Sunday, May 23, 2010

தயக்கத்திலே....

தயக்கத்திலே....

பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!


-யாசர் அரஃபாத்