Thursday, September 18, 2008

இணையதளத்தில் முஸ்லிம்கள் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

இணையதளத்தில் முஸ்லிம்கள் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
_________________________________ _________________________________

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைய தளத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு
அதிகமாகி வருவது மிகவும்
மகிழ்ச்சிக்குரிய விஷயம். பலர் பல்வேறு குழுமங்களில் தங்கள் கருத்துக்களை
பதிவதோடு தங்களுக்கென BLOG
களும் வைத்திருக்கிறார்கள்.

Quantity அதிகமாகும்போது பல நேரங்களில் Quality பாதிக்கப்பட
வாய்ப்புண்டு. இங்கேயும் அதுதான் நிகழ்கிறதோ
என்கிற ஐயம் நாளுக்கு நாள் எனக்கு ஏற்பட்டு வருகிறது. தனக்குத்
தெரிந்ததை, தான் அறிந்ததை உடனே பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று
நினைக்கிறார்கள். ஒரு வகையில் நல்லதுதான் இது மற்றவர்களுக்கும்
தெரிந்திருக்குமே நாம் என்ன புதிதாகச் சொல்லி விடப்போகிறோம். இது
நம்முடைய நேரத்தையும் பிறரது நேரத்தையும் வீணடித்ததுஆகாதா என்று இவர்கள்
எண்ணிப் பார்ப்பது போல் தெரியவில்லை.

'எல்லோருக்கும் தெரிந்ததை, சொல்லாமலே தெரியக்கூடியதை சொல்லாதே' என்பது
ஊடக மரபு. இந்த மரபை
மீறும்போதுதான் 'அறைத்த மாவையே அறைக்கும் ஆட்டுக்கல்'' என்ற ஏளனத்துக்கு
உள்ளாகிறோம். இது போக
மார்க்க விஷயங்களை யார் எழுதுவது, யார் பேசுவது என்கிற ஒரு வரை முறையே
இல்லாது போய் விட்டது.
எனவே பல பதிவுகள் அரைவேக்காட்டுத் தனமாக இருக்கின்றன.

தமிழே ததிங்கிணத்தோம் போடும்போது சிலர் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில்
'பிளந்து கட்டுவது' வெடிக்கையாக
இருகிறது என்பதை விட வேதனையாக இருக்கிறது. நாம் நமது திருப்திக்காக
எழுதுகிறோம், இது பற்றி பிறர் ஏன்
கவலைப்பட வேண்டும் என்பது சரிதான். ஆனால் பிறர் உங்கள் எழுத்தை ரசித்து
உங்கள் கருத்துக்களை ஏற்றுக்
கொள்ளாவிட்டால் உங்களுக்குத்தானே கால விரயம்....?

மேலும் சிலர் திட்டுவதற்கென்றே எழுதுகிறார்கள். அதிலும் அநாகரீகமாக
எழுதும் போது அதன் மூலம் நாம் தான்
தரம் தாழ்ந்து போகிறோம் என்பதை உணர மறுக்கிறார்கள். அது மட்டுமல்ல இணைய
தளத்தை எல்லோரும் தான்
பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும் பிற சமயத்தவர்கள் நம் ஒட்டு மொத்த
சமூகத்தையும் அல்லவா குறைவாக
எடை போடுவார்கள். தனி ஒருவர் தவறால் ஒரு சமூகமே பழி ஏற்கும்படி செய்யலாமா ?

இன்னும் சிலர் எழுதிக் குவிப்பதற்கு அளவே இல்லை. ஒரு முறை படித்தவர்கள்.
அடுத்த முறை படிப்பார்களா ?
அல்லது பெயரைக் கண்டதும் Delete for Ever என்கிற சுட்டியை நோக்கித்
திரும்புவார்களா என்பதை திட்டப் படுத்திக்
கொள்வது நல்லது.

ஓருவர் எனக்கு அனுப்பி வைக்கும் மடல்களை எண்ணிப் பாக்கும் போது எனக்கு
என்ன தோன்றுகிறதென்றால், இவர் எங்காவது வேலை செய்பவராகத்தான் இருக்க
வேண்டும். இவரால் இவ்வளவு 'குப்பைகளை' அள்ளித் தட்ட
முடிகிறதென்றால் இவர் சரியாக வேலை செய்யவில்லை. எஜமானனுக்கு வஞ்சனை
செய்கிறார். அல்லது வேலை
நேரம் போக மீதி நேரத்தில் விழித்திருந்து பணி செய்து தன் உடம்பைக்
கெடுத்துக் கொள்கிறார் என்று பொருள்.
ஒரு நல்ல காரியத்துக்காக இதைச் செய்யலாம். வீணுக்கு மாறடித்து என்ன பயன்?

நிறையப் படியுங்கள். பக்குவம் பெறுங்கள். பிறகு பேனாவைக் கையில்
எடுங்கள்.உங்கள் பட்டறிவுக்குப் பட்டதை
பதார்த்த இனிப்பாய் வழங்குங்கள். இன்னொரு வகையில் சொன்னால் பாலை
உறையூற்றி வையுங்கள். பிறகு
தயிரைக் கடைந்து வெணையை எடுங்கள். அப்போது அவசரம் வேண்டாம். அது நெய்யான
பிறகு விளம்புங்கள்.

எல்லோரும் நேரத்துக்கு எதிராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
நேரத்தை உங்களுக்காகச் சிறிது ஒதுக்க
வேண்டும் என்றால், அறிவார்ந்த - புதுமையான் கருத்துக்களை உங்கள் பேனாவில்
மசியாக நிரப்பிக் கொண்டு
காவியமே படையுங்கள் வாசகர் வட்ட்ம் உங்களுக்கு பூமாலை போட்டு வரவேற்கும்.
இல்லையா....நான் சொல்ல
வேண்டுமா என்ன ?


abjabin@gmail.com

No comments: