Wednesday, May 6, 2009

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

முஸ்லிம் சமுதாயமும் பெட்டிக்கடை இயக்கங்களும் !

மதிப்பிற்குரிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு எழுதிக் கொள்வது !

இதைப் படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவிட ‘துஆ’ செய்கிறேன் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழகத்தை பொருத்த வரைக்கும் ஒற்றுமை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாத ஒரு சமுதாயம் உண்டு என்றால் அது நமது முஸ்லிம் சமுதாயம் மட்டுமே எனக்கூறுவதில் வெட்கப்படுகிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமது சமுதாயம் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக் என்னும் கட்சியுடனும், இஸ்லாமிய கொள்கை ரீதியாக ஜமாஅத்துல் உலமா (மார்க்க அறிஞர்களின் ) சபையுடனும், ஒழுங்கு முறைக்கு ‘’ஜமாஅத்” மஹல்லா என்னும் கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த நமது சமுதாயம் இப்போது எப்படி இருக்கிறது ? எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? இடைப்பட்ட 25 ஆண்டுகளில் சமுதாயத்தின் பெயரால் எத்தனை கட்சிகள், எத்தனை இயக்கங்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை பிளவுகள் …இவையெல்லாம் ஏன்? எதனால்? என்ற கேள்விக்கு ஒரே பதில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்பட்ட சுயநலம் தான் ! நாம் குறிப்பிட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடையே இறையச்சம் அதிகமிருந்தது ! மரணத்தின் பயம் இருந்தது ! மண்ணறையின் திடுக்கம் இருந்தது!!! ஆனால் தற்போதோ? இவையெல்லாம் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நினைத்து பார்க்க கூடியதாய் மனிதனின் மனம் மாறிவிட்டது. அதனால் தான் ‘’துன்யா’’ வெனும் இவ்வுலக ஆடம்பர வாழ்க்கையின் சுக போகத்திற்கு நம்மை அடிமை படுத்திக் கொண்டோம். ஆடம்பர வாழ்க்கை யென்பது? சொகுசு பங்களா, சொகுசு கார் நினைத்து பார்க்க முடியாத பண மழையில் குளித்து சுகம் காண்பது தான் ! இது ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பாகவும் மாறிவிட்டது. இவற்றையெல்லாம் ஹலாலான வழியில் உழைத்து அனுபவித்தால் கூட இஸ்லாத்தின் பார்வையில் தவறு என்பதை நமது உத்தம தலைவராம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்தும், (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டிய உன்னதமான சகாபாக்களின் வாழ்க்கை தத்துவத்திலிருந்தும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் தங்களது பதவி காலத்தின் போது கொளுத்தும் வெயில் காலத்திலும் கூட திறந்த வெளியில் ஈச்ச மர ஓலையின் மீது படுத்து உறங்கிய எளிமையை இன்றும் கூட வரலாற்று ஆசிரியர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். உலக மக்களுக்கு மட்டுமல்ல, நாளை மறுமை நாளின் போது ஒன்று திரட்டப்படும் லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களுக்கும் கூட தலைமை தாங்கவிருக்கும் நமது உயிரினும் மேலான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கைக்கு கோடி உவமைகளை அடுக்கினாலும் நிகராகாது !
ஆடம்பரம் தான் ஒரு தலைவனின் சமூக அந்தஸ்து என்னும் காலத்திலும் கூட அனைத்து வசதியும் இருந்தும் கூட எளிமையாய் வாழ்ந்து காட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்களை பின் பற்றியே தான் நபித்தோழர்களும் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய சமுதாய தலைவர்களின் நிலையை ஆராய்ந்து பாருங்கள். நேற்று ஆரம்பித்த இயக்கங்களின் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரைக்கும் ஸ்கார்பியோ, டாடா சுமோ, குவாலிஸ்,இன்னோவா போன்ற சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். இவையெல்லாம் முறையாக சம்பாதித்து வாங்கியது என சொல்லும் அருகதை எத்தனை பேருக்கு இருக்க முடியும்? குறிப்பிட்ட ஒரு இயக்கத்திற்கு வருவதற்கு முன் டீக்கடையில் வேலை பார்த்தவன் இந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவரான பிறகு பல கோடிகளுக்கு அதிபதியாகி விட்டானே ! என்று அந்த நபரை அருகிலிருந்து பார்த்து வந்த பிற மனிதர்கள் கூறும் உண்மையை புறக்கணிக்க முடியுமா? சமுதாயத்தின் பெயரால் இயங்கி வரும் பெரும்பாலான இயக்கங்களின் பொறுப்பாளர்களில் அதிகமானோர் எவ்வித தொழில் துறையும் இல்லாதவர்களாகவும் இயக்கத்தின் பணி மட்டுமே கதி என்று கிடப்பவர்கள். இவர்களின் பொருளாதார நிலையை கூர்ந்து பாருங்கள். நேர்மையாய் உழைத்தவனை விட பல மடங்கு சொத்து சேர்த்தவர்களாய் மாறி விட்டனர். எங்கிருந்து எப்படி இவ்வளவு பணம் இவர்களுக்கு கிடைத்தது? என்பது தான் பாமரனாய் எல்லோரும் கேட்கும் கேள்வி? இத்தகைய கேள்விக்குரிய பதிலை ஆய்வு செய்யும் போது நமக்குத் தலை சுற்ற ஆரம்பித்து விடும். எங்காவது மதக்கலவரம் வராதா? அதில் நம் மக்கள் சிலர் சாக மாட்டார்களா? உடனே அதை வீடியோ எடுத்து கேசட் ரெடி பண்ணி முதலில் அனுப்பப்படும் ஏரியாவாக அரபு நாடுகளையும் பிறகு தமிழகம் முழுவதும் என்ற திட்டத்தின் படி கேசட் விநியோகம் முடிந்ததும் அதே வேகத்தில் வசூல் வேட்டையிலும் இறங்கி கலவரத்தில் இறந்தவர்களது குடும்பத்தினருக்குரிய நிதி என்று அதற்கு பெயரும் சூட்டி கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட பணத்தில் சிலதை கண் துடைப்புக்காக சிலருக்கு மட்டும் கொடுத்து விட்டு பெரும் பகுதி பணத்தை அமுக்கி கொண்டவர்களாய் சில காலம் இயக்கம் நடத்தினார்கள். இதற்கு 1998 கோவைக் கலவர வசூல், 2002 ல் நடைபெற்ற குஜராத் பூகம்ப வசூல் மற்றும் குஜராத் கலவர வசூல், 2004 சுனாமி வசூல் போன்றவை ஆதாரங்களாகும். கடந்த சில வருடங்களாக மதக்கலவரம் எங்கும் நடைபெற வில்லையே ! எப்படி இயக்கவாதிகள் பிழைப்பு நடத்தினார்கள்? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது ! ஒவ்வொரு வருடமும் ரமலான் காலங்களில் முஸ்லிம்களின் இறைக்கடமையில் ஒன்றான ஜகாத், மற்றும் ஃபித்ரா, கூட்டுக் குர்பானி போன்ற ஏழைகளுக்குரிய தர்மங்கள் விநியோகத்தில் மார்க்கத்தின் பெயரால் உள்ளே நுழைந்து பித்ரா, ஜகாத் புரோக்கர்களாய் மாறி கோடிக்கணக்கில் வசூல் செய்து ஏழைகளுக்கு தங்களது இயக்கத்தின் பெயரால் ஃபித்ரா,ஜகாத் விநியோகம் என்ற போலியான விளம்பரத்தையும் தேடிக்கொண்டு வசூல் தொகையில் சிலதை கொடுத்து விட்டு பெரும் பங்கை அவரவர்களின் சொந்த கணக்கில் சேர்த்துக் கொண்டதையும் ஒவ்வொரு வருடமும் நாம் காண முடிந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக பித்ரா, ஜகாத்,கூட்டுக் குர்பானி வசூல் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை! மக்கள் ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டதும் தான் பிழைப்புக்கு வழி இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தின் விளைவாகவே தற்போது ஒவ்வொரு இயக்கமும் அரசியல் கட்சியாய் மாறி வலம் வர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் இயக்கங்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. எல்லா காலத்திலும் எல்லோரையும் ஒரே மாதிரி ஏமாற்ற முடியாது என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் இறுதி புகலிடம் தான் அரசியல் களம்! கடந்த காலத்தில் அரசியலைப் பற்றிய இவர்களது விமர்சனத்தை பாருங்கள். இந்திய அரசியல் என்பது சாக்கடையாகும். அதில் குளிப்பதற்கு நாங்கள் விரும்ப வில்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அரசியலுக்கு வரமாட்டோம்! என வீர? வசனம் பேசி தங்களை யோக்கியர்களாய் காட்டிக் கொண்ட அந்த நிறம் மாறிகளான பச்சோந்திகள் தான் இன்றைக்கு அரசியல் என்னும் சாக்கடையை குளிப்பதற்கு மட்டுமல்ல தாகம் தீர குடிப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இயக்கங்களாய் இருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதால் தான். அரசியலுக்குள் நுழைகிறோம் எனக் கூறுவோர் சமுதாயத்தின் அரசியல் கட்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தலாமே! பெட்டிக் கடையை போல உருவாகிய இயக்கங்கள் ஆளுக்கொரு கட்சியென ஆரம்பித்து எதை சாதிக்கப் போகின்றனவாம்? தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி இவர்களது கூட்டணியில் இணைந்து அவர்கள் வீசும் 1 அல்லது 2 எலும்புத் துண்டுகளை மட்டுமே கவ்வ முடியும். அதிலும் ஜெயலலிதா பக்கம் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருந்தால் கருணாநிதி பக்கமும் 10 முஸ்லிம் பெட்டிக்கடைகள் இருக்கும். இந்த பெட்டிக்கடை அமைப்புகளுக்கு ஜெயலலிதா எந்த தொகுதியை ஒதுக்குகிறாரோ? அதே தொகுதியை கருணாநிதி சார்பிலான பெட்டிக்கடை அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு ஓநாய் காத்திருப்பது போலத்தான். இது கருணாநிதி, ஜெயலலிதாவின் சூழ்ச்சி அல்ல! சாட்சாத் நமது பெட்டிக் கடை இயக்கங்களின் அணுகு முறை தான். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு 2 கண் போக வேண்டும் என்ற இலக்கணத்தை உணர்ந்து செயல்படும் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் ‘’ஈகோ’’வால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் அதுவும் அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடிகிறது. தி.மு.க –அ.தி.மு.க வீசும் 1 அல்லது 2 சீட்டுகளே தமது கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என நினைத்து செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் போக்கினால் தான் வாரத்திற்கு இரண்டு பெட்டிக்கடை இயக்கங்களின் தோன்றுகின்றன. மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்களை விட முஸ்லிம் சமுதாய மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் வன்னியர் சமுதாயத்தின் அரசியல் சபையான பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று 6 எம்பிக்களும், 18 எம்.எல்.ஏக்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இரண்டு மத்திய அமைச்சர் பதவியும் உள்ளபோது நமது சமுதாயத்தின் பிரதி நிதித்துவம் “0” பூஜ்ஜியமாய் இருப்பதற்கு என்ன காரணம்? அரசியல் ரீதியாக வன்னியர் சமுதாய மக்கள் பா.ம.க என்ற குடையின் கீழ் திரண்டு விடுகிறார்கள் அவர்களுக்குள் ஏராளமான பெட்டிக்கடை இயக்கங்கள், லெட்டர் பேடு அமைப்புகள் கிடையாது ! இதே போன்ற உணர்வு முஸ்லிம் சமுதாய பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? எல்லாம் தங்களுக்குள் இருக்கும் சுய நலமும், எல்லோரும் தலைவர்களாக வேண்டும் என்ற கேவலமான சிந்தனைகளும் தான் ! அதனால் தான் ஒவ்வொரு பெட்டிக்கடை இயக்கங்களின் தலைவர்களும் நாம் மேலே சொன்னது போல் குளு குளு ஆடம்பர கார்களில் பந்தாவாய் வலம் வருகின்றனர். ஒற்றுமை குறித்த இறை வசனத்தையும், நபிவழியையும் புறக்கணித்து விட்டு மேடை தோறும் ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசும் ஒவ்வொரு இயக்கவாதியின் பேச்சும் பைத்தியங்கள் தெருவில் கத்துவது போலத்தான் !

எவர் இயக்கம் ஆரம்பித்தாலும் உடனே வசூல் கொடுக்கும் பாமர மக்களின் தவறான அணுகுமுறைதான் ! திரட்டப்பட்ட பணத்தை பங்கு வைக்கும் போது பிரச்சினை ஏற்பட்டு ஒவ்வொரு இயக்கங்களும் இரண்டாக பிளவுபடுகிறது. இயக்கவாதிகளின் முக்கிய நோக்கமே வசூல் என்பதுதான். எனது பாசத்திற்கும், மரியாதைக்குமுரிய சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவரும் அல்லாஹ் ரசூலுக்கு பயந்து இனிமேல் எந்த இயக்கத்திற்கும், எதற்காகவும் நயா பைசா கொடுக்க மாட்டோம் என உறுதி கொண்டு நடைமுறை படுத்திப் பாருங்கள். எல்லா பெட்டிக்கடை இயக்கங்களும் காணாமல் மறைந்து விடும். சமுதாயத்தின் பெயரால் அவ்வப்போது நிகழும் பிரிவினைகளும் பிளவுகளும் ஏற்பட ஒரு வகையில் இயக்கங்களுக்கு வசூல் கொடுக்கும் பொதுமக்களும் காரணமாகி விடுவதால் நாளை மறுமையில் இயக்க வாதிகளின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய இறைவனின் கேள்விக்கு வசூல் கொடுத்த பொதுமக்களும் தான் பதில் சொல்லியாக வேண்டும். எனதருமை பொது ஜனங்களே ! ஜகாத்,பித்ரா, கூட்டுக்குர்பானி போன்ற இறைவனுக்குரிய அமல்கள் விஷயத்தில் உங்களது தர்மங்களை எந்த இடைத் தரகர்களிடமும் புரோக்கர் இயக்கங்களுக்கும் கொடுக்காமல் நீங்களே நேரடியாக உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளுக்கு மறைமுகமாக கொடுத்து அதற்குரிய நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரே ஒரு வருடமாவது இதை நடைமுறை படுத்திப் பாருங்கள். அனைத்து பெட்டிக்கடை இயக்கங்களும் அழிந்து போய் விடும். அதன் மூலமாகவாவது சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படட்டும் ! இன்ஷா அல்லாஹ் !!

சமுதாயக் கவலையுடன்
மெளலவி
கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.

No comments: