Friday, May 23, 2008

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி
























துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு
நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.

உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.

பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.

பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.

நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.

ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.

செயலாளர் மசூத் நன்றி கூறினார்.

தொடர்புக்கு :


தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161

மின்னஞ்சல் - ha_jabbar@yahoo.co.in

No comments: