Thursday, September 23, 2010

வருமானம் துடைத்துவிட்டுச் செல்லும் .

வருமானம் துடைத்துவிட்டுச் செல்லும் .

விக்கித்து நிற்போம்
திரும்பும் இடமெல்லாம்
திக்கற்று இருப்போம்!

விட்டு வந்த சொந்தங்களை
சுமந்து வந்துள்ளேன்
நினைவுகளாக!

குழுக் குளு அறையானாலும்
குறும்புச் செய்யும்
மூட்டையானாலும்
இறுக்கமாய் இருப்பேன்;
எப்போது
நான் உறவுகளுடன்
நெருக்கமாய் இருப்பேன்!

ஓய்வான நேரத்திலும்
சாய்வாக இருந்து
உறவுகளை நினைப்பேன்;
அவ்வப்போது குரலைக் கனைப்பேன்;
தொண்டையில் சிக்கிய எச்சிலுக்காக!

ஆனாலும்
வருமானம் என் கண்ணீரை
துடைத்துவிட்டுச் செல்லும்
விரலாக!
அதனாலே இங்கு இருக்கிறேன்
உரலாக!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

சுதந்திர இந்தியாவில் நாங்கள்..

சுதந்திர இந்தியாவில் நாங்கள்..

மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!

குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!

விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!

மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;

காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!

ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!

பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

--

உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்


ஒட்டி வந்த உறவுகளை
வெட்டி வந்திருக்கிறோம்
கடமைகளைக் கட்டி
வந்திருக்கிறோம்!

கைக்கோர்த்துக்
கதைப்பேச வேண்டிய
மனைவியை விட்டு
வந்திருக்கிறோம்;
சோகங்களை நட்டு
வந்திருக்கிறோம்!

கந்தையானாலும்
கசக்கி கட்டு என்றார்கள்;
கசக்கிய சட்டையை நாங்கள்
அணிந்தோம் குடும்பம்
கசங்காமல் இருக்க!

கடல் தேடி வந்திருக்கிறோம்
திரவியத்திர்க்காக;
கனவுகளை தொலைத்தோம்
திர்ஹம்சுக்காக!

உள்ளூரில் விலைப்போவாததால்
வளைக்குடாவில் நாங்கள்;
அடிமாட்டு விலைக்கு சிலர்!

ஆளுக்கு ஆறடி
படுப்பதற்கு மட்டும் இங்கே;
ஒற்றை குளியலறைக்கு
எல்லோரும்;
அடுத்த முறை உரிமையாளன்
அலாரமாய் அடிப்பான்
கதவோடு!

உள்நாட்டு மோகம்
வெளிநாடோ சோகம்
பணம் சேர்த்தாலும் தீராத தாகம்!

இருக்கிறதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசை;
பறந்தப் பின்னும்
பருந்தாய் பணத்திற்கு!

- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com

பாவப்பட்ட காஷ்மீரிகள்..

பாவப்பட்ட காஷ்மீரிகள்..

குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!

நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!

புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது!

எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!

இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!

கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!

எதிர்த்த நண்பர்களை
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!

சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;

பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!

பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!

அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;


மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!

மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com