Thursday, February 5, 2009

ஒளுவும்; தொழுகையும்" பாடம்

ஒளுவும்; தொழுகையும்" பாடம்

தூயோனைத் தொழ நாடும் போழ்து
தூயதோர் அமல் "ஒளு" என்பது
" பிஸ்மில்லாஹ்" என்னும் திருமந்திரம்
துவக்கமாய்க் ஓதி
உள்ளங்கைகளால் நீரைக் கோதி;
உள்ளத்துள்:"ஒளு செய்கின்ற"எண்ணதுடன்
உதடுகளால் "கலிமா"வை விளம்பு:
கைகளை நன்றாக அலம்பு

நாக்கு வழி; அதனால்
அச்சரச் சுத்தமாய்
உச்சரிக்கும் இறைவசனம் -உன்
நாக்கு வழி....!!

பல் விலக்கு; அதனால்
பல நோய்கட்கு விலக்கு
நாசி துவாரத்தில்
தூசிகள் போக்கிட
நீர் செலுத்திக் கொண்டே
வாய்க் கொப்பளி

முகத்தை கழுவு முழுவதுமாய்;
முகமொளிரும் முழுநிலவாய்..
கையால் நீரேந்தி
முழங்கை வரை அந்நீரை ஓட விடு;
புழங்கிய பாவங்கள் ஓடி விடும்..!

தலையை நீரால் வாரிவிடு;
தலையில் உட்கார்ந்துள்ள
ஷைத்தானின் கால்களை வாரிவிடும்..!
புறச்செவிகட்கும் சிறிதளவு நீரைக் கொடுத்து விடு;
புறம்பேச்சுக்கள் செவிக்குள் வாராது தடுத்து விடும்..!

கரண்டை வரை கால்கள்
இரண்டையும் கழுவி விடு;
விரண்டோடிடுவான்
விரட்டப்பட்ட ஷைத்தான்..!!!

இறைவன் கட்டளைப்படியே "ஒளு"
நிறைவேற்றிவிட்ட நிம்மதியுடனே..

தொழுகை:

தொழுகையை நாடு;
தூய்மையான இடம் தேடு.....

"குறிப்பிட்ட நேரத்தின்
குறிப்பிட்ட தொடர்புத் தொழுகையை
குறிப்பான "கிப்லா"வின் திசை நோக்கி
அல்லாஹ்வைத் தொழுவதாய்..."
"நிய்யத்" என்னும் எண்ணத்தை
நிர்ணயித்துக் கொண்டு,
"அல்லாஹு அக்பர்" என்றே
கைகளை உயர்த்தி விடு

"இறைவனே பெரியவன்" என்று படி;
சரணடைவதில் இதுவே முதற்படி

நெஞ்சில் கைவைத்து;
அஞ்சி தலை தாழ்த்தி;
அஞ்சலை அனுப்பு
"அல்-fபாத்திஹா" வரிகளில்
"ஆமீன்" முத்திரைப் பதித்து
கொஞ்சம் ஒதிடு இறை வசனம்;
கெஞ்சும் குரலோடு உன் வதனம்..

"அல்லாஹு அக்பர்" என்றே
பணிந்து போகும் எண்ணத்தில்
குனிந்து முட்டுகளில் கைகள் படுக
"தூயோனவனே புகழுக்குரியோன்"
வாயால் வாழ்த்து பாடுக

"அவனைப் புகழ்வதை கேட்பவன்
அவனே" என்று சொல்லிய வண்ணம்
தலை நிமிர்ந்து
நிலைக்கு வந்து விடு

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி

முற்றிலுமாக அவனுக்கேச் சரணடைய
நெற்றியினைத் தரை மீது வைத்து
வெற்றி என்னும் புதையல்
பெற்றிடும் பேறு பெறுக;
அரும்பின் தேனைச் சுவைத்திட
விரும்பி மலருக்குள்
சுருண்டு கிடக்கும்
"சுரும்பு" என்னும் வண்டினைப் போல்..
இறைவனோடு நெருக்கமான அந்த நேரம்;
இறங்கிவிடும் உன் மனதின் பாரம்.....!!!!

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
சிறியதோர் இருப்பிலமர்ந்து
பிரியமான அவனிடம்
பிரியத்துடன் கேள்:
"மன்னிபு;இரக்கம்;
மண்ணில் வாழும் வரை இரணம்"

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
மீண்டுமொரு முறை
"சுஜூது"வின் சுகமேப்
பெற்றிடவே ஆவலுடன்
நெற்றியினைத் தரையில் வைத்து
"தூயோனேப் புகழுக்குரியோன்" என்றுரைத்து
முதல் நிலையை முடித்த நிலையில்..

இரண்டாம் நிலைகு வரும் பொழுதும்
"அல்லாஹு அக்பர்" என்றே சொல்லு
அடுத்த நிலையில் நில்லு.


இப்படியாக எத்தனை "ரகத்"(நிலைகள்)
இறைவனோடு தொடர்பு தொழுகை என்று
துவக்கத்தில் "நிய்யத்"வைத்தாயோ
அதன் எண்ணிகை முடியும்
இறுதி நிலையாம்
"தஷ்ஹுத்" இருப்பில் அமருக
இறைவனும்; இறுதி நபி(ஸல்)யும்

நிறைவுடனே "மிராஜ்"ல்
நிகழ்த்திய நேர்முக உரையாடலென உணர்க..
மகிழ்வுடனே மாநபி(ஸல்) மற்றும்
இபுராஹிம்(அலை);மூமீன்கள் யாவர்க்கும்
இனிய ஸலாம் படித்து விடு;
இனிதாய் தொழுகை முடித்து விடு.

ஓர் அதிசயச்செய்தி:

நீர் பட்டால் துருவாகும்
நிலத்திலுள்ள பொருள் யாவும்; ஆனால்........
"ஒளு"ச் செய்யும் நீர்
உள்ளத்து "துரு" நீக்கும்.....!!!!!!!!!!!!!

இறுதியாக ஓர் ஆனந்தச் செய்தி:

யோகாசனம் போதிக்கும்
ஆசான்கள் யாவரும்
படம் போட்டு
பாடம் நடத்தும் போழ்து
சொல்லிவிடும் ஓர் உண்மைச் செய்தி:
"முஸ்லிம்கள் தொழுகையின்
இறுதியிருப்பில் அமர்ந்திருப்பது போல்.." என்ற
அச்செய்தியினைப் படித்தேன்:
"அல்லாஹ் நமக்கு அருளிய
முழுமையான ஒர் அமல்
தொழுகையின் நிலைகளே.. ஆஹா
பரிபூரணமான யோகா..-என்றே
உரியோனிடம் நன்றி கூறி
மகிழ்ந்தேன்; "தீன்" என்னும்
தேனைச் சுவைத்தேன்...

அன்பான் குழந்தாய்..!
அன்போடு அழைத்தேன்
-"தீன்" என்னும்
தேனைச் சுவைத்திடு
தெரியாமல் உள்ளோரை அழைத்திடு

-என்றும் அன்பு படர்ந்த
இதயமுடன்

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

00971-50-8351499
shaickkalam@yahoo.com

துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி






துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் மணக்கும் மணவாழ்வு நூல் அறிமுக நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஹபூப் அலி தலைமை வகித்தார். யுஏஇ தமிழ்ச்சங்க மக்கள் தொடர்பு செயலர் ஏ. முஹம்மது சிராஜுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மணக்கும் மணவாழ்வு நூல் தொகுப்பாசிரியர் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் நூலை வெளியிட நூலின் பிரதியினை யுஏஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.

மணக்கும் மணவாழ்வு எனும் இந்நூலில் கணவன் மனைவி உறவுகள், பெற்றொர் பிள்ளை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலினை படித்து உணர்ந்து அதன்படி நடக்க முற்பட்டால் திருமண வாழ்வு சிறப்புற அமையும் என்றார் ஆடிட்டர் ஃபெரோஸ்கான்.

ஆடிட்டர் ஃபெரோஸ்கானுக்கு யுஎஇ தமிழ்ச்சங்க தலைவர் ரமேஷ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் அசன், முஹம்மது, இளங்கோவன், அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்

விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இலவசமாக இடம் தந்த இஸ்லாமியர்கள்


ராமநாதபுரம், பிப். 4: சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க இரு இஸ்லாமியர்கள் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியிருப்பதாக திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதானந்த மகராஜ் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் குந்துகாலில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சென்று விட்டு திரும்பும் போது குந்துகாலில் சுவாமி விவேகானந்தர் வந்திறங்கிய துறைமுக கட்டடம் தற்போது நினைவு மண்டபமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத்.சுவாமி சதானந்த மகராஜ் பேசியதாவது:

இந்நினைவு மண்டபத்தை அமைக்க மத்திய அரசு ரூ.47 லட்சம் வழங்கியிருக்கிறது. மேலும் பலரின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி வரை நன்கொடை பெற்று அழகு நிறைந்த நினைவு மண்டபமாக மாற்றி இருக்கிறோம்.

இங்கு தற்போதுள்ள சுவாமி விவேகானந்தரின் கற்சிலை அகற்றப்பட்டு வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும். இங்கு சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளது மிகுந்த பெருமைக்குரிய ஒன்றாகும் என்றார்.

தானமாக இடம் வழங்கிய மண்டபத்தைச் சேர்ந்த எம்.ஷாஜகான் மரைக்காயர், கே.ஏ.ரகுமான் மரைக்காயர் ஆகியோருக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்.

பின்னர் கே.எம்.ரகுமான் மரைக்காயர் பேசியதாவது:

அனைத்து மக்களும் சகோதர உணர்வோடும், மிகுந்த ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இடத்தை இலவசமாக வழங்கியிருக்கிறோம். இன்னும் கேட்டாலும் கொடுக்க காத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தேவை ஒற்றுமை தான் என்றார்.