Friday, November 21, 2008

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு


கீற்று இணையத்தைத் தொடங்கியது நாள் முதல் வாசகர்களாகிய நீங்கள், எங்களுக்கு அளித்துவரும் உற்சாகமும், ஆதரவும் அளப்பரியது. கடந்த மூன்றாண்டுகளில் எங்களது தொடர்பு முகவரியோ, கைப்பேசி எண்ணோ தராத நிலையிலும் நண்பர்கள் வாயிலாக அதைப் பெற்று, எங்களைத் தொடர்பு கொண்டு, கீற்றுவின் மீதான தங்களது மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தினந்தோறும் எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிலும், படைப்புகளுக்கு நீங்கள் தரும் பின்னூட்டங்களிலும் எங்கள் மீதான அன்பை உணர்ந்திருக்கிறோம்.

‘நான் வசிக்கும் நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் கீற்றுதான் எனக்கு ஒரே துணையாக இருக்கிறது’ என்றும், ‘அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயான உறவுப்பாலமாக கீற்று விளங்குகிறது’ என்றும், ‘தங்களின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த முறை நான் சென்னை வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்றும் வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின்றன. அதுவே தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது.

கீற்றுவின் நான்காம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வாசகர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் எங்களது கைப்பேசி எண்ணைத் தந்திருந்தோம். அதுமுதல் எங்களைச் சந்திக்க விரும்புவதாக வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வாசகர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதுகுறித்து கீற்று வலைக்குழுமத்தில் விவாதித்தபோது நிறையபேர் ஆர்வம் தெரிவித்தார்கள்.

நாள் குறித்தோம், அரங்கைப் பிடித்தோம். இதோ, வாசகர் சந்திப்புக்குத் தயாராகிவிட்டோம். கீற்றுவின் நிறை, குறைகள் குறித்தும், கீற்று தொடர வேண்டிய/ செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீங்கள் பேசலாம். கீற்று தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறோம்.

நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு.



editor@keetru.com

No comments: