Sunday, June 22, 2008

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை



சென்னை, ஜூன் 21: சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.

அக்கட்சியின் மணிவிழா மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.

மத்திய அரசில் உள்ளது போல தமிழக அரசிலும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். உலமா நல வாரியம் மற்றும் உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இல்லாத ஊர்களில் அந்த வசதியையும், பட்டாக்களையும் வழங்க வேண்டும். பட்டம் பெற்ற யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரே விதமான சிவில் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உதவி அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621135450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

No comments: