Thursday, December 31, 2009

குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!








குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே!

எங்கள் வாழ்வும், வளமும் செழித்திட
மறையாய் வந்த அல்புர்கானே!
திரு மறையாய் வந்த அல் குர் ஆனே!
உன்னை வாழ்த்திடும் மனதினில் நிறைந்தவன்
அருட் கொடை தந்த ரஹ்மானே
(வேறு)
உன்றன் உள்ளே முழுதும் எண்ணங்கள் கோடி
எங்கள் உள்ளம் முழுதும் கொண்டாடும் கூடி
(வேறு)
அள்ளித்தான் குறையாது; சொல்லித்தான் முடியாது
கல்விக்கும் கேள்விக்கும் தாயகமாய் உண்டானது!
(வேறு)
கலைஞானக் கதிரே உன் வரவாலேதான் – எங்கள்
கலை ஞானக் கதிரே உன் வரவாலேதான் – இந்த
உலகடைந்த மகிமைக்கு அளவு முண்டோ? – என்றும்
நிலையாக ஒளி வீசி இருளகற்றியே – நல்ல
நெறிமேவும் வாழ்க்கைக்கு வழியாகினாய்!
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – ஞானக்
கடலாகக் கருச் செல்வம் அமைந்தோங்கவே – உன்றன்
கருவூலம் ஆராய்வுக் கரிதானதே – எங்கும்
மடம் நீங்கி மதி ஓங்கச் சுடரேற்றவே – மனம்
குணத்தோடு மணம் வீசும் மலராகுமே!
(வேறு)
உன்னை இறைவன் அளித்தான் மறையாகத்தானே
நீயே உயர்ந்து நின்றாய் கதிராக வானில்!
(வேறு)
எண்ணத்தான் இயலாது எண்ணித்தான் முடியாது
விண்ணுக்கும், மண்ணுக்கும் விதியாக வந்ததிது
(வேறு)
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – உந்தன்
உறையுள்ளே மறைந்துள்ள கூர்மையிங்கே – கசடை
உடைத்தெறிந்து தூய்வாக்கி அறங்காக்குமே – எந்தத்
துறையேனும் எப்பொருளும் எக்கேள்வியும் –இங்கு
அருளார்ந்து மெய்ப் பொருளில் தெளிவாகுமே
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – உயர்
அறந்தாங்கி நெறிமேவிப் பண்போடுதான் – நல்ல
அறிவார்ந்து நேர்மையுடன் ஒழுக்கந்தரும் – உன்றன்
ஹர்பு(க்)கள் ஒவ்வொன்றும் உலகளந்திடும் – அதன்
அர்த்தங்கள் புலனுக்கு வியப்பாகுமே
(வேறு)
உந்தன் வரவால் பாலையில் வீசியது தென்றல்;
காற்றில் சுகந்தம் மணந்தது; விலையுயர்ந்தது
அரபுமண் !
(வேறு)
அகக் கண்கள் திறந்து விட்டு அஞ்ஞானம் அறுத்தெறிந்து
சுக வாழ்வில் இசையாகப் பண்ணாக வந்தானது !
(வேறு)
ஒரு மறைவான இறை மீது ஈமான் கொண்டோம் – அந்த
இறையோனின் மறை மீதில் பற்றைக் கொண்டோம் – அரும்
மறையோதும் இன்பத்தில் மனநிம்மதி – அது
புரியாது படித்தாலும் பெரும் பாக்கியமே
பெரும்மறைபொருளை நிறைத்திருந்து பெயராகினாய் – அந்த
இறை தவிர்த்துன் புதை பொருளை யாரறிவது?
ஒரு குறையில்லா மார்க்கத்தின் உயிர் ஜீவனே – உன்னால்
குவலயத்தில் நிமிர்ந்ததெங்கள் சமுதாயமே !
(வேறு)
உன்னை ஏந்திய ஜிப்ரயீல் பெரும் பாக்கியம் அடைந்தார்
தாங்கிய ஏந்தல் முஹம்மது அரும் புனிதம் அடைந்தார்
(வேறு)
பெற்றவனின் பரிசாகப் பார் மணக்கும் மலராகப்
பெற்றிட்டோம், பேறடைந்தோம், கற்றிற்றோம்,
களிப்படைந்தோம்
(எங்கள் வாழ்வும், வளமும்…)


ஓதுங்கள் ! ஓதுங்கள் !

ஓதுவீராக ! ஓதுவீராக !
உம்மியான முஹம்மதிடம் உத்தமர்கோன் ஜிப்ரயீல்தாம்
ரம்மியமாய் எடுத்து வைத்த அடிப்படைக்கல் !
ஓதுவீராக ! ஓதுவீராக !
பேரிருளைக் கிழித்தெறிந்து உலகுயர அஹமதரைத்
தேர்ந்தெடுத்து அறிவித்த மணியோசை !
ஓதுவீராக ! ஓதுவீராக !
மணிமொழியில் வேதந்தனில் இனிய வாழ்வின் வழியாகச்
செப்பனிட்ட பாதைக்கிது ஆரம்பம் !
ஓதுங்கள் ! ஓதுங்கள் !
ஒவ்வொரு நாளும் ஓதுங்கள் !
ஒன்றிய மனத்தோடோதுங்கள் !
இத்தரை மீதில் சத்தியமென்று
முத்திரை பெற்ற மா மறையை (ஓதுங்கள்)
ஆதாரம் எவனோ அந்த ஆண்டவனே தந்த மறை
ஆதாரம் நமக்கேதென்று அறிவிப்பாய் வந்த மறை
ஆதாமும் ஹவ்வா முதலாய் வரலாற்றைச்சொல்லும் மறை
ஆதாயம் தேடித் தரவே அருட் கொடையாய் நின்ற மறை
அதன் மொழி பார்த்தால் அதன் ஒலி கேட்டால்
வறண்ட உள்ளமும் விளை நிலம் ஆகும் !
வித்தகர் நபியின் சித்தமும் வென்று
நித்தமும் பயின்ற மாமறையை ( ஓதுங்கள் )
அவகாசம் கிடைக்கும் போது அர்த்தம் பார்த்துக்
கொள்ளுங்கள்
அவகாசம் தேவையில்லை அவசியமாக ஓதுங்கள்
அர்த்தங்கள் புரியும் போது அறிவையும் பெருக்கிக்
கொள்ளுங்கள்
அறியாமல் ஓதும்போதும் அருள் மழை கிட்டும் அறியுங்கள்!
உலகினில் கேட்டால் இதற்கிணை இல்லை
தெளிவினில் பார்த்தால் முழுமையின் எல்லை
ரத்தினச் சுருக்கம்; முற்றிய விளக்கம்;
புத்தொளி வழங்கும் மாமறையை ( ஓதுங்கள் )
பிள்ளைக்குக் கல்வி முதலாய் குர்ஆன் ஓதச் செய்யுங்கள்
சொல்லுக்குச் சொல்லாய்ச் சொல்லி ஹர்பைத் திருந்தச்
செய்யுங்கள்
எல்லாமும் இறையே என்னும் கொள்கை நிலையைச்
சாற்றுங்கள்
எப்போதும் ஓதும் இன்பம் தப்பாதென்று போற்றுங்கள் !
ஒழுங்குற ஓதினால் பகுத்தறிவேறும்
நலிந்திட்ட உடலும் சுகமுடன் தேறும் !
எத்துணை சிறப்பும், எத்துணை புகழும்
பக்தியில் திளைக்கும் மாமறையை ( ஓதுங்கள் )


இகந்தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( மெட்டு - பீத்தே பீத்தே )
வான்வீதியில் வந்ததே இன்பராகம்
தேன்மொழியினில் பொழிந்தநல் அன்புவேதம் !
1.திருநாளிலே குகையிலே நபியின் காதில்
ஒளியாகவே ஜிப்ரயீல் வந்து ஊதினார்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
திருத்தூதரே ஓதுவீர் இறைபெயரில்
உருவானதே அறிவுக் கண்ணூற்றின் வேகம் !
( வான் வீதியில் )
2.இறைவார்த்தையில் இசைத்தது பக்திகீதம்
இகம் வாழவே அருளிய முக்திராகம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதிலா திறங்கிய உண்மைவேதம்
மறுவேதத்தின் இறுதியாம் சக்திவேதம் !
( வான் வீதியில் )
3.கொடுநரகையும் அழித்திடும் இறையின்நாதம்
கடும்பாவங்கள் கரைத்திடும் கனிந்தராகம்
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
தொடர்பாகவே சுவர்க்கப்பூங் காதன்னிலே
படர்ந்தேத்திடும் பாங்காகவே பண்புவேதம் !
( வான் வீதியில் )
4.குறைமேவினும் தெளிவுடன் மிகைத்தோதினும்
இறைவழங்கிடும் நன்மைக்கோர் எல்லையில்லை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
தொடும்போதிலும் முகர்வதும் கொடுக்கும் நன்மை
இகந் தாங்கிடும் இணையில்லா இன்பவேதம் !
( வான் வீதியில் )

( க‌விஞ‌ர் ஆலிம் செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ ம‌றையாத‌ காவிய‌மொன்று........... எனும் க‌விதை நூலிலிருந்து )
வெளியீடு : ம‌ணிமேக‌லைப் பிர‌சுர‌ம்

No comments: