Tuesday, May 11, 2010

தாய்'

தாய்' என்னும் தலைப்பில் "கவிதைமுகம்" கேட்டதற்கு என் கவிதை வரிகள்......

கருவறையில் காத்த தாயே..!!!
கல்லறையில் உறங்கச் சென்றாயே -நான்
வரும்வரையில் படுத்திரு ; எனக்கும்
தருவர் குழி உனக்கு அடுத்தே
என்முகம் காணாமல் புதைத்த அன்று;
உன் அகம் எப்படி பதைத்தது என்று
கனவில் வந்து கதறினாயே; உன்னருகில்
அணைத்ததும் உதறினாயே..!!!
"இறந்தவரை கனவில் அணைத்தால்
இருப்பவர்க்காகாது ' என்பதைக் கூட
என்பால் நீ வைத்த
அன்பால் தானே இறந்தும் அப்படி
அக்கறைக் காட்டினாய்
"செத்தும் கொடுத்த" உன் அன்புக்கு
பித்தனாகி விட்ட என்னால்
என்ன வேண்டும் தாயே ............

(நீண்ட உன் அன்பை மீண்டும் ஒரு நீண்ட கவிதையில் வடிப்பேன்; என் முதல் கவிதை நூலில் அச்சடிபேன்; வரி வரம்பு இட்டனர் இங்கே அதனால் கண்ணீரோடு முடிக்கின்றேன் இத்தோடு........)

உன்னிடம் குடித்த "தமிழ்ப்பால்" மணத்துடன்,
"கவியன்பன்" கலாம்

No comments: