளாக‌ சுந்த‌ர், விஜ‌யேந்திர‌ன், விஜ‌ய‌ராக‌வ‌ன், பால‌கிருஷ்ண‌ன் உள்ளிட்டோர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அனைத்து உறுப்பின‌ர்க‌ளின் ஏகோபித்த‌ க‌ர‌கோஷ‌த்துக்கிடையே புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

புதிய‌ நிர்வாகிக‌ளை கே. குமார் வாழ்த்தினார். த‌ன‌து 37 வ‌ருட‌ அமீர‌க‌ வாழ்வினை நினைவு கூர்ந்த அவ‌ர் த‌மிழ்ச் ச‌மூக‌த்திற்கு ப‌ல‌ன‌ளிக்கும் வ‌ண்ண‌ம் சேவையாற்றிட‌ கேட்டுக் கொண்டார்.த‌லைவர் ஜெய‌ந்தி சுரேஷ் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.

பொதுச்செய‌லாள‌ர் ஜெக‌ந்நாத‌ன் ந‌ன்றி கூறினார். நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர் ஏ. லியாக்க‌த் அலி உள்ளிட்ட‌ பல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?
( ஏவி.எம். ஜாபர்தீன் )
( கௌரவ ஆசிரியர், சமநிலைச் சமுதாயம் )

சகோதரர் ஹைதர் அலி வக்பு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது ஒரு திறமையாளர் தலைமையில் வக்பு போர்டு என்ற ஊழல் மகா சமுத்திரம் புனித மடைந்து விடும். என்று மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகங்களில் வக்பு வாரியத்தின் தலையீட்டால் பல பள்ளிவாசல்கள் நிர்வாகக் கமிட்டி இன்று வக்பு வாரிய அதிகாரிகள் வசம் சென்று விட்டன. அவற்றில் கூத்தாநல்லூரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் அராஜகத்தை இங்கு முன்வைக்கின்றேன்.
கூத்தாநல்லூரில் பெரிய பள்ளிவாசல் என்பது அந்த மஹல்லா மக்கள் தொழுகைக்கு மட்டுமல்லாது அந்த ஊரின் முக்கிய நிர்வாகங்களையும் கவனித்து வந்தது.
திருமணத்திற்கான அனுமதி திருமணப்பதிவு, மரணப்பதிவு, விவாகரத்து மற்றும் விவாகரத்துக்கான நஷ்ட ஈடு ஆகியவைகளை பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் கவனித்து வந்தது. 14 பள்ளிவாசல் களைக் கொண்ட அந்த ஊருக்கு பெரிய பள்ளிவாசல்தான் தலைமை நிலையமாகச் செயல்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரிய பள்ளிவாசலில் வேலை செய்து வந்த சிப்பந்திகளில் ஒருவர் கையாடல் செய்தார். என்ற காரணத்தைக் காட்டி வக்பு வாரியம் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது.
அதன் பிறகு ஜனாப் ஏ.ஜே. அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது 1978 இல் நிர்வாகத்தை உள்ளூர் ஜமாஅத்திடம் ஒப்படைக்கும் வண்ணம் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து 7 பேர் கொண்ட குழு 15 பேராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டத் திட்டங்களையும் வகுத்தனர்.
அதன் பிறகு வக்பு போர்ட் தலைவராக வந்த அப்துல் லத்தீப் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவை மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இருமுறை நீட்டித்தார். இரண்டாவது மூன்றாண்டுகள் முடியும்போது அப்துல் லத்தீப் வக்பு வாரியத்தலைவர் பதவியை விட்டு விலகினார்.
அப்போது இடைக்காலத்திற்கு இசைமுரசு நாகூர் அனீபாவை தமிழக அரசு வக்பு வாரியத் தலைவராக நியமித்தது. அவரது பதவி காலத்தில் மீண்டும் 3 ஆண்டுகள் பதவி கால நீட்டிப்புக்காக நிர்வாகக் குழுத் தலைவரும் நானும் அவரைச் சந்தித்தோம். 3 ஆண்டுகளுக்குப் பதிலாக அவர் முறைப்படி வாரியத்தைக் கூட்டி 5 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து தந்தார். காரணம் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் இல்லாதபோது அனாவசியமாக மாறுதல் செய்ய வேண்டியதில்லை. என்று முடிவெடுத்தார்.
முன்பே கூறினேன், வாரியம் ஒரு ஊழல் மகா சமுத்திரம் என்று நாகூர் அனீபா அவர்கள் பதவி விலகும் சமயத்தில் அவர் அறியாமலேயே அவரிடம் ஒரு கடிதம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதில் 5 ஆண்டுகள் நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனை பெரிய பள்ளி நிர்வாகஸ்தர்கள் நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். உயர் நீதிமன்றம் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ட்ரிப்யூனல் மூலம் ஏனைய விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் உள்ள ட்ரிப்யூனல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து ஐந்து ஆண்டுகள் வரை தற்போதைய நிர்வாகம் எவ்வித இடையூறும் இன்றி தொடரலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் பள்ளிவாசல் சட்ட விதிகளுக்குட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தாரிலிருந்து புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்று தீர்ப்பளித்தது.
மாநில ஆட்சி மாறியது. திருமதி பத்ர் சயீத் வக்பு வாரியத் தலைவராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். சட்ட வல்லுனரான இவர் காலத்தில் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்றாலும் ஊழல் மகா சமுத்திரத்தை மாற்றி அமைக்கப் பெரும் போராட்டம் நடத்தினார். அலுவலர்களை நம்பாமல் முக்கியமான ஆவணங்களை தன்னுடனே வீட்டிற்கே எடுத்து வந்துவிடுவார்
திருமதி பத்ர் சயீத் இருந்தபோது தானே முன்னின்று தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒப்படைப்பதாக உறுதி கூறினார். ஆனால் அவர் காலத்தில் ஏதும் முடியவில்லை. பிறகு புதிய தலைவராக ஹைதர் அலி பதவி ஏற்றார்.
நாகப்பட்டினம் ட்ரிப்யூனல் அளித்த தீர்ப்பை எதிர்த்து கூத்தா நல்லூரில் உள்ள சில விஷமிகள் தூண்டுதலால் வக்பு வாரியம் ‘ஸ்டே; வாங்கியது. ;ஸ்டே; வாங்கியவுடனேயே நிர்வாக அதிகாரி ஒருவர் அடாவடியாக பள்ளிவாசலினுள் புகுந்து அங்கிருந்த சிப்பந்திகளை மிரட்டி அலுவலகச் சாவி, வங்கி செக்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இது முறையாக பதவி வகித்து வரும் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்காக ரசீது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நிர்வாகிகளும் ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொண்டு விட்டனர். நிர்வாகத்திலோ அல்லது நிதி கையாண்டதிலோ எவ்வித முறைகேடும் இல்லாத பட்சத்தில் எவ்வித முகாந்திரமும் இன்றி நிர்வாகக் குழுவிடமிருந்து பொறுப்பை வக்பு வாரியம் கைப்பற்றியது. இதனால் மனம் வெறுத்துப்போன ஜமாஅத் பெரியவர்கள் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.
நிர்வாக அதிகாரி நிரந்தரமாக அங்கு இருப்பதில்லை. பல ஊர்களுக்கும் அவரேதான் நிர்வாக அதிகாரி அவர் எப்போது வருவார் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது அவரிடம் வாங்க வேண்டிய கையெழுத்துகளை சிப்பந்திகள் வாங்கிக் கொள்வர். இதில் முக்கியமான ஒன்று ஊர் உத்தரவு என்ற திருமண அனுமதி.
இது உள்ளூரில் உள்ள உறவின் முறை ஜமாஅத்தாரால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. யார் முதல் திருமணம் செய்கிறார்கள் என்றும் யார் இரண்டாவது முறையாகத் திருமணம் செய்கிறார்கள் என்றும் அவர்களுக்குத்தான் தெரியும்.
உறவின் முறை ஜமாஅத் என்ற பெயரிலேயே அவர்கள் அனைவரும் தூரத்து உறவினராகவாவது இருப்பார். இதனால் யாருக்கு ஊர் உத்தரவு கொடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானிப்பர்.. அவர்கள் உத்தரவு தந்தால்தான் திருமணத்தின்போது திருமணப்பதிவு புத்தகமும் திருமணம் செய்து வைக்க சமயப் பெரியவரும் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்வார். .
இப்போது என்ன நடைபெறுகிறது?
ஊர் உத்தரவு கேட்டு வரும் மனுவை பள்ளிவாசல் சிப்பந்தி ஒருவர் எடுத்துக்கொண்டு வெளியூரில் இருக்கும் நிர்வாக அதிகாரியைத் தேடிப் பிடித்து கையெழுத்து வாங்கி வருகிறார். இதில் திருமணமானவரா இல்லையா? மணவிலக்கு செய்தவரா இல்லையா என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
முன்பு நிர்வாகிகள் இருந்தபோது மணவிலக்கு செய்தவர். மணமகனாக இருந்தால் அவர் தனது முந்தைய மனைவிக்குச் சேர வேண்டியவைகளைக் கொடுத்து விட்டானா என்று தீர விசாரித்து அப்படி ஏதும் செலுத்தவில்லை என்றால் ஊர் உத்தரவு மறுக்கப்படும். வக்பு நிர்வாகத்தில் இதுவெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
அதேபோல் விவாகரத்து சொத்துப் பிரச்சினை என்று யாரும் போலீஸ் பக்கமோ நீதிமன்றமோ செல்லாமலே நிர்வாகஸ்தர்களிடம் சென்று பஞ்சாயத்து செய்து வந்தனர். இவை அனைத்தும் இப்போது போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுவிட்டன.
வக்பு வாரியம் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தால் அவர் வக்புக்கான வரவு செலவு பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை நடைபெறுகிறதா என கண்காணிப்பது சிப்பந்திகள் சம்பளம் பெறுதல் பள்ளிவாசலின் வருமானத்தை முறையாகப் பெற்று அவைகளை வங்கியில் செலுத்துவது ஆகியவற்றைப் பார்ப்பதுதான் வழக்கமே தவிர திருமணத்திற்கான அனுமதி கொடுப்பது எந்த வக்பு சட்டத்தின் கீழ் வருகிறது? இப்படி கட்டமைப்பு கொண்ட ஒரு நிர்வாகத்தை வக்பு வாரியம் வந்து கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது.
இதற்கிடையே இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வக்பு வாரிய நிர்வாகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் வக்பு வாரியம் தேர்தலை நடத்த முடிவு செய்தது.வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதில் ஏழு பேர் தேர்தல் இங்குள்ள நடை முறைக்கு சரிப்பட்டு வராது. எலக்‌ஷனுக்குப் பதில் செலக்‌ஷன் தான் வைக்க வேண்டும் என்று கூறி ஒத்துழைக்க மறுத்தனர். ஊரிலுள்ள உறவின் முறை ஜமாஅத்தினர் ஒரு கூட்டம் கூடி 50 பேர் கொண்ட குழுவை உருவாக்கி இவர்கள் மூலம் உறவின் முறை ஜமாஅத்தின் பட்டியல் தயாரிப்பது என்ற முடிவு எடுத்தனர்.
உறவின் முறை ஜமாஅத் என்றால் என்ன என்று பார்ப்போம்.
கூத்தாநல்லூர் ஆரம்ப காலத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்துவந்த 11 முஸ்லிம் குடும்பங்கள் கரை வழி என்றும் உள்ளூர் வாசிகள் என்றும் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தக் குடும்பத்தினர்தான் திருமணம் வமிசாவழி விருத்தி ஆகியவை மூலம் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றனர். எந்தக் குடும்பத்தை எடுத்தாலும் ஆதியில் இருந்த 11 குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பர். இவர்கள் பெரும் சொத்துக்களை வாங்கி பள்ளிவாசல்களைக் கட்டி மதரஸாக்களைத் துவக்கி இவைகளைப் பராமரிப்பதற்காக சொத்துக்களை வாங்கி வக்பு செய்தனர். பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துகளை நிர்வகிக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பே கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்.
இந்த உறவின் முறை ஜமாஅத் தான் காலங்காலமாக பள்ளிவாசல்கள் அனைத்தையும் நிர்வகித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது சென்னை சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கி வக்பு செய்துள்ளனர்.
உறவின் முறை ஜமாஅத் பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இந்த உறவின் முறை ஜமாஅத் முறையை எதிர்த்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பிலேயே தேர்தலில் பள்ளிவாசலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தினரிடமிருந்துதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியதும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் கூத்தாநல்லூரிலேயே அன்வாரியா தெருவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வக்பு வாரியம் தேர்தல் அறிவிப்புச் செய்தது. அதற்கான வாக்காளர் பட்டியலையும் அவர்கள் தமுமுகவினரைக் கொண்டு தயாரித்துள்ளனர்.
அன்வாரியா தெருவில் வசிக்கும் அந்த மஹல்லாவைச் சேர்ந்தவர்களில் பெரும்பகுதியினரைத் தவிர்த்துவிட்டு உறவின் முறை என்ற வார்த்தைக்குப் பதில் உள்ளூர் வாசிகள் என்ற வார்த்தையை வைத்து வக்பு வாரிய அதிகாரிகள் 20 பேர் மட்டும் அன்வாரியா தெரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களையும் மீதி 130 பேர் வெளியூரிலிருந்து குடிவந்தவர்களையும் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த 130 பேரில் பெரும்பான்மையோர் தமுமுக உறுப்பினர்கள் கூத்தாநல்லூரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றங்கள் இயங்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
சென்ற மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. என்னவோ பெரிய கலவரப் பிரதேசம் போல் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்திருந்தனர். கூடவே ஒரு டி.ஐ.ஜியும் கூட்டத்தைக் கலைக்க பயன் படுத்தும் தண்ணீர் பீய்ச்சும் வஜ்ரா வாகனம் என்று பெரிய ஆர்ப்பாட்டத்தோடு ஆரம்பித்த தேர்தலில் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தமுமுகவின் மூக்கு உடைபட்டது.
தமுமுக ஆதரவு பெற்ற வெளியூரைச் சேர்ந்தவர்களில் மூவர் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள். தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்தால் போலீஸில் பிடித்துக் கொடுக்க ஊரே தயாராக இருந்தது.
இப்படி ஹைதர் அலியின் கனவு பலிக்கவில்லை. தமுமுகவினரால் ஊர் பிளவுபட்டது. குடும்பங்கள் பிரிந்தன. தந்தையும் தனையனும் தனித்தனியாக நிற்கின்றனர். தமுமுகவும் தெளஹீத் ஜமாஅத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களிடமிருந்து சுன்னத் ஜமாஅத்தைக் காப்பது இப்போது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.
ஹைதர் அலியின் ஒரே அஜெண்டா சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்றி அதனை தமுமுக கொள்கை கொண்டவர்களிடம் ஒப்படைப்பதுதான்.
ஏற்கெனவே இந்த இதழில் தமுமுக உறுப்பினர்கள் எப்படி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் செய்கின்றனர் என்பதை பட்டியலிட்டோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. போல் தமுமுகவினரே ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்ற நடைபெறும் சதி இது.
மீண்டும் பெரிய பள்ளிவாயில் பற்றி பார்ப்போம். உறவின் முறை ஜமாஅத் கொண்ட பட்டியல் வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தும் அவர்கள் தேர்தல் நடத்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் அவசர அவசரமாக அன்வாரியா தெரு பள்ளிவாசலுக்கு தேர்தல் வைப்பதன் . .மூலம் அதே பாணியைப் பின்பற்றி பெரிய பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்தலாம்.என்று திட்டமிடுகிறார்கள் போலும்.
அன்வாரியா தெரு பள்ளிவாசல் வாக்காளர் பட்டியலில் உறவின் முறை ஜமாஅத்தினர் அல்லாதார் 130 பேர் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் வக்பு வாரிய தலைவர் இல்லை அவர்களும் உறவின் முறை ஜமாஅத்தார்தான் என்று சத்தியம் செய்கிறார்.
உறவின் முறை ஜமாஅத்தார் அல்லாதவர்கள் ஒன்றும் ஒதுக்கப்பட வில்லை. அவர்களில் பலர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூத்தாநல்லூர் முன்சிப்பல் தலைவரே உறவின் முறை ஜமாஅத்தைச் சாராதவர் தானே? பள்ளிவாசல் நிர்வாகத்தை தவிர அவர்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. இதனை முன்பின் தெரியாத வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது?
சில மாவட்டங்களில் இறந்தவர்களைக் கூட சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுமாறும் உள்ளூர்வாசிகள் மட்டும் தான் இங்கு அடக்கம் செய்யமுடியும் என்றும் கூறுகின்றனர். கூத்தாநல்லூர் அவ்வாறு இல்லையே.
கூத்தாநல்லூரில் எந்த தொழிற்சாலையோ அல்லது வருமானம் தரக் கூடிய பெரிய தொழில்களோ கிடையாது. நகராட்சியாக உயர்வு பெற்றதற்கு காரணம் அவ்வூர் உறவின் முறை ஜமாஅத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து பணம் ஈட்டி கூத்தாநல்லூரில் வளமாக வாழ்ந்தனர். பள்ளிவாசல்கள் மதரஸாக்களைப் போன்றவை களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து பராமரிக்கிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்கள் இவ்வூர்களில் வேலை செய்தோ தொழில் செய்தோ தான் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள்.
இறுதியாக கூத்தாநல்லூர் சம்பவம் ஒரு உதாரணம். பள்ளிவாசல் நிர்வாகத்திற்குள் தமுமுக நிர்வாகத்தினரைத் திணிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் கிடைக்கின்றன. அண்மையில் ஜூனியர் விகடனில் மேலை நாசர் என்பவர் இதேபோல் சில விபரங்களைக் கூறி குமுறியிருந்தார்.
இக்கட்டுரை மாண்புமிகு முதலமைச்சர் பார்வைக்குச் செல்லும் என்று நம்புகிறோம்.
தமுமுக இதே பாணியைக் கையாண்டால் அதனை தி.மு.கழகம் ஆதரித்து வந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களிடமிருந்து திமுக கூட்டணிக்கு ஒரு வாக்குகூட கிடைக்காது. மாண்புமிகு முதல்வர் ஆவன செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

( சமநிலை சமுதாயம் – மார்ச் 2009 இங்கும் அங்கும் பகுதியிலிருந்து )

SAMANILAI SAMUDHAYAM
NO 5 GREEMS ROAD
CANARA BANK BUILDING
IInd Floor
P O Box No. 6262
Thousand Lights
CHENNAI 600 006
Tel : 044 – 282 90 785
Fax : 044 – 24311229
Editor2samanilai@yahoo.co.in
Editor2samudhayam@yahoo.co.in

துபாய் பெஸ்டிவ‌ல் ( FESTIVAL ) சிட்டி‍ ஒரு பார்வை
















துபாயில் ஒரு வியாழ‌ன் மாலையில் ......

துபாயில் ஒரு வியாழ‌ன் மாலையில் ......


துபாயில் 02.04.2009 வியாழ‌ன் மாலையில் அல் முத்தீனா பார்க்கில் அல்ஹாஜ் செய்ய‌து எம். அப்துல் காத‌ர், இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ், தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன், முதுவை ஹிதாய‌த் உள்ளிட்டோர் க‌ல‌ந்துரையாடிய‌ போது