Wednesday, May 6, 2009

சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )

சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )

முஸ்தாக் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டோமே என மனம் துடியாய் துடித்தது. யா அல்லாஹ்! வேறு வழியே தெரியவில்லையே. தங்கை ரஷிதா வாழ வேண்டுமே எனப் புலம்பினான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

முஸ்தாக் பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தான். குடும்பச் சுமையின் காரணமாக படிக்க ஆசை இருந்தும் அவனால் மேலே படிக்க முடியவில்லை.

ரசாக் பாயின் மளிகைக் கடையில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்தான். ரசாக் பாயும், அவர் மனைவி அஜீஜாவும், முஸ்தாக்கை பெற்ற பிள்ளை போல் பார்த்துக் கொண்டார்கள்.

ரசாக் பாயின் வீட்டுக்குள் சுதந்திரமாக சென்று வரும் உரிமை முஸ்தாக்கிற்கு மட்டுமே உண்டு. ரசாக் பாயின் பிள்ளைகள் சல்மானும், சுலைமானும் முஸ்தாக்கிடம் அண்ணே, அண்ணே என்று அன்பாகப் பழகினர்.

முஸ்தாக்கிற்கு அம்மாவும், தங்கையும் மட்டுமே உண்டு. வாப்பா இல்லை. முஸ்தாக் கொண்டு வரும் வருமானமும், தீப்பெட்டி ஒட்டும் வருமானமும் மூவருக்கும் இரண்டு வேளை கஞ்சி குடிக்க போதுமானதாக இருந்தது.

இந்த நிலையில் ரஷிதாவுக்கு பதினைந்து பவுன் நகை போடுவதாகப் பேசி பக்கத்து ஊர் இஸ்மாயிலுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். தாயின் பழைய நகை பத்துப் பவுனைப் போட்டு ஐந்து பவுன் நகை ஆறுமாதம் கழித்துப் போடுவதாகப் பேச்சு. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது.

ரஷிதா பத்து நாளைக்கு முன் கண்ணை கசக்கிக் கொண்டு பெட்டியுடன் ஊர் வந்து சேர்ந்தாள். “என்னம்மா ரஷிதா, தீடீர்னு மச்சான் வரல்லையா?”

அண்ணே, ஐந்து பவுன் நகை வாங்கிட்டுத்தான் ஊருக்கு வரணும்னு என் மாமியார் என்னை துரத்தி விட்டுட்டாங்க.

ஏம்மா மச்சானுக்கு நம்ம நெலமைத் தெரியாதா?

தெரிஞ்சு என்னண்ணே பிரயோஜனம்? என்னை நகை வாங்கிட்டு வா. இல்லைன்னா நகைக்கு உரிய பணத்தை யாவது வாங்கிட்டு வான்னு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு எனத் தேம்பி தேம்பி அழுதாள்.

முஸ்தாக்கின் இரத்தம் கொதித்தது. பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த வக்கில்லை. மாமியார் வீட்டுலேயே புடுங்கணும்னு நெனைக்கிற இவனெல்லாம் ஆம்பிளை எனக் காறி உமிழ்ந்தான்.அதே மனக் கசப்புடன் வேலைக்குச் சென்றான்.

அங்கே அஜீஜா, ஏய் முஸ்தாக், இங்க வாப்பா அஞ்சு பவுன்ல நெக்லஸ் வாங்கி இருக்கேன். முதலாளி டிசைன் நல்லா இல்லைன்னுட்டாரு. நீ பார்த்துச் சொல்லுப்பா நல்ல இருக்கா,இல்லையான்னு.

சூப்பரா இருக்குமா, நீங்க கழுத்துல போட்டா இன்னும் அழகாயிரும். அஜீஜா கணவனை பார்த்து கேட்டுக்கங்க.

அவன் நீ என்ன செஞ்சாலும் சரின்னுதான் மாடு மாதிரி தலையாட்டுவான். அவன் உன்னோட செல்லப் புள்ளையாச்சே!

உங்களுக்குப் பொறாமை தாயும் புள்ளையும் ஒண்ணாப் பேசுறதைப் பாத்து

இப்படி தாயும், தந்தையுமா பழகுறவுங்க வீட்டில் இருந்து முஸ்தாக், அஜீஜா ஆசையாய் வாங்குன நெக்லஸைத் திருடி விட்டான்.

மனம் வெட்டி போட்ட பல்லியின் வாலாய் துடித்தது.

ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கையின் கையில் கொடுத்து கடன் வாங்கி இந்த நெக்லஸை வாங்கினேன் எனப் பொய் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தான்.

யா அல்லாஹ்! இந்த வரதட்சணை கொடுமை என்றுதான் மறையுமோ? இதனால் பாவங்களுக்கு ஆளாகி வேதனைத் தீயில் வாடிகிறோமே! நான் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நீயும் உரியவர்களும் மன்னிப்பார்களா? என்று புலம்பித் தள்ளினான்.

அன்று முதல் சிரிப்பை தொலைத்து விட்டு நடை பிணமாக நடமாடினான்.

ரசாக் பாய் நல்ல உள்ளத்துடன் முஸ்தாக் நீ ஏண்டா இப்புடி உம்முன்னு இருக்க, அம்மா ஆசையா வாங்குன நகை தொலைஞ்சு போச்சுன்னா அவ எங்கயாவது ஞாபக மறதியா கழட்டி வச்சுருப்பா இல்லைன்னா கொக்கி கழண்டு எங்கயாவது கீழ விழுந்திருக்கும். நீ கவலைப்படாதடா என உண்மை தெரியாமல் ஆறுதல் சொன்னார். அன்பான இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மேலும் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தான். நிம்மதியில்லாமல் தவித்தான். நாட்கள் சென்றன.

ஒரு கல்யாண வீட்டில் தற்செயலாக ரஷிதாவின் கழுத்தில் நகையைப் பார்த்த அஜீஜா திகைத்துப் போனாள்.

ஏம்மா ரஷிதா இந்த நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கே எங்கேம்மா வாங்குன?

அஜீஜா நகையை கழட்டி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள்.

நான் வாங்கலைம்மா அண்ணன் தான் வாங்கிக் குடுத்தாங்க.

அஜீஜாவிற்கு உண்மை புரிஞ்சு போச்சு. பந்தலில் உட்கார்ந்திருந்த கணவனை அழைத்து உண்மையை விளக்கினாள்.

அப்புடிச் சொல்லாதம்மா அவன் ரொம்ப நல்லவன்.

இல்லைங்க இது என் நெக்லஸ்தான். நான் வாங்குன கடை முத்திரை அதுல இருக்கு. என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. வாங்க வீட்டுக்குப் போவோம். அவனை கூப்பிட்டு விசாரிப்போம்.

அங்கே ரசாக் பாய் முஸ்தாக்கை அழைத்து, முஸ்தாக் அல்லாஹ்வின் மேல் ஆணையா கேக்கிறேன். நீ தப்பு செய்தியா?

வாப்பா, என்னை மன்னிச்சுருங்க, என்னோட தங்கச்சி வாழணும்கிற ஆசையில தப்பு செய்திட்டேன். இந்த பாவ காரியத்தால தினம், தினம் நிம்மதியில்லாம செத்துக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட என்னைய சோறு போட்ட உங்க கையாலேயே அடிச்சு கொன்னுருங்க என்று பதறித் துடித்து அழுதான்.

விபரங்களை கேட்டறிந்த ரசாக் பாய் கண்கள் கலங்க வரதட்சணை என்கிற பேய் ஒரு நல்லவனை எப்படி திருடனா மாத்தியிருக்கு பாத்தியா! யா அல்லாஹ் இது என்ன கொடுமை! இது மாதிரி எத்தனையெத்தனை நல்லவர்கள் தவறிழைத்து விட்டு துடிக்கிறார்களோ? எத்தனையெத்தனை குடும்பங்கள் கடனில் மூழ்கி நாதியற்று நடுத்தெருவில் தவித்து வருகிறார்களோ? பாழாய் போன இந்த வரதட்சணை பழக்கம் எப்படி மார்க்கத்தில் புகுந்தது? ஆமாம்! இதற்கு எதாவது ஒரு வழி செய்தாகனும். டேய் முஸ்தாக்! நீ செய்த இந்த தவறை நாங்க மன்னிக்கனுமா- வேண்டாமா? சொல்லு

அல்லல்லா – இப்படி சொல்லாதீங்க வாப்பா, நீங்க மன்னிச்சாதான் அல்லாஹ்வும் என்னை மன்னிப்பான் என்று மனசு வெடிக்கக் கதறினான்.

அப்போ நான் சொல்வதை செய்வீயா?

நீங்கள் என்ன சொன்னாலும் சரி அப்படியே செய்வேன் என்றான் விம்மியபடி.

அப்படியா! நீ கல்யாணம் செய்தால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்க மாட்டேன் என்று சத்தியம் செய். அது மட்டுமல்ல உன் வயிற்று பிள்ளைக்கும் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான் நாங்கள் உன்னை மன்னித்து விடுவோம். என்ன சரிதானே?

திடுக்கென்று எழுந்து வல்ல நாயன் மீது ஆணை ! இந்த வரதட்சணை கொடுமையை அனுபவ பூர்வமாக அனுபவித்து துடித்தவன் நான். இந்த கொடுமை யாருக்கும் வேணாம். நானோ எனது பிள்ளைகளோ வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்து நபி (ஸல்) அவர்கள் வழியில் இல்லறத்தை நல்லறம் ஆக்குவேன் வாப்பா என்று கதறியவாறு வாப்பாவை இறுக அணைத்துக் கொண்டான். அங்கே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.

நன்றி : நர்கிஸ் – ஏப்ரல் 2009

No comments: