Showing posts with label கண்காட்சி. Show all posts
Showing posts with label கண்காட்சி. Show all posts

Wednesday, November 26, 2008

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை கண்காட்சி

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை கண்காட்சி
நாளை தொடக்கம்


மதுரை, நவ.26-

மதுரை தமுக்கம் மைதானத்தில் 150 அரங்குகளுடன் அமைக்கப்படும் புத்தக கண்காட்சியில் 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. இந்த கண்காட்சி நாளை தொடங்குகிறது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புத்தக திருவிழா

மதுரையில் புத்தக விற்பனை கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை(27-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி வரை நடைபெறும். இங்கு 150 அரங்குகள் ஒதுக்கப்பட்டு, 1 லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கான நூல்கள், கல்வி, தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழ், ஆங்கில புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இந்த புத்தக திருவிழாவில் தினமும் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், குறும்படம், கவியரங்கம் உள்ளிட்டவை நடைபெறும். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, மனப்பாடம், ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகள் மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளிகூடத்தில் வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். தினமும் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

நாளை தொடக்கம்

விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புத்தக கண்காட்சிக்கு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரையில் புத்தக திருவிழாவிற்கு 3 லட்சம் பேர் வந்து சென்றனர். இந்த ஆண்டு 5 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார். அமைச்சர் தமிழரசி உள்பட பலர் பேசுகிறார்கள். விழாவுக்கு மதுரை கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். கூடுதல் கலெக்டர் தாரேஷ் அகமது, மாநகராட்சி கமிஷனர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Friday, June 6, 2008

துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி







துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி

துபாயில் நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சியினை சென்னை மணிமேகலை பிரசுரம் 06 ஜூன் 2008 வெள்ளிக்கிழமை மாலை தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடத்தியது.

இவ்விழாவில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட முஹம்மது அலி என்ற ஃபெமினா எழுதிய நாவல்கள் பிறப்பில் பூட்டிய விலங்கு மற்றும் கனவுகளைக் கலைக்காதீர்கள்!,

குவைத் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கருத்துரைகள், கீழை சீனா தானா எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்,

பஜிலா ஆசாத் எழுதிய ஏ.பி.சி. மேட் ஈஸி, எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் எழுதிய பகுத்தறிவின் நீதிமன்றம்,

சரோஜா செல்லத்துரை எழுதிய தாயும் தாய்நாடும், சின்னத்துரை தனபாலா எழுதிய நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும், அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பெருமை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் ஸ்கை குருப் இயக்குநர் கீழை சீனா தானா, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ஃபெமினா என்ற முஹம்மது அலி, வானலை வளர்தமிழ் அமைப்பின் காவிரி மைந்தன், தமிழ்நாடு பண்பாட்டுக்கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, சங்கமம் கலையன்பன், சுடர்வம்சம் ரகுராம், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், ஆசியாநெட் ஆசிஃப் மீரான், எஸ்.எம். ஃபாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tuesday, May 20, 2008

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கண்காட்சி - 27 கல்லூரிகள் பங்கு பெறுகின்றன


27 கல்லூரிகள் பங்குபெறும் உயர் கல்வி கண்காட்சி-2008, சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு..மாவட்டங்களில்:பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு அந்தந்த மாவட்டம் வாரியாக இந்த கண்காட்சி நடைபெறும்.

மேலும் இதில் தலைசிறந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களை பங்குகொள்ளச் செய்து, அவர்கள் மூலம் எந்தெந்த படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்கமளிக்கச் செய்யும் திட்டமும் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள 122 கல்லூரிகளில் மொத்தம் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. பி.காம். பாடத்தில் 5 பிரிவுகளும், பி.எஸ்.சி. பாடத்தில் 48 விதமான பிரிவுகளும் உள்ளன என்றார்.

பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழும பொறுப்புத் தலைவர் வி.கே.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Thursday, April 10, 2008

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம் கூறியதாவது :

வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர் கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம், கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.

பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும். இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம் உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.

தகவல் :

கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்

Thursday, March 27, 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008 ஏப்ரல் 2 முதல் 5 வரை
துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் செண்டரில் நடைபெற
இருக்கிறது.

இதில் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

மேலும் விபரங்களுக்கு
www.getexcareers.com
www.icedxb.com