Sunday, June 20, 2010

அந்த இரண்டணா

அந்த இரண்டணா

எம்.ஆர்.எம். ஃபாத்திமா
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.
பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.
ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார்.
அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.
“என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.
மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.
பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.
அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார்.
அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.
அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.
அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.
அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார்.
சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.
உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.
அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.
“ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
“அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.
“அன்றிரவு எங்களுக்கு உதவி – புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”
-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார்.
அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.
“நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.

( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )

நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )


syed musthafa
dateTue, Jun 15, 2010 at 11:38 PM
subjectRe: அந்த இரண்டணா ........................


அரிய பதிவு! வாழ்த்துக்கள்!

- திருச்சி சையது.


abdul rahuman
dateWed, Jun 16, 2010 at 8:20 AM
subjectRe: |TMB| அந்த இரண்டணா ........................

அற்புதமான நினைவுக்குறிப்பு!


"உழைத்து ஈட்டும் பொருளில் அல்லாஹ்வின் பரக்கத் எந்த அளவு உள்ளது" என்பதையும் அழகாக உணர்த்துகிறது. பல படிப்பினைகளைத் தரும் அருமையான ஆக்கம். நன்றி சகோதரர் முதுவை ஹிதாயத்.



Sheikh Sintha Mathar Masoud
dateWed, Jun 16, 2010 at 8:18 AM
subjectநெஞ்சைத் தொட்ட இரண்டணா


அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிதாயத் அவர்களே,
நெஞ்சைத் தொட்டுவிட்டது அந்த இரண்டணா.
மிக்க நன்றி.
ஷேக் சிந்தா மதார்

மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி

மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி

( மேலப்பாளையம் த.மு.சா. காஜா முகைதீன் எம்.ஏ.எம்.பில்., )

இஸ்லாமிய இலக்கியங்களில் கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, முனாஜாத்து, படைப்போர் ஆகியவை இஸ்லாமிய இலக்கியங் களுக்கே உரித்தான புதிய வடிவங்களாகும். அவற்றின் உள்ளடக்கம் வேறுபட்ட தன்மைகள் உடையன. மஸ் அலா இலக்கியம் மட்டுமே எவ்விதக் கற்பனையும் கலவாத உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டுள்ள ஆயிரம் மஸ்அலா, வெள்ளாட்டி மஸ்அலா, நூறு மஸ்அலா என்னும் மூன்று வகை மஸ்அலா இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் இயற்றியுள்ளனர்.
காலத்தால் முந்திய ஆயிரம் மஸ் அலா என்னும் அதிசய புராணம் வண்ணப் பரிமளப் புலவரால் கி.பி. 1572 இல் இயற்றப் பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்…) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்குர் ஆனிலும் ஹதீதுகளிலும் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய வரலாறு மற்றும் போதனைகளே இதில் முற்றாக வழங்கப்படுகின்றன.
மஸ் அலா என்னும் அரபிச்சொல் ஆல் (கேள்வி) என்னும் வேர் சொல்லிலிருந்து தோன்றியதாகும். நபிபெருமான் (ஸல்…) அவர்கள் மதினாவில் இருக்கும் பொழுது மதினாவிற்கு அண்மையிலுள்ள கைபர் என்னும் பகுதியில் வேதியர் அப்துல்லா இப்னு சலாம் என்பாரை சந்தித்து இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என ஜிப்ரயீல் (அலை) மூலம் நபிபெருமான் (ஸல்) அவர்களுக்கு இறைக்கட்டளை கிடைக்கிறது. இதன்படி உக்காஸ் (ரலி) அவர்களைத் தூதுவராக அனுப்பி நபி பெருமான் (ஸல்…)அவர்கள் தம்மைப் பற்றியும் இஸ்லாத்தின் நெறி பற்றியும் அப்துல்லா இப்னு சலாமிடம் அறிவிக்கும்படிச் செய்தனர். இதனை செவிமடுத்த அப்துல்லா இப்னு சலாம்.
அர்த்தமொன் றறியா வண்ணமாயிர மசலாவுங்கள்
சித்தமன் புறவேகொண்டு சென்றவர்க்கருள்வேன்.
(ஆயிர மஸ் அலா :32)
என இயம்பி நபி பெருமானை சந்திக்கும் முகமாக 700 யூதர்களுடன் அப்துல்லா இப்னு சலாம். மதினாமாநகர் வர ஆயத்தப்படுகிறார் இதனை நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவித்து, அப்துல்லா இப்னு சலாம் விடுக்கும் ஆயிரம் வினாக்களுக்குரிய விளக்கங்களையும் இறைக்கட்டளைப்படி நபி (ஸல்…) அவர்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அறிவிக்க அக்கருத்துக்களையே விளக்கமாக நபி (ஸல்…) அவர்கள் அளிக்கிறார். இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்படி நடப்போருக்குரிய பயன்களாக ஆயிரம் மஸ் அலாவின் தொடக்கத்தில் வண்ணப் பரிமளப் புலவர்.
மூதறி வுண்டாம் நாளும் முதலவன் கிருபை தோன்றும்
தீதறுந் துன்பந் தீருஞ் செல்வமுஞ் சிறப்பு முண்டாம்
பூதலத் துயிர்கள் யாவும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியான
ஆதியை யிறசூல் தம்மை யகம்மகிழ்ந்தருளுவோர்க்கே (ஆயிரம் மஸ் அலா : 2 ) என்று விளங்க வைக்கிறார்.
நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக் குர்ஆன் மற்றொன்று அல்ஹதீஸ் இவ்விரண்டையும் உறுதியாக பற்றிக்கொள்ளின் நீங்கள் ஒரு போதும் வழி தவறமாட்டீர்கள் என்று தம் சமூகத்தினருக்கு நபி (ஸல்…) அவர்கள் அறிவிப்புச் செய்ததற்கிணங்க குர்ஆன் ஹதீஸ்களே ஆயிரம் மஸ் அலாவின் நற்செய்திகளாக உள்ளன.
அப்துல்லா இப்னு சலாமின் ஆரம்பக் கேள்வி தீனென்றால் என்ன? என்பது ………………………………………………… தீனாவதே சாறான கலிமா சாஹா தத்துடன் ஈறாத சிபத்தில் ஈமானுமாம் (ஆயிரம் மஸ் அலா : 72)
என்று இஸ்லாத்தின் அடி நாதமான கலிமா பற்றியது நபி (ஸல்…) அவர்களின் பதில். லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லா என்பதே நபி (ஸல்…) அப்துல்லா இப்னு சலாமுடைய உள்ளத்தின் பதித்த முதல் செய்தியாகும். இது.
தொடர்ந்து இஸ்லாத்தின் கொள்கைகளில் ஏற்கப்பட்டவை விலக்கப் பட்டவை, நல்லார், அல்லார், திருக்குர்ஆன் சிறப்பு ஜிப்ரயீல் (அலை) யின் செயல்பாடு, கதிரவன் சந்திரன் பற்றிய விளக்கங்கள், சொர்க்கத்தின் சுகம், நரகத்தின் கொடுமை பற்றியும் ஆபில் காபில் தஜ்ஜால் ஆகியோர் பற்றியும் இறுதி நாள் பற்றியும் விளக்கங்கள் நபி (ஸல்…) அவர்களின் விடைகளில் இடம் பெற்றுள்ளன.
மனிதப் படைப்பு குறித்து திருக்குர்ஆன் (22.5) நிச்சயமாக நாம் உங்களை எண்ணிலிருந்து சிருஷ்டித்தோம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒருமண்ணாற் படைத்த மாந்தன் ஒரு வடிவாய்
ஆவரென்றே
கருதியே பலமன் கொண்டு கருப்பிடித்தனமத்தா னந்தப்
பரிசுவால் மானுட ரெல்லாம் பலவண்ணானாரென்ன
மருவியே இரசூல் கூற …
என்பதில் மனிதப் படைப்பின் தன்மை பற்றிய இறைவாக்கைப் பற்றி வண்ணப் பரிமளப்புலவர் மஸ் அலாவில் பதிவு செய்துள்ளார்.
கியாமத் (இறுதி) நாளின் அடையாளங்கள் வரிசைப்படுத்திக் கூறிய புலவர். உங்கள் மீது உங்கள் இறைவனால் சாட்டப்பட்டிருக்கும் மலக்குல் மவுத் தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள் (அல்குர்ஆன் 32 :11) என்று மனிதனின் இறப்பையும், அவன் இறுதி நாளில் எழுப்பப்படுவதனையும் பற்றிய இறைமறைக் கருத்துக்களையும், நன்மை, தீமை பற்றி வானவர் எடுத்துரைப்பதையும்.
கியாமத்தான கியாமத்து நாளிலே – கருதிநாயன்
கணக்குகள் கேட்டு நாள்
நியாயத் தாயடியாரை எழுப்புமந்தேரஞ் – சாலி
குவானவர் தங்களைத்
தயாநட் பானது கொண்டந்தப் பூமியின் தக்க
கூட்டுற வாக்குவா ரென்னவே
பயானைப் பேச நபி பதம் போற்றி வந்தவர் சூதர் – மறு மொழி கூறுவார். (மஸ் அலா :797)
இவ்வாறு இறை மறையின் செய்திகளே இதில் படிப்பினையாக இடம் பெறுகின்றன. இறுதிநாளில் உயிர்கள் அனைத்தும் இறைவன்பால் சென்றபின் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்? இதனை
இனிமேல் துனியாவோடு இகழ்ச்சியிலை
பனிஆதம் பிறப்பும் இறப்புமில்லை
யுனுசேர் அருணத்து உதயங்களிலை
அநியாயம் அவலம்பவம் கசடுகளிலையே
(ஆயிர மஸ் அலா : 962)
என்று ஒரு மஸ் அலா உரைக்கிறது. உலகின் அழிவுக்குப்பின் உலக வாழ்க்கை நன்மை செய்தோர்க்கு நன்மையும் தீமை செய்வோர்க்குத் தீமையும் வந்து நேரும் என்பதை,
நன்மை செய்தவர் சொர்க்க மாநகரெய்தி வாழ்வர்
தின்மை செய்தவர் நரகமானது சேர்ந்திருப்பர்..
என இவ்வாறு மனிதப் படைப்புத் தொடங்கி இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளையும் இம்மை மறுமைப் பயன்களையும் மஸ் அலாக்கள் வாயிலாக நபி (ஸல்) மொழி மறுமொழிகள் அப்துல்லா இப்னு சலாமுக்கு தீனுல் இஸ்லாம் பற்றிய தெளிவினை ஏற்படுத்தியது. அந்நிலையில்
மாமானமும்புகழ் முகம்மதே, எங்களின்
வாழ்வே குதாய் தூதரே
சூமானியமான வழிபிழைத் தேநின்ற சூதர்
அங்கிடமானதை
யீமானி லேநீனிலே சாருமசலாவுத் தமாமாய்ப்
பயானோதினீர்
சாமானி யாமோக சாருமசலாவுந் தமாமாய்ப்
பயானோதினீர்
அப்துல்லா இப்னு சலாமின் இக்கூற்றில் அவருக்கு ஏற்பட்ட தெளிவு வெளிப்படுகிறது.
மஸ் அலாக்கள் மூலம் நபி (ஸல்…) அளித்த மெய்மைகளை உள்வாங்கிய அப்துல்லா இப்னு சலாம் தம்முடைய குழுவினர் ஏழு நூறு பேர்களுடன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். இவ்வதிசயப் புராணமென்னும் ஆயிரமசலா ஒவ்வொன்றிலும் இஸ்லாமியமார்க்கக் கல்வியை வண்ணப்பரிமளப்புலவர் பரிணமிக்கச் செய்துள்ளார்.

நன்றி : சம உரிமை ( ஜுன் 2010 )