Tuesday, December 7, 2010

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!
ஆக்கம் : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்து பிரதமராக ஆகுவதிற்கு முன்பாக வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஸ் டூரிஸ்ட்டாக சென்னை வந்திருந்திருந்து அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக(கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஸ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்கு சப்தம் போட்டு பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய அறையினை விட்டு வெளியே வந்து அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம சொல்லுங்கள் அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாது கர்னல் நேராக இருப்பது போன்று சப்தம் போடுகிறார் என்று சொன்னாராம். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவர்க்கு தொல்லை பேசியாக இருந்ததாம். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலை பேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்து விட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளை சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டது தான் இன்றைய சமுதாயத்திற்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.
செல்போன் வந்தபிறகு வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலமை வந்துவிட்டது. சாதாரண கூலி முதல் கோமான் வரை சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாசிய பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கிய செயல்பாடுகளை தெரியாதவர்கள் இல்லை யென்றே சொல்லலாம். இருந்தாலும் சில முக்கிய செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்:

1) அட்ரஸ் கையெடு 2) அழைப்பவர் பட்டியல் 3) வீடியோ பங்கிடுதல் 4) படம் எடுத்தல் 5) கான்ப்ரன்ஸ் நடத்துதல் 6) மெஸேஜ் அனுப்புதல் 7) எல்லோ பேஜ் என்ற வர்த்தக விளம்பரம் 8) டி.வி 9) இசை 10) செய்தி ஒளிபரப்பு 11) மொபைல் பேங்கிங்க் 12) தட்ப வெப்ப நிலையறிதல் 13) இன்டர்நெட் 14) நோட் புத்தகம் 15) உலக மணி 16) உலக நாணயம் 17) உலக தேதி 19) எழுப்பும் மணி 20) கால்க்குலேட்டர் 21) புளு டூத் 22) இடங்களை எழிதாக கண்டு பிடிக்கும் ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ்

மேற்கூறிய உபயோகங்கள் சிலவகை தான். இன்னும் அதன் பயன்பாடுகள் உலகம் விசாலமானது என்பதினை மாற்றி உலகம் கைக்குள் அடங்கிருக்கிறது என்று சொல்லுமளவிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

1964 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் புயல் ஏற்பட்டு பாம்பன் பாலத்தில் சென்ற ராமேஸ்வரம் ரயில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக ராமேஸ்வரத்துடனான தொடர்பு துண்டிக்கபட்டது. அப்போது அந்த தீவில் இருந்த பெரும்பாலோர் இறந்து விட்டனர். அந்த சம்பவத்தினை அந்த தீவிலிருந்த டெலக்கிராப் ஆப்பரேட்டர் மோர்ஸ் தொடர்பு மூலம் சென்னைக்கு தகவல் அனுப்பினார். அதனை வைத்துதான் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. அந்த சம்பவம் நான் பி.யு.சி மாணவனாக இருந்தபோது நடந்தது. ஆனால் தொலை தொடர்பில் ஏற்பட்ட சேட்லைட் வளர்ச்சி அபாரமானது என்பதினை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒன்று சிலி நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 2000 அடிக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டு சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதினை ஒரு துளைபோட்டு அதில் ஒரு செல்போன் செலுத்தி தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உயிருடன் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்கும் வரை வீடியோ கான்ப்ரன்ஸிலும் தங்கள் குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்தது அனைவரும் பார்த்திருப்பார்கள்.

2) அதே போன்று விண்வெளியில் பயணம் செய்த கல்பணா சவ்லா போன்ற வீரர்கள் தங்கள் சாதனை முடிந்து வாயு மண்டலத்தினை தொடும் வரை தரைக்கட்டுப்பாட்டுடன் பேசிக் கொண்டு வந்தது அனைவரும பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு தான் அவர்கள் விபத்தில் மரித்தார்கள்.

ஆகவே தொலை தொடர்பு வளர்ச்சி பரிணாமமானது என்பதினை எல்லோரும் அறிவர்.
இந்திய நாடு பொருளாதாரத்தில் 8.9 சதவீத வளர்ச்சியடைந்து வளரும் நாடு என்ற நிலையிலிருந்து அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா சமீபத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தந்தபோது சொல்லியது போல வளர்ந்த நாடாக திகழ்கிறது. முன்பெல்லாம் கம்பஞ் சோறும், கேப்பைக்களியும், குருனைக் கஞ்சியுடனும் பச்சை மிளகாய், வெங்காயத்தினை கடித்துக் கொண்டு சாப்பிட்ட காலம் போய் இன்று வயிறார சத்துள்ள உணவு சாப்பிடும் தரத்திற்கு உயர்ந்துள்ளோம். கரடுகளிலும், முள் செடிகளிலும் வெறுங்காலுடன் பள்ளிக்குச் சென்ற நாம் இன்று விதவிதமாக செருப்புகள்,ஸ_க்கள் அனுந்து அரசே இலவசமாக சைக்கிளில் பள்ளிக்கு சென்று இலவசமாக பள்ளிப் படிப்பினை முடிக்க உதவும் காலமாக இருக்கிறது. உலகில் செல்வத்தில் மிளிரும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்றால் மறுக்க முடியாது.

பணம் எங்கே இருக்கின்றதோ அங்கே மகழ்ச்சி தாண்டவமாடும். ஆனால் அந்த மகிழ்ச்சியே குடும்பத்தின் எதிரியாகிவிடும் என்பது கிராமத்துப் பழமொழி. தங்கள் ஆண், பெண் குழந்தைகள் சிரமம் பாராது வளர பெற்றோர் வெயில், மழையென்று யோசிக்காது உழைக்கின்றனர். பிள்ளைகள் படிப்பிற்காக கம்ப்யூட்டர், செல்போன,; மோட்டார் சைக்கிள்,ஸ்கூட்டர் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தன் செல்ல சிறு பிள்ளைகளுக்கும் செல்போன் விளையாட்டு பொம்மை போல வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலே இன்டர்நெட் வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதன் விளைவு தான் வில்லங்கம் வீட்டிற்கே வந்த கதையாகிறது. எட்டு வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கம்ப்யூட்டரில் ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக் என்ற வலை தளங்களுக்கு தங்கு தடையின்றி சென்று பல்வேறு பால் வித்தியாமில்லாத புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளம், ‘பாப் அப்’ தெரியும் படி செய்து இள மனதினை கெடுக்கிறார்கள். அது போன்று செல்போனில் காதல் பேச்சுகள், தனிமையில் முத்தமிடுதல், ஏன் பாலியல் தொடர்புகளைக் கூட கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பெற்றோரும், அரசும் தரமான பள்ளி, கல்லூரி படிப்பினை மாணவர்களுக்கு கொடுக்க ஆசைப்படுகின்றது. ஆனால் மாணவர்களில் சிலர் படுகுழி என்று தெரிந்தும் அதில் விழும் செய்திகளை நாம் படிக்கின்றோம். அன்றாட வாழ்க்கையிலும் கேள்விப்படுகிறோம். பல்வேறு செய்திகள் இருந்தாலும் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லாம் என நினைக்கின்றேன். கோவை மாவட்டத்தில் ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகள் பள்ளியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு காணவில்லை. அவர்கள் காணாதது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அந்த மூன்று மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக அறிந்து அவர்களை சென்று பார்க்கும் போது அவர்கள் மூவரில் ஒருவர் திருமணமாகி ஆறு மாத குழந்தையுடன் இருப்பதும், மற்றும் இருவர் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்வதாகவும் தெரிந்தது. தன் தோழியின் காதலுக்காக மற்ற இரண்டு மாணவிகளும் தங்கள் படிப்பினை பாழடித்து, பாலுட்டி தாளாட்டிய பெற்றோரை மறந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால் எந்தளவிற்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது என்பதினைப் பாருங்களேன்.

2) தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் கஸ்தூரி என்ற பள்ளி மாணவியினை ஒரு தலை பட்சமாக காதலித்தாராம். அவருக்கு அவருடைய நண்பர் உதவி செய்தாராம். ஆனால் அந்த பள்ளி மாணவி அதனை வெறுத்தாராம். அவர்களின் முறையில்லா செயலினை ஊர் பெரியவர் சுவாமிநாதன் தட்டிக் கேட்டாராம.;. அந்த பள்ளி மாணவியினையும,; அந்த ஊர் பெரியவரையும் பலி வாங்க அந்த இரண்டு மாணவர்களும் இரண்டு செல்போன் சார்ஜர்கள் வாங்கி அதில் டெட்டனேட்டர்களைப் பொறுத்தி மாணவி மற்றும் ஊர் பெரியவர் வீடுகளின் முன்பாக இரவு வீசி விட்டார்களாம். காலையில் அதனை அறியாத அந்த மாணவியும,; அந்த ஊர் பெரியவரும் அவர்கள் வீட்டு முன்பு கிடந்த சார்ஜரை எடுத்து செல்போனில் கனெக்ஷன் கொடுத்து பிளக்கில் மாட்டும்போது அவைகள் வெடித்து அவர்கள் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக சமீபத்திய பத்திரிக்கை செய்தியாகும்.

இளசுகளை கெடுப்பதில் மூல காரணமாக உள்ளது. டி.வி. அடுத்தது சினிமா. டி.வி.யில் ஜாக்பாட்டில் ஜட்ஜாக வரும் நடிகை முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வருவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வரும் நடிகைகள் பாத்ரூம் உடையோ என்று எண்ணும் அளவிற்கு அரைகுரை ஆடை உடுத்தி வருவதும், பள்ளிப்பருவத்திலேயே காதல் செய்வது போன்ற சினிமா பார்ப்பதும், ‘கல்யாணமே கட்டிக்கில்லாமல் ஓடிப்போகலாமா’ என்பது போன்ற சினிமா பாட்டுக்களை கேட்பதும் இளசுகளின் பாலியல் உணர்வுகளை தூண்டும் நிகழ்ச்சியாக உள்ளது. என்றால் யாரும் மறுக்க முடியாது. அதுவும் வசதியுள்ள பிள்ளைகள் உண்ணும் சத்துள்ள உணவு அவர்களின் உடலில் ஒரு விதமான ரசாயண கலவை ஏற்பட்டு கிளர்ச்சியினைத் தூண்ட மூல காரணமாகவும் உள்ளது. அதுவே அவர்கள் பெற்றோர்களே இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையினை தேர்ந்தெடுத்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர். கிராமத்தில் ஒரு பழமொழி, ‘முல்லைச் செடிக்கு கள்ளிச் செடி’ என்று தெரிவதில்லை என்று. முல்லைச் செடி போன்ற இளம் வயதினர் அறியாத பருவத்திலே தங்கள் கள்ளிச் செடி என்ற காதல் மேல் நாட்டம் கொள்கின்றனர். அதற்கு உதவியாக செல்போனும், இன்டர்நெட்டும் இருக்கிறது.

ஆனால் அவைகளின் வாசனை இல்லாத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள் என்று சில உதாரணங்களை கூற ஆசைப்படுகிறேன்:

1) சென்ற பிளஸ் 2 பரீட்சையில் முதல் ரேங்க் மற்றும் இரண்டாம் ரேங்க் வாங்கிய தூத்துக்குடியினைச் சார்ந்த பாண்டியன், நாமக்கல்லைச் சார்ந்த சந்தியா, ராஜபாளையத்தினைச் சார்ந்த பிரக்ஷனா ஆகியோர் டி.வி பார்ப்பதில்லையாம்.

2) பேசுபவர்களின் உதடு அசைவினை வைத்து புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட திருவல்லிக்கேனியினைச் சார்நத கார் டிரைவர் மகள் பாத்திமா பிளஸ் 2 தேர்வில் காது கேளாதவர் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் டி.வி. பார்ப்பதில்லை.
3) கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுதூர்கடையினைச் சார்ந்த சென்னை எஸ்.எஸ்.என் இன்ஜினீரியங் கல்லூரி மாணவி மாஷா மலைக்க வைக்குமளவிற்கு சாதனை படைத்து எட்டு புதிய கண்டுபிடிப்பிற்கு மூலகர்த்தாவாகி ஜனாதிபதியிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார.; அவர் டி.வி. பார்ப்பதில்லையாம்.

செல்போன்கள் திருமணமாகாத சிறுவர், சிறுமிகளின் மனதினைக் கொடுக்கும் சாதனமாக இருக்கிறது என்று அறிந்து உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லாங் என்ற கிராமத்தில் ஊர் பஞ்சாயத்துக் கூடி திருமணமாகாத இளம் பெண்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்திருக்கிறது என்றால் பாருங்களேன் எந்தளவிற்கு அந்த கிராமத்தில் செல்போன்கள் வளரும் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்திருக்குமென்று.

செல்போன், இன்டர்நெட் துஷ் பிரயோகங்களை தடுக்க சில யோசனைகள்:

1) பள்ளி மாணவ, மாணவியருக்கு கண்டிப்பாக செல்போன் வழங்கக் கூடாது. அப்படி வழங்குவுதாக இருந்தால் அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை உபயோகிக்கும் அளவிற்கு சேவை வாங்க வேண்டும்.

2) கல்லூரி மாணவியர், மாணவர்களுக்கு போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கலாம். அவைகளின் கால் சார்ஜ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் அட்டவணை பில்லுடன் சேர்ந்து வருமாறு செய்து பெற்றோர் அதனை கண்காணிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த அண்ணா யுனிவர்சிட்டி துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்தார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட பின்பு அதன் முக்கியத்துவம் அறிந்து அவருடைய உத்திரவினை பின் பற்றி பல கல்லூரிகள் தடையும் விதித்தன. ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகள் செல்போன் பேச்சுக்களை கண்காணிப்பதினை முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக பிள்ளைகளை படுகுழுpயில் விழ அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் மனந்தளராது. எது தன் பிள்ளைக்கு உகந்தது என்பதினை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

3) இன்டர்நெட்டில் என்ன செய்திகளை பிள்ளைகள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதினை படித்த பெற்றோர் கம்ப்யூட்டரினை டவுண்லோடு செய்தால் கண்டு பிடிக்கலாம். இன்னும் பெற்றோருக்கு தெரியாமல் வரும் மெயில்களை பிள்ளைகள் நீக்கினால் அப்படி நீக்கப்பட்ட பகுதி டிரேஸ் பகுதியில் இருக்கும். அதனை இயக்கி தெரிந்து கொள்ளலாம்.

4) தங்கள் மகன், மகள்களை படிப்பதிற்காக விடுதியில் விடும்போது அவர்களை தண்ணீர் தெளித்து விடாது அவர்கள் இருக்கும் விடுதிகளுக்கு சென்று அவர்களின் மேற்பார்வையாளர்களிடம் பிள்ளைகள் நடத்தையினை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

5) செல்போனில் வரும் தெரியாத மிஸ்டு கால்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லக்கூடாது. அதுவும் பெண்கள் கண்டிப்பாக பதில் சொல்லக்கூடாது.

6) ஆண் துணை இல்லாத பெண்களுக்கு எமன்போல சிலர் வந்து அவர்களிடம் பழக்கத்தினை ஏற்படுத்தி அவர்கள் உயிருக்கும், கற்புக்கும் உலை வைப்பார்கள். உதாரணத்திற்கு ஆள் துணையில்லாத இராமநாதபுரம் கேனிக்ரையினைச்சார்ந்த மலேசியாவிலிருந்து வந்த ஆதிலா பேகம் என்ற பெண் ஒருத்தி சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதிற்காக ஒரு ஆணுடைய துணையினை நாடி அதுவே எமனாக முடிந்து அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளையும, அவளுடைய அழகான ஆண் ஒன்று பெண்னொன்று குழநதைகளைக் கடத்தி வாடிப்பட்டி அருகே கொலையும் செய்து விட்ட நவம்பர் மாதச் செய்தி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

7) திருமணத்திற்கு நிச்சயம் வைத்து பின் திருமணம் நடக்க சில நாட்கள் இருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய செல்போனிலோ அல்லது இண்டர்நெட்டிலோ தனிமையினை படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்று ஒரு நிகழ்ச்சியில் மணப்பெண் தன்னுடைய் நிர்வானமான படத்தினை நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை தானே என்று அனுப்பிய போட்டோ பிற்காலத்தில் திருமணம் பாதியில் முறிந்து விட்டபோது அந்த போட்டோவை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணை கேவலமாக பேசியதும் சமீபத்திய செய்தியாக வந்தது. ஆகவே ஆணும் பெண்ணும் காதல் கத்தரிக்காய் என்று வேற்று ஆணுடன் சுற்றும் போது சேர்ந்து நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது.

பெண்களுக்கு எதிரான சதி என்ற உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுவினைக் கொல்லுதல், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன்கொடுமை போன்றவைகளை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்ற வைகளால் சீரழிவதினை பெற்றோரும், உற்றாரும், உடன் பிறந்தோரும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: முஹர்ரம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
முஹர்ரம்

http://mudukulathur.com/?p=3509

அபூதாலிப் கணவாய்:
நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இஸ்லாமிய வளர்ச்சியை முறியடிக்க மக்கத்து காஃபிர்கள் பல வகையிலும் முயற்சித்து தோற்றுப் போனதால், இறுதியாக நபியவர்களை ஊர் ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடைய குடும்பத்தினராகிய ஹாஷிம் கிளையார், முத்தலிப் கிளையாருடனும் யாரும் கொடுக்கல், வாங்கல், திருமண உறவு போன்ற எந்த செயலிலும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவிப்பு செய்து, அதை தீர்மானமாக எழுதி கஃபத்துல்லாஹ்விலும் தொங்க விட்டார்கள்.
இதனால் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவை விட்டு ஒதுங்கி அவர்களுக்கு சொந்தமான ஒரு மலைப் பள்ளத்தாக்கிற்கு சென்று தங்கினார்கள். இந்த இடத்திற்கு ”ஷுஃ’ப அபூதாலிப்” அபூதாலிப் கணவாய் என்று பெயர். இங்கு மூன்று ஆண்டுகள் உணவின்றி, உதவியின்றி பெரும் கஷ்டத்தோடு வாழ்ந்தார்கள். பின்னர் இந்த தீர்மானம் கிழித்தெறியப்பட்டு மக்கா நகருக்குள் வந்தார்கள். அக்கணவாயில் தங்கியிருந்த போதுதான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பிறந்தார்கள். இந்நிகழ்வு நபித்துவத்தின் 7 ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
முஹர்ரம் 10-ஆம் நாள் “ஆஷுரா” தினம்:
ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்குமாறும், அன்று தம் குடும்பத்தார்களுக்கு தாராளமாக செலவு செய்யுமாறும் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு வைத்திருந்தார்கள். இதன் சிறப்பு என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், இன்று நல்ல நாள்; பனூ இஸ்ராயீல்களை அவர்களின் விரோதிகளிடமிருந்து அல்லாஹ் ஈடேற்றமடையச் செய்த நாள்; எனவே, மூஸா(அலை) அவர்கள் இன்று நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்று கூறி, அந்த நாளில் தாங்களும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள். (புகாரி,முஸ்லிம்)
கைபர் யுத்தம்:
கைபர் யுத்தம் ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் நடைபெற்றது. நபி(ஸல்) அவர்கள் மக்கத்து காஃபிர்களுடன் செய்த ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் சில நாட்களில் கைபருக்கு புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த போது அல்லாஹுத்தஆலா “ஃபதஹ்” அத்தியாயத்தை அருளினான். அதில், நபியவர்களுக்கு கைபரின் வெற்றியையும், அங்கு கிடைக்கும் கனீமத்தை(வெற்றிப் பொருட்களை)யும் வாக்களித்திருந்தான். இதைப் பற்றி திருக்குர்ஆனில்…….
“யுத்தத்தில் (எதிரிகளிடமிருந்து வெற்றியின் மூலம் கிடைக்கும்) ஏராளமான வெற்றிப்பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான்; நீங்கள் அதை கைப்பற்றுவீர்கள்.” (48;20)
அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதம்:
நபி(ஸல்) அவர்கள், ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்து மதீனா திரும்பியதும் கைபர் யுத்தத்திற்கு புறப்படும்முன், பல நாட்டு அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புக் கடிதம் எழுதினார்கள். அவ்வகையில், ஹபஷா நாட்டு மன்னர் நஜ்ஜாஷி, ரோம் நாட்டு மன்னர் கைஸர், பாரசீக நாட்டு மன்னர் கிஸ்ரா, சிரியா நாட்டு மன்னர் ஹாரிஸ் இப்னு அபூஷமிர் அல்கஸ்ஸானி, எகிப்து நாட்டு மன்னர் முகவ்கிஸ், யமாமா நாட்டு மன்னர் ஹவ்தா இப்னு அலி அல்ஹனஃபி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதி தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்:
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப்பின் அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் இஸ்லாமிய வருடம் கணக்கிடப்படவில்லை. ஹிஜ்ரத் நிகழ்ந்து 16-ஆண்டுகளுக்குப்பின் உமர்(ரழி) அவர்களின் ஆட்சியில் தான் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் மற்ற சஹாபாக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றத்திற்கு பின், இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முக்கியக்காரணமாக இருந்த “ஹிஜ்ரத்”தை மையமக வைத்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிட முடிவு செய்தார்கள்.
மேலும் திருக்குர்ஆனில் அத்தியாயம் 9; 108-வது வசனத்தில் “ஆரம்பநாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில் தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது”. என்று கூறப்பட்டுள்ளதில் “ஆரம்ப நாள்” என்ற வார்த்தை ஹிஜ்ரத்தை குறிப்பதால், இந்த வசனமும் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து ஆண்டைத் துவக்கக் காரணமாக இருந்தது.
தங்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1432 – வது இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆண்டு முழுவதும் அனைத்து நற்பாக்கியங்களையும் நன்மைகளையும் நம் அனைவருக்கும் நல்கிட துஆச் செய்கின்றேன்.
மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய்.