Friday, June 5, 2009

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.

வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை..

சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.

எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…

1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.

2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.

3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.

4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.

5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !

7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்..

9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !
இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.

எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது.
அட… என்ன ? எங்கே கிளம்பிட்டீங்க ? எலுமிச்சை வாங்கவா ? ஒரு கப் எனக்கும் தயாராக்குங்க.

நன்றி : தமிழ் ஓசை

உலக ரத்த தான தினம்

உலக ரத்த தான தினம்

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் ரத்த தானத்தை ஊக்குவிப்பதாகும். வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை ரத்த தானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க ரத்த தானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் ரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும். இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.

இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விஷயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

நன்றி-தட்ஸ்தமிழ்இனைய தளம்.

11th June 2009 - Dubai IMAN