Sunday, March 14, 2010

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !
என் இதயங்கவர்ந்த வாசகர் நெஞ்சங்களே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் நல்லருள் நிலவிட பிரார்த்தனை செய்தவனாக துவங்குகிறேன்…. நான் எழுதிய “ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல்” கட்டுரையை படித்துவிட்டு நீங்கள் கொடுத்து வரும் ஆலோசனை களையும், நல்லாதரவையும் எண்ணி பெருமிதம் கொண்டவனாக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் !
எனது நெருக்கமான நண்பர் ஒருவர் தம் பிரச்சனையை என்னிடம் சொன்னதைத் தான் உங்களிடம் கட்டுரையாய் சமர்ப்பித்துள்ளேன். நான் சொல்லியுள்ள விஷயங்கள் தனிப்பட்ட ஒருவரின் விஷயமாக பார்க்காமல் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்த்ததால் உருவானதே இந்தக் கட்டுரை !
இதை மிகவும் நிதானமாக படித்துவிட்டு ஒவ்வொரு வாசகரும் அவரவர் தம் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து என்னவென்று சொல்வேன்? எவ்வளவு அற்புதமான கருத்துக்கள். சமூகத்தின் மீது கவலை கொண்ட நிறைய பேர் பாதிக்கப் பட்ட நண்பரின் நிலை குறித்து தங்கள் கண்கள் குளமானதாகவும், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென புரியவில்லையென்றும் கூறினர்.
சில வாசகர்கள் கட்டுரைக்குரிய நபர் இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டினா? என்றெல்லாம் கேட்டனர். காரணம் நான் அவரின் மதத்தை அடையாளப்படுத்தவில்லையாம் ! பிறப்பால் மனிதனாகவும், பேசும் மொழியால் தமிழனாகவுமே நான் அவரை பார்த்ததால் மதத்தை இங்கு குறிப்பிடவில்லை என அந்த வாசகர்களுக்கு பதிக் கூறினேன்.
உங்கள் கட்டுரை காலத்திற்கேற்ற கண்ணாடி ! என் கணவரின் நிலையும் அப்படித்தான் உள்ளது உரிமைகளையும், உணர்ச்சிகளையும் இழந்தவளாய் நான் பரிதவிக்கிறேன். தயவுசெய்து என் கணவரின் பார்வைக்கு உங்கள் கட்டுரையை அனுப்புவீர்களா? எனக்கேட்டு அவரது கணவரின் மின்னஞ்சல் முகவரியையும் நமக்கு கொடுத்தார் மதுரையைச் சேர்ந்த பெண் வாசகி ஒருவர். அவர் விருப்பப்படியே நமது கட்டுரையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைத்தோம் !
காரைக்கால் நண்பர் அமீருத்தீன் தொலைபேசி வாயிலாக நம்மை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபர் இனியும் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. அவர் உடனே கேன்சலில் ஊர் போகட்டும் ஊரில் போய் அவருக்கு தெரிந்த தொழில் எதையாவது செய்து கொண்டு மனைவியுடன் மகிழ்வோடு வாழட்டும். தொழில் செய்ய என்னால் இயன்ற பொருளாதாரத்தை செய்யவும் தயார் எனக் கூறியதை கேட்டதும் அவரது அளவு கடந்த மனிதாபிமானத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு மனிதனும் அளவுக்கு மீறிய வகையில் சாமான்களை கட்டிக் கொண்டு பெட்டி, பெட்டியாய் இறக்குவதால் தான் ஊரில் இருக்கும் பெண்களுக்கு இங்கு படும் நம்மவர்களின் கஷ்டங்கள் தெரிவதில்லையென்றும், ஒரு முறை பொருள் கொடுத்து எப்போது பிரச்சினை வந்ததோ? அப்போதே கட்டுரைக்குரிய நபர் சுதாரித்திருக்க வேண்டாமா? தொடர்ந்து அதே தவறை செய்தது அவரின் அறிவீனத்தையே காட்டுகிறது. என விமர்சனம் செய்தார் கடைய நல்லூர் பாரூக்.
இவரது கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. அதிக சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தாயகம் செல்கிறார். குறைந்த சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தான் ஊர் போகிறார். ஆக வெளிநாட்டிலிருந்து ஊர் செல்லும் எல்லோருமே பெட்டி, பெட்டியாய் சாமான்கள் வாங்கி செல்லும்போது பெண்களின் பார்வைக்கு அனைவரும் சமமாகவே தெரிகின்றனர். அதனால் தான் பக்கத்து வீட்டு ரேவதிக்கு அதிக சம்பளம் பெறும் அவள் புருஷன் பத்தாயிரம் ரூபாய்க்கு தங்க வேட்டை புடவை வாங்கி கொடுத்ததால் ரேவதிக்கு அவள் புருஷன் வாங்கி கொடுத்த அதே புடவையை எனக்கும் வாங்கி அனுப்புங்கள் என்று மிக குறைந்த சம்பளம் பெறும் தம் புருஷனுக்கு போன் மூலம் விண்ணப்பிக்கிறாள் ராக்காயி ஆக வெளிநாட்டு சாமான்கள் மீதான மோகம் ஒட்டுமொத்த பெண்களை யும் வாட்டி வதைப்பது எதார்த்தம். இதற்கு முழுபொறுப்பும் உழைப் பாளிகளாகிய நாம் தான் !
மாண்புமிகு மக்களவை உறுப்பினர் ஒருவர் டெல்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது கட்டுரையை மின்னஞ்சல் மூலம் படித்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நிலை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல பல பேரின் எதார்த்தமும் அதுவாகவே உள்ளது. அருமையான கருத்துக் களை காலம் அறிந்து சமூக அக்கறையுடன் கொடுத்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட நபரின் பிரச்சினைகள் தீர அவர் தாயகம் செல்வதுதான் சிறந்தது. அவர் வாழ்க்கை வளம்பெற எல்லோரும் பிரார்த்திப்போம் எனக் கூறியதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
பிரச்சினைக்குரிய நபர் உணர்ச்சி வயப்பட்டு கேன்சல் செய்து விடாமல் குழந்தையில்லா தமது சூழ்நிலையை அவரது கம்பெனி நிர்வாகத்திடம் எடுத்து சொல்லி ஐந்தரை மாதம் நீண்ட கால விடுமுறை வாங்கி ஊர் செல்வது தான் நல்லது என்றார் வேலூர் ராஜேஸ் கண்ணன்.
ஒரு மனிதன் இறந்த பின்பும் அவனை அடையாளப்படுத்துவது அவனது வாரிசே ! அதனால் குழந்தையின்மையை தவிர்க்க உடனடியாக அவர் கேன்சலில் ஊர் செல்லட்டும். கடவுள் பாக்கியத்தால் அவரது எல்லா காரியங்களும் கை கூடிய பிறகும் அவர் துபாய் வர ஆசைப்பட்டால் நானே எனது நண்பரின் கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறிய தஞ்சை ஜவஹரின் மனிதநேய சிந்தனையை என்னவென்று சொல்வது?
பொதுவாக அமீரக வாழ்க்கை என்பது சிலருக்கு வேண்டுமானால் சோலைவனமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர்க்கு பாலைவனமாகவே இருக்கிறது. தற்போதைய பொருளாதார மாற்றத்தால் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. குடும்ப வசதிக்காக எடுத்த லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் ஒவ்வொருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது ‘0’ பூஜ்ஜியமே ! அதனால் பிரச்சினைக் குரிய நண்பர் தாயகம் செல்வதுதான் சரியானதாக இருக்கும். என்றார் முகவை தைய்யூப் அலி,
உங்கள் கட்டுரையை படித்ததும் ‘ஷாக்’ காகி விட்டேன். காரணம் நானும் தற்போது திருமணம் முடிந்து 55 வது நாளிலேயே துபாய் வந்து விட்டேன். நிச்சயம் உங்கள் கட்டுரை எனக் கொரு எச்சரிக்கை மணியாக இருக்கும் எனக் கருதுகிறேன். உங்கள் நண்பர் எதைப் பற்றியும் யோசிக்காமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கேன்சலில் ஊர் செல்வது தான் சிறந்தது எனக்கூறி நம்மை வியப்படைய வைத்தார் ஏர்வாடி சுல்தான். பிழைப்புத்தேடி வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் ஆரம்பத்திலிருந்தே தனக்கென்று ஒரு சேமிப்பை உருவாக்கி இருந்தால் இந்த நண்பரைப் போல கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது ! என சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திய பரமக்குடி தர்மலிங்கத்தின் கருத்து பாராட்டிற்குரியது தான் ! திருமணம் முடித்து வந்து முதல் முறையாக விடுமுறையில் ஊர் சென்ற திருநெல்வேலியை சேர்ந்த எனது நண்பன் தன் மனைவிக்காக ஒரு மொபைல் போன் வாங்கியவுடன் உனக்கென்று தனியாக போன் வாங்கிவிட்டேன் இனிமேல் நீயும் நானும் சுதந்திரமாக பேசிக் கொள்ளலாம் என்று மனைவியிடம் உற்சாகமாக கூறினான். ஆனால் ஊரில் போய் பார்சலை பிரித்ததும் நண்பனின் அக்கா மகன் போன் சூப்பர் மாமா நான் எடுத்துக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு நண்பனின் சம்மதமே அவசியமில்லாதது போல் சிட்டாய் பறந்து விட்டான் மருமகன். இவற்றை யெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பனின் மனைவியுடைய முகம் வாடிப்போய் கண்ணில் தூசி விழுந்ததைப் போல கண்ணை கசக்கிக் கொண்டு தன் ஆற்றாமையை அழுது தீர்த்துக் கொண்டாள். என்ற தகவலை கேட்கும் போது கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது என யூகிக்க முடிகிறதென்று நீண்ட விளக்கம் கொடுத்தார் கீழக்கரை உசேன், பிரச்சினைக்குரிய நண்பர் திடீரென்று ஊர் போய் என்ன செய்ய முடியும்? 15 ஆண்டுகள் குடும்பத்திற் காக உழைத்தவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவருக்காகவும் அவரது மனைவிக் காகவும் ஏன் உழைக்கக்கூடாது? கையில் கொஞ்சம் பணமாவது சேர்த்துக் கொண்டு ஊர் போனால் தானே, ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். அதனால் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தற்போது விடுமுறையிலேயே ஊர் செல்லட்டும் என்றார் கீழக்கரை நசீர் சுல்தான், இவ்வளவு தியாகம் செய்தும் கூட குடும்பத்தார் புரிந்து கொள்ளவில்லையென்றும், தன்னை மதிப்பதில்லையென்றும் கூறும் நண்பர் இன்னும் ஏன் கூட்டுக் குடும்பத்தை விரும்புகிறார்? பேசாமல் தனிக் குடித்தனம் போவதே புத்திசாலித்தனம் எனக்கூறிய காயல்பட்டினம் நிஜாமின் கருத்தையும் உள்வாங்கி கொண்டேன். உயிருள்ளவரை பெற்றோர்களை பேணுவது காலத்தின் கடமையாகும். அதே நேரத்தில் நம்மை நம்பி வந்துள்ள மனைவிக்குரிய கடமையையும் நாம் செய்தாக வேண்டும். இந்த நேரத்தில் கேன்சலில் ஊர் போய் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறாரோ? அதில் சிலதை பெற்றோர்க்கும் மிகுதியை துணைவிக்குமாய் பங்கீடு செய்து கொண்டு ஆனந்தமாய் வாழலாமே ! என மிகவும் பொறுப்புடன் கூறினார் முதுவை சம்சுதீன் சேட், 15 வருட பிரச்சினை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ! இன்னுமா அவர் துபாயில் இருக்க ஆசைப்படுகிறார்? கேட்கவே கொடுமையாக இருக்கிறது என கோபப்பட்டார் நாமக்கல் பரமசிவன். உங்களின் கட்டுரையை படித்துவிட்டு எனக்காக நான் அழுவதா? அல்லது உங்கள் நண்பருக்காக அழுவதா? எனத் தெரியவில்ல சார், உண்மையாகவே நான் அமீரகம் வந்து 20 ஆண்டுகளாகிவிட்டன. கிட்டத்தட்ட உங்கள் கட்டுரை எனது வாழ்க்கையைத்தான் படம் பிடித்து காட்டி விட்டதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மற்றவர் கண்களை மூடுவது உறக்கத்திற்காக ! ஆனால் நான் கண்களை மூடுவது என் கண்ணீர்த்துளிகளை நிறுத்துவதற்காக ! எங்களைப் போன்றோர்களின் நிலை மற்றவர் களுக்கு விழிப்புணர்வை கொடுக்கட்டும் ! உங்கள் கட்டுரையின் மூலம் நானும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கூறி என்னை நிலை தடுமாற வைத்து விட்டார் பாண்டிச்சேரி முருகேசன், இலங்கையில் நடந்து வரும் எமது மக்களின் துயரங்களை நினைத்து வருந்துவதா? அல்லது உழைப்பாளியின் மனக் குமுறலைப் பார்த்து வேதனைப்படுவதா? எனத் தெரியவில்லை ! இது போன்ற அவலங்கள் எமது மக்களை விட்டு நீங்க இறைவனைத்தான் கேட்கனும் என மழலைத் தமிழில் வருத்தத்துடன் பேசினார் இலங்கை பவாஸ், பிரச்சினைகள் இல்லாத மனிதனே கிடையாது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான கோணத்தில் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும். அதனை அணுகும் முறையை அம்மனிதன் சரியாக செய்து விட்டால் ஓரளவுக்கு சேதாரத்தை தடுத்து விடமுடியும். (No pain – No Gain) ஒன்றை இழக்காமல், ஒன்றை பெற முடியாது என்பது வாழ்வியல் எதார்த்தம். வெளிநாட்டிற்கு பிழைக்க வருபவர்களின் நிலையும் அப்படித்தான். குழந்தை யென்னும் செல்வத்தை அடைய நினைக்கும் கட்டுரைக்குரியவர் அமீரக வாழ்க்கையை இழந்தே தீர வேண்டும். தற்காலிகமாக, இதுதான் சரியான தீர்வாகவும் அமையும் என தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் அற்புதமான பல ஆலோசனை களை சகோதர வாஞ்சையோடு எடுத்து சொன்ன விதத்திலேயே தாம் ஒரு மனநல ஆலோசகர் என்பதை உணர்த்தி விட்டார் மதுரை முகைதீன் பாட்சா, துபாய் மோகம் என்ற அவலநிலையை எதார்த்தமாய் எடுத்துக் காட்டியுள்ள உங்களின் எழுத்தாற்றல் பாராட்டிற்குரியது ! கட்டுரையின் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் சொல்ல வந்த விஷயத்தை சரியான கோணத்தில் தெளிவான நடையில் சொல்லி விட்டீர்கள். ஆனால் இது மாதிரியான கட்டுரைகள் நமது பெண்களின் பார்வைக்கு செல்ல வேண்டும். அவர்கள் தான் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்தக் கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகரும் பிரிண்ட் எடுத்து தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தாலே போதும் தமிழகம் முழுவதுமாக பெண்களின் பார்வைக்கு சென்றைடைந்து விடும். பெண்கள் மாறினால் தான் சமூக அவலங்களை களைய முடியும் என குற்றால அருவியைப் போல கொட்டித் தீர்த்து விட்டார் பொறியாளர் கீழை இர்பான், ஊரில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு 25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க விருப்பம் கொள்ளாத என் பெற்றோர்கள் நீ வெளிநாட்டிற்கு ஒரு சபுரு போய் வா, அப்பத்தான் நல்ல விலைக்கு உன்னை விற்று தங்கைகளுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியும். என்பது போல இருந்து விட்டார்கள். காரணம் எங்கள் ஊரில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அவ்வளவு மவுசு. நானும் வேறு வழியின்றி கட்டிட வேலைக்கு துபாய் வந்துவிட்டேன். வந்த புதிதில் நாங்களாகவே சமைத்து சாப்பிட்டோம். இந்நிலையில் எங்களது பழைய கேம்பை இடித்து விட்டு புதிதாக கட்டினார்கள். ஆனால் கேட்டரிங் சிஸ்டம் தான். சொந்தமாக சமைத்து சாப்பிட எங்கள் கம்பெனியில் தடை போட்டு விட்டனர். நாங்களாக சமைத்து சாப்பிட்ட போது ஒரு நபர் இரண்டு தபூக் கல்லை தூக்கி எடுப்போம். அவ்வளவு தெம்பாக இருந்த நாங்கள் எங்கள் கம்பெனியின் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்த பிறகு இப்போது ஒரு தபூக் கல்லை இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். திருமணத்திற்கு தயாராக இருக்கும் என் அவல நிலையை பார்த்தீர்களா? வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் குளித்து சுகம் காணத்துடிக்கும் பெற்றோர்கள் திருந்தாத வரைக்கும் குடும்ப பாசத்திற்கு அடிமையாகிவிட்ட என் போன்றோர்கள் நிலையும் தொடரத்தான் செய்யும். இதைப் போலத்தான் உங்கள் கட்டுரைக்குரிய நபரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். என தனது விரக்தியையும் திருமண ஏக்கத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பெயர் சொல்ல விரும்பாத தூத்துக்குடி மாவட்ட நண்பரின் சோக கீதத்தை அவரது பெற்றோரின் செவிகளுக்கு எட்ட வைத்துவிடு இறைவா ! என பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் ஒருவரின் அவல நிலையை வெளிக்கொண்டு வர நினைத்த நமது கட்டுரை பலபேரின் சோகங்களை யும், வேதனைகளையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது ! மனதளவில் பாதிக்கப் பட்டிருந்த சில வாசகர்கள் தமது வருத்தத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட பிறகு நிச்சயம் மன ஆறுதலை பெற்றிருப்பார்கள் என்றே கருதுகிறேன். நூற்றுக்கணக்கான வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் நல்ல ஆலோசனை களையும், நல்ல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதை எண்ணி பாராட்டி நன்றியை உரித்தாக்குகிறேன். வாசகர்கள் அளித்த அனைத்து வழிமுறைகளையும் கட்டுரைக்குரிய நண்பரிடம் கூறி விட்டேன். அப்போது அவரது முகத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்த ரேகை தெரிந்தது. அவரது சோகத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியினை நா தழுதழுக்க கூறிக்கொண்டார். விரைவிலேயே ஊர் நோக்கிய அவரது பயணம் தொடரவும், அமீரக வாழ்க்கை சூழல் நிறைவு பெறவுமிருக்கிறது ! புதிதாக அமீரகம் வந்திருப்பவர் களுக்கும், ஏற்கனவே வந்திருந்து பல வருடங்களை கடந்துள்ளவர்களுக்கும் நமது கட்டுரையின் மூலம் சொல்லிக் கொள்வதெல்லாம்! உழைப்பின் சிறு பகுதியை கட்டாய சேமிப்பில் ஒதுக்கிவிடுங்கள். கார்கோ மூலம் பெட்டி, பெட்டியாய் சாமான்கள் அனுப்பி வைக்கும் ஆடம்பர கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! தாய் தந்தையர், உடன் பிறந்தவர், மனைவி ஆகியோரின் நிலையறிந்து அதற்குத் தகுந்தாற்போல யாருக்காகவும் யாருடைய உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் எல்லோருடைய விஷயத்திலும் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியமே ! இத்துடம் நிறைவு பெறட்டும் ! எல்லோருடைய மனக்குமுறலும் !!


நன்றி !!!
அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.

No comments: