ஓமன் நாட்டின் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா
ஓமன் நாட்டின் கடைக்கோடி நகராம் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா செவ்வாய் மாலை துவங்கியது. சலாலாவின் அல் முரூஜ் தியேட்டரில் நடைபெற்ற இவ்விழாவில் 6000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
சலாலாவின் காலநிலை மாறுபாட்டையொட்டி நடக்கும் இவ்விழா கரீஃப் பருவம் என அழைக்கப்படுகிறது. ஆறு வார காலம் இவ்விழா நடைபெறும். வளைகுடாவெங்கும் கடும் வெயில் வாட்டியெடுக்கும் இந்நேரத்தில் இப்பருவத்தில் லேசான மழை, காலநிலை மாறுபாடு இவற்றின் காரணமாக வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் சலாலாவை நோக்கி வருவது அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் சுமார் நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகளில் வருகை புரிந்தனர். இவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்பவர்களே அதிகம்.
கடந்த வருடம் இவ்விழாவிற்கு சென்று அமீரக வாழ் தமிழர் ஹசன் அஹமது தெரிவிக்கும் போது சலாலா நகரம் இறைவனின் அருட்கொடை எனக் கூறலாம் என்றார். வளைகுடாவெங்கும் பாலை வெளியாக இருக்கும் போது சலாலாவில் தென்னை,இளநீர், வாழை, வெற்றிலை எனப் பல கிடைப்பது அரியதாக உள்ளது. இங்கு அய்யூப் நபி அவர்களது அடக்கத்தலம், கேரளாவை ஆண்ட சேரமான் பெருமான் இஸ்லாத்தை ஏற்று, பின்னர் மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டதும் சலாலாவில் தான். இறைவனின் அத்தாட்சிகள் பலவற்றைக் காணும் இடமாக சலாலா உள்ளது.
வளைகுடாவில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு முறையாவது இப்பகுதிக்குச் சென்று வருவது உடலுக்கும், உள்ளத்துக்கும் சுகமளிக்கும் என்கிறார் அமீரக வாழ் தமிழக பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=855&Country_name=Gulf&cat=new