Thursday, March 6, 2008

இயற்கை!!

இயற்கை!!
-------------

அண்டங்கள் ஆகாயங்கள்
இயற்கை!

வானும் விண்மீன்களும்
இயற்கை!

சூரியனும் ஒளியும்
இயற்கை!

அதைச் சுற்றிவரும் கிரகங்கள்
இயற்கை!

நேரமும் காலமும்
இயற்கை!

மேகமும் மின்னலும்
இயற்கை!

காற்றும் மழையும்
இயற்கை!

நீரும் நிலமும்
இயற்கை!

நிலநடுக்கமும் எரிமலைகளும்
இயற்கை!

ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை!

வறட்சியும் பசுமையும்
இயற்கை!

உயிரினங்கள் அனைத்தும்
இயற்கை!

அவற்றின் பிறப்பும் இறப்பும்
இயற்கை!

உயிரும் உடலும்
இயற்கை!

இரவும் பகலும்
இயற்கை!

உறக்கமும் விழிப்பும்
இயற்கை!

பசியும் தாகமும்
இயற்கை!

அன்பும் பாசமும்
இயற்கை!

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்
இயற்கை!

அவற்றின் மாட்சியும் மகிமையும்
இயற்கை! இயற்கை!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.
drimamgm@hotmail.com

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் கவிதை அற்புதமாக இயற்கையாகவே அமைந்துள்ளது. என்றும் இயற்கையாகவே உங்கள் படைப்புக்கள் வர எனது வாழ்துக்கள்.


நன்றி: வார்ப்பு.

ஒப்பாரும் மிக்காரும்...?


பொது விடங்களில்
துப்புவதிலும்
நான்கு பேர்
கூடியிருக்குமிடத்தில்
மூக்கையும் சளியையும் சிந்தி
அசுத்தப் படுத்துவதிலும்
உண்ட வாழையின்
தோலை வீதியில்
வீசி எறிவதிலும்
பொதுவிடங்களில்
சுவர்களைத் தேடி
சிறுநீர் அபிஷேகம்
செய்வதிலும்
எச்சத்தையும் மிச்சத்தையும்
கண்ட இடங்களில்
போடுவதிலும் நம்மை
ஒப்பாரோ மிக்காரோ தான்... எவர்?
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-16




அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


கவிதை : காந்தி பிறந்த நாடு !!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]


மீண்டும் மீண்டும்
தொடந்து கொண்டுதானிருக்கின்றன
நச்சுச் சாராய சாவுகள்!

மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
விதவை அநாதைகளின் பெருக்கம்!

மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
உறவு நட்புகளின் ஒப்பாரி!

நின்று கொல்லும் நஞ்சு- மது!
நிறுத்தாமல் குடித்தாதால்
இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!

கொலைகள் கொள்ளைகள்
விலையேற்றம் பணவீக்கமென
அனைத்தும் வளர்பிறையாய்....!

அனைத்துத் துறைகளிலுமே
வேகமாய் முன்னேறி வருகிறது
நம் நாடு!

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்
முழுகவனத்துடன்....
காவல்துறை!

சூடான பரபரப்பான
செய்திகளின் தேடலில்....
ஊடகங்கள்!

கேள்வி கண்டனக் கணைகளை
வீசுவதில்... சலிப்படையாத
எதிர்க்கட்சிகள்!

ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்
கோலொச்சிக் கொண்டிருக்கிறது
நம் அரசு!

காந்தி பிறந்த நாட்டில்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
பெருமையுடன்....


நன்றி:தமிழோவியம்.



அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


காற்று!
------------

வசந்தம் வாடை

அனல் புயல்

சூறாவளி புழுதிக்காற்றெனப்

பருவத்துக்குப் பருவம்

பற்பல அவதாரங்களில்...


பிராணவாயு

கரியமிலவாயுவென

உயிரினங்களுக்கும்

தாவரங்களுக்குமிடையே

சுவாசப் பரிமாற்றத்தில்...


காடுகளின் அழிப்பு

இரசாயனங்களின்

வெளியேற்றம்

தூசு மாசுகளின்

ஆதிக்கத்தால் இன்று

நச்சு பரப்பும் நிலையில்...


காற்றின்

கனிவும் சீற்றமும்

பாகுபாடு பார்ப்பதில்லை

கனிவுடன் இருக்கும் வரைதான்

கண்ணியத்துடன் இருக்கும்...


உணர்ந்துகொள் மனிதா...!

இதன் இதமும்

இனிமையும் இன்பமும்

இலக்கியங்கள் கதைத்திடும்!

சினமும் சீற்றமும் கடுமையும்

வரலாறு உரைத்திடும்!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி: வார்ப்பு













சேமித்து வைக்க





அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


சாதனை!!
---------
படிப்பில் பந்தயத்தில்
வீரத்தில் விவேகத்தில்
திறமையில் உயர்வில்
விஞ்சியிருப்பதும் முந்தியிருப்பதும்
சாதனை!

படைத்திட்ட சாதனைகளை
விஞ்சுவதும் மிஞ்சுவதும்
தனித்தன்மையுடன்
ஒளிர்வதும்
சாதனை!

உண்மை உழைப்பு
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு புத்திசாலித்தனத்தால்
சாதிப்பதே
சாதனை!

மனித உயிரின்
வாழ்வுக்கும் உயர்வுக்கும்
ஆக்கத்துக்கும் இன்றியமையாதவற்றை
கண்டுபிடித்தல்
சாதனை!

விண்கோள்கள் ஏவுகணைகள்
விண்வெளி ஆராய்ச்சி
கணினிகள் தகவல்தொழில்நுட்பம்
மாற்றுறுப்புப் பொருத்தங்கள் எல்லாமே
சாதனைகள்!

உயிர்காக்கும் மருந்துகள்
நோயறியும் பொறிகள்
வானொலி தொலைக்காட்சி
தொலைப்பேசி செல்பேசிகள் எல்லாமே
சாதனைகள்!

விண்ணில் மண்ணில்
நீரில் பயணம் செய்ய
விதவிதமான அதிவெக
வாகனங்கள் எல்லாமே
சாதனைகள்!

விவசாயத்தில் பசுமைப்புரட்சி
உற்பத்தியில் தன்னிறைவு
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
விமானங்களில் பறந்து கொண்டிருக்கும்
நம் பட்டதாரிகள் எல்லாமே
சாதனைகள்!

மகாத்மா முதற்கொண்டு
சாதனையாளர்களையும் சாதனைகளையும்
பட்டியலிட்டால் எண்ணிமாளாதவையாய்
எத்தனை யெத்தனையோ
சாதனைகள்!

புகை போதை விபச்சாரம்
சமூகவிரோதம் ஏழ்மையில்லா
சமுதாயம் காணும் இனியநாளே
இந்தியாவின் மகத்தான உன்னதமான
சாதனையாகும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


பூமிப்பந்தின் பரப்பில்
மூன்றில் இருபங்கு நீர்!

உயிருக்கும் உடலுக்கும்
இன்றியமையாத் தேவை நீர்!

உணவு பானங்கள் பழங்கள்
அனைத்திலுமே நீர்!

ஊற்றுஅருவி ஆறு மேகம் உப்புகளின்
தோற்றமும் தோன்றலும் நீர்!

சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
அழுக்கைப் போக்க நீர்!

மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும் நீர்!

சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
தணிந்திருந்தாலும் நீரே நீர்!

நீரின்றி ஏது இயக்கம்?
நீரின்றி உயிரில்லை!

நீரின்றி உலகுமில்லை!
எங்கும் எதிலும் நீர் நீர் நீர்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


நன்றி: முத்துக்கமலம்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

ஏன் இஸ்லாம்!!
--------------
'இஸ்லாம்'
மாற்றாருக்கு
எளிதில்
பிடித்து விடுவதில்லை!
பிடித்து விட்டால்
எவரும் அதை
விட்டு விடுவதுமில்லை!

இது ஓர்
பகுத்தறிவு மார்க்கம்!
இங்கு
மூட நம்பிக்கைகளுக்கு
இடமில்லை!
முஸ்லிம்கள்
மூடராய் இருப்பதில்லை!
மூடர்கள்
முஸ்லிமாய் இருப்பதில்லை!

உலகில் பலரும்
'கடவுள் ஒருவனே'
என்கின்றார்!
அந்த ஒருவனின்
தேடலில்...
ஆயிரம் பேரைக்
காண்கின்றார்!
அவ்வாயிரத்தில் ஒருவன்
இவனா?
தேடலிலேயே...
ஆயுளை முழுதாய்த்
தொலைக்கின்றார்!

ஏக இறைவனை
தந்தையும் அவனே!
மகனும் அவனே!
பரிசுத்த ஆவியும் அவனே!
என்கின்றார்-அதை
அறிவுப் பூர்வமாய்
சிந்திக்க ஏனோ?
ம(று)றக்கின்றார்!

அன்பே தெய்வம்!
அறிவே செல்வம்!
என்கின்றார்-மிருக
வதை கண்டால்
முதலைக் கண்ணீர்
வடிக்கின்றார்!
சாதிச் சண்டையில்
மனித உயிகள்
மாய்வதைக் கண்டு
மகிழ்கின்றார்!

'இஸ்லாம்' ஓர்
சமாதான மார்க்கம்!
அன்பும் அறமுமே
அதன் அடிப்படை!
கட்டுப்பாட்டுக்கே
முக்கியத்துவம்!

இப்படித்தான்
வாழ்தல் வேண்டுமென
வாழ்வோர் மட்டுமே
இஸ்லாமியராய் இருப்பர்!
எப்படியும் வாழலாமென
நினைப்போர்...
எப்படியும் இருப்பர்!

இஸ்லாத்தில்
வந்து விட்டால்
ஈருலகிலும்
இன்பம்!
நிராகரிப்போருக்கு...
என் ஆழ்ந்த வருத்தம்...!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


முத்துக்கமலத்தில்

இமாம்.கவுஸ் மொய்தீன் படைப்புகள்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு நகரில் பிறந்து வளர்ந்த இவர் புகுமுகக் கல்வி வரை செங்கற்பட்டிலும், மருத்துவக்கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் படித்தார். தற்போது சவூதி அரேபியாவில், ஜெத்தா நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் இமாம்.கவுஸ் மொய்தீன், இறை மொழியன் என்கிற பெயர்களில் தமிழகத்தில் வெளியாகும் பிரபல தமிழ் இதழ்களிலும், பல தமிழ் இணைய இதழ்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமம், இந்தியக் கலாச்சாரக் குழுமம் அமைப்புகளில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வரும் இவருடைய விழியருவிகளும் விமான நிலையங்களும் என்கிற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


மரத்தினால் ஆனதாலோ

உலோகத்தினால் ஆனதாலோ

கண்கூடாய்க் காண்பவற்றை

வெளி கூறாது

ஜடமாயிருந்திருந்து

ஜடமாகி விட்டதாலோ?

'ஜடம்' என்றே அழைக்கப்படுகிறது.


இதுவும் ஓர் நாடகமேடைதான்!

எத்தனை யெத்தனை காட்சிகள்

நாடகங்கள் அரங்கேற்றங்கள்

மந்திரங்கள் சத்தியங்கள்!

அனைத்தையும் கண்டு

ரசிப்பதோடு சரி!

மற்றபடி 'ஜடமே' தான்.


பெரிய மனிதர்

உத்தமர் சாதனையாளர்

மாவீரர் மதிப்புக்குரியவர்

எல்லாமே வெளித் தோற்றம் தான்!

நாற் சுவற்றுக்குள்

அவரின் மிருகத்தனம்

அப்பப்ப்பா.........!!

புலிகள் எலியாவதும்

யானைகள் பூனைகளாவதும்...

எதையும் காணாதது போல்

'ஜடமா'கவே... கட்டில் !



நன்றி: தமிழோவியம்.


கோடிகள் கொடுத்தாலும்...!!



அம்மா... ...!
ஊரில் இருக்கின்றார்!
கேட்போர்க்கெல்லாம்
பதிலாய் இருந்த
நிகழ் காலம்...
அவரின் மரணத்தால்
இறந்த காலமானது!

அவருக்குச் செய்த
பணிவிடைகள்
கடுகாய்ச் சுருங்கிவிட
தவறியவை
மலை போல்
மனக்கண் முன்...!

தன் உதிரத்தை
உணவாய் உணர்வாய்
ஊட்டியது...

தாலாட்டு பாடி
தொட்டிலாட்டி
உறங்க வைத்தது...

நிலாவை
நட்சத்திரங்களை
மின்மினிகளைக் காட்டி
சோறூட்டியது...

உடல் நலமில்லாத
நேரங்களில்
உண்ணாமல் உறங்காமல்
சேவை செய்தது...

விரல் பிடித்து
நடை எழுத்து
சித்திரம் பழக்கியது...

மழலையைக் கேட்டுப்
பூரித்தது
புன்முறுவல் பூத்தது
பெருமை கொண்டது...

குழந்தைகட்கு
வலியேதுமென்றால்
துடித்தது துவண்டது
துயரம் கொண்டது...

ஒவ்வொன்றும்
தொடர் காட்சியாய்
நெஞ்சை வருட...

உடன் வைத்திருந்து
பணிவிடை செய்து
பார்த்திருந்திருக்கலாமே...!

விம்மியது இதயம்
அருவிகளாயின விழிகள்
கசக்கிப் பிழிந்தது
குற்ற மனப்பான்மை!

விலகி இருந்ததாலும்
பிரிந்து விட்டதாலும்
இழந்த சுகம்
கோடிகள் கொடுத்தாலும்
திரும்புமோ?
-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி: முத்துக்கமலம்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/



'சுப்ஹானல்லாஹ்'!!
------------------
சுன்னி ஷியா ஹனஃபி
ஷாஃபி மாலிகி ஹம்பளி
சூஃபி வஹாபி
தௌஹீத் ஜமாத்
சுன்னத் ஜமாத்
அஹ்லே ஹதீஸ்
ஜமாத்தே இஸ்லாமி
இன்னும் இப்படி
எத்தனைப் பிரிவுகளோ
இன்றைய இஸ்லாமியருக்கிடையில்...!

இவை யெல்லாம்
சாத்தானின் சூழ்ச்சியா?
மனிதனின் அறியாமையா?
பிரித்து ஆண்டுப் பழகிவிட்டோரின்
கைங்கர்யமா?

தாவூத் மூசா
ஈசா முஹம்மத்[சல்..] என
அனைத்து இறைத்தூதர்களும்
ஏக இறைவனையே வணங்கினர்.
ஏகத்துவதையேப் போதித்தனர்.
இடையில் என்ன நேர்ந்ததோ?
இத்தனைப் பிரிவுகள்...!

எத்தனைத் தான் பேதங்கள்
சூழ்ச்சிகள் உருவானால் என்ன?
'' லாயிலாஹா இல்லல்லாஹ்
முஹம்மத் ரசூலல்லாஹ்..''
உச்சரிக்கும் போது
அனைத்துமே அற்றுப் போய்விடுகின்றன.
'சுப்ஹானல்லாஹ்'!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்


'சைக்கோ' !!
--------------

நாள்தோறும் விடிந்தும்

விடியாமலேயே இருக்கின்றது

காலைப் பொழுது!



ஊடகங்களைத் திறக்க

பதைபதைக்கிறது

மனம்!



'சைக்கோ'வின் அடுத்த பலி

உறக்கத்திலிருக்கும்

அப்பாவி எவருமா?



'சைக்கோ' என நினைத்ததால்

கொல்லப்பட்டிருக்கும்

அப்பாவி எவருமா?



'சைக்கோ'வின் பெயரால்

கைதாகி இருக்கும்

அப்பாவி எவருமா?



கைதானவரும் கொல்லப்பட்டவரும்

'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்

தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்

காரணம் யார்? யார்? யார்?



பொதுமக்களுக்கு வேண்டுமாயின்

புதிராய் பீதியாய் இருக்கலாம்

'சைக்கோ'!



ஸ்காட்லாண்ட் யார்டுக்கு

இணையானதாகக் கருதப்படும்

தமிழகக் காவல்துறைக்குமா...?


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி: தமிழோவியம்.

அன்புடன்,


இமாம்.

http://thamizheamude.blogspot.com/


சொத்துப் பங்கீடு!!

-இமாம்.கவுஸ் மொய்தீன் -


தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான் இருந்ததால்....

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

drimamgm2001@yahoo.co.in

நன்றி: பதிவுகள்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/



சுதந்திரமே உன்னால்...!




சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி
என்று வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.
நன்றி:முத்துக்கமலம்.





அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


எதுவும் சாத்தியமே! - இமாம் கவுஸ் மொய்தீன்


on 23-08-2008 16:37


Favoured : None
Published in : இலக்கியம், கவிதை


பறப்பன நடப்பன

ஊர்வன தவழ்வன என

அனைத்து உயிரினங்கட்கும்

சொந்தமாய் இல்லங்களாம்

மரங்கள் கூடுகள் புதர்கள்

புற்றுகள் குகைகள்...!


மனிதர்கட்கும் அவரவர்

வளம் வசதிகட்கேற்ப

சொந்த வீடுகள்

வாடகை வீடுகள்

குடிசைகள் சாலையோரங்கள்

இல்லங்களாய்...!


வாழ்நாளில்

சொந்தமாய் ஓர் வீடு

பெரும்பாலோரின் கனவு!

ஒரே நாளில்

ஊரையே அழித்துத்

தரைமட்டமாக்குதல்

சிலரின் நனவு!


உலகே வியக்கும்

வேடிக்கை பார்க்கும்

மனசாட்சியையும்

மனிதநேயத்தையும்

புதைத்துவிட்டவர்களின்

அரசியலை......

- இமாம் கவுஸ் மொய்தீன்

Last update: 23-08-2008 17:21


நன்றி: அதிகாலை.





அன்புடன்,

இமாம்.

http://thamizheamude.blogspot.com/


கவிதை : நாளைய நட்சத்திரங்கள்!!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]


அன்று....
தலையைப் படிய வாரி
எண்ணெய் முகத்தில் வடிய
சீருடை முழுதாயணிந்து
சுமக்க முடியாமல்
புத்தக மூட்டையைச் சுமந்து
கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்
சிக்கித் தவித்துப்
பேருந்தில் பயணம் செய்து
பள்ளிக்குச் சென்றபோது
பரிகாசம் பேசியோருண்டு!
பரிதாபம் கொண்டோருண்டு!
விமர்சித்தோரும் பலருண்டு!

இன்று....
படிப்பு முடிந்துவிட்டது
பட்டம் பெற்றாகிவிட்டது
பணியும் கிடைத்துவிட்டது
கை நிறையச் சம்பளம்
வளங்கள் வசதிகள்
வாகனங்கள் ஏவலாட்களென
சொந்த வாழ்வில்....
என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்
என்னைப் போன்றே
வசதிகள் வளமுடன்....

பணிக்குச் செல்லும் நேரம்
பள்ளிக்குச் செல்வோரைப்
பார்க்கிறேன்!
முதுகில் புத்தக மூட்டை....
அதில் புத்தகங்களுடன்
அவரவரின் எதிர்காலம்
பெற்றோரின் கனவுகள்
கற்பனைகள் உழைப்பு
நம்பிக்கையென அனைத்தையும்
சுமந்து செல்லும் சிறார்கள்!

இதயம் பூரிக்கிறது
நம் நாட்டின்
நாளைய மன்னர்களைக்
காண்கையில்!
இன்று நாம் ஒளிர்வதைப் போல்
நாளை ஒளிர இருக்கும்
இந்தியாவின்
நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:தமிழோவியம்.

வலைப்பூ:http://thamizheamude.blogspot.com

No comments: