Wednesday, January 6, 2010

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

செங்கம் எஸ். அன்வர் பாஷா

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=215


இஸ்லாத்தில், மலைகளுக்கு புனிதமான சிறப்புக்கள் கிடைத்துள்ளன. உலகம் படைக்கப்பட்ட நேரத்தில், முதன் முதலாக மக்காவின் நிலமும், “அபு குபைஸ்” மலைக்குன்றும் தோன்றின. நூஹு நபி (அலை) அவர்கள், உலகப்பிரளயத்தின் போது பிரயாணித்த கப்பல், ஜுதி மலையில் தான் தரை தட்டி நின்றது. ஹள்ரத் மூஸா (அலை) அவர்களை இறைவன் “சையதுல் ஜிபால்” என்ற “தூர்சீனா” மலைக்கு வரவழைத்து உரையாடினான். “பனீநயீம்” என்ற மலையின் உச்சியில் தான், ஹள்ரத் லூத் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. “ஸஃபா மர்வா” மலைகள் மார்க்க அடையாளங்களாக உள்ளன. என்று அல்குர்ஆன் (2:158) கூறுகிறது. நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் “ஜப்லே நூர்” என்ற மலையில் அமைந்துள்ள ஹீரா குகையில் தியானத்தில் இருக்கும் நேரத்தில் தான் வஹி அருளப்பட்டது. அத்துடன் திருமறையின் வசனமும் முதன் முதலாக இறங்கியது. மதீனாவிலுள்ள “உஹது” மலையும் புனிதமான வரலாற்று சின்னமாகும். இமாம் தாவூத் (ரஹ்) அவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் தான் பிறந்தார்கள். “காரசான்” மலையில் காஜாமுயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்) அவர்கள் முராகபாவில் அமர்ந்திருந்தார்கள்.
தற்போது, இந்தியாவின் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கும் ஒரு தனி சிறப்பு கிடைத்துள்ளது! கடந்த 21- 5- 2008 ம் தேதி முப்பது வயது நிரம்பிய ஃபாரூக் ஸஅத் ஹம்மாதுல் ஸமன் (ZAMAN) என்ற இளம் மலை ஏறும் வீரர் 29035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார். இதனால், இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற தகுதி பெறுகிறார்.
நேபாள நாட்டின் நேரப்படி பகல் மூன்று மணிக்கு, நேபாள மக்களால் “சகர்மாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் காலடி பதித்தார் வெற்றி வீரர் ஃபாரூக். முதல் காரியமாக அங்கு இஸ்லாத்தின் கடமையான தொழுகைக்கு வரும்படி அழைக்கப்படும், பாங்கினை உரக்கச் சொன்னார். அந்த ஓசை மலைகளில் எதிரொலித்து, ரீங்காரமிட்டது. அடுத்தபடியாக, “கலிமா” எழுதப்பட்ட சவூதி அரேபியாவின் தேசியக்கொடியை அங்கு பறக்க விட்டார். இறுதியாக எல்லாம் வல்ல நாயனுக்கு ஷுக்ரானா நஃபில் தொழுகையை தொழுது முடித்தார்.
உலகத்தின் மிகவும் உயரமான இடத்தில் நின்று உலக மக்களை தொழுகைக்கு வரும்படி கூவி அழைத்ததின் மூலம் சரித்திர சாதனையை நிகழ்த்தி விட்டார் அந்த அரேபியவீரர் !
இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், 20-5-2008 –ந் தேதியை நேபாள அரசு, சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் நாள்” என்று அறிவித்திருந்தது ! காரணம், 29-5-1953 ம் தேதியன்று தான் ஸர் எட்மண்டுஹில்லாரி “நேபாளி” “ஷேர்பா” டென்சிங்குடன் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
சாதனையாளர் ஃபாரூக் காட்மாண்டுவிலிருந்து 31-5-2008 ம் தேதி சவூதி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது. “நான் மலை ஏறும் பொழுது, 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இருபதாவது கேம்ப் வரையில் எந்த வித சிரமமும் இருக்கவில்லை. அதற்கு மேல் அமைந்துள்ள இருபதாவது அட்வான்ஸ் கேம்பிலிருந்து உச்சி வரை ஏறுவதில் பல சிரமங்களும், இடையூறுகளும் குறுக்கிட்டன. நேபாளத்தின் “ஷெர்பா” மிகவும் உதவியாக இருந்தார். மலை ஏறும் நுணுக்கங்களை “ஷெர்பாக்கள்” நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
பனி மலையில் நிலவும் குளிரும், பிராணவாயு குறைவும், உச்சியை அடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனக்கும் இரண்டு மூன்று முறை உயிரை பயணமாக வைத்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருபதாவது கேம்பிற்கும் மேலே நான் ஏறிச் செல்லும் போது, எனக்கு கடினமான பல தடங்கல்கள் குறுக்கிட்டன. அங்கு நிலவும் பிராணவாயுவின் குறைவினால் மூச்சு திணற வேண்டியதாகி விட்டது. வழி நெடுகிலும் பல முறை உயிருக்கு போராட வேண்டியதாகி விட்டது.
என்னுடைய லட்சிய இலக்கை நான் அடைந்த பொழுது நாலா புறமும் பனியால் அந்த இடம் சூழப்பட்டு இருந்தது. என் உடல் முழுவதும் மரத்து விட்டதைப் போல் ஆகி விட்டது. என் மூளை உறைந்து செயலிழந்து விட்டதைப் போல் உணர்ந்தேன். நான் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சிக்கு வந்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! அங்கு நிலவும் அழகிய கண்கொள்ளாக் காட்சியை பார்த்ததும் நான் உணர்ச்சி வசப்பட்டு, மதி மயங்கி விட்டேன். அப்போது நேரம் பகல் மூன்று மணியாகி இருந்தது. வெயில் எங்கும் பரவிக் கிடந்தது. மலையின் மற்ற பகுதிகளில் மேகங்கள் சிகரங்களை மறைக்கும் விதத்தில் மிகுந்த வண்ணம் இருந்தன. என் கண் முன்னால் தெரிந்த உள்ளத்தை கவர்ந்து இழுக்கும் கண் கவர் காட்சி யினைக்கண்டு நான் பூரித்துப் போனேன்.
இந்த எவரெஸ்ட் சிகரத்தை உலகின் மிக உயர்ந்த இடம் என்று கூறுவதைப் போலவே புகழ் பெற்ற “கபரஸ்தான்” (இடுகாடு) என்று கூறினாலும் பொருத்தமானதாக இருக்கும் ! கி.பி. 2002 ம் ஆண்டு வரை, எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் ஆவலில், 175 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் பிறகும், பலபேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். பெரும்பாலான உடல்கள், அங்கேயே கிடக்கின்றன. சிகரத்தின் வடபகுதியில் இப்போதும் 41 உயிரற்ற உடல் கள் கிடக்கின்றன. நானும் என் கண்ணால் ஏராளமான உடல்களை கண்டேன். இவ்வளவு உயரத்திலிருந்து பிணங்களை எடுத்து வருவது இயலாத காரியம்.
பெரும்பாலான மரணங்கள், எரிவாயு முடிந்து விடுவதாலும், பிராண வாயு குறைவினாலும், பனிப்புயல்களில் சிக்கிக் கொள்வதாலும் நிகழ்ந்து வருகின்றன. அங்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளதாலும், கடுமையான குளிர்ந்த காற்று வீசுவதாலும், பிணங்கள் கெடுவதில்லை. அங்கு கிடந்த ஒரு உடலை, முதன் முதலாக கண்டவுடன் அதை காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் நான் அவசரமாக தொட்டேன். என்னுடன் இருந்த “ஷெர்பா” அது இறந்து விட்டவரின் உடல், அந்த மனிதர் இறந்து பல மாதங்கள், அல்லது பல வருடங்கள் ஆகி இருக்கலாம்” என்றார்.
மலை ஏறும் ஆவல் கொண்டவர்களுக்கு வலுவான உடல் தகுதி மட்டும் இருந்தால் போதாது. பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். 55 வருடங்களுக்கு முன்பு ஹில்லாரியும் டென்சிங்கும், எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன்முதலாக ஏறிய பின்பு, 3800 பேர் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 1600 பேர் மட்டும் தான் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். மலை ஏறும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறைந்த பட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவழிக்க நேரிடும். எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதை விட, இறங்குவது தான் மிகவும் சிரமமான காரியமாகும்” என்று விளக்கமாக கூறி தன் பேட்டியை முடித்தார் ஃபாரூக்.
உலகத்திலுள்ள நாடுகளில், ஒரே ஹிந்து நாடு முன்பு இருந்தது நேபாளம். அதன் மீது அமைந்துள்ள சிகரத்திற்கு “ஜார்ஜ் எவரெஸ்ட்” என்ற ஆங்கிலேயரின் (கிருஸ்துவர்) நினைவாக வைக்கப்பட்ட பெயர் தான் எவரெஸ்ட். வானத்தை தொடும் அந்த எவரெஸ்ட் சிகரத்தின் மீது நின்று, “தொழுகைக்கு வந்து வெற்றியடையுங்கள்” என்ற பாங்கின் அழைப்பை, உலகின் நாலாபக்கமும் இப்போது முழங்கச் செய்துள்ளான் வல்ல அல்லாஹ் ! இதன் விளைவாக, உலக மக்கள் அனைவரும் ஒரே இமாமின் பின்னால் நின்று தொழும் காலம் வெகு தூரத்தில் இல்லை !.

( குர்ஆனின் குரல் நவம்பர் 2009 இதழிலிருந்து )

No comments: