Thursday, December 31, 2009

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். இவரா இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் சார்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம், புஹாரி ஷரீஃப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நூல்களை அழகு தமிழில், எளிய நடையில் மொழிபெயர்த்தவர் என எண்ணத் தோன்றும். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் துபையில் பணிபுரிந்து வந்த இவர் ஜுலை மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார்.

சமுதாயத்தில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள இவரது சமுதாயப் பணிகளை அறிந்து கொள்ள அவருடன் ஒரு சந்திப்பு :


கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்

பதில் : வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி


கே : தங்களது இளமைப் பருவம் பற்றி….. ?

பதில் : நான் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தேன். பெற்றோர் பெயர் ஹாஜி எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் – ஹசீனாபி. எனது பெற்றோருக்கு 9 வது கடைக்குட்டியாக பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் 3 அக்கா, 5 அண்ணன்கள். 1970 ல் எனது தாயார் வஃபாத்தானார்.


கே : தங்களது கல்வி குறித்து ?


பதில் : காஞ்சிபுரத்தில் தர்கா பள்ளி,, டிஆர்.எஸ். பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்தேன். பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி.யை மார்ககக் கல்விக்காகத் துறந்தேன்.


பின்னர் வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1972 முதல் 1979 ஆம் ஆண்டு வரை ஓதி ஆலிம் ஸனது பட்டம் பெற்றேன்.


கே : பள்ளிக்கல்வியில் சிறப்புறக் கற்றிருந்த தாங்கள் அரபிக் கல்லூரியில் சேரக் காரணம் ?

பதில் : பிறை, முஸ்லிம் முரசு உள்ளிட்ட இதழ்களில் மார்க்க அறிஞர்கள் அப்துல் வஹ்ஹாப் சாஹிப், மஹதி, அல் ஃபத்தாஹ் பாகவி உள்ளிட்டோரின் கட்டுரைகள் என்னை அரபிக்கல்லூரியிலும், மேலும் வட மாநிலங்களில் உள்ள தேவ்பந்த் போன்ற மார்க்க்க் கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே 1972 ஆம் ஆண்டு வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த ஆண்டே அதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நீதிபதி மு.மு. இஸ்மாயில், எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முஸ்லிம் முரசு மாத இதழ் வெள்ளிவிழாவினையொட்டி நடத்திய ’நான் விரும்பும் தலைவர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நான் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் குறித்து எழுதிய கட்டுரைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. முதல் பரிசு ஏ.கே.அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் குறித்து எழுதிய சாயபு மரைக்காயருக்கு கிடைத்தது.

மதரஸாவில் படிக்கும் போது அதிகம் படிக்காமல் தேர்வுக்கு சில நாட்கள் முன்னர் படித்து விட்டு முதல் மாணவனாக தேர்வு பெறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. எனது அரபு மொழித் திறனுக்கு ஆசிரியர் சையது முஹம்மது மதனி அவர்கள் முக்கியக் காரணமானவர்.

மதரஸா பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தேன்.

அப்போதைய குடும்பச் சூழல் காரணமாக வட மாநிலங்களுக்கு சென்று படிக்க இயலவில்லை.

1990 ல் அலிகர் முஸ்லிம் பல்கலையில் எம்.ஏ. சேர்ந்த நான் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புக் கலவரம் காரணமாக அதனைத் தொடர இயலவில்லை.

அப்ஸலுல் உலமா படிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக எம்.ஏ. நவீன அரபி இலக்கியத்தில் 2007 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டம் பெற்றேன்.

தற்பொழுது எம்.ஃபில் பட்டப்படிப்புக்காக இஸ்லாமியப் பொருளாதாரம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எனும் தலைப்பில் பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பிக்க உள்ளேன்.

அதனைத் தொடர்ந்து பி.எச்.டி. படிப்பினை சென்னை அல்லது உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இறைவன் நாடினால் மேற்கொள்ள உள்ளேன்.


கே : தங்களது பணி குறித்து ?

பதில் : அரபுக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து மவ்லானா அபுல் ஹஸன் அலீ நத்வி அவர்களின் இஸ்லாமியப் பணியால் கவரப்பட்டு அவர் ஆரம்பித்த சகோதரத்துவ செய்தி ( Message of Humanity ) எனும் அமைப்பில் ஈடுபட நினைத்தேன். ஆனால் மவ்லானாவின் முக்கிய நண்பர்கள் சிலர் வஃபாத்தானதைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்பாடின்றி முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியக் களம் கிடைக்காததைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு மவ்லானா ஜமீல் அஹமத் அவர்களைச் சந்தித்து இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டில் ( ஐ.எஃப்.டி.) இணைந்தேன்.

1977 ல் அரபுக் கல்லூரியில் பயிலும் போதே மவ்லானா ஜமீல் சாஹிப் அவர்களின் வேண்டுகோளின்படி மவ்லானா மௌதூதி அவர்களால் உர்தூ மொழியில் எழுதப்பட்ட நூல் அகிலத்தலைவரின் அடிப்படைப்பணி எனும் தலைப்பில் தமிழில் எனது முதல் நூலாக மொழி பெயர்க்கப்பட்டது. எனினும் இந்நூல் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

பிறகு தீண்டாமை எனும் சிறு நூலை தமிழில் மொழிபெயர்த்தேன். தொடர்ந்து சுமார் 40 நூல்களை தமிழில் மொழிபெயர்த்தேன். அவற்றில் சுமார் 25 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.எஃப்.டி.யில் பணிபுரிந்ததன் காரணமாக சகோதர சமுதாய மக்கள், கம்யூனிசச் சித்தாந்த்தில் ஈடுபாடுடையவர்கள் என பல தரப்பு மக்களிடமும் இஸ்லாத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது என பயிற்சி பெற்றேன். இதற்கு வேலூர் இஸ்லாமிய செண்டரிலும், ஐ.எஃப்.டியிலும் நான் ஆற்றிய பணி மிகவும் உறுதுணையாய் இருந்தது.

1981-82 மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த காலம். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் பேட்டி கண்டு கண்ணுக்குப் புலப்படாத இஸ்லாமிக் செண்டர் எனும் தலைப்பில் இருமுறை வெளியிட்டது அதன் பணிகளுக்கு மேலும் அங்கீகாரம் கிடைத்தது போலாகியது.

அதனைத்தொடர்ந்து திருக்குர்ஆனின் தமிழாக்கப்பணியினை ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. 1 முதல் 37 ஆம் அத்தியாயம் வரை மவ்லவி குத்புதீன் பாகவியும், 38 முதல் அம்ம ஜூஸ்வு வரை நானும் மொழிபெயர்த்தேன்.

இப்பணியில் பி.எஸ்.அலாவுதீன் மன்பஈ, ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத், சையது முஹம்மது மதனி, மஸ்தான் அலி உமரி உள்ளிட்ட பலர் ஒத்துழைத்ததை மறக்கவியலாது.

1990 ஆம் ஆண்டு திருக்குர் ஆன் முதல் தொகுதியும், 1991 ஆம் திருக்குர் ஆன் இரண்டாம் தொகுதியும் வெளியிடப்பட்டது.

எனது ஒப்பந்தப்படி 1986 டிசம்பர் 31 உடன் ஐ.எஃப்.டி. பணி நிறைவுற்றது.


இதன் பின்னர்


ஃபுர்கான் ப்ப்ளிகேஷன்ஸ்க்காக முஸ்லிம்கள் முன்னேறாத்து ஏன் ?, அஹ்மத் தீதாத் அவர்களின் நபிகள் நாயகம் பற்றி பைபிள், முஹம்மது பின் ஜமீலின் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், ஹதீஸ் கலை உள்ளிட்ட ஐந்து நூல்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். இப்பணி 1987 முதல் 1989 வரை.

அதனைத் தொடர்ந்து

1989 – 90 வரை ஈகா தியேட்டர் பின்னால் உள்ள எம்.இ.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரபி மொழி ஆசிரியர் பணி செய்தேன்.

பின்னர் 91ல் இந்தியா பைத்துஸ் ஸகாத்தில் ஆறு மாதம் பணியாற்றினேன்.


மேலும்

1984 முதல் 86 வரை சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரில் திருக்குர் ஆன் விரிவுரையாற்றும் பணி

1987 முதல் 90 வரை காயல்பட்டணத்தில் ரமளான் திருக்குர் ஆன் விளக்கவுரை



கே : தங்களது வெளிநாட்டுப் பயணம் குறித்து ?


1991 டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஸ்ட்டீஸ் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டேன்.

விமானப் பயணம் புதிதாக இருந்த்தால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட்து. இருப்பினும் ஸாஹிரா கல்லூரியில் 5000 பேர் பங்கேற்ற நிகழ்வில் உரை நிகழ்த்தினேன். அதனைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மாளிகாவத்தெ பிரதிபாஹாலில் நடைபெற்றது. இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் மீடியாவும் இஸ்லாமும் குறித்தும் உரை நிகழ்த்தினேன்.

அப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு தொடர்ந்து பாபர்மசூதி விவகாரத்தில் மந்தப் போக்கைக் கடைப்பிடித்தால் ஓராண்டில் அது இடிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை எனத் தெரிவித்தேன். ஆனால் அடுத்த ஆண்டே அது இடிக்கப்பட்டது பெரும் துரதிருஷ்டம்.

சவுதி அரேபியா :

1992 ஆம் ஆண்டு அல் அஹ்ஸா பகுதியில் உள்ள ஹுபூஃப் இஸ்லாமிக் சென்டரில் முதல் பொறுப்பாளராகப் பணிபுரிந்தேன்.

அறையில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபொழுது அரபி மற்றும் ஆங்கில மொழியில் இந்துத் தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியினைத் தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு இலங்கையில் பேசிய பேச்சினை நினைவு கூர்ந்தேன்.

அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் நடைபெற்ற கண்டனக் கூட்ட்த்தில் உர்தூ மொழியில் கடுமையான உரை நிகழ்த்தினேன். இது குறித்து பலரும் கவலை கொண்டனர். தான் காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணினர். எனினும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட சவுதி காவல்துறை அவ்வாறு எதுவும் செய்யவில்லை.





கே : வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ?


1995 ஆம் ஆண்டு மீண்டும் சென்னையில். ரஹ்மத் டிரஸ்டின் புஹாரி ஷரீஃப் மொழிபெயர்ப்புப் பணி, அதனைத் தொடர்ந்து புலூகுல் மரம் என்ற பிக்ஹ் நூல் தயாரிப்புப் பணி


கே : மீண்டும் வெளிநாட்டுப் பயணம் ?


ப 1999 ஆம் ஆண்டு அபுதாபியில் இஸ்லாமிய விவகாரத்துறையில் மூன்று ஆண்டுகள் பணி.

2003 ஆம் ஆண்டு முதல் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தில் பணி. அப்பொழுது இரு கண்கள் அறுவை சிகிச்சை, இரு பெண்களது திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பணிகளுக்கு ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ETA HRM Executive Director எம். அக்பர் கான் உள்ளிட்டோரது உதவிகள் மறக்கமுடியாதவை.

துபாயில் கோட்டைப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வுகள் முக்கியமானவை.



கே : தங்களது மறக்கவியலாத நிகழ்வுகள் குறித்து ?


பதில் :

எனது 9 வது வயதில் 1965 ல் சீன ஆக்ரமிப்பின் போது சீனாவை எதிர்த்தும், நமது இந்திய ராணுவத்தின் வீரத்தைப் பாராட்டியும் பொதுமக்களின் ஆதரவை நமது நாட்டுக்காகத்திரட்டும் வகையிலும் நான் காஞ்சிபுரம் சீனிவாசன் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் பல்லாயிரம் மக்களிடையே ஆற்றிய ஆவேச உரை என்னால் மறக்க முடியாத ஒன்று.

கோகலே ஹாலில் மது ஒழிப்பு குறித்து துக்ளக் ஆசிரியர் சோவுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, 1984-85 ல் சென்னை எல்.எல்.ஏ. அரங்கில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, ஐ.எஃப்.டி. சார்பில் 1995 ல் பெரியார் திடலில் நான் தலைமை வகித்த நிகழ்வில் குமரி அனந்தன் பங்கேற்றது,

காஞ்சிபுரம் சமய நண்பர்கள் வட்டத்தின் சார்பில் ஆண்டர்சன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் எனது தமிழாற்றல் கண்டு வியந்தவர்கள் என்னை வருங்காலத்தில் தமிழக முதல்வராகக் கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலையுடன் பங்குபெறும் வாய்ப்பு. பல்சமய நிகழ்வுகளில் இஸ்லாம் ஒரு மதமல்ல அது ஒரு வாழ்க்கை நெறி என்பதனை மிகவும் உறுதியுடன் கூறியது அனைவரையும் சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஐக்கிய ஆலயத்தில் இஸ்லாம் குறித்து பாதிரியார்களுக்கு வகுப்பு எடுத்தேன்.

டெல்லிக்கு பின்னர் பணியின் நிமித்தமாக சென்றபொழுது அங்குள்ள பாதிரியார்களது தலைமை அலுவலகத்துக்கு சென்ற பொழுது என்னிடம் இஸ்லாம் குறித்து பாடம் படித்த பாதிரியார்கள் மிகவும் அன்புடன் நடந்து கொண்ட நிகழ்வு மறக்கவியலாது. டெல்லியில் இருந்து திரும்பிய சமயத்தில் அப்போதைய பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது மிகவும் வருத்தமானது.

போப் ஜான்பால் II அவர்கள் 1986ல் சென்னை வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சமய அறிஞர்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்த்து. அதில் சிராஜுல் மில்லத், மதுரை கண் டாக்டர் அப்துல் சத்தார் ஆகியோருடன் அடியேனுக்கும் வாய்ப்பு கிடைத்து வாழ்வில் மறக்கவியலாது.


கவிதை அனுபவம் குறித்து ?


மாதுளம் கனி என்ற தலைப்பில் நீண்ட கவிதையொன்றை பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் படிக்கும் போது வெளியிட்டேன். அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அமீரகத்தில் வானலை வளர்தமிழ் அமைப்பின் காரணமாக எனது கவித்திறனை கூர்தீட்ட மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது என்றால் மிகையல்ல.

வருங்காலத் திட்டம் ?


சென்னையில் மீண்டும் ஞாயிறு தோறும் திருக்குர் ஆன் விரிவுரையினைத் தொடர்வது, இஸ்லாமிய நூல்களை மொழிபெயர்த்தும், எழுதியும் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொள்வது.


இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது ?


இஸ்லாத்தை கூடுதல் குறைவின்றி அறிமுகப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது மேலாதிக்கத்திற்காக அதனைப் பயன்படுத்துகின்றனர். மக்களில் குறிப்பாக இளைஞர்கள் அப்பாவித்தனமாக அவர்களுக்கு பலியாகின்றனர்.

இதிலிருந்து விடுபட இளைஞர்கள் உண்மையான இஸ்லாத்தை, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினைப் பின்பற்றி வாழ்வில் உயர்நிலையினை அடைய வேண்டும். உண்மையான அறிவுப்புரட்சி கொணரப்படவேண்டும்.

கவர்ச்சிகரமான உரைகளை நம்பி இந்தப் போலி பிரச்சாரகர்களின் வலையில் வீழ்ந்து விடக்கூடாது.

ஸஹாபாக்கள், இமாம்கள், அவுலியாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரது வாழ்வு வரையறுக்கப்பட்டது. அவர்கள் வாயிலாகத்தான் இஸ்லாத்தை நாம் பெற்றுக்கொண்டோம்.

இவர்களைக் குறித்து இழிவாகப் பேசி வருபவர்கள் பயனற்றவர்கள். சமுதாயத்திற்கு தீங்கிழைப்பவர்கள். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் என்றே கூற வேண்டும்.

Pl correct the below para

சமுதாய நீதி பயனற்ற நுரைகுமிழாகப் போய்விடும், மக்களுக்குப் பயனளிக்கும் பொருட்டுதான் பூமியில் நிலைத்திருக்கும் என்று திருக்குர் ஆனில் கூறுகின்றது. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தப் போலி பிரச்சாரகர்கள் ஒருநாள் ஒழிந்து விரைவில் உண்மையான பிரச்சாரகர்கள் காணாமல் போய்விடுவர்.


சமுதாயம் வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு சமயம் முதலான ஆய்வுத்துறைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த நவீன உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

அறிவியல், தொழில்நுட்பக்கல்வியில் சிறப்புற திகழ்ந்தால் உலகத்தார் நம்மை புறக்கணிக்க முடியாது. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


மார்க்க்க் கல்வி உலக ஆதாயத்திற்காக்க் கற்கப்படுமேயானால் அதுவும் உலாகாதயமாகவே கருதப்படும். உலகக்கல்வி இறைதிருப்திக்காகக் கற்கப்பட்டால் அதுவும் இஸ்லாமியக் கல்வியாகக் கருதப்படும்.


இஸ்லாமியக் கல்வி இறை உணர்வோடு கற்கப்பட வேண்டும்

இஸ்லாமியக் கல்வியினால் நவீன தொழில்நுட்பத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கும்.

இறை நம்பிக்கையாளர்கள் உலகை அழிவில் இருந்து காப்பாற்றலாம். அவர்களிடத்தில் உலகின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் இறையுணர்வுடன் ஊழலற்ற ஆட்சியை உலகிற்குத் தருவார்கள்.


சந்திப்பு & பேட்டி : காஹிலா

No comments: