Monday, July 14, 2008

இன்றைய இந்திய அரசியல்

இந்திய அரசியல் - ஒரு குழம்பிய குட்டை. இந்திய அரசியல் வாதிகள் - அந்தக்
குட்டையில் ஊறிய மட்டைகள்
என்றார் ஒரு முதிர்ந்த ஊடகவியலாளர். சரி அதை விடுவோம். இன்று
இந்தியாவெங்கும், இந்தியர் வாழும்
இடமெங்கும் பாய்ந்து - படர்ந்து - ஊடுருவி - உயர்ந்து நிற்கும் கேள்வி... ?

வரும் 22ம் தேதி நட்க்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்
கூட்டணி அரசு தப்பிப் பிழைக்குமா ?
அல்லது தடுக்கி விழுமா ? - என்பதே.

உள்ள மொத்த இடங்கள் 545. அதில் இப்போதிருப்பது 543. இதில் வெளியிலிருந்து
ஆதரவு தந்து வந்த இடதுசாரிகளும்
(59 இடங்கள்) மயாவதியின் பகுஜன் சமாஜும் (17 இடங்கள்) தங்கள் ஆதரவை
விலக்கிக் கொள்ள, முலாயம் சிங்கின்
சமாஜ்வாதி கட்சி உள்ளே வந்தும் அரசின் நிலை பத்திரமாக வில்லை

கட்சிகளின் நிலையும் எண்ணிக்கைகளும் எவ்வாறிருந்தாலும் இவற்றில் சில
உட்கதைகளும் உபகதைகளும்
சேர்ந்தே வேறோர் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மாயாவதியின் கட்சியை
உடைத்து சிலரை அரசுக்கு
ஆதரவாகத் திருப்ப அனில் அம்பானி முனைகிறார் என்பதும், முலயம் சிங்கின்
கட்சியை இரு கூறாக்கி அவர்களை
அரசுக்கு எதிராகத் திருப்ப முகேஷ் அம்பானி பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்
என்பதும் அவற்றில் சில.

காங்கிரஸ் 153, லல்லுவின் கட்சி 24, தி.மு.க 15, சரத் பவார் கட்சி 11,
பா.ம.க. 6, ஜே.எம்.எம். 5, எல்.ஜே.பி 4
ம.தி.மு.க (பிரிவு) 2, முஸ்லிம் லீக் 2, உதிரிகள் 4, = மொத்தம் 226.
சமாஜ்வாதி 37, சுயேச்சைகள் 5 = மொத்தம் 42
ஆக மொத்தம் 268.

எதிரணியில் பா.ஜ.க 130, சிவசேனை 12, பிஜு ஜனதா தள் 11, ஐக்கிய ஜனதா தள்
8, அகாலி தளம் 8 = ஆக 169.
இ.கம். 43, வ.கம் 10, ஃபார்வர்ட் ப்ளாக், ஆர்.எஸ்.பி தலா 3 ,
இடதுசாரிகள் ஆதரவு சுயே. 3 ஆக = 62. மூன்றாவது
அணி தெலுங்கு தேசம் 5, அஸ்ஸாம் கண பரிஷத் 2, சுயேச்சை 1 = ஆக 8. ஒட்டு
மொத்த எதிர்க்கட்சிகளின் பலம்
265. மயாவதியும் சேர்ந்தால் 282. சமாஜ்வாதி (பிரிவு) 2, ம.தி.மு.க 2 ஆக
286 வருகிறது.

இன்னும் முடிவெடுக்காத 16 பேர்களில் அத்தனை பேரும் அரசுக்கு
வாக்களித்தாலும் 284 தான் வருகிறது.
என்றாலும் அரசு வெல்லும் என்று அரசு தரப்பு உறுதியாகச் சொல்கிறது. அந்த
அளவுக்கு 'குதிரை பேரம்'
நடப்பதாகத் தகவல். முலாயம் கட்சியைச் சேர்ந்த முனவ்வர் ஹுசைன் தனக்கு 25
கோடி ரூபாயும் அமைச்சர்
பதவியும் வாக்களிக்கப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.

அணு ஒப்பந்தம் முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது என்கிற அபிப்பிராயமும்
மேலோங்கி வருகிறது. எனவே
வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஈ.அஹ்மது தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு
அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பேரா: காதர் மொஹிதீனுக்கு அந்தப் பிரச்னை இல்லை என்று
தோன்றுகிறது. மேலும் நா.ம.
ஆவணங்களின் படி அவர் ஒரு தி.மு.க. உறுப்பினர். எனவே கட்சியின் கட்டளைக்கு
எதிராக வாக்களித்தால்
அவர் பதவியே பறிபோகும் வாய்ப்புண்டு.

தனது கட்சிக்காரர் காடுவெட்டி குரு கைது விஷயத்தில் மன்னிப்புக்
கெட்பதுடன் விடுதலை என்பதை டாக்டர்
ராம்தாஸ் ஆதரவுக்கு நிபந்தனையாக வைக்கக் கூடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை. காடுவெட்டியின் விடுதலையை விட மத்தியில் இரண்டு அமைச்சர்கள்
பதவி முக்கியம்
என்று அவர் தீர்மானித்ததில் ஆச்சர்யமில்லை. நா.மன்றம் மக்கள் அவையில்
அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர்கள்
எவரும் இல்லை. இருந்திருப்பின் 'தலைவி' ஒரு கை பார்த்திருப்பார்.

அரசின் தலை விதியை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தால் அதில்
அர்த்தமுண்டு. மாயாவதியுன் கட்சியை
உடைப்பதில் வெற்றி கண்டால் அனில் அம்பானியும், முலாயம் சிங்கின் கட்சியை
பிளர்ப்பதில் முகேஷ் அம்பானி
வாகை சூடினால் அவரும் அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்கிற ஊகம்
உண்மை என்றால் நம்மால்
ஒன்றுதான் சொல்ல முடியும் ---

பிழைப்பு நாறிப் போய்க் கிடக்கிறது நாறி...!!!!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

No comments: