Thursday, April 24, 2008

ஆயுதம் ஏன்? எதற்கு?

ஆயுதம் ஏன்? எதற்கு?
-------------------

யா அல்லாஹ்!
காலையில் விழிக்கும் போது
களிப்போடே எழுகின்றேன் நான்!
உன்பெயர் உச்சரிக்கவும்
உன்திருவடி வணங்குதற்கும்
உன்நினைவி லிருந்து கொண்டே
நல்வினை நினைப்பதற்கும்-அதை
நடைமுறை படுத்துதற்கும்
மீண்டும் ஒர்நாள் கிடைத்ததென்றே
மகிழ்ச்சியில் திளைக்கின்றேன் நான்.


பஜரைத் தொழுத பின்பே -திரு
மறையை ஏந்துகின்றேன்!
இறைவாக்கு ஓதிய பின்பே
இரைதரும் பணியைத் துவங்குகின்றேன்!
ஐவேளை தொழுவதினாலே -மன
அமைதியில் தவழுகின்றேன் நாளும்!
உன்நிழலில் இருக்கும் எனக்கு
வேறுஆயுதம் ஏன்? எதற்கு?

கழிப்பறை சென்று நாளும்
அகப்புற அழுக்கு எல்லாம்
அறவே கழுவுகின்றேன்!
வெளியே வருகின்றபோது
ஒதுவுடன் புனிதனாக
அகப்புற தூய்மை கொண்ட
ஒழுக்க மிக்கவனாக -என்னை
நானே உணர்கின்றேன்!
அதன்படியே நாளும் நானும்
அமைதியில் நிலைத் திருக்கின்றேன்.

இறை மறை வழிநடக்க
வாழ்வை தந்தவன் நீயே!
தீயதை நினைக்க மனதில்
நேரமே இல்லை எனக்கு!
இசுலாத்தின் கடமைகள் யாவும்
இனிதே நிறைவேற்றுதற்கு
வசதியும் வாழ்வும் அளித்த
உனக்கே புகழ் அனைத்தும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

No comments: