Tuesday, March 24, 2009

இனிய பெருநாள் வாழ்த்துகள்

இனிய பெருநாள் வாழ்த்துகள்

முன்னவரின் கடமையது இரமளான் நோன்பு
...முஸ்லிம்கள் பேணுவதும் அதனைத் தானே
எண்ணமதைச் சுத்திசெய்யும் இந்த மாதம்
....இதயத்தில் ஒளிவீசும் விரதத் தூய்மை
விண்ணவரின் வாழ்த்துக்கு உரிய தாக
....விளங்குகின்ற வாய்ப்பளிக்கும்; உயர்வு நல்கும்
மன்னவரோ மற்றவரோ வயிறால் ஒன்றே!
....மண்ணுலகின் பசிபஞ்சம் மாய்த்தல் நன்றே!


வணக்கத்தை இறைவனுக்கே உறுதி செய்து
....வளமாகும் நல்லுணர்வும் வாய்க்கப் பெற்று
இணக்கத்தை வளர்க்கின்ற ஈகை மனங்கள்
....இன்பத்தை அதனாலே எடுத்துக் கொள்வார்
சுணக்கத்தை நற்செயலில் செய்து வந்தோர்
....சுறுசுறுப்பை செயல்தனிலே சேர்த்துக் கொள்வார்
பிணக்கென்றால் வேண்டாமே என்று சொல்லி
....பிள்ளைநிலா முழுமதியாய் பிரகா சிக்கும்.

ஒன்றுக்குப் பத்தேழாய் வழங்கும் நோன்பு
....உயர்வான வெற்றிக்கு வழியைச் சொல்லும்
நன்றாக ஏற்கின்ற நண்பர் யார்க்கும்
....நாளைக்கு நற்சாட்சி நோன்பில் உண்டு
மன்றாடும் இறையடியார் மன்னிப் படைவார்
....மகத்தான ஓரிறையின் மார்க்கம் கொள்வார்
அன்றாட வாழ்நாளில் நோன்பின் பயிற்சி
....அற்புதங்கள் வெளிப்படுத்தும் ஆன்ம மாட்சி.


மெய்யான இறையச்சம் மனதில் கொண்டால்
....மேற்படியான் சாத்தானும் தோற்றுப் போவான்
ஐயமில்லாப் பேருண்மை அரிய நோன்பில்
....அடைந்தாரே அடைகின்றார் அதுவே நோக்கம்.
வையத்தில் வைக்கின்ற விரத மெல்லாம்
.... வயிற்றுக்கே உணவுக்கே என்றி ருக்க
பொய்யில்லா இஸ்லாமின் இந்த நோன்பு
....புலனடக்கம் போதிக்கும் பேரா சானே!

இறைவேதம் அருளான இந்த மாதம்
....எண்ணத்தை வளமாக்கும்; ஓடிப் போகும்
விரைவாக மீண்டுவர உள்ளம் வேண்டும்
...விண்மதிகள் பதினொன்று முழுதாய் ஆகும்
பிறைபார்க்க பெருநாளும் பூத்து நிற்கும்
....பேரன்பை ஈகையிலே பார்த்தி ருக்கும்.
நிறைவான நேரங்கள் நோன்பில் என்றும்
....நிலையான வெகுமதியும் இறையின் நாட்டம்


இனிய பெருநாள் வாழ்த்துகள்

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

No comments: