Tuesday, April 21, 2009

அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

செவ்வாய், 21 ஏப்ரல் 2009
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து நகர்ந்திட முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகளின் முகத்தையும், வேர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த ஆவணப்படம்.. 2002 குஜராத் வன்முறைகளையும், அதன் பின்னணியில் உருவேற்றிய 'வெறுப்பின் அரசியலால்' விளைந்த வெற்றியையும் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தில் ஆராய்கிறது.
Final solution என்னும் இந்த வார்த்தைகள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவே நடுங்க வைத்தவை. யூதர்களைக் கொல்வதே ஜெர்மனியின் சாபவிமோசனம் என்று நியாயம் கற்பித்து, இரத்தவெறி பிடித்த ஹிட்லரின் மூளையில் முளைத்த வார்த்தைகள். இலட்சக்கணக்கில் யூதர்களை உயிரோடு புதைத்த மரணக்குழிகளை மூடிய மண்ணில் பிணவாடையோடு அழுகிப்போன வார்த்தைகள். அங்கிருந்து இந்துத்துவா சக்திகள் எடுத்துவந்த ஒரு பிடி மண், காந்தி பிறந்த பூமியை உருக்குலைத்து போட்ட வரலாற்று பயங்கரவாதத்தை நேர்மையோடு பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். தீராத வலியும், ஆறாத வடுக்களும் கொண்ட மனிதர்களின் உரையாடல்களிலிருந்து பார்வையாளனை ஓர் இறுதி முடிவுக்கு (final solution ) அழைத்துச் செல்வதே இந்தப்படத்தின் நோக்கமாயிருக்கிறது. யார் மீதும் வன்மங்களை விதைக்காமல், ஐயோ இனி இது போல நிகழவேக்கூடாது என்று கதறவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதாக் கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை கொண்டாடுகிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. வாகனங்கள் அலறும் சத்தத்தின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் "பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி" என்கிறான். "கடவுளுக்கு நன்றி...முஸ்லீம் தாய்களை புணருங்கள்" என்கிறான் பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன். இன்னொருத்தன் கல்லெறிகிறான். காரின் கண்ணாடி உடைகிறது. காட்சி மங்கி, சில மாதங்களுக்கு முன்பு இருந்த குஜராத்துக்குள் நுழைகிறது.
கிண்டர் கார்டனில் படித்துக் கொண்டிருக்கும் இஜாஸ் நம்மோடு பேசுகிறான். தாயையும், தந்தையையும் கொன்று, அன்பும், பாசமும் மிக்க தன் சகோதரியை கண்முன்னால் நிர்வாணப்படுத்தி கூட்டம் கூட்டமாய் சிதைத்த கொடுமைகளை பார்த்தவன் அவன். 1992ல் அயோத்தியில் 450 வருட பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்படுவதும், இந்துத்துவா அரசியல் முன்னுக்கு வருவதும், 2002 பிப்ரவரி 27ம் தேதி, அயோத்திக்குச் சென்று வந்த கரசேவகர்கள் வந்த ரெயில் பெட்டி கோத்ராவில் எரிந்து போவதும், அதிலிருந்து பற்றிய தீ குஜராத்தில் மூஸ்லீம் வீடுகளின் மீது பற்றிக்கொள்வதும் சொல்லப்படுகிறது. காகங்கள் பறக்கும் வானத்துக்கு அடியில் சொந்த தேசத்திற்குள்ளேயே அகதிகளாகிப்போன மனிதர்கள் குடியிருக்கும் முகாம்கள் காட்டப்படுகின்றன. முகங்கள் வெட்டப்பட்ட குழந்தைகள். கந்தலாகிப்போன பெண்கள். சர்வமும் வற்றிப்போன கண்கள். இழந்த வாழ்க்கையை அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். நெருப்பும், வாளும், மிருகத்தனமும் குதறிப்போட்ட கதைகள் அவை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தாங்க முடியாமல் இருக்கின்றன. அனுபவித்தவர்கள் அவர்கள். சூன்யத்தில் புதைந்த முகங்கள் நம்மை பரிதவிக்க வைக்கின்றன.
குல்பர்க் சொஸைட்டியில் 49 பேருக்கும் மேலே கொல்லப்பட்ட சம்பவம், தீப்பிடித்த சுவர்களின் வழியாக சொல்லப்படுகிறது. துதேஷ்வர் மயானத்தில் ஊதுபத்தி புகையோடு கைவிரித்து, நேற்றுவரை கூட இருந்த மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். டெம்போக்களில் கொண்டு வந்து கொட்டிய கருகிய மனித உடல்கள் கொஞ்சம் சதையும், மீதி எலும்புகளுமாய் இருந்தன என்று மரணக்குழி தோண்டியவன் சொல்கிறான். டெலோல் கிராமத்தை சேர்ந்த சுல்தானா சிதைக்கப்பட்ட இடம் வயல்வெளி தாண்டி காட்டப்படுகிறது. அந்த பயங்கரத்தை செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார்கள் என்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்த மரங்கள் காற்றில் கதறுகின்றன. அழகிய தன் பெண்கள் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் நேர்ந்ததை தாய் சொல்கிறாள். பஞ்ச்மஹாலில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பிணங்கள் வந்து கொட்டப்பட்ட கிணற்றை காண்பிக்கிறார்கள். வார்த்தைகளும், காட்சிகளும் இரக்கமற்ற உண்மைகளாக நீண்டுகொண்டே இருக்கின்றன.
'அதெல்லாம் உண்மையில்லை' என மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்கள் பாட்டியாலாவில் வசிக்கும் பொட்டு வைத்த பவானி என்னும் பெண்ணும் அவள் சகோதரியும். "கோத்ராதான் உண்மை, இதெல்லாம் இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் திரித்து எழுதுபவை" என்கிறார்கள் அவர்கள். "எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா, டாக்டர்கள் ரிப்போர்ட் இருக்கிறதா?" என்று கேட்கிறார்கள். அந்தப் பெண்ணின் சகோதரன் கலவரத்தில் ஈடுபட்டதற்கு பொய்யாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். உண்மைகளும் அடையாளமற்று சிதைந்து போயிருப்பது பார்வையாளனுக்கு இயல்பாக உணரவைக்கப்படுகிறது. இதெல்லாம் அப்போது ஜனாதிபதி ஆட்சி அமல்செய்யப்பட்ட குஜாரத்தின் சொரூபமாக இருக்கிறது.
இந்தப் பின்னணியில் தேர்தல் வருகிறது. மோடி கனத்த குரலில் பேசும் காட்சியில் கூட்டம் ஆரவாரிக்கிறது. "அவர்கள் 60 பேரைக் கொன்றர்களா, இல்லையா" என்று மோடி கேள்வி கேட்க, கூட்டம் "ஆம், கொன்றர்கள்" என்கிறது. "நாம் அவர்களைக் கொன்றோமா?" அடுத்த கேள்வி. "இல்லை" என்று பெரும் சத்தம்."நாம் அவர்கள் கடைகளுக்கு தீ வைத்தோமா?". "இல்லை". "நாம் யாரையாவது கற்பழித்தோமா?". "இல்லை". "ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்" என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது. "நாம் தீவீரவாதிகளா" என்று கேள்வி. கூட்டம் "இல்லை" என்கிறது. "நாம் தீவீரவாதிகளானால்..." என்று நிறுத்தி, "பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது" என்று முடிக்கவும் கூட்டம் பொங்கி எழுகிறது. விரல்நுனி வரைக்கும் மதவெறியையும், விஷத்தையும் ஏற்றுகிற மோசடி வித்தையின் அரசியல் அதிர வைக்கிறது. தொகாடியா பேசுவது, ஆக்ரோஷத்தோடு "நமது பெருமைகள் மீட்கும் நேரமிது" என்று ஆச்சார்யா தர்மேந்திரா பேசுவது எல்லாம் தீயின் நாக்குகளாக சடசடக்கின்றன. இன்னொருபுறம் மசூதியில் அமைதியாக மண்டியிட்டு "குஜராத்தில் அமைதியும், நிம்மதியும் தரும் ஆட்சி வரட்டும்" என்று பிரார்த்தனை செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும் கூட்டத்தில் ஆர்வமற்ற பார்வையாளர்களே மிஞ்சுகிறார்கள். வெறுப்பை விதைத்து, அதிகாரத்தை அறுவடை செய்கிற காரியம் நிறைவேறி விடுகிறது. ஆயிரமாயிரம் மூஸ்லீம் தலைகள் வீழ்ந்திருக்க, மோடியின் பக்கமே 'குஜராத் ஜனநாயகம்' பூவாய் விழுகிறது.
படத்தில் இந்து, மூஸ்லீம் கருத்தாக்கங்கள் குறித்த தர்க்கங்கள் பிரச்சினைகளோடு மேலெழுந்து வருகின்றன. ஆனால் இரண்டு சிறுவர்களின் பேட்டிகள் மொத்தப் படத்தின் நோக்கத்தை அதன் போக்கில் பதிவு செய்துவிடுகின்றன. பஞ்ச்சல் என்னும் சிறுமி. டாக்டராக வேண்டும் என்னும் கனவு இருக்கிறது. அவளது தாய் கோத்ரா ரெயிலில் தீயில் கருகிப் போனவள். "கரசேவகராக அம்மா போகவில்லை. அம்மாவின் படத்தை வாங்கி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பலியான கரசேவகராக வைத்திருக்கிறர்கள்" என்னும் உண்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு மூஸ்லீம் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களோடு அன்பாக பழகுவதாகவும் சொல்கிறாள்.
அடுத்து இஜாஸ். படத்தின் ஆரம்பத்தில் பேசிய அந்தச் சிறுவன் மீண்டும் வருகிறான். "நீ என்னவாகப் போகிறாய்" என்று அவனிடம் கேள்வி கேட்கப்படுகிறது. 'இராணுவ வீரனாக வேண்டும்" என்று இஜாஸ் சொல்கிறான். "எதற்கு இராணுவ வீரனாக ஆசைப்படுகிறாய்?" என்று அடுத்த கேள்வி. "இந்துக்களை கொல்வேன்". "ஏன் கொல்வாய்?' "அவர்கள் எங்களை அழித்தார்கள்" "நான் இந்துதான்.என்னைக் கொல்வாயா?" "இல்லை... மாட்டேன்." "ஏன்?..நானும் இந்துதான்." "இல்லை.நீங்கள் இந்து இல்லை...அவர்கள்தான் இந்துக்கள்". படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது.. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
குஜராத் கலவரம் என்பது மிகத் திட்டமிடப்பட்ட, இனப்படுகொலை என்பதை பதற்றம் தொற்றிக்கொள்ள படம் சித்தரிக்கிறது. கலவர நேரத்தில் காமிரா அலைந்து திரிகிறது. இரண்டாயிரம் பேருக்கு மேல் ஆயுதங்களோடு திரண்டு வரும் வெறியர்களின் கூட்டத்தை கண்முன் நிறுத்துகிறது. போலீஸும், கலவரக்காரர்களும் சேர்ந்து தாக்கும் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரக்காரர்கள் மொபைல் போன்களோடும், வாக்காளர் அட்டைகளோடும் வந்து தாக்கியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மனிதர்களை அடையாளம் தெரியாமல் சிதைக்கும் நோக்கத்தோடு மொத்த தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதை புரிய வைக்கிறது. உயிரைப் பயணம் வைத்து, உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்ல துணிந்திருக்கும் படப்பிடிப்புக் குழுவினர், வகுப்புவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேசத்தையும், இந்த மக்களையும், மக்களின் ஒற்றுமையையும் நேசிப்பவர்களால்தான் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புமிக்க காரியங்களைச் செய்ய முடியும்.
ஆனந்த் பட்வர்த்தனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகேஷ் சர்மா இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். மதவெறி சாதாரண மனிதர்களின் மூளைகளுக்குள் இரத்த தாகத்தோடு எப்படி பதுங்கி இருக்கிறது என்பதை இயக்குனர் அடையாளம் காட்டியிருக்கிறார். நேர்த்தியான ஒலிப்பதிவு, துணிச்சல் மிக்க ஓளிப்பதிவோடு இயக்குனரின் மனிதாபிமானமிக்க பார்வையும் சேர்ந்து ஆவணப்படத்தை சமகாலத்தின் மிக முக்கியமான பதிவாக நிறுத்தியிருக்கிறது. பேட்டி எடுப்பவரின் கேள்விகள் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே அசீரீரி போல ஒலித்து, படத்தில் பேசிக்கொண்டு இருப்பவர்களையும், பார்வையாளர்களையும் நகர்த்துகின்றன. மனவெளியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டு, அவைகளில் சிக்காமல் மிகக் கவனமாக செல்கிற உத்தி, இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம்.
பா.ஜ.க மத்தியில் ஆட்சி புரிந்து வந்த சமயத்தில் வெளிவந்த இந்தப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுக்கவில்லை. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் அயல்நாட்டுப் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையாயிருப்பதில்லை. அப்படியிருக்கும்போது இந்தியப்படங்களுக்கு மட்டும் ஏன் இந்த தணிக்கைச் சான்றிதழ் என்று கேட்டும், குஜராத்தில் மதவெறியைத் தூண்டும் படம் விஸ்வ ஹிந்து பரிஷத்தினால் தயாரிக்கப்பட்டு எந்த தடையுமில்லாமல் திரையிடப்பட்டதை குறிப்பிட்டும், ஒரு போராட்டத்தை ராகேஷ் சர்மா துணிச்சலாக நடத்தியிருக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழா நடந்த அதே இடத்திற்கு எதிரே இன்னொரு இடத்தில் 'சுதந்திரத்திற்கான திரைப்படம்' (film for freedom) என்னும் அமைப்பினர் தடையை மீறி திரையிட்டு இருக்கின்றனர். மாற்று சினிமாவுக்கான, மக்களின் சினிமாவுக்கான கலகக்குரலை எழுப்பிய முக்கியமான படமாக final solution இருக்கிறது. மதத்தின் பேரால் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய அவர்களால் உண்மையை மட்டும் அழிக்கவே முடியவில்லை என்பதை இந்த ஆவணப்படம் உணர்த்துகிறது.
எல்லாம் முடிந்து போனதாய் வானம் பார்த்து கதறுகிற மனிதர்களின் குரல்கள் படம் முடிந்த பிறகும் நமக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அழிவுகளிலிருந்து மீள்வதற்கு வழியைத் தேடித் தேடிப் பார்க்கிற படம் இது.
பிற்சேர்க்கை: இந்தப் படத்தின் தொடர்பு கேட்டு mraja1961 எழுதிய பின்னூட்டத்திற்கு நண்பர் ajinomotto அதற்கான தொடர்பை கொடுத்து பின்னூட்டம் அளித்திருக்கிறார். அவருக்கு நன்றி. படம் பர்ர்க்க இங்கு செல்லவும்.
நன்றி: திரு. மாதவராஜ்

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1211&Itemid=278
http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_07.html
இந்தப் படத்தின் தொடர்பு:
http://video.google.com/videoplay?docid=3829364588351777769&q=final+solution+india

தமிழகத் தேர்தலில் முஸ்லிம்கள்

தமிழகத் தேர்தலில் முஸ்லிம்கள்

இன்றைய சூழலில் நாடாளுமன்றத்துக்கு ஒரு முஸ்லிம் கூட தமிழ்
நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட மாட்டார்
என்றே கள நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மட்டும் ஹாரூன் தேனியில்
நிற்கிறார். சென்ற முறை இது பெரிய குளம் தொகுதியாக இருந்தபோது, உடன்
பிறவாச்சகோதரி சசிகலாவின் உறவினர் ஆனானப் பட்ட தினகரனையே எதிர்த்து
வென்றவர். இம்முறை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக
தன் பதவியை ராஜினாமாச் செய்த தங்கத் தமிழ்ச் செல்வனை எதிர்த்துப்
போட்டியிடுகிறார். ஹாரூன் கோடிகளை கொண்டு வந்து கொட்டும் வல்லமை
படைத்தவர். சாதிகளைக் கடந்து வெற்றி பெற அது போதுமா ? நடப்பு என்பது வேறு
நம்பிக்கை என்பது வேறு.

வேலூரில் பேரா: காதர் மொஹிதீனே மீண்டும் நிற்பார். இல்லை டாக்டர் செய்யது
சத்தார் நிற்பார். அதுவும்
இல்லை இம்முறை அந்தச் சந்தர்ப்பம் ஒரு பெண்ணுக்குப் போகும் அது ஃபாத்திமா
முஸஃஃபராக இருப்பார்
என்றெல்லாம் ஊகங்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. கடைசியில் அதிர்ஷ்டத்தின்
கடாட்சப் பார்வை நண்பர்
துபை - முத்துப்பேட்டை அப்துல் ரகுமான் மீது விழுந்திருக்கிறது.

சென்ற முறை பா.ம.க., தி.மு.க கூட்டணியில் இருந்தது. என்றாலும் அதற்கு
முன்பு அந்தத் தொகுதியில்
நின்று வென்று, மத்திய அமைச்சரக்கவும் இருந்த சண்முகம், பேராசிரியருக்கு
எதிராக சில “உள்-குத்து”
வெலைகளெல்லாம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையெல்லாம் மீறி
பேராசிரியர் வென்றார்
என்றால், ஒட்டு மொத்த சமுதாயமும், கட்சி, அமைப்பு, இயக்க பேதமன்னியில்
அவருக்காக உழைத்தனர் -
வாக்களித்தனர். அப்துல் ரகுமான் வேட்பாளராவதற்குத் துணை செய்த அதிர்ஷ்டம்
உறுப்பினராவதற்கும் துணை செய்யுமா ? இப்போதைக்கு விடை தெரியாத
கேள்விதான். ஏனெனில் இம்முறை பா.ம.க. பகிரங்கமாகவே எதிர்த்து நிற்கிறது.
மேலும், வேலூர் முஸ்லிம்களின் கோட்டையல்ல என்கிற ஓர் உணர்வு உள்ளூர
ஜெயலலிதாவுக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

மனித நேய மக்கள் கட்சி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையில் கிடந்து
ஊசலாடிவிட்டு, கடைசியில்,
வேறு வழியில்லாமல் துணிந்து தனித்தே நிற்க முடிவு செய்து விட்டது.
பேரா:ஸவாஹிருல்லாஹ், ஹைதர்
அலி, சலீமுல்லா கான் ஆகியோர் முறையே மயிலாடுதுறை, மத்திய சென்னை, மற்றும்
ராமநாதபுரத்தில்
களம் காண்பார்கள் என்று தகவல். ஒட்டு மொத்த சமுதாயமும், ஒற்றைக்கட்டாய்,
ஒன்று பட்டு ஆதரித்தால்
முதல் இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு சாத்தியமே

ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் பகிரங்கமாகவே ம.ம.க.மீது யுத்தப்
பிரகடனம் செய்துள்ளது. “தீபம்”
தொலைக்காட்சியில் எனக்களித்த பேட்டியில் பி.ஜே. அதிமுகவை ஆதரிப்பதற்கும்,
திமுகவை எதிற்பதற்கும்
சொன்ன வலுவான காரணங்கள் இன்னும் என் நினைவில் நிழலாடுகின்றன.

குவைத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பி.ஜே.யை சமாதானப் படுத்தி ம.ம.க.வை
ஆதரிக்கச் செய்ய முயற்சிகள்
மேற்கொள்ளப்படுவதாக ஒரு தகவல். அதற்காக ஒரு சிறப்புப் பிரதிநிதியே இங்கு
வருவதாகவும் ஒரு பேச்சு.
ஆனால் காலம் வெகுவாகக் கடந்து விட்டது என்று நினைக்கிறேன் த.த.ஜ.
திரும்பிப் பார்க்க முடியாத
அளவுக்கு வெகு தூரம் போய் விட்டதாகவும் தோன்றுகிறது. அத்துடன் வக்ஃப்
வாரியத்தின் தலைமைப் பதவி
வேறு கண் முன் காட்சியளிப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள்.

அதுவும் போக, மயிலாடுதுறையில் எதிர்த்து நிற்பவர்கள் காங்கிரஸின்
அமைச்சர் மணி சங்கர ஐயர்,
அதிமுக உள்-வட்டத் தலைவர்களில் ஒருவரான ஓ.எஸ்.மணியன். இந்த இரண்டு மணியான
மனிதர்களும்
‘மணி’ விஷயத்தில் ரொம்ப தாராளம். மணி ஷங்கர ஐயர் மீது நிரம்ப அதிருப்தி
இருக்கிறது. அதுவும்,
இலங்கைப் பிரச்னையும் காலை வாராமல் இருந்தால் அவர் தான் வெல்வார்கள்
என்கிறாகள். காங்க்-அதிமுக
அதிருப்தி வாக்குகளும், முஸ்லிம்கள் வாக்குகளும், த.த.ஜ.வின்
பிரச்சாரத்தையும் மீறி பேராசிரியருக்குக்
கிடைக்கலாம். ஆனால் பிராமணர்கள் வாக்கு நிச்சயம் கிடைக்கது என்கிறார்கள்.

சென்னையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரும், பெருமளவில் ஊடக பலத்தை
கொண்டிருப்பவர்
என்று சொல்லப்படுபருமான தயாநிதி மாறனை எதிர்த்து வெல்வது என்பதே கடினம்.
அதிலும் அ.தி.மு.க.
சார்பில் ஒரு முஸ்லிம் - முஹம்மது அலி ஜின்னா - நிற்கும்போது நினைத்துப்
பார்க்கவே கஷ்டமாக
இருக்கிறது. இந்திய தவ்ஹீத் ஜமா’அத் காரியாலயத்துக்கு ஹைதர் நேரடியாகவெ
செறிருக்கிறார். என்றாலும்
அவர்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்தப் போகிறது என்பது
தெரியவில்லை.

ராமநாதபுரத்தில், திமுக சார்பாக, தமிழ் நாட்டின் “ராஜ நாராயணன்” சினிமா
நடிகர் ரித்தீஷ், அதிமுக சார்பில்
எதற்கும் துணிந்த சத்திய மூர்த்தி, போதாக்குறைக்கு இன்னொரு முஸ்லிம்
வேட்பாளர் சிங்கை ஜின்னா...!
ரித்தீசுக்கு அமைச்சர் சுப.தங்க வேலனின் எதிர்ப்பு உண்டென்றாலும்
அழகிரியின் ஆசீவாதமும் உண்டு.
ஐயாயிரம் கோடி “வெள்ளைப்பணமே” தன்னிடம் உண்டு என்று ரித்தீஷ் சொல்வது
‘உதாரா’ உண்மையா
என்று தெரியவில்லை. திமுக - அதிமுக அதிருப்தி வாக்குகளும் முஸ்லிம்களின்
வாக்குகளும் மமகவுக்குக்
கிடைக்கும் என்று நம்பினாலும், இடையில் திருநாவுக்கரசரும், தேமுதிக
வேட்பாளர்களும் அதிருப்தி
வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். என்றாலும் அத்தனையும்
இருந்தாலும் போதாது.

தான்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வார் என்கிற ஒரு பழமொழியும்,
கெட்டுப் போகிறேன்
பந்தயம் என்ன ? என்று பந்தயம் கட்டியவனின் கதையும்தான் தேர்தலையும்
முஸ்லிம்களின் நிலையையும்
எண்ணும்போது நெஞ்சினில் நிழற்படமாக விரிகிறது. அனுபவம் ஆசான். காலம்
கற்றுத் தரும்.மனிதர்கள்
பாடம் படித்துக் கொள்வார்கள்..

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

__._,_.___

முதுவை ஹிதாய‌த்

முதுவை ஹிதாய‌த்

ம‌தீன‌த் ஜுமைரா ( புர்ஜ் அல் அர‌ப் ஹோட்ட‌ல் அருகில் )