Sunday, October 24, 2010

சல்மாவும், சஹர் நேரமும்... தமிழக முஸ்லிம்களின் மூன்றாம் ஜாமத்தின் கதை!

சல்மாவும், சஹர் நேரமும்... தமிழக முஸ்லிம்களின் மூன்றாம் ஜாமத்தின் கதை!


ரமளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது.

தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும், அது பொது சமூக மத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், தாமதமாகவேனும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், ஒளிபரப்பு ஊடகத்தை [visual media ] ஒலிபரப்பு ஊடகமாக [broadcost media ] நம்மவர்கள் கையாண்டு வருவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

திரையில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால் தான் அது காட்சி ஊடகம். ஒரு மணிநேரம் முழுவதும் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தால் அது என்ன ஊடகம்?

இங்கே தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் ஒவ்வொருமுஸ்லிம் நிகழ்சிகளிலும்
ஒவ்வொருவராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள், வேறு வழியே இல்லாமல் நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

காட்சி ஊடகத்தை காட்சி ஊடகமாகப் பயன்படுத்தக் கூடிய அனுபவமும்,முதிர்ச்சியும்,அறிவு வளர்ச்சியும் இன்றி, தொழில் நுட்பப் புரட்சி மிகுந்த இந்த 2010 -லும் கூட நாம் சிந்தனை வறட்சியிலேயே இருக்கிறோம் என்பதைத்தான் நம்முடைய ஊடகப் பயன்பாடு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சஹர் நேர நிகழ்ச்சிகளில் எந்தச் சேனலைத் திறந்தாலும் ஒரே பேச்சு மயம் தான். கற்குவியல்களுக்கு இடையே சில சோற்றுப் பருக்கைகளைப் போல ஒரு சில நிகழ்சிகளைப் பார்க்க முடிந்தது.

மார்க்க ரீதியான கேள்வி பதில்களும், குழந்தைகளை ஈர்க்கும் வினாடி வினா போட்டிகளும் சற்று மன நிறைவைத் தந்தன.ஆனால், கடந்த காலங்களில் வித்தியாசமான நிகழ்சிகளை வழங்கி வந்த சிலரும் கூட, காலப் போக்கில் பேச்சு என்கிற பழைய நிலைக்கே திரும்பியிருப்பது நமக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.அவர்களும் வழக்கமான 'பேச்சு' நீரோடையில் கலந்து கரைந்து போவதற்கான காரணம் என்ன என்பதை சற்று ஆராய வேண்டி உள்ளது.

காயல் இளவரசு தொடங்கி வைத்த சஹர்நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இன்றைக்கு மதிமுகவின் சீமா பஷீர் வரை வளர்ந்திருக்கிறது. அதாவது, காயல் இளவரசு என்னும் தனி நபரில் தொடங்கி, முஸ்லிம் அமைப்புகளிடம் தொடர்ந்து, இன்று மதிமுக என்னும் அரசியல் கட்சி வரை அது விரிவடைந்திருக்கிறது.

முன்பு சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை சஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும் என்பதைத்தான் மதிமுகவின் இவ்வருட சஹர் வருகை நமக்கு உணர்த்துகின்றது.

எப்படி இப்தார் நிகழ்ச்சி இன்றைக்கு அரசியல் கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறி விட்டதோ, அதைப் போலவே சஹர் நிகழ்சிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தனிநபர் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிகழ்சிகளால் சமூகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லாவிட்டாலும், சிறிய அளவு கூட தொல்லை இருந்ததில்லை.ஆனால் அமைப்புகள் களத்தில் குதித்த பிறகு சஹர் நேரத்தின் கண்ணியத்திற்கு களங்கம் நேர்ந்து விட்டது. மார்க்க ரீதியான பிரச்சனைகளைக் கிளறி, கருத்து மோதல்களைச் செய்வதற்கான களமாக சஹர் நேரத்தையும், ஊடகத்தையும் மாற்றி விட்டார்கள்.

இறைவனுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்றொரு சண்டை.

காதியானிகள் முஸ்லிமா இல்லையா என்று, ரொம்ப அவசியமான ஒரு விவாதம்.

சமுதாயத்திற்கு யார் உண்மையாக உழைப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் 'நீயா நானா' போட்டி.

இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்தது யார் என்பதில் நீடிக்கும் உரிமைப் போர்.

'அவன் முஸ்லிம் இல்லை, இவன் முஸ்லிம் இல்லை' என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சான்றிதழ் கொடுக்கும் கொடுமை.

ஜகாத்தையும், நன்கொடைகளையும் எங்களுக்கே அனுப்புங்கள்! அனுப்புங்கள்! என்று கூவிக் கூவி வசூலிக்கும் அவலம்.....

இப்படி நீண்டு கொண்டிருக்கிறது முஸ்லிம் ஊடகத்தின் பரிணாமம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், மார்க்கம் பேச வேண்டியவர்கள் அரசியல் பேசுகிறார்கள்.
அரசியல் பேச வேண்டியவர்கள் மார்க்கம் பேசுகிறார்கள்.
எதையாவது பேச வேண்டும் என்பதில் இருக்கும் முனைப்பும் வேகமும் எதைப் பேச வேண்டும் என்பதில் இருப்பதில்லை.
பிஜேயின் மார்க்கப் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்று சொல்லி முழு நேர அரசியல் பேச வந்தவர்கள், அரசியலை விட்டு விட்டு மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களிடம் கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்பு மிகுந்த ஒரு நேரத்தில், வலிமை மிகுந்த ஒரு ஊடகத்தின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களை எடுத்து வைத்து மக்களை ஈர்ப்பதை விட்டு விட்டு 'ஏய்..! நானும் ரவுடிதான்; நானும் ரவுடி தான்' என்பது போல மார்க்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊடகத்தின் வழியே யாருமே மார்க்கப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதல்ல நமது கருத்து.
அரசியல் எழுச்சியூட்ட வேண்டியவர்கள் ஊடகத்தை அதற்கு முழுமையாகப் பயன்படுத்தட்டும்,
மார்க்க விழிப்புணர்வூட்ட வேண்டியவர்கள் முழுமையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யட்டும்.

ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் நம்மில் துறை சார்ந்த வல்லுனர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பிஜே மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் நானும் மார்க்கப் பிரச்சாரம் செய்வேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தால், அரசியல் விழிப்புணர்வை யார் ஊட்டுவது?

ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் இங்கே சமுதாயத்தின் பிரச்சனைகள் தீர்வின்றித் தொடர்கின்றன.அவரவர் கடமைகளில் இருந்து அவரவர் தவறுவதன் மூலம் சமுதாய மக்களின் பொருளாதாரமும்,
பொன்னான நேரமும் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நாம் மற்றவர்களிடம் இருந்து நிறைய பாடம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் எல்லா துறைகளிலும் வேர் பரப்பி, கிளை விரித்து, கோலோச்சி இருக்கிற இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் தங்களின் ஆற்றலை வீணாக்குவதில்லை. ஒரே வேலையை செய்வதற்காக அவர்கள் தங்கள் சமூகத்தின் பொருளாதாரத்தை விரயம் செய்வதில்லை.

அங்கே பாஜகவுக்கு ஒரு வேலை;பஜ்ரங் தளத்துக்கு ஒரு வேலை;விசுவ ஹிந்து பரிசத்துக்கு ஒரு வேலை;துர்கா வாகினிக்கு ஒரு வேலை;அபினவ் பாரத்துக்கு ஒரு வேலை;இந்து முன்னணிக்கு ஒரு வேலை..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள்.இவர்களையெல்லாம் கட்டி மேய்க்கிற பெரியண்ணன் வேலை ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை.

இவர்களில் எந்த அமைப்பும் இன்னொரு அமைப்பைத் தாக்குவதில்லை.தொலைக்காட்சியில் Slot எடுத்து சண்டை போடுவதில்லை. பாபர் மசூதியை இடித்தது நீயா நானா என்று ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்பதில்லை. ஒரு அமைப்பின் வேலையில் இன்னொரு அமைப்பு தலையிடுவதில்லை.ஒரு அமைப்பின் வேலையை இன்னொரு அமைப்பு செய்வதுமில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித் தனி வேலைகள். ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பாதைகள்.ஆனால் எல்லோருக்கும் ஒரே இலக்குகள். ஆர்எஸ்எஸ் என்கிற தலைமை அமைப்புக்கு கட்டுப்பட்டவர்களாக,அது போட்டுக் கொடுத்த செயல் திட்டத்தின் படி வழி நடப்பவர்களாக இந்துத்துவ சக்திகள் இயங்கி வருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம்..

குர்ஆனும், ஹதீசும் இல்லாமல், முறையான வாழ்க்கைத் திட்டம் இல்லாமல், ஒருமுகப்பட்ட நல்ல கோட்பாடு இல்லாமல் அவர்கள் முறையாகவும் தெளிவாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் எல்லாம் இருந்தும் இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

எந்த வித திட்டமிடலும் இல்லாமல், தெளிவான வழிமுறைகளைக் கையாளாமல் அமைப்பு நடத்துவது போலவே இங்கே ஊடகமும் நடத்தப்பட்டு வருகிறது. பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டம், இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் என ஒரே விசயத்தைப் பேசுவதற்கு பல அமைப்புகள் இயங்குவது போல, பல்வேறு அமைப்புகளும் தொலைக்காட்சியில் Slot வாங்கி ஒரே விசயத்தைப் பேசுகின்றன.

கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு, எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது, எந்தக் கருத்தைக் கேட்பது என்ற குழப்பம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும்,உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்பவும்,அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசவுமே ஊடகம் பயன்பட வேண்டும்.ஆனால் முஸ்லிம் ஊடகத்தின் மூலம் இன்று சமுதாயத்தில் குழப்பமும் பிரச்சனைகளும் தான் மலிந்து கொண்டிருக்கிறது.

குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியது எப்படி என்று, இந்துத்துவ பயங்கரவாதிகளைப் பேச வைத்து பதிவு செய்த தெஹல்காவின் அரும்பணியை நாம் மெச்சிக் கொண்டிருக்கிறோம்.

காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்யும் ஸ்ரீ ராம் சேனாவின் பிரமோத் முத்தலிக்கை, கையும் களவுமாக காட்டிக் கொடுத்த ஊடகத்தின் மேன்மையை நாம் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாடு முழுவதும் நடை பெற்ற ஏழு மிகப்பெரிய குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு உண்டு என்று பகிரங்கமாக அம்பலப் படுத்திய ஹெட்லைன்ஸ் டுடேயின் கேமராவை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், நமது கைகளில் இருக்கும் கேமராக்கள், என்றைக்காவது நம் பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டியதுண்டா?
சுய பரிசோதனை செய்யும் வகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊடக நிறுவனங்களும் தங்களுக்குள் இந்தக் கேள்வியை எழுப்பிப் பாருங்கள்; வெட்கத்தால் தலை குனிவீர்கள்.

மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகளையும், மசாயில் பிரச்சனைகளையும் எப்போதும் படம் பிடித்துக் கொண்டு ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் நம் கேமரா, ஏன் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களைப் படம் பிடிக்கவில்லை?

கோடான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்புச் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ள அரசியல்வாதிகளையும், தொழில் அதிபர்களையும், நிறுவனங்களையும், தனி நபர்களையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் புலனாய்வு வேலையை ஏன் நமது ஊடகம் செய்யவில்லை?

இஸ்லாத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார் தாசனை போட்டி போட்டுக் கொண்டு படம் பிடிக்கவும், பேட்டி எடுக்கவும் முனைப்பு காட்டுகின்ற நமது ஊடகம், 25 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த அப்துல்லாஹ் அடியாரின் இறுதி நாட்கள் வறுமை நிறைந்ததாக முடிவுக்கு வந்ததைப் பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறதா?

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் இப்போது எப்படி இருக்கிறார் என்று எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்போதும் மொழிப் போராட்ட தியாகிகளுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் அவரது இன்றைய நிலையை சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோமா?

கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவும் பல்வேறு கிராமங்களில் ஒரு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், இஸ்லாமியக் கருத்தியலை கற்றுக்கொள்ளும் மையம் ஒன்றை நிறுவ முடியாமல், அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உழல்வதை நமது ஊடகங்கள் ஏன் படம் பிடிக்கவில்லை?

பெரியார் தாசனை வாழ்த்த வந்த திருமாவளவன் எப்போது இஸ்லாத்திற்கு வருவார் என்று துரத்தித் துரத்தி கேள்வி எழுப்பி, அதை ஊடகங்களில் ஒளிபரப்பி, சமுதாய மக்களிடம் எதிர்பார்ப்பை கிளறி விட்டவர்களே...சென்னை கொருக்குப்பேட்டையில் வறுமையின் காரணமாக ஆறு முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிச் சென்ற அவலம் நடந்துள்ளதே..அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுவீர்களா?

சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம் பற்றி முஸ்லிம் இதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரப் படுத்தினோம்.
முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வங்கிக் கடன் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று எழுதினோம்.

ஆனால் நடைமுறையில், தொழில் தொடங்க கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கும் முஸ்லிம் இளைஞர்களை, வங்கி அதிகாரிகள் அலட்சியப் படுத்தி திருப்பி அனுப்புவதையும், வேறு வழியே இல்லாமல் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து வாழ்க்கையை ஓட்டும் நமது சமுதாய இளைஞர்களின் அவலங்களையும் என்றைக்காவது நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோமா? நமது ஊடக நிகழ்ச்சிகளில் இதையெல்லாம் விவாதப் பொருளாக்கி, பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்திருக்கிறோமா? சம்மந்தப் பட்ட அதிகாரிகளை அணுகி கேள்வி எழுப்பி இருக்கிறோமா?

பாதிக்கப் பட்ட இளைஞர் தன் பெற்றோருடன் சென்று வங்கி அதிகாரியை நோக்கி கேள்வி எழுப்புவதை விட, பத்து பேராகத் திரண்டு போய் வங்கியை முற்றுகை இடுவதை விட, ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு ஒரே ஒரு நபர் சென்றால் போதுமே! மறு நொடியே பிரச்சனைக்கு தீர்வு வந்து விடுமே. அதை ஏன் இதுவரை நமது கேமரா செய்யவில்லை?

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதை மாறி, இன்றைக்கு சினிமா துணை நடிகைகளாகவும், விபசாரத்தில் ஈடு படுபவர்களாகவும் ஏராளமான முஸ்லிம் பெண்கள் இருப்பதை ஏன் நமது ஊடக அறிவு கண்டறியவில்லை?

இலங்கையில் இருக்கும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளைப் படம்பிடித்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பத் தெரிந்த நமது கேமராவுக்கு, இலங்கை முஸ்லிம்களின் அகதிமுகாம் வாழ்கையை ஆய்வு செய்யச் சென்ற பேராசிரியர் அ.மார்க்சுடன் பயணித்து அங்குள்ள அவல நிலைகளைப் படம் பிடித்து வந்து ஒளிபரப்ப மனம் வரவில்லையே ஏன்?

தமது இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் பித்ரா வினியோகத்தையும்,இரத்த தானத்தையும், மருத்துவ முகாம்களையும் மறவாமல் படம் பிடித்து ஆவணப்படுத்தி, அதை சமுதாய மக்களுக்கு காட்சிப் படுத்துவதில் இருக்கும் வேகத்தில் துளியளவாவது , முஸ்லிம் ஆளுமைகளின் சாதனை வாழ்க்கையை ஆவணப்படுத்துவதிலும், முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் படங்களை உருவாக்குவதிலும், இருந்திருக்க வேண்டாமா? அப்படி ஆவணப்படுத்தி இருந்தால், இன்றைய தலைமுறையினர் காயிதே மில்லத்தைப் பார்த்து நாகூர் ஹனிபா என்று சொல்லும் அவலம் நேர்ந்திருக்குமா?

முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைகளை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் கீற்று இணையதளம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. காவல்துறையின் அடக்குமுறைக்கு இலக்கான முஸ்லிம்கள் பலர் அந்நிகழ்ச்சியில் தோன்றி தங்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.கீற்று நடத்திய அந்நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படி புதிய கோணத்தில் நமது பிரச்சனைகளை விவாதப்பொருளாக்கும் வேலையை எப்போதாவது நமது ஊடகங்கள் செய்திருக்கிறதா?

கீற்றுக்கு இருக்கிற அக்கறை ஏன் 'மூன்' டிவிக்கு இல்லை?
ஏன் அது போன்ற ஒரு நிகழ்ச்சியை டி.என்.டி.ஜே மீடியா விஷன் செய்யவில்லை?
எந்நேரமும் பிஜேயுடன் வம்பு வளர்ப்பதையே முழு நேரச் செயல்திட்டமாகக் கொண்டு இயங்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின்,
ஆஷிக் மதீனா மீடியா நெட்வொர்க் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை?

இப்படிப் பேசுவதற்கும்,விவாதிப்பதற்கும்,காட்சிப் படுத்துவதற்கும் ஆயிரம் அவலங்கள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் இவை குறித்தெல்லாம் எந்தச் சிந்தனையும் இன்றி முஸ்லிம் ஊடகம் பொறுப்பற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

சமுதாயத்திற்குப் பயனுள்ள விசயங்களை காட்சிப் படுத்துவதை விட்டு விட்டு, நான்கு பணக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,அவர்களைப் பேச வைத்துப் படம் பிடித்து, அதையே ஒரு நிகழ்ச்சியாக்கி ஒளிபரப்பக் கூடிய தரகு வேலைதானே, இன்றைக்கு முஸ்லிம் ஊடக சேவையாக இருக்கிறது?

நபிகளார் வலியுறுத்திய பண்புகள் எவற்றையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் தோன்றி 'ரசூலுல்லாஹ் அப்படிச் சொன்னார்கள்,ரசூலுல்லாஹ் இப்படிச் சொன்னார்கள்' என்று சமுதாயத்திற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றெல்லாம் பகுத்துப் பார்க்கத் தெரியாமல் எல்லோருக்கும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.

மார்க்கம் பேசினால் தான் வசூலாகும் என்ற நிலை தொடர்வதனால் தான், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இங்கே எல்லோரும் மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலைப் பற்றியும்,வரலாற்றைப் பற்றியும்,கலைகளைப் பற்றியும்,இலக்கியத்தைப் பற்றியும்,அரசியலைப் பற்றியும்,பொருளாதாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும்,உரையாடுவதற்கும்,நல்ல தீர்வுகளை நோக்கி நகருவதற்கும் யாருமே முன்வருவதில்லை.

அப்படி யாராவது முன்வந்தாலும் அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
மார்க்கம் பேசுகிறவர்களுக்கு மட்டுமே பொருளாதாரத்தை வாரி வழங்கும் சமூகப் புரவலர்கள், மற்ற விசயங்களைப் பற்றியும் பேசுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டாமா?

பொதுவான தொலைகாட்சி நிகழ்சிகளுக்கு விளம்பரம் தரக்கூடிய வர்த்தக நிறுவனங்கள்,கண்டபடி எல்லோருக்கும் விளம்பரங்களைக் கொடுப்பதில்லை. எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள்,எந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது,எந்த நிகழ்ச்சி அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் 'டி.ஆர்.பி. ரேட்டிங்' என்னும் தரவரிசைப் பட்டியலைப் பார்த்து, அதில் சிறந்த இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரம் தருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் ஊடக நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்கும்,தரவரிசைப் படுத்துவதற்கும் ஆளுமில்லை;அமைப்புமில்லை.
முஸ்லிம் நிகழ்சிகளுக்கு விளம்பரங்களைத் தரக்கூடிய நிறுவனங்களுக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.

இங்கே நிகழ்ச்சிக்காக விளம்பரம் கொடுக்கிறார்கள் என்பதை விட, நிகழ்ச்சியை நடத்தும் நபருக்காகவும், அமைப்புக்காகவுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். அதனால் தான் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்துகிறவர்களுக்கும்,வெறுமனே உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே விதமான பொருளாதார உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாறவேண்டும்.நல்ல நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நிலை மலர வேண்டும்.

சங்கபரிவார் அமைப்புகளை கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஆர்.எஸ்.எஸ். என்கிற ஒரு தலைமை அமைப்பு இருப்பது போல் நமது அமைப்புகளை கண்கானிப்பதற்குத்தான் ஒரு அமைப்பு இல்லை; இந்த ஊடக நிகழ்சிகளை கண்காணிக்கவாவது ஒரு ஊடக மையம் இருக்கக் கூடாதா?

நமது பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் நமது எதிரிகளை கைகாட்டுவதை விட்டுவிட்டு, நாம் எந்தெந்த வகையிலெல்லாம் காரணமாய் இருக்கிறோம் என்கிற சுய பரிசோதனையில் ஈடுபடுவதே இனி நமது முன்னேற்றத்திற்கான ஒரே வழி.

******
சஹர் நேர நிகழ்ச்சிகளில் பலராலும் அதிர்ச்சியோடு பார்க்கப் பட்ட இன்னொரு விசயம் கவிஞர் சல்மாவின் உடையும்,அவரது உரையும் தான்.

இலக்கியக் கூட்டங்களிலும்,பொது நிகழ்ச்சிகளிலும் நவ நாகரீகமான ஆடைகளுடனும், நல்ல சிகை அலங்காரத்துடனும் காட்சி அளிக்கும் நம் சகோதரி,சஹர் நேர நிகழ்ச்சியில் தலையில் முக்காடு அணிந்து மார்க்க உபன்யாசம் செய்து கொண்டிருந்தது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

இணையதளத்தில் facebook எனப்படும் முகநூலில் சல்மாவும் அங்கம் வகிக்கிறார். அதில் அவர் தன்னைப் பற்றிய சுய விபரக் குறிப்பில் [profile],தன்னை ஒரு இறைமறுப்பாளர் [athiest] என்று அடையாளப் படுத்தி உள்ளார்.

தன்னை இறைமறுப்பாளர் என்று சொல்லிக் கொள்ளும் கவிஞர் சல்மா,இறையியலோடு தொடர்புடைய சஹர் நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றி, முஸ்லிம்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்தது மிகப்பெரும் முரண்பாடாகவே தெரிந்தது.

''எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை''.

''என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான். “நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா” என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான்.இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது''.

இப்படியெல்லாம் பேட்டி கொடுத்து, முற்போக்கு முகவரி பெற்ற சல்மாதான், சஹர் நேரத்தில் முக்காடு போட்டு வந்து முஸ்லிம்களுக்கு வகுப்பு எடுத்தார்.

சல்மாவின் வாக்குமூலத்தை வைத்துப் பார்க்கும் போது, சஹர் நேரத்தில் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி அவரை விட, அவரது பிள்ளைகளுக்கு இருப்பதாகவே நமக்குத் தோன்றியது.

ஊடகத்துறை பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போதே சல்மாவைப் பற்றியும் குறிப்பிட வேண்டி வந்ததால், எனக்கு ஊடகம் தொடர்பாகவும் சல்மா தொடர்பாகவும் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றன.

அது ஒரு ரம்மியமான மாலை நேரம்...

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய ஒரு குடிலில் இலக்கியவாதிகளும்,இதழியலாளர்களும் பெருமளவில் கூடியிருந்தனர்.

பிரக்ரிதி பவுண்டேசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் கவிஞர் சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலைப் பற்றிய உரையாடலும், சல்மாவின் இணையதள அறிமுகமும் நடைபெற்றது.

சல்மா எனது அன்புக்குரிய சகோதரி..
சல்மாவின் இணையதளத்தை அன்று அறிமுகப் படுத்தியவர் எனது அண்ணன் இயக்குநர் அமீர்.
சல்மாவின் நாவலைப் பற்றிய கருத்துப் பதிவை நிகழ்த்தியவர் எனது இதயத்திற்கு இனிய எழுத்தாளர் களந்தை பீர்முகமது.
இப்படி நிகழ்வு நெகிழ்வாய் இருந்தது.

சல்மாவின் படைப்புகளோடு நமக்கு முரண்பாடுகள் உண்டு என்றாலும், எத்தகைய படைப்பையும் எத்தகைய விமர்சனத்தையும் விவாதிக்காமல் உரையாடாமல் கடந்து போகக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதில் நானும் பங்கேற்றேன்.

அங்கே குழுமியிருந்த இலக்கியவாதிகளைப் பார்த்தபோது எனக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை.
ஆனால் இதழியலாளர்களைப் பார்த்த போது, அதுவும் அவர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை பார்த்தபோது மனதில் பல கேள்விகள் எழுந்தன.

அவர்களில் பெரும்பாலானோர் நுனி நாக்கு ஆங்கிலம் உரைப்பவர்களாகவும், முன்னணி ஊடக நிறுவனங்களில் முக்கியப் பங்காற்று பவர்களாகவும் இருந்தனர்.

இன்று சல்மாவுக்கு கிடைத்திருக்கின்ற ஊடக வெளிச்சம் நாம் பலரும் அறிந்ததே.

அரசியல் தளத்தில் அவர் எழுந்து வர வேண்டும் என்று அவர் மீது நாம் காட்டும் கரிசனத்திற்கும், அவரது இலக்கியப் படைப்புகளுக்காகவும் அதில் அவர் பதிந்துள்ள உட்பொருளுக்காகவும் அவரை முன்னிறுத்தி முதன்மைப் படுத்தும் உயர் சாதி ஊடகங்களின் கரிசனத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து,பின்புலமற்ற எளியதொரு குடும்பத்தில் பிறந்து, எழுந்து வந்திருக்கும் ஒரு எழுத்தாளர். அதுவும் பெண் எழுத்தாளர் என்ற கரிசனத்தோடு ஊடகங்கள் அவரை முன்னிறுத்தினால் அதில் கேள்வி எழுப்புவதற்கென்று எதுவும் இல்லை.அது வரவேற்கவும் பாராட்டவும் படவேண்டிய ஒன்று.

ஆனால் நிச்சயமாக ஊடகங்கள் அத்தகைய நல்ல நோக்கத்தோடு சல்மாவை அணுகவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த போதும், இஸ்லாமியக் கருத்தியலை மறுத்து விட்டு ஒரு இறைமறுப்பாளராக தன்னை சல்மா அறிவித்துக் கொண்டதாலும், தனது படைப்புகளில் முஸ்லிம் சமூகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்ததாலும், முஸ்லிம் கலாச்சார அடையாளமின்றி,முக்காடு அணியாமல் மற்ற பெண்களைப் போல் பொது அரங்கில் காட்சியளிப்பதனாலுமே, அவரை முற்போக்குவாதி என்று சொல்லி ஆராதிக்கிறார்கள்;ஆதரவளிக்கிறார்கள்; உச்சிமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்களின் மார்க்கக் கருத்தியலுக்குள் நுழைந்து சர்ச்சையைக் கிளப்பாமல்,சமூகம் சார்ந்த பதிவுகளையும், கல்வி, பொருளாதாரம்,அரசியல் அதிகாரம் குறித்த விழிப்புணர்வூட்டும் படைப்புகளையும் தந்து கொண்டிருக்கும் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு பொது ஊடகங்களில் எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்ற ஒற்றைக் கேள்வியில் தான், சல்மாவை முன்னிறுத்தும் ஊடகங்களின் நோக்கமும் வேஷமும் அம்பலத்திற்கு வருகிறது.

முஸ்லிம்களின் எழுச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் வேண்டி தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு 'இந்தியா டுடே' பக்கம் ஒதுக்குமா? 'காலச்சுவடு' கட்டுரை எழுதுமா? ஹிந்துவிலும்,விகடனிலும் புகைப் படங்களுடன் செய்தி வருமா? இணைய தளங்கள் இடம் கொடுக்குமா? வெளிநாடுகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் சொல்லி அழைப்புத்தான் வருமா?

அப்படி எதுவுமே வராமல், விளம்பர வெளிச்சமே விழாமல் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் முஸ்லிம் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை மக்கள் மயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

'இரண்டாம் ஜாமங்களின் கதை'யை தந்ததற்காக, எங்கோ இருக்கின்ற அமெரிக்காவில் இருந்து சல்மாவுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் 'கைதியின் கதை'யை தந்ததற்காக இங்கே இருக்கின்ற ஆண்டிப்பட்டியில் இருந்து கூட எனக்கு அழைப்பு வரவில்லை.

ஏனென்றால், இரண்டாம் ஜாமங்களின் கதை- முஸ்லிம் பெண்கள் முஸ்லிமல்லாத ஆண்களுடன் ஓடிப்போகின்ற சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறது. கைதியின் கதை- அடக்குமுறைக்கு இலக்கான மதானியைப் பற்றியும் இதர முஸ்லிம் சிறைவாசிகளைப் பற்றியும் பேசுகிறது.இது தான் வித்தியாசம்.

இரண்டாம் ஜாமங்களின் கதையைப் பற்றிய அன்றைய பெசன்ட்நகர் நிகழ்வில், ஏற்புரை ஆற்றிய சல்மா ''எனது சமூகத்தைக் கொச்சைப் படுத்துவதோ, என் சமூக மக்களைப் புண் படுத்துவதோ எனது நோக்கமல்ல..நான் கண்டவற்றை, கேட்டவற்றை,அனுபவித்தவற்றை அப்படியே எழுதினேன்'' என்றார்.

முஸ்லிம் சமூகத்தை புண் படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று சல்மா சொல்லி விட்டாலும், அவரது படைப்புகளை தூக்கிப் பிடித்து,அவருக்கு விளம்பர வெளிச்சம் தந்துகொண்டிருக்கும் ஊடகங்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது என்பதை சகோதரி சல்மா புரிந்து கொள்வாரா?

அன்றைய நிகழ்வில் சல்மாவின் நாவல் குறித்து திறனாய்வு உரை நிகழ்த்திய களந்தை பீர்முகமது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.மகிழ்ச்சியின் உச்சத்தில் கருத்துக்களை உதிர்த்த அவர், முஸ்லிம்களுக்கு கருத்துக்களை எதிர்கொள்ளும் பக்குவமில்லை என்று சாடினார்.இறுக்கமான சமூக அமைப்பாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்று கொந்தளித்தார்.

சல்மாவின் கதையில் முஸ்லிம் பெண்களின் உள்ளுணர்வுகள் வெளிப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் துயரங்கள் துணிச்சலாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பாராட்டினார். அந்தக் கதையை உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல் முஸ்லிம்கள் அதை ஒரு சிறந்த படைப்பாகப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.

உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ ஆனால் திறந்த மனதோடு அதை ஒரு படைப்பாகப் பார்க்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் சில கேள்விகள் மட்டும் இருந்தது. நிகழ்வு முடிந்தவுடன் நான் பீர்முகமது அவர்களிடம் கேட்டேன்.

தன் சொந்த சமூகத்தின் அவலங்களையும், அங்குள்ள பெண்கள் சந்திக்கும் துயரங்களையும், துணிச்சலாகப் பதிவு செய்துள்ள சல்மா.. தன் சொந்த கட்சியில் நடக்கின்ற அவலங்களையும், குடும்ப ஆதிக்கத்தையும், தொழில் துறையிலும்,கலைத் துறையிலும் அவர்கள் காட்டி வருகின்ற ஏக போகத்தையும் துணிச்சலாகப் பதிவு செய்வாரா? அப்படி செய்தால் அதை அந்தக் கட்சி எப்படி எடுத்துக்கொள்ளும்?

எதையும் கேள்வி கேட்டு ஏற்றுக்கொள்ளச் சொன்ன பெரியாரின் வழியில் கட்டமைக்கப் பட்ட ஒரு கட்சியே, அதை சகிப்புத் தன்மையோடு எடுத்துக் கொள்ளாது எனும் போது, கல்வியின் வாசனை நுகராத ஒரு அறியாமைச் சமூகம் தமக்கு எதிரான கருத்துக்களுக்கு உணர்ச்சிவயத்தில் காட்டும் எதிர்ப்புகளை வைத்து, அந்தச் சமூகத்தை சகிப்புத்தன்மை அற்ற சமூகமாக சித்தரிப்பது முறையா?

என்றெல்லாம் நான் கேட்ட போது..நியாயமான கேள்விதான் என்று பம்முவதே களந்தையாரின் பதிலாக இருந்தது.

தனிப்பட்ட முறையில் சல்மா எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவரது அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் அடிக்கடி சென்று உரையாடும் அளவுக்கு அவரோடு எனக்கு நல்ல நட்பு உண்டு.

ஒருமுறை நான் அவரது வீட்டிற்கு சென்றபோது அவரது தாயாரும், சகோதரிகளும் இஸ்லாம் வலியுறுத்தும் கண்ணியத்தோடும்,
ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றக் கூடிய மார்க்கப் பேணுதலோடும் காட்சியளித்ததை என் கண்ணால் கண்டேன்.

அரசியல் ரீதியாக தனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம், தாம் ஒரு இலக்கியவாதி என்பதற்காக கிடைத்தது அல்ல என்றும், அது தனது சமூகப் பின்புலத்திற்காக கலைஞர் கொடுத்தது என்றும் சல்மா என்னிடம் கூறி இருக்கிறார்.

முஸ்லிம் சமூகம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றியும், சமூகத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது கவலையோடு கருத்துப் பரிமாறுவார்.

அப்படிப்பட்டவர் தன்னை 'இறைமறுப்பாளர்' என்று சொல்வதை தவிர்த்து விட்டு, ஓர் உண்மை முஸ்லிமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமும்; வேண்டுகோளும்; பிரார்த்தனையுமாகும்.

சஹர் நேரத்தில் என்றில்லை; எல்லா நேரத்திலும் முஸ்லிம்களுக்கு அறிவார்ந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லவும், பொது ஊடகங்களால் முஸ்லிம் சமூகம் குறித்து வரையப் பட்டிருக்கின்ற மோசமான பிம்பத்தை அடித்து நொறுக்கவும், முஸ்லிம்களின் வலிகளையும், வேதனைகளையும், துயரங்களையும் துணிச்சலாகப் பதிவு செய்யவும் சல்மா போன்ற படைப்பாளிகள் முன்வர வேண்டும்.

ஒருவர் பெற்றிருக்கின்ற அறிவு மற்றவர்களுக்குப் பயன்படும் போதுதான் சிறப்பு பெறுகிறது என்பது நபிகளாரின் கருத்து.

சல்மாவுக்கு இறைவன் அருளியிருக்கின்ற இலக்கிய அறிவும், அரசியல் தெளிவும் விளிம்பு நிலையில் உள்ள அவரது சொந்த சமூகத்திற்கு முழுமையாகப் பயன்படட்டும் என்பதே நமது பிரார்த்தனை.

[சமநிலைச் சமுதாயம் அக்டோபர்-2010 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய விமர்சனக் கட்டுரை]
Posted by Aloor
--