Wednesday, September 24, 2008

செல்ஃபோனில் படம் பிடித்த விவகாரம்: கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைதாகிறார்கள்

செல்ஃபோனில் படம் பிடித்த விவகாரம்: கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைதாகிறார்கள்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080924132856&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/25/2008&dName=No+Title&Dist=0

கடலூர் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்த மாணவி ஷகநாச்பேகம்,
அவரது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்.

கடலூர், செப். 24: மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து துன்புறுத்திய கடலூர் கல்லூரி ஆசிரியைகள் கைது செய்யப்படுவார்கள் என்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆசிரியர்களுக்கும் முதல்வருக்கும் இடையே எழுந்த பிரச்னைகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியைகளின் தூண்டுதல் காரணமாகவே, மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை பி.ஏ. ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஷகநாச்பேகம், வகுப்புக்குச் சென்று இருந்தார்.

பாடம் நடத்த வராத ஆசிரியைகள் அவரை, பல கோணத்தில் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

புதன்கிழமை அந்த மாணவி தனது பெற்றோருடன் வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள பிரச்னை, ஆசிரியைகளுக்கும் முதல்வருக்கும் இடையேயானது. இது மாணவிகள் பிரச்னை அல்ல. இப்பிரச்னைக்குக் கல்லூரி நிர்வாகம்தான் தீர்வு காணவேண்டும். ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கூட்டி இருந்த கூட்டத்துக்கு வந்த பெற்றோரை, ஆசிரியைகள் மிரட்டி இருக்கிறார்கள். திங்கள்கிழமை கோட்டாட்சியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் அவர் இது குறித்துக் காவல்துறையில் புகார் செய்ய வில்லை. வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச் பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து ஆபாசமாகத் திட்டி இருக்கிறார்கள்.

செல்ஃபோன் படங்களை தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி, கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள, கடலூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

ஏற்கெனவே சாலை மறியலுக்கு மாணவிகளைத் தூண்டியது தொடர்பான வழக்கைக் கைவிடவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். கல்லூரி வளாகத்துக்குள் வெளியாட்கள் நுழைவது குற்றம். விழாக்கள் எதுவும் இல்லாதபோது, முன்னாள் மாணவிகள் வருவதும் குற்றமாகும். போலீஸôரையும் செய்தியாளர்களையும் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது, என் தகவலுக்கு வந்துள்ளது. அச்சகத்தின் பெயர், அச்சிட்டோர் பெயர் இல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டக் கூடாது. அவ்வாறு போஸ்டர் வெளியானால் அச்சகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

கல்லூரி பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் எஸ்.பி.



முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்



கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வகுப்புக்குச் சென்ற மாணவி ஷகநாச்பேகத்தை 8 ஆசிரியைகள் செல்ஃபோனில் படம் பிடித்து துன்புறுத்தியதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவை புதன்கிழமை அறிவித்து உள்ளன.

ஷகநாச்பேகம் தனது பெற்றோர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப்குமாரைச் சந்தித்து மனு அளித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவர் முகமுது கமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது முஸ்தபா ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:

மாணவியைக் கல்லூரி ஆசிரியர்களே செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டிய சம்பவம் மோசமானது. வேறு எங்கும் நிகழாதது. இது ""சைஃபர் கிரைம்'' பிரிவில் வரும்.

சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்து, போலீஸôர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.

ஷகநாச்பேகம் மன உளைச்சலில் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். மாணவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள்தான் பொறுப்பு.

இது குறித்து மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியைகளை அழைத்துப் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கல்லூரி முதல்வர் ஆர்.வள்ளி, புதன்கிழமை விடுமுறையில் சென்றுள்ளார்.

எத்தனை நாள் விடுமுறை என்று தெரியவில்லை. பொறுப்பு முதல்வராக ரமாமணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதன்கிழமை மாணவிகள் கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.

No comments: