Sunday, April 18, 2010

சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு!

சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு!

(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(ஓ)


என் இனிய சகோதர சகோதரிகளே!

உங்களுடன் சில மாதங்களாக சமுதாய பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் மின் அஞ்சல்கள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறேன். முன்பெல்லாம் கதைகள், கட்டுரைகள் பத்திரிக்கைகள், புத்தகங்களில தான் படிப்போம். ஆனால் இன்று சுழழும் மின்சார உலகத்தில் அலுவல்களுக்கிடையே சில நேரம் மின் அஞ்சலை உபயோகமான தகவல்களைப் பெறவும், நண்பர்கள் உறவினர்களுடன் சில நொடிகள் சம்பாசனை செய்யவும் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் அந்த சாதனங்களையே தனது சொந்த விருப்பு, வெறுப்புகளைக் கொட்டித்தீர்க்கும் வழிகளாக கருதினால் படிப்பவர்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தாதா? அந்த செயல்களைத்தான் நான் சில நாட்களாக சில சமுதாய ஊடகங்களிலும், மின் அஞ்சல்களிலும் பார்த்து வருகிறேன்;. நீங்களும் பார்த்து படித்திருப்பீர்கள். அவை சரிதானா? என்பது தான் என் கேள்வி.


1998 ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமூதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாய தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன்-பாக்கர்-ஜவஹர்அலி-ஜவஹருல்லாஹ் கூட்டுத் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காக குரல் ஏழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஸ்டமாக அந்த இயக்கம் மூனறாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதீனும், மற்றொரு இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும், மூன்றாவது இயக்கத்திற்கு ஹைதர் அலியும்-ஜவஹருல்லாஹ்வும் தலைவர்களாக இருக்கின்றனர். ஹைதர் அலி-ஜவஹிருல்லாஹ் தலைமயையிலான இயக்கம் அரசியல் மனிதநேய கட்சியினை 2009பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தொடங்கியது. மற்ற இரண்டு இயக்கமும் சமதாய இயக்கமாக இயங்கி வருகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் தங்கள் ஆதரவுகளினை வௌ;வேறு அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்து வருகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட நால்வரும் மிகவும் திறமை சாலிகள்-சிறந்த பேச்சாளர்கள்-ஆற்றல் மிக்கவரகள். ஒருவரை விட ஒருவர் சலைத்தவரில்லை. ஒரு இயக்கம் என்று இருந்தாலோ அல்லது தலைவர்கள் பல இருந்தாலோ அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவைகள் சந்திக்கு வரக்கூடாது என்பது தான் என் ஆதங்கம்.





26.01. 2010 அன்று மதுரையில் நடந்த குடியரசு தின விழா பாப்புலர் ப்பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய அணி வகுப்பிலும் 30-31;.01.2010 அன்று திருச்சி ஜமாத்தில் உலாமா நடத்திய கூட்டத்திலும், பிப்ரவரியில் முஸ்லிம் லீக் ஆபிஸில் நடந்த கட்டாயத்திருமணச்சட்ட ஆலோசனைக் கூட்டத்திலும், மார்ச்சில் ஹோட்டல் பிரசிடண்ட்டில் நடந்த இட ஒதிக்கீடு ஆலோசனைக் கூட்டத்திலும் பெரும்பாலான சமுதாய இயக்கங்கள் தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லி இஸ்லாமியர் ஒற்றுமையினை வெளிக் காட்டின என்பது பாராட்டக் கூடியது. ஆனால் அந்த ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்று சமீப கால அறிக்கைப் போர்களால் அச்சமாக உள்ளது. சகோதர யுத்தத்தில் பதவியிழந்த கதையினை மகாபாரதத்தில் நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியே மேய்ந்த நான்கு காளை மாடுகள் புலிக்கு பலியான கதை மறந்து விட்டோமா?


சமீபத்தில் நடந்த இலங்கைப் போரில் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? அங்கு தமிழ் ஈழ விடுதலையென்று முதலில் முஸ்லிம்களை கிழக்கு மத்திய இலங்கையிலிருந்து விரட்டினார்கள், அதன் பின்பு விடுதலை இயக்கத்தில் சகோதரர்களாக இருந்த உமா மகேஸ்வரன், பத்மநாபா, மாத்தையா, ஸ்ரீசபா ரத்தினம், தமிழ் தலைவர் அமிர்தலிங்கம், முன்னாள் முதல் மேயர் யோகேஸ்வரன், வெளியுரவு அமைச்சர் கதிர்காமர் ஆகியோர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கினார்கள். ஆகவே அந்த இயக்கம் இன்று இலங்கையில் வேரறுக்கப்பட்டது.


நமது சமூதாயம் ஹிந்துத்துவா வெறியர்களால் பல திசைகளிலும் தாக்கப்பட்டு வருகிறார்கள். எப்போது இஸ்லாமிய ஒற்றுமை குலையும் அதில் மீன் பிடிக்கலாம் என எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் என்ன சொல்கிறார் தெரியுமா? இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே, அப்படி இல்லையென்றால் இந்தியாவினை விட்டு வெளியேறி விடலாமாம். நேற்றைய இரவு (13.04.2010) டி.வி. செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு உண்மை நிகழ்ச்சியினைப் பார்த்துக் அதிர்ந்திருப்பார்கள். அதில் சீனாவிலுள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் ஐந்து புலிகள் கொண்ட கூண்டின் மேலே ஏழு வயது சிறுமி 26 அடி உயர கம்பியில் நடக்கிறாள.; அந்த சிறுமி எப்போது கீழே விழுவாள் அவளை சாப்பிடலாம் என்று வாயைப் பிழந்து அன்னாந்து பார்த்துக் கொண்டு இருந்தன. ஒரு கட்டத்தில் அந்த சிறுமி கீழே விழப்பார்க்கிறாள் அப்போது அவள் முதுகில் கட்டியிருந்த கம்பியால் அவள் தப்பித்துக் கொள்கிறாள். அந்த சமயத்தில் புலிகள் மேலே பாய்ந்தன. அவைகளின் பசியினைப் போக்க வெள்ளைப் புறா ஒன்றை மிருகக்காட்சிசாலை அதிகாரி மேலேயிருந்து போடுகிறார். அதனை ஒரு புலி கவ்விக் கொண்டு ஓடுகிறது. இதில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அதாவது சிறிமியினை சிறுபான்மை சமூகம் என்றும் அந்த சமூகத்தினை ஒழிக்க நேரம் காத்திருக்கும் புலிகளாக ஹிந்துத்துவா அமைப்புகள் என்றும், அந்த புலிகளிடமிருந்து சிறிமியைக் கம்பி அல்லாஹ்வின் பாசக்கயிறு என்றும் கொள்ளலாம். நமது சமுதாயம் எப்போது வேறுபடும் அதில் மஞ்சள் குளிக்கலாம் என எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் நமது சகோதர யுத்தத்திளை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவைதானா?

இந்தச் சமயத்தில் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் கூட்டத்தில் 5.5.1970ந்தேதி சமுதாய ஒற்றுமை குறித்து பேசியதினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். “நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக,மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம், ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் இன்றைய தாழ்ந்த நிலை ஏன்? எப்போது முஸ்லிம்கள் இறைவனின் ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள் என்ற வசனத்ததை மறந்தோமோ அப்போதே நாம் தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில் அரசிலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்க்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம், ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும், அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன…இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில் தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப் படி ஒன்று சேர வேண்டும்…” அவரது சொற்பொழிவு தொலை நோக்க பார்வையில்லையா?

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ரீகனிடம் உள்நாட்டு இணைச்செயலாளராக இருந்த ராபர்ட் என்பவர் சமீபத்தில் பேசும் போது, ‘ உலக முஸ்லிம்களின் தோல்விக்கு அவர்களின் ஒற்றுமையின்னையே காரணம் என்று சொல்லி அதற்கு உதாரணமாக பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான’ போன்ற நாடுகளை எடுத்துச் சொல்லியுள்ளதாக ஊடகங்கள் சொன்னது. அதனையே நானும் இங்கே வலியுறுத்த விறும்புகிறேன்.

சகோதர யுத்திற்கு எந்த அளவு குரோதத்தினை வளர்க்கும் என்று தமிழ்நாட்டில் நடந்த உண்மை நிகழ்ச்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். தி.மு.க 1972 ஆம் ஆண்டு பிரிந்து தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்று செயல் பட்டு வந்தன. 1977 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜனதா கட்சி ஆட்சி மத்தியில் இருந்தது. ஒரிஸ்ஸாவில் பிஜூ பட்னாயக் முதல்வராக இருந்தார். அவர் தி.மு.க மற்றும் அதிமுக தலைவர்களிடையே செல்வாக்கு மிக்கவர். அவர் இரண்டு கட்சிகளையும் தமிழகத்தில் இணைத்து செயல்பட்டால் சிறப்பாக தமிழகம் இருக்கும் என்ற எண்ணத்தில் இரண்டு தலைவர்களையும் சந்தித்து ஒற்றுமை முயற்சி எடுத்தார். ஆனால் அது முடியாமல் போனது. ஏன் என்று சமீபத்தில் தி.மு.க தலைவர் விளக்கினார். அதன் விளைவு எவ்வாறு இருந்தது என்றால் தி.மு.கவில் மறைந்த திருவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ தாமரைக்கனி தி.மு.க.வில் இருந்ததால் அவர் மறைவிற்கு ஈமச்சடங்கில் கலந்து கொள்ள அப்போது அதிமுக அமைச்சராக இருந்த அவருடைய மூத்த மகன் தங்க தமிழ் செல்வன் செல்லவில்லை என்றால் கொடுமையாக தெரியவில்லையா உங்களுக்கு? அந்த நிலை ஒற்றுமையினை வலியுறுத்தும் இஸ்லாமிய சமுதாயத்திலும் வேண்டுமா? ரஸ_லல்லா மதீனாவில் செய்து கொண்ட முதல் ஒப்பந்தமே அன்சாரிகள், முஹாஜிர்கள், முஸ்ரிக்கர்களை இணைக்கும் ஒப்பந்தம் என்றால் மிகையாகுமா? அவரகள்; வழி வந்த நாம் இரண்டு பட்டுப்போகலாமா?

ஆகவே பல அமைப்புகள் வைத்திருக்கும் தலைவர்கள் கீழ்கண்ட கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கலாம்:

அமைப்புகள் தங்கள் இயக்க வேலைகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட வெறுப்புகளை கூட்டங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளியிட்டு தலைவர்களின் கண்ணியத்திற்கு தீங்கிழைக்கக் கூடாது.
பொதுவான முஸ்லிம் சமுதாயத்தினைப் பாதிக்கிற செயல்களை ஒன்று கூடி விவாதித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: முத்துப்பேட்டை கலவரம், இட ஒதுக்கீடு, கட்டாய திருமணப்பதிவுச் சட்டம் மைனாரிட்டி கமிஷன் ரிப்போரட்கள் அமல் செய்வது போன்றவை..
அதற்கு வகை செய்யும் முறையில் ஒரு சமுதாய ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும். அந்த குழு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது அவசர தேவை ஏற்படும் போது கூடி ஆலோசனை செய்ய வேண்டும்.
சமுதாய இளைஞரகள் வேலை மற்றும் படிப்புகளில் வாய்ப்பினைப் பெற ஆலோசனை மையம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்விக்கடன், ஸகாலர்ஷிப், தொழில் முனைவருக்கு தேவையான தகவல்கள் தந்து உதவி செய்ய வேண்டும்.

No comments: